Saturday, January 24, 2004

ராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 1

ராஜீவ் காந்தி கொலை, விடை கிடைக்காத வினாக்களும், கேட்கப்படாத கேள்விகளும், டாக்டர் சுப்ரமண்யன் சுவாமி, (தமிழாக்கம் சுதாங்கன்), அல்லயன்ஸ் கம்பெனி, பக்: 256, ரூ. 125. முதல் பதிப்பு ஏப்ரல் 2001.

சுவாமியின் புத்தகம் நேர்த்தியில் படு குறைவு. முதல் அத்தியாயத்தில் பாதி சுய-புராணம். என்னவோ ராஜீவ் காந்தி சு.சுவாமியின் மீது எக்கச்சக்க அன்பு வைத்திருந்ததாகவும், சுவாமியைக் காங்கிரஸுக்கு வந்துவிட வேண்டுமென்று மன்றாடிக் கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் செத்தாலும் ஜனதா கட்சியை விட்டு விலகமாட்டேன் என்று ஜெயபிரகாஷ் நாராயணிடம் சத்தியம் செய்து கொடுத்திருந்ததால், மற்றவர்கள் அனைவரும் கட்சியை விட்டு ஓடிவிட்டாலும், தான் மட்டும் கட்சியை விட்டு இன்றுவரை மாறவில்லையென்றும்... ஒரே புலம்பல்.

தான் அமைச்சராகவிருந்த நேரத்தில் சந்திரசேகர் அமைச்சரவையில் தான் ஒருவர்தான் நியாயமான, நம்பிக்கையானவர்; யஷ்வந்த் சின்ஹா (இப்பொழுது பாஜக வெளியுறவுத் துறை அமைச்சர்), கமால் மொரார்கா இருவரும் பாஜக/ஆர்.எஸ்.எஸ் காரர்கள், ஜனதா தள/காங்கிரஸ் உறவைக் கெடுக்க வந்த கோடாலிகள் என்றும், அர்ஜுன் சிங் மீது பல கிலோக்கள் கூவம் சாக்கடை வண்டல் என்று ஒவ்வொருவர் மீதும் சாக்கடையை அள்ளி வீசியுள்ளார்.

மொத்தத்தில் இந்தப் புத்தகத்தின் சாரத்தை 5 பக்கங்களில் அழகாக எழுதியிருக்கலாம். அதை விட்டு 250 பக்கங்களை வீணாக்கியுள்ளார்.

சுவாமி கேட்கும் சில கேள்விகள்:
- ராஜீவ் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது திருப்பெரும்புதூர் வந்தே தீர வேண்டும் என்று ஒருசிலர் முயன்றனர். அவர் அங்கு வருவதைத் தோழமைக் கட்சி ஜெயலலிதாவும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியும் விரும்பவில்லை. அப்படியானால் ராஜீவ் காந்தியை திருப்பெரும்புதூருக்கு வரவழைத்தது யார்?

- திருப்பெரும்புதூரில் கூட்டம் நடத்திய கமிட்டியின் தலைவர் மரகதம் சந்திரசேகருக்கு (இன்னமும் உயிருடன் இருக்கிறாரா?) ஒருசில விஷயங்கள் தெரியும், ஆனால் மௌனமாக இருக்கிறார். ஏன்?

- மார்கரெட் ஆல்வாதான் ராஜீவ் திருப்பெரும்புதூர் செல்ல முக்கிய காரணம் என்று பலர் குற்றம் சாட்டுகின்றனர். ஆல்வா இதுபற்றி வாயைத் திறக்கவில்லை. ஏன்?

- ராஜீவைத் தமிழகம் வரவைக்க வற்புறுத்தியதில் மணிசங்கர் அய்யரும் முக்கியமானவர். கொலை நடந்த நாளிலிருந்து மணிசங்கர் அய்யர், வழக்கைத் திசை திருப்பும் வண்ணம், இந்தக் கொலையைச் செய்தது இஸ்ரேலின் மொஸாத் என்றே சொல்லி வருகிறார். இவரை விசாரிக்க வேண்டும்.

- போலீஸ் பாதுகாப்பின்றி தானு எப்படி முன்-பின் தெரியாத போதும் மாலையிட அனுமதிக்கப்பட்டார்? இவரை ஏற்கனவே பெண் காவலர்கள் மூன்று முறை துரத்தியிருந்தனராம்.

- அப்பொழுது சண்டே பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்த வீர் சாங்வி புலிகள் ஆதரவாளர். இவர் எழுதியிருந்த ஒரு கட்டுரையின் மூலம்தான் புலிகளுக்கு ராஜீவ் மீண்டும் பதவிக்கு வந்தால் தங்களுக்கு ஆபத்து என்று உணர்ந்து ராஜீவைக் கொலை செய்யத் திட்டம் தீட்டினர். [இப்பொழுது வீர் சாங்வி ஹிந்துஸ்தான் டைம்ஸின் ஆசிரியர், தொலைக்காட்சிகளில் செவ்விகளையும் நடத்துகிறார்.]

- ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகளுடன், ஆர்.எஸ்.எஸ், காங்கிரஸின் அர்ஜுன் சிங் ஆகியோருக்கும் ஏதோ விதத்தில் தொடர்பு உள்ளது என்றும் குற்றம் சாட்டுகிறார். நேரிடையாகச் சொல்லாவிட்டாலும், மறைமுகமாக இதை வலியுறுத்துகிறார். ஏனெனில் இவர்களெல்லாரும் ராஜீவ் கொலையினால் ஒருவகையில் பலனடைந்துள்ளனராம். [ராஜீவ் காந்தி இருந்திருந்தால் அயோத்திப் பிரச்சினையை தீர்த்திருப்பாராம். அதனால் ஆர்.எஸ்.எஸ் இன் வீச்சு குறைந்திருக்குமாம். அர்ஜுன் சிங்குக்குத் தானே பிரதமராக ஆசையாம்.]

- நீதிபதி ஜெயின் உண்மையைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். நீதிபதி ஜெயின் வேண்டுமென்றே மொஸாத் மீது சந்தேகத்தைத் திசை திருப்ப முயன்றார் என்பது சுவாமியின் குற்றச்சாட்டு.

- ராம் ஜேத்மலானி மீது பல குற்றச்சாட்டுகள்.

- வேதாரணியம் மிராசுதார் சண்முகம் "தற்கொலை"யின் மர்மம் ஆராயப்பட வேண்டும்.

- 'ஒற்றைக்கண்' சிவராசன் STFஇனால் குண்டடி பட்டு இறந்தான். அவனது உடல் ஏன் உடனடியாக தகனம் செய்யப்பட்டது? தனுவின் உடல் மட்டும் சாட்சிக்காக சென்னையில் வைக்கப்பட்டிருந்ததே?

- ராஜீவ் கொலையை விசாரிக்க லண்டன் போன ஒரு காவல் அதிகாரியின் பெட்டி காணாமல் போனதாம், அந்தப் பெட்டியில் என்ன இருந்தது?

- திருப்பெரும்புதூர் உள்ளூர்க் காங்கிரஸ் தலைவர் லதா கண்ணனின் மகள் கோகிலாவை மேடையில் கவிதை படிக்க வைத்து நேரத்தை வளர்த்தனராம்.... இந்த கோகிலாவின் தந்தை ஒரு ரயில்வேத் தொழிலாளி, ஆனால் இன்று பெரும் பணக்காரர். இவர் எப்படிப் பெரும் பணக்காரரானார்?

No comments:

Post a Comment