Monday, January 26, 2004

நெய்வேலி இலக்கியச் சந்திப்பு - 1

நேற்று நெய்வேலியில் திசைகள் மின்னிதழும், நெய்வேலி புத்தகக் கண்காட்சியும் இணைந்து நடத்திய இலக்கியச் சந்திப்புக்குப் போயிருந்தேன். அங்கிருந்தே நேரடியாக என் வலைப்பதிவில் நிகழ்ச்சியின் நடப்புகளைப் பதிவு செய்ய நினைத்திருந்தேன். அரங்கினுள் ரிலையன்ஸ் செல்பேசி வேலை செய்யவில்லை. அதனால் இன்றுதான் நேற்றைய நிகழ்ச்சிகளின் பதிவு.

இந்தச் சந்திப்பிற்கு தமிழ் எழுத்தாளர்கள், நெய்வேலி வாசகர்கள் என்று நல்ல கூட்டம்.



என்.எல்.சி பணியாண்மைத்துறை இயக்குநர் முனைவர் இரா.நரசிம்மன் குத்துவிளக்கேற்ற விழா தொடங்கியது. [இங்கேயும் குத்துவிளக்கா? மன்மதராசா இல்லையா?]

முதல் அமர்வு: "அறிய வேண்டியதும் களைய வேண்டியதும் - இலக்கியங்களிலிருந்த இன்று நாம் கற்க வேண்டியதும், தவிர்க்க வேண்டியதும் பற்றிய ஒரு உரத்த சிந்தனை".
மாலன்
இதில் மாலன் 'நம் மரபும் நவீனமும்' என்பது பற்றிப் பேசினார். முக்கிய சாரம்:
இன்று 'மறைமுகமாக, பூடகமாக' எழுதுவது சிறந்தது என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால் பாரதி திருப்பித் திருப்பி சொல்வது "எளிய பதங்கள், எளிய சந்தம்". அந்த எளிமையை நோக்கிப் போக வேண்டியது இன்று கட்டாயம்.

- அறிதல் அவசியம், ஆனால் அறிதலைப் பகிர்தல் இன்னமும் அவசியம்
- மொழியில் எளிமை வேண்டும்
- பார்வையிலே நம்பிக்கை வேண்டும்

லத்தீன் அமெரிக்காவின் மொழி அழிந்து போய், ஐரோப்பிய மொழிகள் மேலே வரத் தொடங்கின. அதனால் அங்குள்ள இலக்கியவாதிகள் 'தம் மரபுக்குத்' திரும்பிப் போக வேண்டும் என்று மேஜிக்கல் ரியலிசம் போன்றவற்றைத் தொடங்கினார்கள். இன்றோ, தமிழில் பெருமையாக 'இருண்மை' பற்றிப் பேசுகிறார்கள். புரிந்து கொள்ள முடியாததை உயர்ந்த இலக்கியம் என்பது போலப் பேசுகிறார்கள்.

இன்று நமது முக்கியத் தேவை மொழியை மீட்டெடுப்பது. நாம் பாரதியின் வழியே உள்ளடக்கம், மொழி, பார்வை ஆகியவ்ற்றை எளிமைப்படுத்துவதன் மூலம் செய்ய வேண்டும்.


குறிஞ்சிவேலன்
தொடர்ந்து 'திசை எட்டும்' என்னும் மொழிபெயர்ப்பிற்கான காலாண்டிதழை நடத்திவருபவரும், சாஹித்ய அகாதெமி விருது பெற்றவருமான குறிஞ்சிவேலன் "அயல் இலக்கியங்களிலிருந்து அறிய..." என்பது பற்றிப் பேசினார்.

முதலில் கல்கியின் பொன்னியின் செல்வனில் ஆரம்பித்து பின்னர் தகழி சிவசங்கரன் பிள்ளையின் செம்மீன் (சுந்தர ராமசாமியின் தமிழாக்கம்), பின்னர் கன்னடம் கற்று கன்னட எழுத்தாளர்களான மாஸ்தி, பைரப்பா, மற்ற பலரின் படைப்புகளப் படித்தாராம். பின்னர் மலையாளம் கற்று தகழி, பஷீர், சேது, வாசுதேவன் நாயர், மற்ற பலரது படைப்புகளைப் படித்து, தமிழில் இதுமாதிரி இல்லையே என்ற எண்ணத்தில் இந்த எழுத்துகளை தமிழில் படிப்போர் எளிதாகப் புரிந்துகொள்ளுமாறு மொழிபெயர்க்கத் தொடங்கினாராம். இராமகிருஷ்ணன் என்பவர் மலையாளத்தில் 'சல்லிவேர்கள்' என்று எழுதியிருந்த கதையை (நனவோடை உத்தியில்) 1966இல் தமிழுக்கு மொழிபெயர்த்து தீபம் பத்திரிகைக்கு அனுப்ப, அவர்கள் இந்த மாதிரிக் கதைகள் தமிழில் யாரும் எழுதியதில்லை, அதனால் மக்களுக்குப் புரியாது என்று பிரசுரிக்கவில்லையாம். ஆனால் அதே பத்திரிகையே 1980இல், அதே மொழிபெயர்ப்பை வெளியிட்டதாம். கிட்டத்தட்ட 14 வருடங்கள் மலையாளத்துக்குப் பிந்திய நிலையில் இருக்கிறது தமிழ் என்கிறார் குறிஞ்சிவேலன்!

அதேபோல் ஒருமுறை கணையாழி வாசகர் வட்டக் கூட்டத்தில் கி.ராஜநாராயணன் எழுத்தில் கதை, கவிதை, நாடகம், நாவல் என்ற வெவ்வேறு உத்திகளைப் போல் புதிதாக ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டதற்கு குறிஞ்சிவேலன், தான் எஸ்.கே.பொத்தக்காட் (அப்படித்தான் என் காதில் விழுந்தது... சரியான பெயர் என்னவென்று தெரியவில்லை) எழுதியிருந்த நாவலும் நாடகமும் இணைந்த உத்தியில் ஒரு நாவலைப் படித்திருந்ததாகக் கூற, கஸ்தூரி ரங்கன், அந்த நாவலைத் தமிழ்ப்படுத்தித் தரச் சொல்லி கணையாழியில் வெளியிட்டாராம். 1970களில் சேது எழுதிய பாண்டவபுரம் என்ற மாய யதார்த்த மலையாள நாவலை தமிழ்ப்படுத்தி விழுதுகள் பதிப்பகம் மூலம் வெளியிட்டாராம்.

அதன்பின் அயல் மொழிகளிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட வேண்டியவர்கள் என்று ஒரு நீண்ட பட்டியலைக் கொடுத்தார். வேகமாகச் சொன்னதால் என்னால் குறிப்பெடுத்துக் கொள்ள இயலவில்லை.

No comments:

Post a Comment