Wednesday, June 27, 2018

வகுப்பறைகளில் அறிவியல் செயல்விளக்கம்

நேற்று நானும் பேராசிரியர் சுவாமிநாதனும் ஒரு பள்ளிக்குச் சென்றிருந்தோம். அங்குள்ள அறிவியல் ஆசிரியர்களுடன் கலந்துரையாடுவதற்காக.

தற்போதைய பள்ளிக் கல்வி முறையின் பல்வேறு பிரச்னைகளில் ஒன்று, குழந்தைகளுக்குக் கண்ணில் எதையும் காண்பிக்காமல் புத்தகங்களில் கொடுக்கப்பட்டிருப்பதை அப்படியே வகுப்பறையில் கேள்வி பதிலாக மாற்றி, மனனம் செய்யவைப்பது. பொதுவாக, அறிவியல் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பெரும்பாலான விஷயங்களைக் குழந்தைகளுக்குச் செய்து காட்டிவிடலாம். ஒருசில விஷயங்களைத்தான் செய்துகாட்டுவது கடினம்.

ஓர் அணுவின் உட்கருவைக் காண்பி என்றால் காண்பிக்க முடியாது. ஆனால் ஒரு சாய்தளத்தில் பந்து எப்படி உருண்டுசெல்லும் என்பதையோ, ஒரு தனி ஊசல் எப்படி ஆடும் என்பதையோ, ஒளிக் கதிர்கள் லென்ஸ் வில்லைகளின் ஊடாக எப்படிச் செல்லும் என்பதையோ, ஒரு காந்தத்தின் காந்தப் புலம் எப்படி இருக்கும் என்பதையோ, இன்னும் பலப்பல விஷயங்களையோ மிக எளிதாக வகுப்பறையிலேயே செய்து காட்டிவிடலாம். அவ்வாறு செய்முறையாகச் செய்து காட்டும்போது வகுப்பின் கடைக்கோடி மாணவனுக்கும் என்ன நடக்கிறது என்பது எளிதாகப் புரிந்துவிடும். சொந்தமாக எழுதும் திறன் இருந்தால் அனைத்து மாணவர்களாலும் பார்த்ததை நினைவில் இருத்தி கேள்விக்கான விடைகளை எழுதிவிட முடியும். படங்களை வரைந்து காட்டிவிட முடியும். தேவையான கருவிகள் சில நூறு ரூபாய் அல்லது சில ஆயிரம் ரூபாய்க்குள் முடிந்துவிடும்.

நேற்று நான், ஓர் ஒளிக்கதிர்ப் பெட்டியையும் (Ray box) சில லென்ஸ் வில்லைகளையும் அந்தப் பள்ளிக்கு எடுத்துச் சென்றிருந்தேன். நான் பள்ளியில் படித்த காலத்தில் இந்த மாதிரியான கருவிகள் பற்றி எனக்கோ என் ஆசிரியர்களுக்கோ தெரிந்திருக்கவில்லை. லென்ஸ் வழியாக ஊடுருவிச் செல்லும் இணை கதிர்கள், சடாரென வளைந்து அதன் குவிமையத்தில் புள்ளியாகக் குவிவதாகப் பாடப் புத்தகத்தில் இருக்கும். அது நிஜமாகவே அப்படி ஆகிறதா என்று எனக்கு ஒரு சந்தேகம் வெகுகாலமாக இருந்துவந்தது. சென்ற ஆண்டு நானே ஓர் ஒளிக்கதிர்ப் பெட்டியை வாங்கி வீட்டில் செய்துபார்த்தபோதுதான் நிம்மதி ஏற்பட்டது. ஆனால் தினம் தினம் நம் பள்ளிகளில் ஆசிரியர்கள் இது இப்படித்தான் என்று சொல்லித்தருகிறார்கள். மாணவர்களும் எந்தச் சலனமும் இன்றி ஏற்றுக்கொள்கிறார்கள். யாருமே, இதனைச் செய்துகாட்டுங்கள் என்று கேட்பதில்லை. ஆசிரியர்களும் (பெரும்பாலும்) செய்துகாட்டுவதில்லை.

நான் நேற்று அப்பள்ளியின் ஆசிரியர்களுக்கு இதனைச் செய்துகாட்டினேன். தொடர்ந்து ஆசிரியர்களிடமான உரையாடலில், பாடப் புத்தகத்தில் உள்ள அனைத்துப் பாடங்களுக்கும் முடிந்தவரையில் செய்துகாட்டல் முறைகளை எவ்வாறு அறிமுகப்படுத்தலாம் என்பது குறித்துப் பேசினேன்.

இன்னொரு பள்ளியில் ஒரு கோடை விடுமுறையின்போது இம்மாதிரியான பல சோதனைகளைச் செய்துகாட்டினேன். அதில் ஒன்று, அறை வெப்பநிலையில் உள்ள நீரைச் சூடாக்கி, அதன் கொதிநிலையை அடையவைப்பது. அனைத்து மாணவர்களும் நீரின் கொதிநிலை 100 டிகிரி செண்டிகிரேட் என்று பட்டென்று சொன்னார்கள். ஆனால் நீர் கொதிக்க ஆரம்பித்தபோது வெப்பமானி 98.5 டிகிரியைத்தான் காண்பித்துக்கொண்டிருந்தது. அதிலிருந்து சிறிதுகூட மேலே போகவேயில்லை. வகுப்பில் பெரும் பதட்டம்.

நீரின் கொதிநிலை எப்போது 100 டிகிரி ஆக இருக்கும்? கடல் மட்டத்தில், தூய நீருக்குத்தான் அந்தக் கொதிநிலை. நாம் இருக்கும் இடம் கடல் மட்டத்துக்கு எவ்வளவு உயரத்தில் உள்ளது? நாம் குழாயில் பிடித்துக் கொண்டுவந்திருக்கும் நீரில் என்னென்ன உப்புகள் கலந்துள்ளன? அவை காரணமாக நீரின் கொதிநிலை மாறத்தானே செய்யும்? இவற்றை விளக்கிச் சொல்ல இந்தப் பரிசோதனை முக்கியமாகிறது.

இந்த ஆண்டு, ஒரு பள்ளியிலாவது பெரும்பாலான வகுப்புகளில், பெரும்பாலான அறிவியல் பாடங்களை செயல்விளக்கமாகச் செய்து காட்ட, ஆசிரியர்களைத் தூண்ட முடியுமா என்று பார்க்கப்போகிறேன். அவ்வாறு நடப்பதை வலைப்பதிவில் எழுத முயற்சி செய்கிறேன்.

Monday, June 04, 2018

ஓப்பியப் போர்கள்

இங்கிலாந்து கிழக்கிந்தியக் கம்பெனி, மிளகு போன்ற மசாலாப் பொருட்களை வாங்க இந்தியா வந்தது. துணிமணிகளின் தரத்தைப் பார்த்து அதையும் வாங்கித் தன் நாட்டில் விற்றுவந்தது. கொஞ்சமாக கர்நாடக நவாபுகளின் பங்காளிச் சண்டைக்குள் புகுந்தது. வங்கத்தில் முகலாய ஆட்சி ஆட்டம் கண்டபோது அதிலும் தலையிட்டது. மொத்தத்தில் வர்த்தக வருமானத்தைவிட வரி வருமானம் கணிசமாக இருந்தது.

கிழக்கிந்தியக் கம்பெனி, சீனாவிலிருந்து தேயிலையையும் பட்டையும் இறக்குமதி செய்தது. ஆனால் அந்நாட்டு மக்களுக்கு விற்க கம்பெனியிடம் ஏதும் பொருட்கள் இல்லை. தங்கத்தை மட்டும்தான் அவர்கள் கேட்டனர். ஆனால் இங்கிலாந்து, பிரான்சுடன் நீண்டகாலப் போரில் ஈடுபட்டிருந்தது. தன் நாட்டுத் தங்கத்தையெல்லாம் தேநீருக்குத் தாரை வார்க்க அரசு தயாராக இல்லை. ஆனால் அதே நேரம், நாட்டு மக்களெல்லாம் தேநீர் பருகி சந்தோஷமாக இருந்தனர். தேநீர் இனி கிடையாது என்று சொல்லியிருந்தால் புரட்சியேகூட வெடித்திருக்கலாம்.

எனவே வேறு வழியின்றி, சர்வதேச போதைக் கடத்தல் கும்பலாக ஆவதே மேல் என்ற முடிவுக்கு வந்தது கிழக்கிந்தியக் கம்பெனி. சீனாவில் குறிப்பிட்ட அளவிலான மக்கள் அபின் அல்லது ஓப்பியத்துக்கு அடிமையாகி இருந்தனர். இந்தச் சரக்கு இந்தியாவிலிருந்தும் துருக்கியிலிருந்தும் அவர்களுக்குக் கிடைத்துக்கொண்டிருந்தது. இந்தியாவில் பிகாரில்தான் உத்தமமான சரக்கு கிடைத்தது. காசிப்பகுதியில் சுமாரான சரக்குதான். துருக்கி சரக்கும் அவ்வளவு சிலாக்கியமானதில்லை. பிகார் சரக்கோ, சீனர்களுக்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது.

கம்பெனி, ஓப்பியக் கொள்முதல் மற்றும் ஏற்றுமதிக்கு ஏகபோக உரிமை கொண்டாடியது. நம் ஜாம்ஷெட்ஜி டாட்டா போன்ற பல்வேறு வணிகர்கள்மூலம் உள்ளூரில் கொள்முதல் செய்து, இங்கிலாந்து வணிகர்களைக் கொண்டு சீனாவில் கள்ளத்தனமாக விநியோகம் செய்ய ஆரம்பித்தது.

ஏன் கள்ளத்தனமாக? சீனப் பேரரசர், தன் நாட்டு மக்கள் ஓப்பியத்தில் மூழ்கி உயிரிழப்பதை விரும்பவில்லை. எனவே ஓப்பியம் விற்பது மரண தண்டனைக்குரிய குற்றம் என்று சொல்லிவிட்டார். ஆனால் கம்பெனிக்கோ வேறு வழியில்லை. ஓப்பியம் விற்ற காசில்தான் தேயிலை வாங்கவேண்டும்.

கம்பெனியின் கண்காணிப்பில் ஓப்பிய வருமானம் பிரமாதமாக இருந்தது. ஒரு கட்டத்தில் கிழக்கிந்தியக் கம்பெனியின் வருமானத்தில் மிகப் பெரும் பகுதி ஓப்பியத்திலிருந்தே வந்தது. ஆனால் இந்த லாபத்துக்குப் பலரும் பலவிதமான விலைகளைக் கொடுக்கவேண்டியிருந்தது.

பிகார் விவசாயிகள் கஞ்சாச் செடிகளை மட்டுமே பயிரிடவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். அவர்களுக்கு முன்பணம் கொடுக்கப்பட்டு அவர்கள் நிரந்தரக் கடனில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்பட்டது.

சீனாவின் கஞ்சா தேவையை உணர்ந்த பலர், மராத்தியர்களின் ஆளுகையில் இருந்த மால்வா பகுதியில் கஞ்சா பயிரிட்டு சீனாவுக்குக் கொண்டுசென்றனர். கம்பெனி, மராத்தியர்கள்மீது போரிட்டு அவர்களைத் தோற்கடிக்க இதுவும் ஒரு காரணம். மால்வா பகுதி கைவசம் வந்ததும் இங்கு பல வழிமுறைகளைக் கையாண்டு ஓப்பிய விற்பனையை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது கம்பெனி.

இதன் விளைவாக, மிக அதிக அளவுக்கு சரக்கு கைவசம் வந்தது. அனைத்தையும் சீனாவில் விற்பனை செய்ய முற்பட்டதில் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டது. ஒரு பெட்டிக்கான லாபம் குறைந்தாலும் வால்யூம் விற்பனை காரணமாக கம்பெனிக்குப் பணம் வந்துகொண்டே இருந்தது.

சீனப் பேரரசரின் ஒரு மகன் ஓப்பியப் பயன்பாட்டால் உயிர் துறக்க, வெகுண்ட பேரரசர், லின் என்ற அதிகாரியை அனுப்பி ஆங்கிலேயர்களின் ஓப்பிய வியாபாரத்தை அழிக்கக் கட்டளையிட்டார். லின் அதிரடியாக ஆங்கிலேய வணிகர்களிடமிருந்து ஓப்பியப் பெட்டிகளைக் கைப்பற்றி, அதில் உப்பைக் கொட்டிக் கடலில் எறிந்து நாசமாக்கிவிட்டார்.

உடனே ஆங்கிலேய வணிகர்கள் தாய்நாட்டிற்கு ஓலை அனுப்பினர். தங்களுடைய பொருள்களைச் சீனர்கள் அழித்துவிட்டார்கள் என்றும், சுதந்தர வர்த்தகத்துக்கு சீனப் பேரரசு எதிராக இருக்கிறது என்றும் அதில் புகார் கூறியிருந்தனர்.

தான் செய்வது மகா கேவலமான விஷயம் என்றாலும், எக்கச்சக்கமான பணம் புழங்குவதாலும், இந்த ஓப்பிய விற்பனை இல்லை என்றால் தன் நாட்டு மக்களுக்குத் தேநீர் குடிக்கக் கிடைக்காது என்பதாலும், கிழக்கிந்தியக் கம்பெனியே ஒட்டுமொத்தமாக திவால் ஆகிவிடும் என்பதாலும் பிரிட்டன் அதிரடியாகக் களத்தில் இறங்கியது. தன் போர்க்கப்பல்களை சீனக் கடற்கரைக்கு அனுப்பியது.

சீனாவின் கப்பல்கள் எல்லாம் உதவாக்கரை. அவர்களுடைய படைகளே அந்தக் காலத்தில் கொஞ்சம் ஜோக் வகைதான். எனவே பிரிட்டிஷ் படைகள் எளிதாகச் சீனப் படைகளை உதைத்து நொறுக்கின. அடுத்தடுத்த இரண்டு சண்டைகளுக்குப் பிறகு சீனா வேறு வழியின்றிப் பணிந்து ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி, அதிகாரி லின் அழித்த ஓப்பியத்துக்கு நிகரான பணம் ஆங்கிலேய வணிகர்களுக்கு ஈடாகத் தரப்படும். மேலும் பிரிட்டனிலிருந்து கஷ்டப்பட்டு கப்பலை ஓட்டிக்கொண்டுவந்து சண்டை செய்த செலவும் ஈடு செய்யப்படும். ஓப்பிய வர்த்தகத்தைத் தடையின்றிச் செய்ய உதவியாக ஹாங் காங் என்ற தீவு நீண்டகால லீஸுக்கு பிரிட்டனுக்கு அளிக்கப்படும்.

இப்படியாக பிரிட்டன் இந்த உலகில் நீதியை நிலை நாட்டிய கதையைப் பலர் விரிவாக எழுதியுள்ளனர். உங்களிடம் கிண்டில் அன்லிமிடெட் இருந்தால் பிரையன் இங்க்லிஸ் எழுதிய இந்தப்புத்தகத்தை நீங்கள் இலவசமாகவே படிக்கலாம்.