Wednesday, June 04, 2014

பொறியியல் கல்லூரிகளில் ஐ.டி பாடப்பிரிவு நீக்கம்

இன்றைய செய்தித்தாளில் படித்தது... தமிழகத்தின் பல பொறியியல் கல்லூரிகளில் ஐ.டி என்ற பாடப்பிரிவை நீக்கியிருக்கிறார்கள் என்பது.

ஐடி வேலைகள் அதிகமாகக் கிடைக்க ஆரம்பித்ததும் பொறியியல் கல்லூரிகள் பி.ஈ/பி.டெக் ஐடி என்ற பட்டத்தையும் வழங்க ஆரம்பித்தன. ஏற்கெனவே இருக்கும் கம்ப்யூட்டர் சயன்ஸ் படிப்புக்கு அதிகபட்சமாக இத்தனை பேரைத்தான் சேர்க்கலாம் என்று AICTE கட்டுப்பாடு இருப்பதுதான் காரணம். ஆனால் ஐடி மோகம் காரணமாகப் படிக்க வருவோரையெல்லாம் என்ன செய்வது? சரி, ஐடி என்று புதிதாக ஒரு படிப்பை ஆரம்பிப்போம், அதில் கம்ப்யூட்டர் சயன்ஸில் இருக்கும் சில பாடங்களையெல்லாம் நீக்கிவிட்டு மேலும் சில புரோகிராமிங் லாங்வேஜ் பாடங்களைச் சேர்ப்போம் என்று உருவானதுதான் ஐடி. இப்போது ஏதோ காரணமாக கம்பெனிகள் எல்லாம் பி.டெக்/பி./ஈ ஐடி டிகிரியை மதிப்பதில்லை போலும். அதனால் மாணவர்கள் அந்தப் படிப்பை எடுத்துக்கொள்ள விரும்புவதில்லை. உடனே வெட்டிவிட்டார்கள்.

பி.டெக்/பி.ஈ படிப்பைப் பொருத்தமட்டில் கம்ப்யூட்டர் சயன்ஸ், எலெக்ட்ரிகல், எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிகல், சிவில், கெமிக்கல், பயோடெக்னாலஜி என்ற ஏழே துறைகள் மட்டும்தான் இருக்கவேண்டும். மிகச் சில இடங்களில் பிரிண்டிங், லெதர், டெய்ரி என்று சில சிறப்புப் படிப்புகள் இருக்கும். எல்லாக் கல்லூரிகளும் இவை குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. ஏரோனாட்டிகல் போன்றவற்றை நான் தனிப் படிப்பாக ஏற்கவில்லை. அதற்குபதில் மெக்கானிகல் படித்துவிட்டு சில சிறப்புப் பாடங்களைப் படித்தால் போதும். சில பொறியியல் கல்லூரிகளில் கெமிக்கல், பயோடெக்னாலஜி ஆகியவை இல்லாமல் இருக்கலாம். ஆனால் பிற ஐந்து துறைகள் கட்டாயம் இருக்கவேண்டும். இவை தவிரப் பிற அனைத்தும் ஊரை ஏமாற்றும் வேலை.

1 comment: