Wednesday, June 08, 2011

Right to Education சட்டத் திருத்தம் - 3

பாகம் 1 | பாகம் 2

ஏழைகளின் கல்வி என்பது வேறு பிரச்னை. கையில் பணமே இல்லாதவர்கள் எப்படிக் கல்வி பெறுவது என்பதைத் தனியாகக் கவனிக்கவேண்டும். அவர்களுக்கு இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று: அரசின் இலவச கல்வி நிலையங்களில் கல்வி பெறுதல். இரண்டாவது, அரசு கட்டணம் செலுத்த, அந்தக் கட்டணத்தின் அடிப்படையில் தனியார் கல்வி நிலையங்களில் கல்வி பெறுதல். ஆனால் அரசு தரும் இந்தக் கட்டணம் எப்படி இருக்கவேண்டும்? அந்தத் தனியார் நிறுவனம் எவ்வளவு வசூலிக்கிறதோ அதே அளவு இருக்கவேண்டும்.

ஏழைகளுக்கு நாளைமுதல் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் உணவளிக்கவேண்டும் (25% பேருக்கு!), ஆனால் அதற்கு தட்டுக்கு 25 ரூபாய் என்ற கணக்கில் அரசு பணம் செலுத்திவிடும் என்று சொல்வது நியாயமாக இருக்குமா? 25% ஏழைகளுக்கு மளிகைக்கடைகள் பொருள்களை அளித்துவிடும், ஆனால் கடைக்காரர்களுக்கு நியாயவிலைக்கடை ரேட்டில் பணம் கொடுக்கப்படும் என்று அரசு சொல்லலாமா? அதை நாம் ஏற்றுக்கொள்வோமா? அதேபோலத்தான் தனியார் பள்ளிகளில் படிக்க வரும் ஏழைகளுக்கு குறைவான கட்டணம்தான் செலுத்தமுடியும் என்று அரசு சொல்வது.

இதனால் தனியார் பள்ளிகளின் நிதி நிலை கடுமையாக பாதிக்கப்படும். அவர்கள் வேறு வழியின்றி, பணம் கொடுத்துப் படிக்கும் மாணவர்களிடம் மேலும் அதிகக் கட்டணம் வசூலிக்க முற்படுவார்கள். அது பிற பெற்றோர்களைக் கடுமையாகப் பாதிக்கும். இந்நிலையில் கட்டணக் கட்டுப்பாட்டுக்கென சட்டம், குழு, ஓய்விபெற்ற நீதிபதி என்று அடுத்த மிரட்டலை விடுத்தால் கல்வி அளிப்போர் அனைவரும் துண்டைக் காணும் துணியைக் காணும் என்று ஓடுப்போய், தங்கள் பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துவிடுவார்கள். அதைத்தாண் நாம் விரும்புகிறோமா? அனைவருக்கும் கல்வி அளிக்கவேண்டும் என்று ஆரம்பித்த சட்டம் கல்வியாளர்களைத் துரத்துவதில்தான் போய் முடியவேண்டுமா?

அடுத்து ஆசிரியர்கள். இன்று தனியார் பள்ளிகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் பெரும்பாலானோர் பி.எட் படிக்காதவர்களே. ஆனால் அரசுப் பள்ளிகளில் கை நிறையச் சம்பளம் வாங்கிக்கொண்டு வம்பு பேசி அல்லது பள்ளிக்கே போகாத ஆசிரிய மாணிக்கங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தப் பாவப்பட்ட தனியார் பள்ளி ஆசிரியர்கள் மிகக் குறைந்த சம்பளம் வாங்கிக்கொண்டு இடுப்பொடிய வேலை செய்கிறார்கள். அவர்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் பி.எட் படித்தாகவேண்டும் என்கிறது இந்தச் சட்டத் திருத்தம். எப்படி? எத்தனி பி.எட் கல்லூரிகள் இருக்கின்றன? அவர்கள் எந்த அளவுக்குக் கட்டணம் வசூலிக்கிறார்கள்? அஞ்சல் வழியில் பி.எட் படிக்க எத்தனை இடையூறுகள் உள்ளன? இதையெல்லாம் அரசு கண்டுகொள்ளவில்லை.

இப்போது தனியார் பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தேவையான பி.எட் கல்வியை அரசு தன் செலவில் கொடுக்கும் என்று சொல்லலாம் அல்லவா? அதுவல்லவா சரியான முறையாக இருக்கும்? அதை விட்டுவிட்டு, அதை ஆசிரியர்கள் தலையில் கட்டிவிடுகிறது அரசு. நிறையச் செலவு செய்து பி.எட் படித்தபின், அவர்களுக்கு என்ன சம்பளம் கிடைக்கப்போகிறது? அதே மோசமான சம்பளம்தான். ஏன்? ஏனெனில் அவர்களுடைய கல்வி நிறுவனம் அதிகக் கட்டணத்தை வசூலிக்க முடியாது? ஏன்? ஏனெனில் அது ‘கல்விக் கொள்ளை’!

அடுத்து பள்ளியின் உள்கட்டுமானம். அரசு குறைந்த கட்டணம்தான் தருவேன் என்று ஒவ்வொரு தனியார் பள்ளியின் 25% இடத்தை அபகரித்துக்கொள்கிறது. ஆனால் பதிலுக்கு இந்தத் தனியார் பள்ளிகளுக்கு ஒன்றும் செய்துதராது. கட்டுமானத்தை அதிகரிக்கவேண்டியது தனியார் பள்ளியின் கடமை. அதற்கு ஆகும் செலவில் ஒரு பைசா தராது அரசு. ஆனால் மூன்று ஆண்டுகளுக்குள் கட்டுமானத்தை உயர்த்தாவிட்டால், உரிமம் ரத்தாகும். பள்ளிகளுக்கு கல்தா.

ஆனால் இந்தச் சட்டம் கொண்டுவருவதன் காரணமே பள்ளிகளை அதிகரிக்க வைப்பது! என்ன ஒரு முரண்?

மத்திய அரசும் மாநில அரசும் கல்விக்கான செலவுகளை அதிகரிக்கும்; பகிர்ந்துகொள்ளும். சொல்கிறது சட்டம். எந்த அளவுக்கு அதிக முதலீடுகளை இவர்கள் செய்யப்போகிறார்கள்? இவர்கள் சொல்லமாட்டார்கள். கட்டுப்பாடுகள் எல்லாம் பிறருக்குத்தான், தங்களுக்கல்ல.

மொத்தத்தில் நல்ல காரியம் செய்கிறேன் பேர்வழி என்று பிறர்மீது சுமையைத் தூக்கி வைத்துவிட்டு, தாங்கள் ஒய்யாரமாக, சுகமாக இருக்கின்றன அரசுகள்.

(தொடரும்)

No comments:

Post a Comment