Monday, March 31, 2008

சிதம்பரம் நடராஜர், இறையூர் கிறித்துவர்கள்

ஒன்று சில நாள்களுக்கு முன் நடந்துமுடிந்த விஷயம். மற்றொன்று இப்போது நடந்துகொண்டிருக்கும் விஷயம்.

தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் யார் தேவாரம் பாடவேண்டும், எங்கு நின்றுகொண்டு தேவாரம் பாடவேண்டும் என்பதில் பிரச்னை. பிரச்னையைப் பற்றி நிறையவே படித்திருப்பிர்கள். என் கருத்து:

* நடராஜர் கோயில் போன்று எந்தப் பெரிய கோயிலும் தனியார்வசம் இருக்ககூடாது. அப்படியானால் மசூதி, கிறித்துவ தேவாலயம் ஆகியவற்றுக்கு மட்டும் என்ன விதிவிலக்கு என்று கேட்கலாம். நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மையினருக்கு சில சலுகைகளை அளித்துள்ளது. மதவழிபாட்டிலிருந்து, கல்வி நிலையங்கள் அமைப்பதுவரை. அந்த சலுகைகள் ஒருசில காரணங்களுக்காகவே உள்ளன. ஆனால் இதுபோன்ற பாதுகாப்புகள் பெரும்பான்மையினருக்குத் தேவையில்லை.

* பாரம்பரியம் என்ற போர்வையில் சில பிரிவினரை ஓரங்கட்டி, பொதுமக்கள் மொழியையும் பெரும்பான்மை சாதியினரையும் அவமதிப்புக்குள்ளாக்கும் எந்தப் பழக்கத்தையும் லிபரல் சிந்தனையாளர்கள் அனுமதிக்கக்கூடாது. 'தேவாரம் பாடக்கூடாது' என்பது அல்லது 'நாங்கள்தான் பாடுவோம், இவர் பாடக்கூடாது' என்பது அல்லது 'இந்த இடத்திலிருந்து பாடக்கூடாது' என்பது அவமரியாதையான செயல். இதைக் கேட்க ம.க.இ.க அல்லது பெரியார் ஆதரவாளர்கள் யார் என்ற கேள்விக்கே இடம் இல்லை. உயர்சாதி இந்துக்கள், உருப்படியாக ஒன்றும் செய்யாதபோது, இந்தப் பிரச்னையை போராட்டமாக்கி, எதிர்கொண்டு, அரசை சரியான தீர்ப்பு அளிக்க வைத்தது இவர்களே.

* இதை இத்துடன் நிறுத்திவிடாமல், எந்தெந்தக் கோயில்களில் என்னவிதமான சாதி அவமரியாதைகள் நடக்கின்றன என்று கண்காணித்து, அவற்றை மாற்ற சட்டரீதியிலான நடவடிக்கைகள் எடுப்பது அவசியம்.

* அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக ஆவது முதற்கொண்டு இதில் அடங்கவேண்டும்.

* எந்தவித சடங்கு, சம்பிரதாயத்துக்கும் ஆதரவு தெரிவிக்காத, அவற்றை ஏற்றுக்கொள்ளாத எனக்கு இதில் கருத்து கூற உரிமையுள்ளது என்றே நினைக்கிறேன். அதுபோன்றே ம.க.இ.க போன்றோருக்கும், பெரியார் அமைப்பினருக்கும் இதற்கு முழு உரிமையுள்ளது என்று நினைக்கிறேன்.

***

விழுப்புரம் இறையூரில் கிறித்துவ சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையே இப்போது நடந்துவரும் பிரச்னை இரண்டு முக்கியமான விஷயங்களை முன்வைக்கிறது.

(1) சாதி என்பது மதமாற்றத்தால் மாறிவிடுவதில்லை. வன்னிய கிறித்துவர், தலித் கிறித்துவர் என்ற பாகுபாடு கேட்பதற்கே சங்கடம் தருகிறது. கிறித்துவத்துக்கு மதம் மாறினால் சாதி போய்விடும் என்ற நம்பிக்கை அபத்தமானது என்றே இது காட்டுகிறது. தனி வாயில்கள், தனிப் பாதை, வெவ்வேறு இடுகாடு, வெவ்வேறு திருவிழாக்கள் என்று பிரித்துப் பார்ப்பது இந்து மதத்தின் கேவலமான செய்கைகள் என்றால், அதில் ஒரு சிறிதும் குறைவுபடாமல் நடக்கும் தமிழ் கத்தோலிக்க கிறித்துவத்தையும் அதே பாணியில் சாடவேண்டும்.

(2) வன்னிய கிறித்துவர்கள், தாங்கள் தலித் கிறித்துவர்களால் தீட்டுப்படாமல் இருக்கவேண்டும் என்றால் மீண்டும் 'தாய் மதத்துக்கே திரும்புவோம்' என்று சொல்வதை, பலரும் சொல்வதைப்போன்று இந்துமதத்தை அவமதிப்பதாகும் என்றெல்லாம் சொல்லமாட்டேன். இந்துமதம் இதுபோன்ற அயோக்கியத்தனங்களை எதிர்க்காது என்பதால்தான் வன்னிய கிறித்துவர்கள் இப்படிச் சொல்கின்றனர்.

மேலும் ஒற்றைக்குடையின்கீழ் நிறுவனப்படாத இந்து மதத்துக்கு யாரும் அதிபதி என்று கிடையாது. நாளை இந்த வன்னிய கிறித்துவர்கள் மதம் மாறி, இந்துக்கள் என்று சொன்னால் யாரும் அவர்கள் அப்படிக் கிடையாது என்று சொல்லிவிட முடியாது. ஒரு விநாயகர் அல்லது அம்மன் கோயிலைக் கட்டிக்கொண்டு, தாராளமாக தீண்டாமையை அங்கு உலவவிட்டு, இந்த 'வன்னிய புது இந்துக்கள்' வாழ்க்கை நடத்தலாம்.

காரணம், ஏற்கெனவே பல இந்துக் கோயில்களிலும் வழிபாடுகளிலும் தீண்டாமை நிலவிவருவதுதான். மேலும் யாரிடமும் அனுமதி கேட்காமல், மறை ஆயர் அல்லது வக்ஃப் வாரியம் என்று எந்த வழிமுறையும் இல்லாமல், ஒரு இந்துக் கோயிலைக் கட்டி, 'குடமுழுக்கு' செய்வித்து, ஐயரை வைத்து அபிஷேகமும் தீபாராதனையும் செய்து தீண்டாமையை நன்கு பரப்பலாம். எங்களது தெருவில் கடந்த இரண்டு மாதத்துக்குள் தெருவோர பிள்ளையார்கள் கோயில்கொண்ட பிள்ளையார்களாக மாறியுள்ளனர். உருவாக்கியவர்கள் ஆட்டோக்காரர்கள். தினமும் மணியடித்து பாலபிஷேகம் செய்பவர்கள் பூணூல் போட்ட ஐயர்கள்.

***

மேற்கண்டதுபோல சாதி/மொழி பேதங்களால் பல பிரச்னைகள் வழிபாட்டுத் தலங்களில் நிலவுகின்றன. இதற்குக் காரணம், இந்து மதத்தை மறுகண்டுபிடிப்பு செய்யும் மாபெரும் ஆன்மிகத் தலைவர்கள் சமீபத்தில் தோன்றாததே. சிலர் மதத்தை முற்றிலுமாக அழித்துவிடவேண்டும் என்று சொல்கிறார்கள். அது முடியுமா, இல்லையா என்று தெரியவில்லை. பெரியார், கம்யூனிஸ்டுகள் என இருவருமே முனைந்தாலும் அவர்களால் பல நன்மைகள் ஏற்பட்டுள்ளதேதவிர, மதத்தின் தாக்கத்தில் பெரிய மாற்றமில்லை.

எனவே ஒருபக்கம் மத எதிர்ப்பு இயக்கங்கள் நடந்துவரும்போதிலும், மதத்துக்குள்ளான சீர்திருத்தப் பிரசாரத்தை எடுத்துச் செல்லும் ஆசாமிகளும் தேவை.

8 comments:

  1. அருமையான பதிவு! சரியான சிந்தனை.

    செல்வா
    வாட்டர்லூ, கனடா

    ReplyDelete
  2. பத்ரி,
    பல சாதிகளை தீண்டாமையிலிருந்து கிறீத்துவம் விடுவித்துள்ளது. இதை மறுக்க இயலாது.

    ஆனாலும் சாதியத்திலிருந்து முற்றிலுமான விடுதலையாக இது இல்லை என்பது உண்மை.

    என் கருத்துக்கள் இங்கே

    ReplyDelete
  3. நல்ல கருத்துக்கள்!

    ReplyDelete
  4. மதங்களை சிறுபான்மை,பெரும்பான்மை என்று பிரிப்பது ஒத்துவராது.காஷ்மீரில்
    இஸ்லாமியர் பெரும்பான்மையினர்,
    வடகிழக்கில் சில் மாநிலங்களில் கிறித்துவர் பெரும்பான்மையினர்.
    ஒன்று அனைத்து வழிப்பாட்டுத்தலங்களும் அரசின் மேற்பார்வையில், அல்லது எதுவும்
    அப்படி இருக்க கூடாது.
    மத உரிமை பெரும்பான்மையினருக்கும் உண்டு.
    மதச்சார்பற்ற தாராளவாதிகளுக்கு
    இருக்கும் மயக்கம் உங்களுக்கும்
    இருக்கிறது.

    ReplyDelete
  5. I do not agree with your views on government taking over the management of all temples. If there is caste discrimination in temples, Government should monitor/educate and take appropriate tough legal actions against the people who are committing the mistake. Yes, Everyone should have a say on the management of temples even if they do not believe in GOD. Offcourse, you are entitled to express your opinion but at the same time, actions can be taken based on the opinions of people who understand the relegious ceremonies. Offcourse, it is not so easy to find a person who is open to discuss the merits/demerits of all these ceremonies. But it is not supposed to be an easy job.


    No Government is going to make the decisions just by reading this post and you don't need to hide yourself on the managment of churches/mosques saying that they are minorities. Going by the same logic, these brahmin theetachadars would claim that they are in minority league compared to other castes. Why should the majority/minority stop at the level of religion ?

    Either you come out in open and suggest that the religious insitituions should be managed completely by the government based on its merits or keep quiet.

    mani

    ReplyDelete
  6. "அப்படியானால் மசூதி, கிறித்துவ தேவாலயம் ஆகியவற்றுக்கு மட்டும் என்ன விதிவிலக்கு என்று கேட்கலாம். நம்முடைய அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மையினருக்கு சில சலுகைகளை அளித்துள்ளது. மதவழிபாட்டிலிருந்து, கல்வி நிலையங்கள் அமைப்பதுவரை"

    in my opinion, you are unwittingly misleading here. when time permits, I shall have a through reading of Art.26 - 30 in the Constitution

    ReplyDelete
  7. பத்ரியின் வழமையான ஜல்லி.

    உண்மையை திரிப்பதில் லாபம் இருந்தால் செய்துவிட்டுப் போவோமே. வேறென்ன சொல்ல?

    ReplyDelete
  8. அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக ஆவதற்கு ஏதுவாக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை அரசு துவங்கினாலே, பாதி பிரச்சினை தீர்ந்துவிடும்.

    ReplyDelete