Sunday, April 15, 2007

செல்பேசி நிறுவனங்கள் - யாருக்கு எவ்வளவு வருமானம்?

இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்துவரும் ஒரு துறை தொலைத்தொடர்புத் துறை. இந்தத் துறையில் வருமானம் அடிப்படையில் பெரிய நிறுவனங்கள் - பார்தி, ஹட்ச், ரிலையன்ஸ், பி.எஸ்.என்.எல்/எம்.டி.என்.எல், ஐடியா, டாடா இண்டிகாம். பிறகு ஸ்பைஸ், ஏர்செல் ஆகியவையும் உண்டு. இவற்றில் பார்தி, ரிலையன்ஸ், ஐடியா ஆகியவை பப்ளிக் லிமிடெட் நிறுவனங்கள். அதனால் அவை பற்றிய தகவல்கள் வெளியே தெரியும். எம்.டி.என்.எல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனம். இதன் தகவல்களும் தெரியும். பி.எஸ்.என்.எல் பங்குச்சந்தையில் இல்லாத ஆனால் அரசு நிறுவனம். எனவே இதன் தகவல்களும் ஒவ்வொரு காலாண்டும் தெரியாவிட்டாலும் ஆண்டிறுதியில் தெரிந்துகொள்ள முடியும்.

ஆனால் ஹட்ச், டாடா, பிற சிறு நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் வெளியே தெரிவது கஷ்டம். தகவல்கள் என்றால்?

அவர்களது வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, அவர்களது முழு வருமானம், நிகர லாபம், ஒவ்வொரு வாடிக்கையாளரும் அவர்களுக்கு ஈட்டித்தரும் வருமானம், பங்கு ஒன்றுக்கு அவர்கள் பெரும் லாபம் (ரிடர்ன் ஆன் இன்வெஸ்ட்மெண்ட்) ஆகியவை.

இதில் GSM வழியாக செல்பேசிச் சேவை அளிக்கும் நிறுவனங்களின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, செல்பேசிச் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பு COAI மூலமாக வெளியே கிடைக்கிறது. இப்பொழுது TRAI மூலம் இந்த நிறுவனங்களின் வருமானம் பற்றிய தகவலும் கிடைக்க ஆரம்பித்துள்ளது. இதற்குக் காரணம் இவர்கள் அரசுக்குச் செலுத்தும் உரிமத் தொகை இவர்களது வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம். எனவே அரசுக்கு இவர்கள் தங்கள் வருமானத்தைச் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.

எகனாமிக் டைம்ஸ் செய்தித்தாளில் வெளியான இந்தச் செய்தியைப் பாருங்கள். கடந்த காலாண்டில் (Q3 2006) இவர்களது வருமானம்:

நிறுவனம்வருமானம் (கோடி ரூபாய்)
பார்தி ஏர்டெல்5,361.62
ரிலையன்ஸ் இன்ஃபோகாம்3,621.26
ஹட்ச்2,800.53
டாடா இண்டிகாம்1,642.26
ஐடியா1,187.59
ஏர்செல்344.20


அடுத்த சில வருடங்களில் இந்த வரிசை எப்படி மாறும் என்பது சுவாரசியமானது.

No comments:

Post a Comment