Saturday, May 12, 2007

மாயாவதியின் வெற்றி

மாயாவதியின் வெற்றி இரண்டு காரணங்களுக்காக வரவேற்கப்படவேண்டும்.

ஒன்று - தனிப்பெரும்பான்மை. அனைத்து ஊடகங்களும் தொங்கு சட்டமன்றமாகத்தான் இருக்கும் என்று தீர்மானித்திருந்தனர். அப்படிப்பட்ட நிலையில் பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் அல்லது பாரதீய ஜனதா கட்சியோடு கூட்டணி ஆட்சி நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். ஸ்திரமான கூட்டணி ஆட்சி பல இடங்களில் நடக்கிறது. அங்கெல்லாம் பெரும்பாலும் ஒரு கட்சியை முன்னிலைப்படுத்தி, பிற கட்சிகள் அந்தக் கட்சியின் தலைமையை ஏற்று அமைதியான முறையில் செல்வார்கள். பிஹார் அப்படித்தான். மஹாராஷ்டிரம் அப்படித்தான்.

ஆனால் கர்நாடகம் குழப்பத்தில் இருப்பதற்குக் காரணம் எந்தக் கட்சியும் அடுத்ததை முழுமையாக 'நம்பர் ஒன்'னாக ஏற்காததே. இது எண்ணிக்கை சம்பந்தப்பட்டது அல்ல. மனநிலை சம்பந்தப்பட்டது. முதல்வராக எந்தக் கட்சியைச் சேர்ந்தவர் இருந்தாலும், கடைசிவரை அவரது தலைமையில் ஆட்சியை நடத்தவேண்டும் என்ற விருப்பம் இல்லாமை. உத்தர பிரதேசத்தில் இந்த நிலைமை ஏற்படலாம் என்று தோன்றியது. ஏற்கெனவே சென்ற தேர்தலின்போது மாயாவதி - பாஜக கூட்டணியில் இதுதான் ஏற்பட்டது. பாஜக காலை வாரிவிட, மாயாவதியின் கட்சியை உடைத்து அதிலிருந்து வெளியேறியவர்களை வைத்து முலாயம் சிங் ஆட்சியைப் பிடித்தார்.

இம்முறை அதைப்போன்று நடக்காமல் தனிப்பெரும்பான்மை கிடைத்தது ஆச்சரியத்தை வரவழைத்தாலும் மிக நல்ல சகுனம்.

இரண்டு - மாயாவதி அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கியுள்ள கூட்டணி. நேற்று ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இதைப் பெரிதும் அலசினர். பகுஜன் சமாஜ் கட்சியில் தலித்கள், பிராமணர்கள், யாதவ்கள் உள்ளடங்கிய பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என அனைவருக்கும் இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களும் பெரும்பான்மையாக பகுஜன் சமாஜ் கட்சிக்கே வாக்களித்துள்ளனர்.

சிலர் மாயாவதி தனக்கென எந்தத் தேர்தல் அறிக்கையைக்கூட வெளியிடவில்லை என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர். எனக்கென்னவோ மாநிலத் தேர்தல்களைப் பொறுத்தமட்டில் தேர்தல் அறிக்கை என்ற ஒன்று தேவையில்லை என்றே தோன்றுகிறது. உத்தர பிரதேசம் போன்ற இடத்தில் தேவை நல்லாட்சி, வளர்ச்சியைத் தடுக்காமல் இருப்பது, பொருளாதார வளர்ச்சி பரவலாக எல்லோரையும் அடையுமாறு செய்வது. இதற்கு பெரிய தேர்தல் மேனிஃபெஸ்டோ எதுவும் தேவையில்லை.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் மாயாவதி எந்த அளவுக்கு அடிப்படை விஷயங்கள் - சாலைகள், வேலைகள், தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை உருவாக்குகிறார் என்பதை வைத்து அவர் தலைமையில் உத்தர பிரதேசம் எங்கே போகும் என்று தீர்மானிக்கலாம்.

3 comments:

  1. மாயாவதியின் வெற்றி வரவேற்கத்தக்க ஒன்று. தனிப்பெரும்பான்மை அரசியல் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும். நல்லாட்சி கொடுப்பார் என்று நம்பலாம்.

    ReplyDelete
  2. Mayavati has embarked on a purely caste based politics. But she was not rebuffed or discriminated.
    But the treatment met out to BJP by the media is highly biased.

    It seems, today, casteist politics holds more good than ideological politics.

    I dont know, for what sake should mayawati be praised. Her past history doesnt credit her.

    By the way, the low voter turnout had lead to her success. Since she could bag 20 % of dalit votes who all voted without fail, the remaining 26% votes got splitted b/w all three parties. Just with the dalit votes, she could have won many seats. Added to that, some sections of brahmins too supported her.

    But if the voter turnaround has been around atleast 60%, then she could have bagged only less seats.

    ReplyDelete
  3. Everybody is doing casteist politics(including BJP) and Mayavati did a coup-de-grace in that..
    She clearly identified that Its Others Vs OBCs & Muslims.. and played the cards correctly by vooing brahmins and other upper castes. If she can keep the unity between Dalits and Brahmins.. she would be difficult to dislodge in the coming years..

    ReplyDelete