Saturday, November 29, 2008

வானவில்

Rainbow in Gopalapuram

ஏழைக்கேத்த எள்ளுருண்டையாக எனது நோக்கியா E-51-ல் இன்று காலை பிடித்த வானவில்.

சூரியனிலிருந்து வரும் வெண்மையான ஒளி, ஒரு குறிப்பிட்ட வண்ண ஒளி கிடையாது. பல வண்ண ஒளிகள் கலந்து கொடுக்கும் வண்ணமே இந்தப் பளிச்சிடும் வெண்மை. வெள்ளை ஒளி என்ற ஒன்று கிடையவே கிடையாது.

இது சிலருக்கு அதிர்ச்சியைத் தரலாம்!

வானவில்லில் ஏழு வண்ணங்கள் தெரியும். ஆங்கிலத்தில் இதனை VIBGYOR என்று குறிப்பிடுவார்கள். வயலட், கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்ச், சிவப்பு என்பதே இந்த வண்ணங்கள். இதில் பொதுவாக, மனிதக் கண்களால் பார்க்கும்போது, வயலட் (அல்லது நீலம்), மஞ்சள், சிகப்பு என்ற மூன்று வண்ணங்கள்தான் ஓரளவுக்குத் தெளிவாகத் தெரியும்.

நியூட்டன் ஒரு கண்ணாடி முப்பட்டகத்தை (Prism) வைத்து ஒளியை இந்த ஏழு வண்ணங்களாகப் பிரித்தார். பின் அதே முப்பட்டகத்தை தலைகீழாக அருகில் வைத்து, மீண்டும் ஏழு வண்ணங்களையும் கலந்து வெள்ளை ஒளியாக்கினார்.

ஒவ்வொரு வண்ண ஒளிக்கும் வெவ்வேறு அலை நீளம், அதிர்வெண் உண்டு. (பார்க்க: ஸ்பெக்ட்ரம் தொடர்பான பதிவு. அலை நீளத்தையும் அதிர்வெண்ணையும் பெருக்கினால் கிடைப்பது மாறிலியான ஒளியின் வேகம்: விநாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்.)

வெவ்வேறு அலை நீளம் இருப்பதால்தான், ஒரு கண்ணாடிப் பட்டை வழியாக ஊடுருவிச் செல்லும்போது, ஒவ்வொரு வண்ண ஒளி அலையும் வெவ்வேறு கோணத்தில் வளைகிறது. அதனால் வெளியேறும்போது தனித்தனியாக வருகின்றன.

நீர்த் திவலைகளிலும் சூரிய ஒளி பிரதிபலிக்கும்போது வானவில் தோன்றுகிறது. ஆனால் இதற்குப் பின்னாலான அறிவியல் அவ்வளவு எளிதானதல்ல! மழை பெய்யும்போதெல்லாம் வானவில் தோன்றாது. என்றாவதுதான்.

என் மகள் தான் வானவில்லைப் பார்ப்பது இது மூன்றாவது முறை என்றாள். இதற்கு முன்பு பார்த்ததும் இங்கே வீட்டில் இருந்துதான்.

***

கோபாலபுரத்தில் உள்ளவர்கள் பாக்கியவான்கள். தெருவில் அதிகம் தண்ணீர் தேங்கவில்லை. அதனால் ஒரு விநாடிகூட மின்சாரம் வெட்டப்படவில்லை. தினசரி ஆவின் பால் கிடைத்தது. மாநகராட்சி தண்ணீர் தினமும் கிடைத்தது. ஹெரிடேஜில் காய்கறி கிடைத்தது. ஓயாமல் பெய்த மழையில் என் பெண்ணுக்கு பள்ளி விடுமுறை விட்ட ஒன்றுதான் disruption.

ஆனால், பிற சென்னை மக்கள் அவ்வளவு பாக்கியம் செய்யவில்லை. Storm water disposal சாக்கடைகள் இன்னமும் பல இடங்களில் அமைக்கப்படவில்லை. நமது மாநகரம் திட்டமிட்டு அமைக்கப்பட்டதல்ல. பிரச்னை வந்தால் அப்போது அந்த விநாடி, என்ன முடியுமோ அதைச் செய்துகொள்ளலாம் என்பதுதான் இந்தியப் பண்பாடு. அது சென்னை மழையானாலும் சரி, மும்பைத் தாக்குதலானாலும் சரி.

இதற்கு அரசுகளை மட்டும் குற்றம் சொன்னால் போதாது. அது நியாயமே கிடையாது. சிவில் சமூகமான நாம்தான் நம்முடைய அரசியல்வாதிகளிடம் பேசி, நம் அஜெண்டாவை அவர்கள்முன் வைக்கவேண்டும்.

1 comment:

  1. கோபாலபுரத்தில் உள்ளவர்கள் பாக்கியவான்கள். தெருவில் அதிகம் தண்ணீர் தேங்கவில்லை. அதனால் ஒரு விநாடிகூட மின்சாரம் வெட்டப்படவில்லை. தினசரி ஆவின் பால் கிடைத்தது. மாநகராட்சி தண்ணீர் தினமும் கிடைத்தது. ஹெரிடேஜில் காய்கறி கிடைத்தது

    is it because you live there :).

    ReplyDelete