Monday, January 03, 2011

கதம்பம் - 3 - வரலாறு முக்கியம்

இந்திய வரலாறின் அனைத்துப் பகுதிகளையும் புத்தகங்களாக நிரப்புவது எங்கள் விருப்பம். முகில், சென்ற புத்தகக் கண்காட்சிக்குக் கொண்டுவந்த புத்தகங்கள் முகலாயர்கள், அகம் புறம் அந்தப்புரம். அடுத்து எழுதுவதாகச் சொன்னது கிழக்கிந்திய கம்பெனி. ஆனால் அது தயாராகவில்லை. அதற்கு பதில் நடந்தது இரண்டு. ஒன்று முகிலின் திருமணம். அடுத்தது கிளியோபாட்ரா பற்றிய புத்தகம். (இரண்டுக்கும் தொடர்பு உள்ளதா என்று தெரியவில்லை.) ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லச் செல்ல, நமக்குக் கிடைப்பது குழப்பமான சித்திரம்தான். முழுமையான வரலாறல்ல. அந்தச் சித்திரத்தில் நிறைய சுவையான கதைகள் இருக்கலாம். அதே அளவுக்குக் கட்டுக் கதைகளும் கலக்க நேரிடுகிறது. புராண காலம் தாண்டி, வரலாற்றுக் காலத்தில் உலக வரலாற்றில் மிக அதிக அதிகாரம் கொண்டிருந்தவளாக நாம் அறியும் பெண் கிளியோபாட்ராதான். அவள் அடிமையா, ராணியா? சூழ்ச்சியில் வீழ்ந்தவளா, சூழ்ச்சி செய்தவளா? அவளுடைய வம்சம் என்ன ஆனது? அனைத்தையும் அறிந்துகொள்ள இந்தப் புத்தகத்தைப் படியுங்கள்.

பிரிட்டிஷார் வருவதற்கு முந்தைய இந்திய வரலாறை எழுதுவது கடினம். நம் அரசர்களைப் பற்றி சில மேலோட்டமான தகவல்களே நமக்குக் கிடைக்கின்றன. பெரும்பாலும் கல்வெட்டுகளிலும் செப்புப் பட்டயங்களிலும் காணப்படும் மெய்கீர்த்திகள் மட்டும்தான். அவற்றிலிருந்து வரலாறைத் தெளிவாக எழுதுவது எளிதல்ல. ஆனாலும் மிக முக்கியமான இந்திய வரலாற்று அறிஞர்கள் அதனைச் செய்துள்ளனர். பிற்காலச் சோழர்கள் (விஜயலயன் தொடங்கி), அதிலும் முக்கியமாக ராஜராஜன் காலம்தொட்டு நமக்கு நிறையத் தகவல்கள் கிடைக்கின்றன. சோழர்கள் காலம் தமிழகக் கல்வெட்டுகளின் பொற்காலம். ராஜராஜ சோழனின் தஞ்சைப் பெரியகோயிலே ஒரு மாபெரும் ஆவணம். அதன் வெளிப்புறச் சுவர்கள் ஒரு மாபெரும் புத்தகம். இந்தக் கோயில் மட்டுமல்ல, சோழர் காலக் கோயில்கள் அனைத்திலும் மிக முக்கியமான வரலாற்றுத் தகவல்கள் வெளிப்படுகின்றன. ச.ந.கண்ணன் எழுதியுள்ள ராஜராஜ சோழன், ஒரு பாபுலர் புத்தகம். எளிதாகப் படிக்கக்கூடியவகையில், சுவாரசியம் குன்றாத வகையில், தேவையான அளவு தகவல்களுடன் வெளிப்படுகிறது இந்தப் புத்தகம்.

2 comments:

  1. நான் கொஞ்சம் வரலாறு தொடர்பாக எழுதும் விருப்பம் கொண்டவன். நானும் எழுதலாமா ?

    கார்த்திக்
    http://konjamalasalkonjamkirukkal.blogspot.com/

    ReplyDelete
  2. This mugil is giving wrong information about Mughuls. He is anti india and pro islamic

    ReplyDelete