Sunday, December 02, 2012

இராமாயணத்துக்குக் கம்பனின் கொடை

நேற்று, தமிழ் பாரம்பரியக் குழுமம் நடத்தும் மாதாந்திரக் கூட்டத்தில் பேச வந்திருந்தார் பன்மொழி வல்லுநர், இலக்கிய ஆய்வாளர், பேராசிரியர் ஏ.ஏ.மணவாளன். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பட்டங்கள் பெற்றவர். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆசிரியராக, துறைத் தலைவராக இருந்தவர். கம்ப ராமாயணத்தில் அத்தாரிட்டி. அவருடைய பேச்சிலிருந்து கிடைத்த சில சுவாரசியமான தகவல்களை மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன். (முழு வீடியோவை ஒரு கட்டத்தில் இணையத்தில் சேர்ப்பேன்.)

வால்மிகி ராமாயண ஏட்டுச் சுவடிகள் இந்தியாவெங்கும் பல இடங்களில் கிடைத்துள்ளன. அவற்றைத் தொகுத்து, அவற்றுக்கிடையேயான வித்தியாசங்களைக் குறிக்கவேண்டும் என்ற முயற்சியை எடுத்த பரோடா பல்கலைக்கழகம், பல்வேறு வெர்ஷன்களை எடுத்துக்கொண்டு ஆராய்ந்தது. அதன்படி, நான்கு ‘ரிசன்ஷன்கள்’ இருப்பதைக் கண்டுபிடித்தது. அவை, வடமேற்கு, வடக்கு, கிழக்கு, தெற்கு. ஆக, ஒருவிதத்தில் நான்கு வால்மிகி ராமாயணங்கள் இந்தியாவில் கிடைக்கின்றன. இவை பெரும்பாலும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகின்றன; சில இடங்களைத் தவிர.

அவ்வாறு விலகிப்போகும் இடங்கள்தான் மிகவும் சுவாரசியமானவை. உதாரணமாக, தெற்கு வால்மிகி ராமாயணப் பிரதியில் மட்டும் சில புதிய விஷயங்கள் உள்ளன. இவை எவையுமே பிற மூன்று வால்மிகி ராமாயணப் பிரதிகளில் இல்லை. இது எப்படிச் சாத்தியம்?

மணவாளனின் கருத்து இது. இவை அனைத்தையும் முதலில் கம்பன் தன் இராமகாதையில்தான் எடுத்தாள்கிறான். இந்த இராமகாதையையும் வால்மிகி ராமாயணத்தையும் எடுத்துக்கொண்டு வைணவ உரையாசிரியர்கள் பொதுமக்களிடம் பிரசங்களில் ஈடுபடுகின்றனர். அப்போது இரண்டிலும் சில வித்தியாசங்கள் இருப்பதைப் பார்க்கின்றனர். கம்பனின் இராமகாதையில் இருக்கும் விஷயங்களை அவர்கள் அப்போது இயல்பாக, இடைச்செருகல் சுலோகங்கள்மூலம் தெற்குப் பிரதிக்குள் நுழைத்துவிடுகின்றனர். இதன் காரணமாக மட்டுமே தெற்குப் பிரதியில் மட்டும் இவை காணப்படுகின்றன; பிற மூன்று இடங்களில் கிடைக்கும் பிரதிகளில் இவை காணப்படுவதில்லை.

அவற்றிலிருந்து ஒருசிலவற்றை மட்டும் மணவாளன் எடுத்துக்காட்டினார்.

(1) இராமனின் பிறந்த தினம். இன்று ராம நவமி என்று அனைவரும் இராமனின் பிறப்பைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் வடமேற்கு, வடக்கு, கிழக்குப் பிரதிகளில் இராமனின் பிறந்த நட்சத்திரம், ஜாதகம் என்று எந்தத் தகவலும் இல்லை. இவை முதலில் தமிழில் கம்பனிடம் மட்டுமே காணப்படுகின்றன. அதன்மூலம் அவை தெற்கு வால்மிகி ராமாயணப் பிரதியில் செருகப்படுகின்றன. பிற மூன்று பிரதிகளில் ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்கன பிறப்பு நட்சத்திரம் பற்றி எந்தத் தகவலும் இல்லை. இதில் ஆச்சரியம் என்னவென்றால், தசரதனின் பிறப்பு நட்சத்திரம் தொடர்பாக எல்லாத் தகவலும் அனைத்துப் பிரதிகளிலும் உள்ளன. தசரதனுக்குத் தகவல் கொடுத்துவிட்டு, முக்கியக் கதை மாந்தர்களுக்குக் கொடுக்கவில்லை என்றால் என்ன பொருள்?

கம்பன் எங்கிருந்தோ இந்தத் தகவலைப் பெற்றுள்ளான். இதற்கான சோர்ஸ் கம்பனுக்கு எங்கிருந்து கிடைத்துள்ளது என்று தெரியவில்லை. (வடமேற்கு இந்தியாமூலம், குஜராத் வழியாக, கர்நாடகப் பகுதிக்கும் பின்னர் அங்கிருந்து மலையாள, தமிழ் பகுதிக்கும் இந்த இராமன் பிறப்புத் தகவல் வாய்மொழியாக வந்து, மக்களிடையே பரவியிருந்தது என்கிறார் மணவாளன்.) இன்று இந்தியாவெங்கும் கொண்டாடப்படும் ஒரு விழாவுக்கான நாள், நட்சத்திரத்தைக் குறித்துக்கொடுத்தவன் கம்பன்.

(2) அகலிகை கதை. தெற்குப் பிரதியைத் தவிர பிற அனைத்திலும் அகலிகை கௌதமரால் சபிக்கப்படுகிறாள். ஆனால் கல்லாகப் போ என்று சபிக்கப்படவில்லை. காற்றைப் புசித்து, வேறு அன்ன ஆகாரம் இல்லாமல் கிடப்பாய் என்றுதான் பிற மூன்று பிரதிகளிலும் சொல்லப்படுகிறது. தெற்குப் பிரதியில் மட்டும்தான் ‘அன்ன ஆகாரம் இல்லாமல்’ என்பதற்குப் பதில் ‘கல்லாகக் கிடப்பாய்’ என்று வருகிறது. (“வாயுபக்ஷா நிராஹாரா தப்யந்தி” என்று பிற மூன்று பிரதிகளில் இருப்பது, தெற்குப் பிரதியில் “வாயுபக்ஷா ஷிலான்யாசா தப்யந்தி” என்று மாறிவருகிறது.) காரணம், கம்பன் மிக விரிவாக அகலிகை கல்லாகப் போவதைப் பற்றியும் அவளுடைய சாபவிமோசனம் பற்றியும் சொல்கிறான்.

அப்படியானால் கம்பனுடைய சோர்ஸ் யார்? அது பரிபாடல். பரிபாடலில் திருப்பரங்குன்றத்தைக் குறிக்கும் முருகன் பற்றிய பாடலில் “இந்திரன் பூசை இவள் அகலிகை இவன் சென்ற கவுதமன் சினன் உறக் கல் உரு” என்று வருகிறது. எனவே தனக்குமுன் தமிழகத்தில் இருந்த கதையைச் சேர்த்து கம்பன் படைத்திருக்கிறான்.

(3) இரணியன் வதைப்படலத்தை முழுவதுமாக இராமகாதைக்குள் புகுத்தியது கம்பனே. இதைப் பின்பற்றி, இந்தியாவின் பிற பகுதிகளில் எழுதப்பட்ட சில பிற்கால இராமாயணங்களிலும் இரணியன் கதை வருகிறது.

கோரக்பூர் பிரஸ்மூலம் இன்று வெளிவரும் வால்மிகி ராமாயணப் பதிவு, தெற்குப் பிரதி. (ஏன் அவர்கள் தெற்குப் பிரதியை எடுத்துப் பதிப்பித்துள்ளனர் என்பதற்கு விடை இல்லை.)

மணவாளன் பேசும்போது இராமசேது பற்றிச் சிலவற்றைச் சொன்னார். அவற்றையும் மிச்சத்தையும் வீடியோ வரும்போது பார்த்துத் தெரிந்துகொள்க.

13 comments:

  1. //மணவாளன் பேசும்போது இராமசேது பற்றிச் சிலவற்றைச் சொன்னார். அவற்றையும் மிச்சத்தையும் வீடியோ வரும்போது பார்த்துத் தெரிந்துகொள்க.//

    சுவாரஸ்யமான கட்டுரை. மேற்கண்ட விவரத்தைக் கொஞ்சம் சொல்லியிருக்கலாம். என்ன சொன்னார் என அறிய மிகவும் ஆவலாக இருக்கிறது.

    ReplyDelete
  2. ததஸ்ச த் வாத ஸே மாஸே சைத்ரே நவாமிகே திதௌ

    நஷத்த்ரே திதி தை வத்யே ஸ்வோச்ச ஸ்ம்ஸ்தே ஷூ பஞ்சஸூ


    க்ரஹேஷீ கர்க்கடே லக் நே வாக்பதா விந்து நா ஸஹ‌


    ப்ரோத் யமாந்ந் ஜக ந்நாத ம் ஸர்வ லோக நமஸ்க்ருதம்

    கௌஸல்யா ஜநயத் ராமம் ஸர்வலஷன ஸம்யுதம்

    இது ராமனின் ஜாதக் குறிப்பை மிகத் துல்லியமாகச் சொல்லும் வால்மீகியின் ஸ்லோகம்

    இதுவே கம்பனை

    ஆயிடைப் பருவம் வந்து அடைந்த எல்லையின்
    மாயிரு புவிமகள் மகிழ்வின் ஓங்கிட
    வேய்புனர் பூசமும் விண்ணுளோர் புகழ்
    தூயகர்க் கடகமும் எழுந்துள்ளவே

    என ராமனின் ஜாதகமாக தமிழில் எழுத வைத்தது

    ReplyDelete
    Replies
    1. இல்லை என்கிறார் மணவாளன். நீங்கள் மேலே குறிப்பிடும் ஸ்லோகம் வடமேற்கு, வடக்கு, கிழக்கு வால்மிகி ராமாயணப் பிரதிகளில் காணக் கிடைப்பதில்லை. தெற்குப் பிரதிகளில் மட்டுமே உள்ளன. கோரக்பூர் பிரஸ் எடிஷனில் இந்த ஸ்லோகம் இருக்கும்; ஏனெனில் அது தெற்கு ரிசன்ஷன்.

      இதைக் குறிப்பிடும்போது தில்லியில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைச் சொன்னார் மணவாளன். அவர் இந்த விஷயத்தைச் சொல்லும்போது அறையில் இருந்த பெண் உடனே எழுந்து மேற்கண்ட ஸ்லோகத்தை ஒப்பித்தாராம். அது எப்படி வால்மிகி சொன்ன ஒன்றை அவர் சொல்லவே இல்லை என்று நீங்கள் சொல்லலாம் என்று கேட்டாராம். மணவாளனின் பதில்: ‘எந்த வால்மிகி? வடமொழி தெரிந்த வடக்கு, வடமேற்கு, கிழக்கு வால்மிகி ஸ்காலர்களைக் கேளுங்கள். அவர்கள் நீங்கள் சொல்லும் ஸ்லோகம் வால்மிகி சொன்னதுதான் என்று ஒப்புக்கொள்கிறார்களா?’

      விழாவுக்குத் தலைமை தாங்கியது சமஸ்கிருதப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் (ஏதோ சாஸ்திரி என்று பெயர்). அவர் மணவாளன் சொன்னதை ஆமோதித்து, ‘உண்மைதான், தொடருங்கள்..’ என்றாராம்.

      Delete
  3. ततो यज्ञे समाप्ते तु ऋतूनाम् षट् समत्ययुः |
    ततः च द्वादशे मासे चैत्रे नावमिके तिथौ || १-१८-८
    नक्क्षत्रे अदिति दैवत्ये स्व उच्छ संस्थेषु पंचसु |
    ग्रहेषु कर्कटे लग्ने वाक्पता इंदुना सह || १-१८-९
    प्रोद्यमाने जगन्नाथम् सर्व लोक नमस्कृतम् |
    कौसल्या अजनयत् रामम् सर्व लक्षण संयुतम् || १-१८-१०
    विष्णोः अर्धम् महाभागम् पुत्रम् ऐक्ष्वाकु नंदनम् |
    लोहिताक्षम् महाबाहुम् रक्त ओष्टम् दुंदुभि स्वनम् || १-१८-११

    ReplyDelete
  4. பரதன் பிறந்ததை சொல்லும் வால்மீகியின் ஸ்லோகம்

    भरतो नाम कैकेय्याम् जज्ञे सत्य पराक्रमः |
    साक्षात् विष्णोः चतुर्थ भागः सर्वैः समुदितो गुणैः ||

    ReplyDelete
  5. ல்ஷ்மணன் சத்ருகனன் பிறந்தது சொல்லும் வால்மீகியின் ஸ்லோகம்
    अथ लक्ष्मण शत्रुघ्नौ सुमित्रा अजनयत् सुतौ |
    वीरौ सर्व अस्त्र कुशलौ विष्णोः अर्ध समन्वितौ |

    ReplyDelete
  6. ராமருக்குப் பின் சகோதரர்கள் பிறந்த ஆர்டரை சொல்லும் சிங்கிள் ஸ்லோகம்

    पुष्ये जातः तु भरतो मीन लग्ने प्रसन्न धीः |
    सार्पे जातौ तु सौमित्री कुळीरे अभ्युदिते रवौ ||

    இதில் நஷத்திரம், மாசம் எல்லாம் கொண்ட ஜாதகக் குறிப்பு இருக்கிறது

    ReplyDelete
  7. உண்மையிலேயே வியப்பான தகவல் பத்ரி.

    கம்பன் பாட்காஸ்ட்டுகாக ஒரு பதிவு பேசி எழுதினேன்.
    http://gragavanblog.wordpress.com/2012/10/03/starsigns/

    இதில் கம்பன் சொல்லும் நட்சிரங்களையும் ராசிகளையும் பற்றி எழுதினேன்.

    வால்மிகி என்ன சொல்லியிருப்பார் என்று www.valmikiramayan.net ல் பார்த்தேன். அதில் மேல சந்திரமௌளீஸ்வரன் குறிப்பிடும் பாடல்கள் இருந்தன.

    மணவாளன் ஐயா சொல்வது போல அது தென்னிந்தியச் செருகல்கள் கொண்ட வால்மிகி இராமாயணமாக இருக்கக் கூடும். அந்த ஐயத்தோடு அந்தத் தளத்தை மேய்ந்த பொழுது கிடைத்த தகவல்...

    This Valmiki Ramayana in Sanskrit is being translated and presented by Sri Desiraju Hanumanta Rao (Bala, Aranya and Kishkindha Kanda ) and Sri K. M. K. Murthy (Ayodhya and Yuddha Kanda) with contributions from Durga Naaga Devi and Vaasudeva Kishore (Sundara Kanda); Smt. Desiraju Kumari; Smt. K. Rajeswari, with all enthusiasm and devotion to classical literature of India, with humble and due respect to elders, pundits and to all those who respect Srimad Valmiki Ramayana the epic poem.

    மேற்கண்ட பெயர்களில் இருந்து இந்தத் தளத்தில் இருக்கும் பாடல்களின் மொழிபெயர்ப்பு தென்னிந்தியர்களால் செய்யப்பட்டது என்று தெரிய வருகிறது. இது மணவாளன் ஐயா அவர்களின் கருத்தை ஒத்திருக்கிறது.

    மற்ற வால்மிகி இராமாயணங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் விவரம் உறுதியாகி விடும். நானும் தேடிப்பார்க்கிறேன்.

    சேது பற்றிய ஐயாவின் விளக்கத்திற்கு நானும் காத்திருக்கிறேன். அது குறித்தும் ஒரு சிறிய எளிய(ஆழமில்லாத) பதிவு இங்கே.
    http://gragavanblog.wordpress.com/2012/07/12/%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a4%e0%af%81/

    கம்பராமாயணத்தில் மருந்துமலை பற்றியும் அதற்குச் செல்லும் வழி பற்றியும் ஒரு பாட்காஸ்ட் செய்திருக்கிறேன். அதிலிருக்கும் தகவல்கள் வால்மிகி இராமாயணத்திலிருந்து மிகவும் மாறுபட்டவை. வால்மிகி இராமயணத்தின் படி மருந்துமலை(சஞ்சிவிமலை) இமயமலையில் உள்ளது. ஆனால் கம்பன் சொல்லும் மருந்துமலை இமயம் தாண்டி வடதுருவங்களையெல்லாம் தாண்டி உள்ளது. timezone differences பற்றியெல்லாம் கம்பர் பேசுகிறார். இந்தத் தகவல்களை எல்லாம் எடுத்துப் பேசுவதும் எழுதுவதும் ஒரு இன்பம். :)
    http://kambanfm.wordpress.com/2012/09/22/%e0%ae%ae%e0%af%87%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%87-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d/

    அன்புடன்,
    ஜிரா

    ReplyDelete
  8. நான் குறிப்பிட்டது கோரக்பூர் ப்ரஸ் மலிவி விலைப் பதிப்பில்லை ஸ்வாமி..

    இதெல்லாம் இடைச் செருகல் என்று சொல்லுவதும் ஒரு தரப்பு.. ஆனால் அதெல்லாம் உடைத்தெறிந்த சம்ஸ்கிருத பண்டிதர்களின் வாதங்கள் நிறைய இருக்கின்றன.. வரிசையாக வருகிறேன்..

    இதெல்லாம் இன்டெர்பிரடேஷன் தான்.

    ஜஸ்ட் இரண்டு தரப்பும் உங்கள் பதிவிலே இருக்க வேணும் என்பதற்காக ஸ்லோகங்களைச் சொன்னேன்

    ReplyDelete
  9. நான் வைத்திருப்பது கோரக்பூர் இல்லை.. ஒரிஜினல் வடக்கு வர்ஷென்

    அதுவுமின்றி ராமர் ஜாதக பூஜை என்பது ரொம்ப வருஷப் பழக்கம் வடக்கே.. அதுக்கு அந்த ஸ்லோகம் தான் சொல்லுவாங்க

    எது நிஜம்னு யார் கண்டா.. அகாதமிக் ஆர்வத்துல எழுதினேன்.. அத்தினி தான்

    ReplyDelete
  10. Missed out yesterday. There is an epigraphical reference in Tamilnadu for Rama's birth day being celebrated on Chiththirai Punarvasu in TN slightly before Kamban. Infact it is Rama Jayanthi. The Kamban's verse though takes one part from Paripadal on Agaligai, his version is totally different from Paripadal. It is a thrid version and different from Valmiki and earlier story of Agaligai. The Paripadal version is different from Kamban's except on Agaligai becoming a stone. There is a third cersion of Agaligai story. Infact the much celebrated version of Kamban's Annalum Nokkinaal- Avalum Nokkinal is depicted in stone in 950C itself - much before kamban.

    Sankaranarayanan

    ReplyDelete
  11. கீதை இடைச்செருகல் எனும் வாதத்தினை மறுத்து எழுதியது நினைவுக்கு வருது

    http://mowlee.blogspot.in/search/label/%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AF%88%20%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE

    ReplyDelete
  12. Badri,
    It may be true that these stories first appeared in Southern recensions but one can't use it argue that these stories were first told by Kamban. The sad fact is that Kamban was never really accepted by Sanskrit scholars until the last century.

    ReplyDelete