Thursday, April 29, 2004

நதிநீர் இணைப்பு - நடக்கக்கூடியதா? தேவைதானா?

இது தொடர்பான ஒரு செவ்வி + ஒரு கட்டுரை ரீடிஃப் தளத்திலிருந்து.

1. சாம் கண்ணப்பனுடன் ஒரு நேர்முகம், 10 பெப்ரவரி 2003
2. சங்கீதா ஸ்ரீராமின் கட்டுரை, 29 ஏப்ரல் 2004

நடிகர் ரஜினி காந்த் நதிகளை இணைப்போம் என்று சொன்னதால் பாஜகவுக்கு வாக்கு என்கிறார். நதிகளை இணைக்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள சில தொல்லைகள்:

1. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் இந்தத் திட்டத்திற்கு ஒத்துக்கொள்ளுமா என்று தெரியவில்லை. பல மாநிலங்கள் இதன் மூலம் தங்களுக்கு ஏதோ ஆபத்து என்றுதான் நினைக்கின்றனர். இதுவரை தமிழகமும், ஹரியானாவும் மட்டும்தான் இந்தத் திட்டத்திற்கு முழு ஆதரவு கொடுத்துள்ளனர். (ஏன் என்று நீங்களே கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.)

2. இந்தியாவின் அண்டை நாடுகள் இந்தத் திட்டத்திற்கு ஒத்துக்கொள்ளுமா என்று தெரியவில்லை. பாகிஸ்தான், நேபாள், பங்களாதேசம் ஆகிய மூன்று நாடுகளும் இந்தத் திட்டத்தை எதிர்க்கும் - ஏற்கனவே எதிர்க்க ஆரம்பித்து விட்டன. இந்த மூன்று நாடுகளுடனும் நாம் ஏற்கனவே நதிநீர்ப் பங்கீட்டு ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறோம். பாகிஸ்தானில் உள்ள மக்கள் ஏற்கனவே இந்தியா தங்களுக்குத் தரவேண்டிய தண்ணீரைத் தருவதில்லை என்று குறை கூறுகின்றனர். பங்களாதேசத்திற்கு இந்தியா மேல் வண்டிக் குறை.

3. திட்டத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் காலம்: இந்தத் திட்டத்தைப் படிப்படியாகச் செய்வதால் முழு நன்மை இருக்காது. முழுதும் செய்து முடித்தவுடன்தான் அனைவருக்கும் - குறிப்பாக தண்ணீர்ப் பஞ்சத்தில் வாடும் தமிழகத்துக்கு நன்மை கிடைக்கும். உச்ச நீதிமன்றம் 2012க்குள் நதிகளை இணைக்க வேண்டும் என்கிறது. மத்திய அரசின் நதிநீர் இணைப்புத் திட்டக் குழு தனது இணையத்தளத்தில் எந்த கால அளவையும் கொடுக்கவில்லை. இந்தத் திட்டக்குழுவின் தலைவராக இருந்த சுரேஷ் பிரபு (இப்பொழுது தேர்தல் காரணங்களால் ராஜினாமா செய்துள்ளார்!) பல்வேறு செவ்விகளில் 2016 வரை ஆகலாம் என்கிறார். இந்தியாவில் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள பெரிய திட்டங்களைப் பார்க்கும்போது இந்தத் திட்டம் நிறைவேற 25 வருடங்களுக்கு மேலும் ஆகலாம். ஆக இந்தத் திட்டத்தை நம்பி தமிழகத்திற்குத் தண்ணீர் கிடைக்கும் என்று உட்கார்ந்திருந்தால் போய்ச்சேர வேண்டியதுதான்!

4. திட்டத்திற்காகும் செலவு: ரூ. 560,000 கோடி என்று ஒரு எண் வந்திருக்கிறது. இதில் பணவீக்கம், ஊழல், திட்டத்தின் செய்நேர்த்தி ஆகியவற்றைச் சேர்க்கும்போது இரண்டு மடங்குக்கு மேலேயே போய்விடலாம்! அந்தப் பணத்தில் மற்ற பல திட்டங்களைச் செய்யமுடியும் என்று தோன்றுகிறது.

5. இதனால் பாதிக்கப்படப் போகும் மக்கள்: திட்டக்குழுவின் கணிப்புப்படி ஒரு கிளைத் திட்டத்திலேயே கிட்டத்தட்ட 5 லட்சம் மக்களை அப்புறப்படுத்த வேண்டியிருக்கும். அவர்களுக்கு எம்மாதிரியான ஈடு கொடுக்கப்படும் என்பது நர்மதா அணை விஷயத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

தமிழகத்தில் நம் தேவைகள் இரண்டு: (1) குடிநீர் (2) விவசாயப் பாசன நீர்.

குடிநீரைப் பொறுத்தவரையில் கடல்நீர் சுத்திகரிப்பு மற்றும் தனியார் வழியாக குடிநீரை மாநிலம் முழுதும் வழங்குதல் என்னும் முடிவு நதிநீர் இணைப்பை விட மேலானது என்று தோன்றுகிறது. இதந் மூலம் ஒரு லிட்டர் குடிநீர் தயாரிக்க என்ன செலவாகும் என்ற தகவல் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.

கடல்நீரை சுத்திகரிக்க யாரிடமும் தமிழகம் (மற்ற கடலொட்டிய மாநிலங்கள்) அனுமதி கேட்க வேண்டியதில்லை. செலவு சற்றே அதிகமானாலும் ஓரிரு வருடங்களுக்குள்ளாக சில தனியார் நிறுவனங்களும், அரசுமே சுத்திகரிப்பாலைகளைக் கட்டிவிட முடியும். தொடக்கத்தில் கிழக்குக் கடலையொட்டிய மாவட்டங்களில் இதன்மூலம் குடிதண்ணீர் வசதி செய்து கொடுக்கலாம். குழாய்கள் மூலம் முழு மாவட்டங்களுக்கும், தண்ணீர் டாங்கர்கள் மூலம் பக்கத்து மாவட்டங்களுக்கும் தண்ணீர் வசதி செய்து கொடுக்கலாம். பெப்ஸி/கோகோ கோலா நிறுவனங்களை நிலத்தடி நீரை எடுக்கவிடாமல் இவ்வாறு சுத்திகரிப்பு செய்த கடல்நீரை விற்கலாம்! தேவையான மூலதனத்தை பங்குச்சந்தை மூலமும், உலக வங்கிக் கடன்கள் மூலமும், கடன் பத்திரங்கள் வெளியிடுவதன் மூலமும் பெற முடியும்.

விவசாயப் பாசன நீர் - இனியும் இலவசமாக விவசாயப் பாசன நீர் கொடுக்க முடியாது என்று மாநில அரசு நம் விவசாயிகளிடம் எடுத்துச் சொல்ல வேண்டிவரும். ஆற்றிலிருந்து கிடைக்கிறது, வேண்டியவரை அள்ளி எடுத்துப்போவோம் என்பதெல்லாம் பழைய காலம். சற்றே குறைந்த அளவு சுத்திகரிக்கப்பட்ட கடல் நீரை (அதாவது குடிதண்ணீர் அளவிற்கு சுத்தம் செய்யாமல்) கடலொட்டிய மாவட்டங்களில் விவசாயப் பாசனத்திற்குப் பயன்படுத்தினால் என்ன செலவாகும் என்று பார்க்கலாம்.

தமிழகம் காவிரியில் தண்ணீர் வரும், கிருஷ்ணா தண்ணீர் வரும், வீராணம் தண்ணீர் வரும், நதிநீர் இணைப்பு நாளையே நடக்கும் என்று மோசம் போவதைக் காட்டிலும் கடல் நீரை நம்புவது மேல் என்று தோன்றுகிறது.

No comments:

Post a Comment