Tuesday, June 09, 2009

ஆஸ்திரேலிய இனவெறித் தாக்குதல்கள்

ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள்மீது கடந்த சில வாரங்களில் இனவெறித் தாக்குதல்கள் நடந்துள்ளன. எதிர்பார்த்ததுபோலவே, ஆஸ்திரேலிய காவல்துறை, இந்தத் தாக்குதல்கள் இனவெறியினால் அல்ல என்று சாதித்துள்ளனர். பல இந்தியர்களுமேகூட, ‘It is not racist, it is opportunistic’ என்று சொல்கின்றனர்.

இது முழுமையான அபத்தம்.

இனவெறி என்பது எங்கும், எப்போதும் பரவியுள்ளது. நல்ல பொருளாதார வளர்ச்சி இருக்கும்போது, இது அவ்வளவாகத் தலைதூக்குவதில்லை. எப்போது பொருளாதார வளர்ச்சி குன்றுமோ, முதலில் தலையை வெளியே காட்டுவது இனவெறித் தாக்குதல்கள்தான். பொதுவாக குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், பலவீனமான இரை கிடைக்கிறதா என்றுதான் பார்ப்பார்கள். அப்படிப்பட்ட பலவீனமான இரைதான் இந்தியர்கள்.

பலரும் குறிப்பிட்டுள்ளதுபோலவே, சில வருடங்களுக்குமுன் ஆஸ்திரேலியாவில் சீனர்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். அதற்குமுன் ஐரோப்பியாவின் பிற பகுதிகளிலிருந்து வந்தவர்கள். ஆஸ்திரேலியாவில் உள்ள பெரும்பான்மையினர் பிரிட்டனிலிருந்து வந்தவர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஆஸ்திரேலியாவில் இருக்கும் அனைத்து இந்தியர்களுமே ஆஸ்திரேலியர்களின் வேலைகளைப் பிடுங்கிக்கொள்பவர்கள் இல்லை. டாக்ஸி ஓட்டுபவர்கள் சிலர் உள்ளனர். மென்பொருள் ஆசாமிகள் சிலரும் உள்ளனர். ஆனால் பெரும்பாலானவர்கள் ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கச் சென்றவர்கள். கைக்காசு செலவு செய்து ஆஸ்திரேலிய பொருளாதாரத்துக்கு நன்மை செய்பவர்கள்.

ஆனால் இந்த உண்மைகள் ஆஸ்திரேலிய குடிகார ரவுடிகளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. இப்போதைக்கு இந்தியர்களைத் தாக்கினால் ஜாலியாக உள்ளது என்றால் தாக்கித்தான் வைப்போமே என்பதுதான் அவர்களது எண்ணம்.

இந்தியர்கள் மைய நீரோட்டத்தினருடன் சேர்வதில்லை என்றெல்லாம் சொல்வது 21-ம் நூற்றாண்டுக்கு அழகல்ல. அவரவர், அவரவர் கலாசாரத்துடன் ஆங்காங்கே தனித்து வாழ்வதிலும் பிரச்னை இல்லை என்பதுதான் இன்றைய புரிதல். இந்தியர்கள் மட்டுமல்ல, சீனர்கள், கொரியர்கள் என்று எந்த ஆசிய கலாசாரத்தை எடுத்துக்கொண்டாலும், தங்களுக்குப் பிடித்த வகையில் தாங்கள் தனிக் குழுவாக வாழ்வதில்தான் அவர்களுக்குச் சந்தோஷம் என்றால் அதனால் பிறருக்கு எந்தக் கெடுதலும் இல்லை.

இந்தத் தாக்குதல்கள் இத்துடன் நிற்கப்போவதில்லை. ஐரோப்பாவிலும், ஏன் அமெரிக்காவிலும்கூட இந்தியர்கள் இனவெறித் தாக்குதலுக்கு உள்ளாவார்கள். நடந்துமுடிந்த ஐரோப்பிய தேர்தலில் குடியேற்றத்துக்கு எதிரான, வலதுசாரி, தேசியவாதக் கட்சிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக வாக்குகளைப் பெற்றிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இன்றைய பொருளாதார நிலையில் அவர்கள் ஜெயிப்பது எதிர்பார்க்கப்பட்டதே.

எனவே இந்தியர்கள் செய்யவேண்டியது ஒன்றுதான். தங்களுக்குத் தேவையான வசதிகளை முடிந்தவரை இந்தியாவிலேயே உருவாக்கிக்கொள்ள முற்படவேண்டும். பிற நாடுகள் இப்படித்தான் இந்தியர்களை நடத்தவேண்டும் என்று நாம் எந்த அளவுக்கு வற்புறுத்தமுடியும் என்று தெரியவில்லை. ஒரு நாட்டு மக்களின் அல்லது அந்த மக்களில் சிலரின் நடத்தை அவர்களது வாழ்க்கைத்தரத்தை ஒத்தே இருக்கும். அந்த மக்களின் வாழ்க்கைத் தரம் குறையும்போது, பிறர்மீது (முக்கியமாக ‘அந்நியர்கள்’மீது) எரிச்சல் ஏற்படுகிறது. அது வன்முறையாக மாறுகிறது.

15 comments:

Anonymous said...

உலகமயமாக்கல் என்று ஊருக்கெல்லாம் உபதேசம் செய்தவர்கள் தங்கள் வயிறு காயும்போது பசி வந்திட பத்தும் பறந்து போம் என்று எரிச்சல்படுவதை அழகாக எடுத்துரைத்திருக்கிறீர்கள். ஆனால் இந்த இனவெறி இங்கும் நிலவி வருவதை நாம் மறந்து விடுகிறோம். மராத்தியர்களுக்கு முதலில் தென்னிந்தியர்கள் இப்போது வட இந்தியர்கள், தமிழருக்கு மலையாளிகள், கன்னடருக்கு தமிழர் என்று பிறர் மீதான எரிச்சல் வன்முறையாவதை கண்டுகொண்டுதானே வருகிறோம். இனவெறியிலும் வெள்ளைத் தோல் அநியாயங்களைத் தான் கண்டிக்கிறோம். இலங்கையில் இனப்பேரழிவே நடந்தாலும் ஆஸ்திரேலியா நிகழ்வுகளுக்கு கிடைத்த வெளிச்சத்தில் பகுதி கூட கிடைக்கவில்லையே :(

Anonymous said...

Ironically we have biharis in maharashtra facing that situation in our own country


Sri

Anonymous said...

//இனவெறி என்பது எங்கும், எப்போதும் பரவியுள்ளது. நல்ல பொருளாதார வளர்ச்சி இருக்கும்போது, இது அவ்வளவாகத் தலைதூக்குவதில்லை. எப்போது பொருளாதார வளர்ச்சி குன்றுமோ, முதலில் தலையை வெளியே காட்டுவது இனவெறித் தாக்குதல்கள்தான். //

நல்ல அவதானிப்பு. மனிதனுக்கு தான் அடுத்தவனை விட மிகத்தாழ்ந்திருந்தாலும் வெறுப்பு வரும். மிக உயர்ந்திருந்தாலும் ஆதிக்கவெறி ஏற்படும். அதனாலேயே, disparityகளைத் தவிர்த்து ஒருவித balanceஐக் கொண்டுவரவேண்டியது ஒரு நல்ல அரசாங்கத்தின் கடமையாகும். சமூக நிலைத்தன்மைக்கு இது மிகவும் அவசியம்.

ரா.கிரிதரன் said...

//அவரவர், அவரவர் கலாசாரத்துடன் ஆங்காங்கே தனித்து வாழ்வதிலும் பிரச்னை இல்லை என்பதுதான் இன்றைய புரிதல்.//

சீனர்கர்ள், போலாந்து மக்கள் உட்பட லண்டனில் இவ்வகை வாழ்வுமுறையே உள்ளது. ஆனால் நீங்கள் சொல்வதுபோல் தனித்து வாழவிடுவதில் பல சிக்கல்கள் உள்ளன. எங்களையும் வாழ விடுங்கள் எனக் கூக்குரலிடுவதில் பிரச்சனை இல்லை.

இங்கே போலாந்து மக்கள நிறைய கடைநிலை வேலைகளுக்கு வந்துவிட்டதால், இந்தியர்களுக்கும் பாகிஸ்தானிய மக்களுக்கும் பிரச்சனையே. ஆனால் இதைச் சமாளிக்க அரசே போலந்திற்கு பண உதவி செய்து, அந்த நாட்டின் அந்நியச் செலவாணியை உயர்த்த திட்டம் போட்டுள்ளது. இதனால், இங்குள்ள மக்களுக்குச் சுலபமாக வேலை கிடக்கும். மேலும் போலிஷ் மக்களும் அவர்கள் ஊருக்கே சென்றுவிடுவார்கள் என்ற எண்ணம்.
பிரிட்டிஷ் ஜெண்டில்மென்கள் குறைந்து வருவதும் இதற்கு ஒரு காரணம்.

ட்யூப் எனப்படும் தரைக்குக் கீழே இயங்கும் ரயிலில் பயணம் செய்தால் பல்லவன் தோற்கும். இதே ஜப்பானிலும் நடந்து வருகிறது. காலை மிதிப்பதும், குழந்தைகளுக்கு இடம் கொடுக்காமல் போக்கு காட்டுவதும் இங்கே சகஜமாக நடந்து வருகின்றது.

நம் நாட்டில் ஜனத்தொகை, மற்றும் படிப்பின்மையே நம் இன்றைய நிலைக்குக் காரணமெனத் தோன்றுகிறது. அதே அளவு கூட்டம் இங்கே இருந்தால், எல்லோரும் அரக்கர்கள் ஆகிவிடுகிறார்கள். நமக்கு பழக்கம்; இவர்களுக்கு இல்லையே.இந்தப் புரிதல் பழக்கத்திற்கு வந்தாலும் அரசு அதற்கான மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது.

Chivalry என்ற வார்த்தையை ஆங்கில அகராதியில் நீக்க வேண்டிய நேரம் வந்துகொண்டிருக்கிறது.

Anonymous said...

அவுஷ்ரெலியா இறைமையுள்ள நாடு ஆதலால் எம்மால் ஒரு எல்லைக்கே அவர்களிடம் சொல்ல முடியும்,மற்றும் நம்ம சவுத் கட்சிகள் சொல்லும் மத்திய அரசின் முடிவே நமது முட்டிவு....

இங்கே அவுஷ்ரேலியாவில் தமிழர்கள் எவருக்கும் அவர்கள் அடிக்கவில்லை இந்தி,தெலுங்கு,சிங்கி,காரனுக்குதான் அடி....

இலங்கையில் தமிழர்களுக்கு அடிவிழும்போது வேடிக்கை பார்த்த இந்தி(ய) அரசு இப்போது மட்டும் கொதிக்குதோ....

Anonymous said...

சந்தோசம் பொங்குதே சந்தோசம் பொங்குதே சந்தோசம் என்னில் பொங்குதே.
எம் மக்களை இனப்படுகொலை பண்ணும் போது ஆயுத சப்ளை செய்தீர்களே. இன்று..???????????
முற்பகல் செய்தீர்கள். பிற்பகல் விளைகிறது....
இன்று கூட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படியினரால் கடத்தப்படுள்ளனர்? உங்கள் கூப்பாடுகளை இதற்கு போடவில்லை. எந்த மீடியாவும் செய்தி காட்டவில்லை. தமிழக மீனவர்கள் எல்லாம் அமெரிக்கர்களா?அவர்களும் இந்தியர்கள் தானே...

Gopalan Ramasubbu said...

பத்ரி,

கடந்த ஏழு வருடங்களாக மெல்பெர்ன் நகரில் வசித்து வருகிறேன். இந்தியர்களின் மீதான தாக்குதலை ”இனவெறி” தாக்குதல் என்று சொல்வதில் எனக்குச் சிறிதும் உடன்பாடு இல்லை.ஏனென்றால், ”இனவெறி”தாக்குதல் என்று இந்திய ஊடகங்களால் சொல்லப்படும் தாக்குதல்களில் 90% தாக்குதல்கள் ஆங்கிலம் பேசாத நாட்டிலிருந்து வந்தவர்களால்(People of Non-English origin) நடத்தப்படுகிறது. இதை எப்படி “இனவெறி” தாக்குதல் என்று சொல்வீர்கள்? தாக்குதலின் நோக்கம் பணமும்,பொருளும்தான். இதில் சிரிப்பை வரவழைக்கும் விசயம் என்னவென்றால் இதுபோன்ற தாக்குதல்களில் அதிகம் பாதிக்கப்படுவது வெள்ளையர்கள்தான் (Caucasian).

http://www.hindu.com/2009/06/08/stories/2009060855971000.htm

What emerges when the facts are analysed dispassionately is that not every assault involving an Indian has been of a racial nature. According to the Victoria police, of the 36,765 victims of robbery and assault in 2007-08, 24,000 were Caucasian. It is also reasonable to assume that Indian students constitute a soft target for assailants; a sizeable number of them work late-night shifts to finance their studies and can afford to live only in less-secure neighbourhoods.

அனைத்து நாடுகளிலும் இனவெறி உள்ளது, பொருளாதார மந்தநிலை வரும்போது இனவெறி தலைதூக்கும் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், நகர்ப்புற வன்முறையை(Urban violence)யும் இனவெறியை போட்டுக் குழப்பிக்கொள்ளக்கூடாது.

"The most recent statewide statistics show stabbings rose from 392 in 2004 to 617 in 2007".

http://www.news.com.au/heraldsun/story/0,21985,25553558-661,00.html

ஆஸ்திரேலியா என்ற நாடே குடியேறியவர்களால் ஆனது என்பதை அறிவீர்கள்தானே? விக்டோரிய மாநிலத்தின் மக்கள் தொகையில் 47% பேர் அல்லது அவர்களின் பெற்றோர்களில் ஒருவர் ஆஸ்திரேலியாவிற்கு வெளியே பிறந்தவர். ஒரு நாடு இதற்குமேல் மல்டிகல்சுரல் ஆகமுடியாது.

புருனோ Bruno said...

//Ironically we have biharis in maharashtra facing that situation in our own country//

அதே அதே :) :)

பா. ரெங்கதுரை said...

”பார்ப்பனீய இந்துத்துவத்தின் கொடும் பிடியில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகச் சிக்கித் தவிக்கும் இந்தியாவில், திண்ணியம் போன்ற ஊர்களில் மலம் தின்னவைக்கப்பட்ட தலித்துகளின் உழைப்பை உறிஞ்சி, இன்று ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் என்ற போர்வையில் உல்லாச வாழ்வு நடத்துபவர்களுக்குக் கொடுக்கப்படும் சரியான பதிலடியே இத்தாக்குதல்கள்” என்று சொல்லிவிட்டுப் போகாமல் என்னென்னவோ எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். தேவையில்லாத வேலை.

Anonymous said...

Does this mean we cannot criticize anybody for any act? We cannot criticize Marathis because, Biharis themselves are not perfect and they routinely harass people who do not speak Hindi when they visit Bihar.

Nagulendran said...

ஈழத்தில் தமிழர்கள் இந்திய ஆயுதங்களால் கொல்லப்படும்போது எங்கே போனது உங்கள் பதிவுகள்?? எரி குண்டும், பல்குழல் ஆயுதங்களும் எம் மக்களின் மேல் விழும்போது எங்கே போனது உங்கள் மனித உரிமை எண்ணங்கள்???? நல்ல தமிழ் உணர்வலைகளை தவிர நீவிர் எல்லாம் "மானாட மயிலாட" பார்த்து கொண்டுதானே இருந்தீர்கள்.... எந்த ஒரு மனிதரும் (இந்தியர்கள் உட்பட) வெளிநாட்டில் தாக்கப்பட கூடாது!!!! அதே நேரம் நீங்கள் வலிகளை உணருங்கள்..... மகாத்மா காந்தி, நேரு, சுபாஷ் சந்திரபோஸ், பகத் சிங், கட்டபொம்மன் எல்லோரும் உங்கள் நாட்டில் பிறந்தார்கள்...ஈழத்தில் மட்டுமே அவர்கள் வாழ்ந்தார்கள்........

Anonymous said...

இலங்கையில் தமிழர்களுக்கு அடிவிழும்போது வேடிக்கை பார்த்த இந்தி(ய) அரசு இப்போது மட்டும் கொதிக்குதோ....///

well said

Badri said...

கோபாலன் ராமசுப்பு: ‘இனவெறி’ என்பது தாக்குதலில் மட்டுமில்லை; தாக்குதல்களை ஓர் அரசும் அதன் காவல்துறையும் எதிர்கொள்வதில் உள்ளது. திடீரென கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இந்தியர்கள் தாக்கப்படுவதற்கு என்ன காரணம்? அப்படிப்பட்ட தாக்குதல்கள் நடந்தவுடன், ஓர் அரசு உடனடியாக இந்தத் தாக்குதல்கள் இனவெறித் தாக்குதல்கள் இல்லை என்று மறுப்பதற்கு என்ன காரணம்?

அமெரிக்காவிலும் கடந்த ஒரு வருடத்தில் ஆந்திராவைச் சேர்ந்த பலர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அது ராண்டம் வயலன்ஸ் என்ற வகையைச் சேர்ந்தது என்று சொல்லிவிட முடியும். ஆனால், ஆஸ்திரேலியாவில் திடீரென அதிகமாகியிருக்கும் இந்தத் தாக்குதல்களை opportunistic தாக்குதல்கள் என்று விட்டுவிட முடியும் என்கிறீர்களா?

நீங்கள் அங்கேயே வசிப்பதால் நீங்கள் சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று ஏற்றுக்கொள்கிறேன். தாக்குதல் நடத்துபவர்களுமே பிற நாடுகளிலிருந்து வந்தவர்களாக இருக்கலாம்; ஆனால் அடிப்படையில் இனவெறி என்பது முதலில் தோல் சார்ந்தும், அடுத்து பேசுபவரது ‘உச்சரிப்பு’ சார்ந்தும், அடுத்து ஆசாமியின் மதம் சார்ந்தும் வெளிப்படுகிறது அல்லவா? நேற்று கப்பலிலிருந்து இறங்கி, இன்று ஆஸ்திரேலியாவில் குடியேறிய செர்பிய வெள்ளைத் தோல் ஸ்லாவிக் ஆள், ஓர் இந்தியனைத் தாக்கினால் அதற்கு அடிப்படை இனவெறியா இல்லையா என்று சொல்வது கடினம். ஆனால், இப்போது நடக்கும் தாக்குதல்கள் எல்லாம் அப்படிப்பட்டவையா என்ன?

Gopalan Ramasubbu said...

பத்ரி,

//கடந்த ஆறு மாதங்களில் மட்டும் இந்தியர்கள் தாக்கப்படுவதற்கு என்ன காரணம்?//

ஊடகங்கள் இது போன்ற கருத்தை தோற்றுவிக்கின்றன. இது போன்ற தாக்குதல்கள் கடந்த சில வருடங்களாகவே நடந்துவருகின்றன. சில suburbகளில் இவை அதிக அளவில் நடைபெறுகின்றன. இந்திய மாணவர்கள் மிக மோசமாகத் தாக்கப்பட்ட நான்கு சம்பவங்களில் மூன்று சம்பவங்கள் western Sububer களில் நடந்தவை. இது போன்ற தாக்குதல்களில் இந்தியர்கள் மாட்டிக்கொள்வது இந்திய மாணவர்களின் வாழ்க்கைமுறையினால்தான் (life style).

அமேரிக்காவைப் போல் ஆன்கேம்பஸ்ஸில் மட்டுமே வேலை செய்யவேண்டும் என்ற கட்டாயம் இங்கு இல்லை..மாணவர்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்யலாம். நிறைய இந்திய மாணவர்கள் பகலில் கல்லூரி்க்கு செல்லவேண்டியிருப்பதால் இரவில் வேலைக்குச் செல்கின்றனர். சிலர் டாலர்களில் சம்பாதிக்கத் தொடங்கியவுடன், படிப்பைவிட பகுதி நேரவேலையில்தான் ஆர்வம் செலுத்துகின்றனர். இவர்கள் அனைவரிடமும் iPod மற்றும் விலை உயர்ந்த செல்போன் இருக்கும். மேலும் இம்மாணவர்கள் பயந்த சுபாவம் உடையவர்களாக இருக்கிறார்கள்.இ்தனால் ஆஸ்திரேலிய குடிகாரர்களின் வலையில் சிக்குகின்றனர். மெல்பேர்ன் நகரில், இரவில் டாக்ஸி ஓட்டுபவர்களில் 70% பேர் இந்தியர்கள்தான். அதேபோல் இரவில் எல்லா 7/11, பெட்ரோல் ஸ்டேசன் அனைத்திலும் இந்தியர்கள்தான் வேலை செய்கிறார்கள்.

குற்றங்கள் அதிகம் நடைபெறுவதனால் வாடகை குறைவாக இருக்கும் பகுதிகளில் வசிக்கும் பழக்கம் இந்திய மாணவர்களிடம் உண்டு. இதுவும் ஒரு காரணம்.

என்னுடைய விமர்சனம் ஆஸ்திரேலிய காவல் துறையின் மீதுதான். இது போன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்கவேண்டுமானால், இரவு நேரங்களில் ரோந்து செல்லும் போலீஸார்களின் எண்ணிக்கையை அதி்கரிக்கவேண்டும். குறிப்பாக புகைவண்டிகளில். இங்கே பொதுவாகவே போலீஸாரின் எண்ணிக்கை குறைவுதான்..இதை சரி செய்யவேண்டும்.

இதை “இனவெறி” பிரச்சனையாகப் பார்ப்பதும், அதற்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்வதால் இது போன்ற தாக்தல்கள் குறையலாம் என்று நினைப்பதும் சரியான அனுகுமுறையாக இருக்காது. இந்திய ஊடகங்கள் இதை ஊதிக்கொண்டிருப்பதில் உள்நோக்கம் (Educational Reform) இருப்பதாகவும் சந்தேகிக்கிறேன்.

Vajra said...

Please read this


Basically the issue is as follows. Over the past two years there have been a number of attacks on ethnic Indians, mainly in Melbourne, but also in Sydney, and to a lesser extent in Adelaide. Much has been made of this, and I have read comments about the "white trash" and "racist Australia". The truth is more complex than this.

When I was Hindu chaplain at Flinders University, I became aware that there were a number of attacks on Indian students in the northern suburbs of Adelaide. When I enquired with the police I found out that the attacks were mainly mounted by Aboriginal gangs, and Indians were targeted because they were easily identifiable and because it was believed that they were wealthy. Normally they also carried mobile phones and laptops, which were items which could easily be converted into cash. (However, these gangs were also targeting isolated rural homesteads and other individuals; it wasn't just Indians).
...
Let me quote something that was stated during a recent election campaign. "I want you to go out and find places where Satan has his strongholds: mosques, Hindu temples, Buddhist temples, bottleshops, and Casinos, and destroy these places. We want a Christian Australia." Guess who said this? Pastor Danny Nelliah, a Tamil migrant from Sri Lanka, a leader of the Pentecostalist group Catch the Fire Ministry, and a Senate candidate for the Pentecostalist front Family First Party. And this is the most likely area where Hindus, Sikhs, Muslims, Buddhist and Jews have to fear organized hatred. Pauline Hanson got much of her support from fundamentalist Christians, who are just as likely to be immigrants as native born Australians. (The leader of the violent National Front white supremacist group in Perth had an Indonesian mother, and many of the Family First membership are ethnic Chinese and Koreans.)


இது போன்ற விஷயங்களைப்படிக்கும் போதும், இங்கு வந்து இந்தியர்கள் தாக்கப்படுவதைக்கண்டு குதூகலப்படும் புலி ஆதரவுக்காரர்கள் எழுதியதைப் படிக்கும் போதும் பல கான்ஸ்பிரசி தியரிக்கள் மண்டையில் ஓடுகின்றன.

இவர்கள் அதிகம் இருப்பது அவுஸ்திரேலியாவுக்கு அடுத்து கனடா தான்...அங்கும் ஆரம்பித்து வைத்துவிட்டார்கள் இந்த இனவெறித்தாக்குதல்களை.

Post a Comment

Buy NHM BOOKS on

Amazon

Kizhakku Nalam Varam

மொழிபெயர்ப்புகள்

என் புத்தகங்கள்

  
  
  
  

துறைகள்