Saturday, January 24, 2004

ராஜீவ் காந்தி கொலை பற்றிய சுவாமியின் புத்தகம் - 2

இந்தக் கட்டுரையின் முதல் பகுதி

இப்படியெல்லாம் பல கேள்விகளைக் கேட்டு விட்டு, இலங்கைப் பிரச்சினைக்கு சில தீர்வுகளை முன்வைக்கிறார் சுவாமி. அவையாவன:

1. இலங்கைக்கு இந்திய முறைக் கூட்டாட்சியைக் கொண்டு வருவது. [அதாவது தமிழர்கள் வாழும் பகுதியைத் தனி மாநிலமாக்கி, federal முறையை வலுப்படுத்துவது என்று நினைக்கிறேன்...]

2. இலங்கையை இரண்டாகப் பிரித்து ஈழம் என்ற புதுத் தனி நாட்டினை உருவாக்குவது.

3. இலங்கையை இந்தியாவுடன் இணைப்பது. [சிரிக்க வேண்டாம்! சுவாமி நிசமாகவே இந்த யோசனையை முன்வைக்கிறார்.]

இந்த மூன்று வழிகளில் இரண்டாவதைக் கடுமையாக எதிர்க்கிறார் சுவாமி. இது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும், இந்தியாவிலும் பிரிவினைவாதத்திற்கு வழிகோலும் என்பது அவர் கருத்து. முதலாவது தீர்வு இலங்கைத் தமிழர்களின் மிகக்குறைந்த பட்சக் கோரிக்கை என்றும், காலம் கடக்கக் கடக்க, இது நடைபெறுவதில் மிகக் குறைந்த சாத்தியங்களே உள்ளது என்றும் சொல்கிறார். மேலும் புலிகளை ஒழிக்காமல் முதலாவது தீர்வு நடைமுறைக்கு வந்தால் அது இரண்டாவதற்குத் தானே வழிவகுக்கும் என்பதும் சுவாமியின் கருத்து. மூன்றாவது தீர்வைத்தான் இந்தியர்கள் அதிகமாக விரும்புகிறார்கள் என்றும் சொல்கிறார்.

இந்தத் தீர்வுகளுக்கு அப்பால் ராஜீவ் காந்தியின் கொலைக்குக் காரணம் என்று இந்திய நீதிமன்றங்களால் தீர்மானிக்கப்பட்ட பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோரை இந்தியாவிற்குக் கொண்டுவந்து அவர்களுக்கு உரிய தண்டனையைக் கொடுத்தே தீர வேண்டும், அப்படி இதுவரை நடக்காதது இந்திய நாட்டிற்கு உள்ள பெருத்த அவமானம் என்கிறார்.

திமுக தலைவர் கருணாநிதி மீது ஆழமான குற்றச்சாட்டு எதையும் வைக்கவில்லை சுவாமி. ஆனால் EPRLF தலைவர்கள் சென்னையில் கொலை செய்யப்பட்டதில் அப்பொழுதைய தமிழக அரசுக்கும் (கருணாநிதி தலைமையிலான திமுக அரசு) பெரும்பங்கு உண்டு என்று பொதுவாக எல்லோராலும் சொல்லப்பட்டதைத் தானும் முன்மொழிகிறார். மதிமுக (வைகோ), திராவிடர் கழகம், நெடுமாறன் ஆகியோர் விடுதலைப் புலிகளிடம் காசு வாங்கியவர்கள் என்ற குற்றச்சாட்டும், விடுதலைப் புலிகள் போதை மருந்து கடத்தலில் ஈடுபடுகிறவர்கள் என்ற குற்றச்சாட்டும் புத்தகம் எங்கும் வருகிறது. பாஜக, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் ஆகியோர் புலிகள் ஆதரவாளர்கள், பால் தாக்கரே வெளிப்படையாகப் புலிகளை ஆதரித்து, அவர்கள் ராஜீவைக் கொலை செய்ததை வரவேற்றவர்; ராம் ஜேத்மலானி புலிகள் மற்றும் இலங்கைச் சாமியார் (செக்ஸ் சாமியார்) பிரேமானந்தாவுக்கு ஆதரவாக வழக்காடியவர் என்று இவர்கள் மீதெல்லாம் சாடல்.

மொத்தத்தில் சுவாமிக்குப் பிடிக்காதவர்கள் அனைவர் மேலும் சரமாரியாகக் குற்றச்சாட்டுகள்.

No comments:

Post a Comment