ஊரெங்கும் திராவிட் பற்றிய பேச்சுதான். தி எகனாமிக் டைம்ஸ் செய்தி ஒன்றில் ராஹுல் திராவிடுக்கு 'The Wall' என்று யார் பெயர் கொடுத்தது என்று தேடிக் கண்டுபிடித்துள்ளார்கள்.
அசாருத்தீன் - The Assassin கும்ப்ளே - The Viper திராவிட் - The Wall
பின்னர் கும்ப்ளே 'The Smiling Assassin' என்றழைக்கப்பட்டார். டெண்டுல்கருக்கு யாரும் உருப்படியாக ஒரு பெயரும் கொடுக்கவில்லை. மற்ற வீரர்களுக்குக் கொடுத்துள்ள பெயர்களும் நிலைக்கவில்லை. கங்குலிக்கு 'The Prince of Kolkotta' என்னும் பெயர் அர்த்தமற்றது.
'The Wall' மட்டும் தொடர்கிறது.
இன்று அலுவலகம் வரும் வழியில் ரேடியோ மிர்ச்சியில் திராவிட் டெண்டுல்கரின் இடத்தைப் பிடித்துக் கொண்டு விட்டாரா என்ற கேள்விக்கு பலர் வழிசலாக பதில் சொல்லிக் கொண்டிருந்தனர். "டெண்டுல்கர் நிலா, திராவிட் வெறும் நட்சத்திரம்தான்" என்றெல்லாம் ஒரு பெண் கவிதை பாடினார்.
கடந்த இரு தினங்களாக இளம் வாக்காளர்களை மயக்க வேட்பாளர்கள் கிரிக்கெட் மட்டைகளையும் இதர சாதனங்களையும் லஞ்சமாகத் தருவதாகப் படித்தேன்.
ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் பின்புறமாக சாக்குப்பையுடன் வரவேண்டுமாம். வெளியே தெரிந்து விடக்கூடாது அல்லவா!
ஆந்திராவிலும் இதே தொல்லையாம். அங்கு தெலுகு தேசம் வேட்பாளர்கள் கிரிக்கெட்டையும் தேர்தலையும் வெவ்வேறு நேரத்தில் வைத்திருக்கக் கூடாதா என்று புலம்புகிறார்களாம்.
இதுநாள் வரை பிரியாணி, சேலை (லால்ஜி டாண்டன் லக்னோவில் சேலை தருகிறேன் என்று சொல்லி 20 பேருக்கு மேல் சொர்க்கத்துக்கு அனுப்பி விட்டார்), சாராயம் என்று அழ வேண்டி வந்தது. இப்பொழுதோ பலருக்கு ரூ. 2,500-3,000 சமாச்சாரமாக அழ வேண்டியுள்ளது.
18 வயது இளைஞர்களுக்கு கிரிக்கெட் சாதனங்கள் என்றால், 18 வயது நிரம்பிய பெண்களுக்கு என்ன லஞ்சம் கொடுப்பது? தாலிக்குத் தங்கம் என்றெல்லாம் முன்னால் செய்தாகி விட்டது. யாருக்காவது நல்ல யோசனை இருந்தால் சொல்லவும்.
லக்ஷ்மிபதி பாலாஜி பாகிஸ்தானியர்களின் உள்ளங்கவர் கள்வனாகி விட்டாராம். ஏனென்றால் தெரியாது என்கிறார். எங்கு போனாலும் 'பாலாஜி, தீரே சே சல்னா' என்று பாடுகிறார்களாம் பாகிஸ்தானிகள்.
வெட்கத்தோடு ஒருவேளை தனது கருப்பு வண்ணம்தான் தன்னை அவர்களுக்குப் பிடிக்கும் காரணமோ என்கிறார் பாலாஜி. கருமையைக் காயும் தமிழர்கள் இனியாவது கருமையின் சிறப்பை உணர்வார்களாக. Fair & Lovely போன்ற களிம்புகளைப் பூசுவதை இனியாவது நிறுத்துவார்களாக.
கருப்பு பாலாஜி எப்பொழுதும் முகத்தை சிரித்தவாறு வைத்திருப்பதே அவரை அனைவருக்கும் பிடிக்கும் காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. அவரது பந்தை நான்கடித்தாலும், ஆறடித்தாலும், அவரது பந்தில் கேட்ச் விடுபட்டுப்போனாலும் அவர் முகத்தில் சிரிப்பு மட்டும் மாறுவதில்லை.
போகட்டும். 400ஐத் தொட முடியுமா என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. மாத்தியூ ஹெய்டன் தொட்டுவிடுவாரோ என்றிருந்தது நடக்காமல் போனது.
டான் பிராட்மேனுக்குப் பிறகு இரண்டு முச்சதங்கள் அடித்த ஆசாமி லாராதான். (அடுத்த ஆசாமியாகப்போகிறவர் விரேந்தர் சேவாக் என்று பட்சி சொல்கிறது:-)
இப்பொழுது மேற்கிந்தியத் தீவுகள் அணியால் இந்த டெஸ்டை வெல்ல முடியுமா என்று பார்ப்போம்.
என்னதான் நாநூறு அடித்தார் ஒருவர் என்றாலும் ஆண்டிகுவாவின் பிரதமர் ஆடுகளத்தின் உள்ளே பிரவேசித்து லாராவை கட்டித் தழுவி 'ஷோ' காட்டியிருக்க வேண்டாம்! பார்க்க அசிங்கமாக இருந்தது. வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற கூத்துகள் நடக்காது. யோசித்துப் பாருங்களேன்? வேறெந்த விளையாட்டிலும், வேறெந்த நாட்டிலும் உலக சாதனை நடக்கும் போது நாட்டின் பிரதமரோ, பெரிய ஆட்களோ பாதி ஆட்டத்தில் ஓடிவந்து கட்டித் தழுவிக்கொண்டிருக்கிறார்களா என்ன?
நடுவர்கள் டாரைல் ஹேர், அலீம் தர் இருவரும் ஐசிசியிடம் இது பற்றி புகார் செய்ய வேண்டும்.
ரஜினி இன்று பத்திரிகை நிருபர்களை சந்தித்துப் பேசியது விஜய் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
ரஜினி ஏற்கனவே எழுதிவைத்த அறிக்கையைப் படித்தார். படிக்கும்போது நிறையப் பிசிறல் இருந்தது. படித்து முடித்ததும், பத்திரிகையாளர்களிடம் வேறு ஏதும் பேசாமல், வேறெந்தக் கேள்விகளுக்கும் விடை கொடுக்காமல் கிளம்பி விட்டார். அவன் சொன்னதின் சாரம்:
* பாமகவின் ராமதாஸ் பாபா படத்தில் நான் பீடி குடித்தது போல வந்த காட்சிகளை எதிர்த்தார். அவர் என்னைவிட வயதில் பெரியவர். என்னை நேரடியாக வந்து சந்தித்திருக்க வேண்டியதில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டு இம்மாதிரியான காட்சிகளை நீக்கிவிடுமாறு சொல்லியிருந்தால், நான் முடிந்தால் நீக்கியிருப்பேன், அல்லது அடுத்த படத்தில் வராதமாதிரி செய்திருப்பேன். ஆனால் அதைச் செய்யாமல் அவரது அடியாட்கள் மூலமாக சினிமா திரைகளைக் கிழித்தார், திரைப்பெட்டிகளை, திரைப்பட அரங்குகளின் அதிபர்களைக் கடத்தினார். பல்லாயிரக்கணக்கான பணம் நஷ்டமாகுமாறு செய்தார்.
* என் ரசிகர்கள் வெகுண்டு எழுந்தனர். ஆனால் நான் அவர்களை அமைதியோடு இருக்குமாரு சொன்னேன். நான் அவர் வழிக்கு வந்ததில்லை. பின்னர் சமீபத்தில் நடந்த ஒரு அரசியல் கூட்டத்தில் என்னை 'சேற்றில் உழலும் பன்றி' என்று தரக்குறைவாகப் பேசினார்.
* என்னை தனிமனிதனாக அவர் விமரிசனம் செய்ததற்காக நான் அவரை எதிர்க்கவில்லை. அரசியலில் எனக்குப் பிடிக்காதது இரண்டு: (1) ஊழல், (2) வன்முறை. ராமதாஸ் வன்முறையைப் பிரதிபலிப்பவர். அதனால்தான் என் ரசிகர்களின் கருத்துக்கிணங்கி இந்தத் தேர்தலில் பாமக போட்டியிடும் தொகுதிகளில் அந்தக் கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக வேலை செய்ய ஒப்புதல் கொடுத்தேன். இதனால் என் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கொலை மிரட்டல் வந்தது. என் ரசிகர் மன்றத்தவர்களை காவல் துறையினரால் எப்பொழுதும் காப்பாற்ற முடியாது என்பதால் அஇஅதிமுக/பாஜக வேட்பாளர்களை ஆதரிக்குமாறு சொன்னேன். அப்படிச் செய்தால் இந்தக் கட்சியினர் என் ரசிகர் மன்ற ஆட்களைக் காப்பாற்றுவார்கள் என்று நினைத்தேன்.
* ஜனநாயக முறைப்படி மதுரையில் ராமதாஸுக்கு கறுப்புக்கொடி காட்ட முனைந்த என் ரசிகர்களை கொலைவெறியோடு தாக்கினர் பாமகவினர். ராமதாஸ் மீது கொலை வழக்கு போட்டிருக்கும் தமிழகக் காவல்துறைக்கும், முதலமைச்சருக்கும் என் நன்றிகள். மதுரை மட்டுமல்ல, நாளை சென்னை, மும்பை, தில்லி, கோலா லம்பூர், ஏன் ஜப்பான் இங்கெல்லாம் என் ரசிகர்கள் உங்களுக்குக் கறுப்புக்கொடு காட்டினால் என்ன செய்வீர்கள்? அங்கும் ஆட்களை ஏற்பாடு செய்து அவர்களை அடித்து நொறுக்குவீர்களா?
* ராமதாஸை இதற்கு மேல் விமரிசிக்க நான் விரும்பவில்லை. அவர் என் நண்பர்களிடம் தஞ்சம் அடைந்து விட்டார்.
* நான் இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை. இது பாராளுமன்றத் தேர்தல். நாடு முழுதும் சுற்றிப்பார்த்ததில் எனக்கு அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் உள்ள தே.ஜ.கூ வே ஆட்சிக்கு வரும் என்று தோன்றியது. மேலும் இப்பொழுதைக்கு தமிழகத்தின் மிகப்பெரிய பிரச்சினை தண்ணீர்ப் பிரச்சினை. நம் மாநிலத்தைச் சுற்றியுள்ள மற்ற மாநிலங்களில் வற்றாத ஜீவநதிகள் உண்டு. நம் மாநிலத்தில் மட்டும்தான் இப்படி ஒரு நதியும் கிடையாது. இந்தத் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க ஒரே வழி இந்திய நதிகளை ஒன்றிணைப்பது மட்டுமே. அப்படி இணைக்காவிட்டால் அதிகமாக பாதிக்கப்படப்போவது தமிழகம் மட்டுமே. அதனால் நதிநீர் இணைப்பிற்கு ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக நான் ஒத்துக்கொண்டேன். பாஜக மட்டும்தான் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பைப் பற்றிப் பேசியுள்ளது. துணைப்பிரதமர் அத்வானியும் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நதிநீர் இணைப்பை தன் கட்சி/அரசு செய்தே தீரும் என்று உறுதி கொடுத்துள்ளார். எனவே என் தனிப்பட்ட வாக்கு பாஜகவுக்கே.
* இதனால் என் ரசிகர்கள் அனைவரையும் பாஜகவுக்கு வாக்களிக்கச் சொல்லவில்லை. என் ரசிகர்கள் பல கட்சிகளையும் சேர்ந்தவர்கள். ஆனால் வாக்களிக்கப் போகும்போது அவர்களை நான் கேட்டுக்கொள்வது - "சிந்தியுங்கள்" என்பதே. உங்களுக்கு விருப்பமான கட்சிக்கு வாக்களிப்பீர்களா அல்லது நம் மாநிலத்தின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க உறுதியளிக்கும் கட்சிக்கு வாக்களிப்பீர்களா...?
* இந்தத் தேர்தலில் பாமக தோற்றால், நாம் வென்றதாகக் கருதக்கூடாது. பாமக வென்றால் நாம் தோற்றதாகக் கருதக்கூடாது. நம்முடைய எதிர்ப்பை ஜனநாயக முறையில் வெளிக்காட்டுவதே இந்த முயற்சி. இனி நம் ரசிகர்கள் கறுப்புக்கொடி காட்டுவது போன்றவற்றைத் தவிர்த்து விட்டு ஜனநாயக முறையில் வாக்குச் சாவடியில் எதிர்ப்பைக் காட்டட்டும்.
ஆக ரஜினி இப்பொழுதைக்கு சொல்வது: 1. பாமகவை எதிர்க்கிறேன் - என்னை நேரடியாக விமரிசனம் செய்ததால் அல்ல, ஆனால் அரசியலில் வன்முறையைப் பிரதிபலிப்பதால். 2. பாஜகவை ஆதரிக்கிறேன் - தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்தமான நதிநீர் இணைப்புத் திட்டத்தை ஆதரிப்பதால். 3. அஇஅதிமுகவை பாமக போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் ஆதரிக்கிறேன். 4. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் என் 'அமைப்பின்' ஆதரவில்லை. (!!) 5. திமுக, ப.சிதம்பரம் போன்றோர் இன்னமும் என் நண்பர்கள்.
எதிர்பார்த்த மாதிரியே சன் டிவி தன்னுடைய தலைப்புச் செய்திகளில் தேவையானவற்றை மட்டும் தக்கவைத்துக் கொண்டு மீதியை வெட்டி விட்டது. சன் டிவி செய்தி:
"எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை - ரஜினி." "பாமக போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை எதிர்ப்போம்" "இனி என் ரசிகர்கள் ராமதாஸை எதிர்த்து கறுப்புக்கொடி காட்ட மாட்டார்கள்."
பாகிஸ்தானில் லாரிகள், ஆட்டோக்கள் ... ஏன், மோடார் பைக்குகள், சைக்கிள்கள் என்று எந்த வண்டியானாலும் ஒருவித அதீத அலங்காரம் இருக்கும். முதலில் பார்த்த போது ஓரிரு லாரிகளுக்கே இம்மாதிரியான அலங்காரம் இருக்கும் என்று நினைத்தேன். பின்னர் தெருவில் ஓடும் அனைத்து லாரிகளும் இப்படித்தான் என்று தெரிந்தது.
ஹாரப்பா போகும் வழியில் குளிர்பானம் அருந்த ஒரு கடையில் நின்றோம். அங்கு சில அலங்கார லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்படியான ஒரு வண்டியின் ஓட்டுநர் எங்களைப் பார்த்ததும் இந்தியர்கள் என்று தெரிந்து கொண்டார். எங்களிடம் வந்து பேசத் தொடங்கினார்.
(உருதுவில்) "போதும் இந்தச் சண்டைகள்... துப்பாக்கியும், தோட்டாவும் வேண்டாமே... வேண்டியதெல்லாம் அன்பும், காதலுமே" (प्यार और मोहबत)
(உடைந்த அரைகுறை ஹிந்தியில்) "ஆமாம். நீங்கள் சொல்வது சரியே..."
"ஆனால் ஏன் உங்கள் நாட்டில் முஸ்லிம்களைக் கொல்கிறீர்கள்? அவர்களைக் கொல்லாதீர்கள்..., பாவம்...."
அவரது விசனத்தில் பாகிஸ்தானில் இந்தியாவைப் பற்றிய எப்படியான கண்ணோட்டம் பரவியிருக்கிறது என்று புரிந்தது. குஜராத் கொடுமைகள் மூலம் 'இந்தியா ஒளிர்கிறது'. ஆனாலும் அந்த லாரி டிரைவரிடம் அரைகுறை மொழியில் நிலைமையை விளக்க ஆரம்பித்தோம். அதற்குள் எங்கள் வண்டியின் டிரைவரும் அவசரமாக வந்து (நாட்டின்) விருந்தினர்களைத் தொல்லைபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளவும், நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.