Thursday, February 06, 2003

தொலைதொடர்பு நிறுவனங்கள் - பகுதி 1

1986ஆம் ஆண்டு வரை நாடு முழுதும் தொலைபேசி வசதிகளை செய்து கொடுத்து வந்தது இந்திய அரசாங்கத்தின் தொலை தொடர்புத் துறை (Department of Telecommunication அல்லது DOT) ஆகும். தொலைதொடர்புத் துறையானது மத்திய அரசின் தொலை தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கியது.

தொலை தொடர்புத் துறை, நாடு முழுவதும் தொலைபேசி இணைப்பகங்களை (Telephone Exchange) நிறுவி, அவைகளைப் பராமரித்து வந்தது. இதன் மூலம் கொடுக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளால் (Telephone connections) உள்ளூர் (local calls) மற்றும் நாடு முழுவதும் (National Long Distance - NLD) பேச முடிந்தது. தொலை தொடர்புத் துறையின் மற்றொறு பகுதியான வெளிநாட்டு தொடர்புச் சேவை (Overseas Communication Service - OCS), இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்குமான தொலைபேசி வசதிகளைச் (International Long Distance - ILD) செய்து வந்தது.

ஏப்ரல் 1986ஆம் ஆண்டு, 1ஆம் தேதி முதல், இந்திய அரசு இரு லிமிடெட் (limited, அதாவது வரையறுக்கப்பட்ட) நிறுவனங்களை உருவாக்கியது. ஒன்று மஹாநகர் டெலிபோன் நிகம் லிமிடெட் (Mahanagar Telephone Nigam Limited - MTNL), அதாவது வரையறுக்கப்பட்ட பெருநகர் தொலைபேசி வாரியம் - இந்நிறுவனம் தில்லி மற்றும் மும்பை மாநகரங்களில் மட்டும் அரசின் தொலை தொடர்புத் துறை செய்து வந்த சேவையினை மேற்கொண்டது. அதே நாளில் உருவாக்கப்பட்ட விதேஷ் சன்சார் நிகம் லிமிடெட் (Videsh Sanchar Nigam Limited - VSNL) என்ற நிறுவனம் OCS செய்து வந்த வெளிநாட்டுத் தொலை தொடர்பு வசதியினை மேற்கொண்டது. இந்த இரு நிறுவனங்களையும் அரசு பங்குச் சந்தைக்கு கொண்டு வந்தது.

MTNL நிறுவனம் உருவாக்கப்பட்டதின் காரணமே DOTயிணால் மும்பை மற்றும் தில்லி மாநகரங்களின் தொலைபேசித் தேவையைப் பூர்த்தி செய்ய முடியவில்லை என்பதே. அதற்கு ஏற்றமாதிரியே MTNL ஆரம்பித்த பிறகு இவ்விரு நகரங்களிலும் தொலைபேசி சேவை வெகுவாக முன்னேறியது. இன்று கூட, இதே நிலமைதான் நீடிக்கிறது.

VSNL நிறுவனமும் நல்லமுறையில் வெளிநாட்டுத் தொலைதொடர்பு வசதிகளை செய்து வந்ததோடு இல்லாமல், 1995ஆம் ஆண்டு இணைய இணைப்புக்கான (Internet) சேவையையும் தொடங்கியது. அதைப் பற்றி வரும் பகுதிகளில் பார்ப்போம்.

1995ஆம் ஆண்டு வரை, தொலைபேசிச் சேவை அரசின் கையிலும் (DOT), அரசு சார்ந்த நிறுவனங்கள் (MTNL, VSNL) கையிலுமே இருந்து வந்தது. முதன்முறையாக, 1994ஆம் ஆண்டு செல்லுலார் தொலைபேசி (Cellular Mobile Telephony) சேவையினைத் தொடங்க அரசு தனியார் நிறுவனங்களை அனுமதித்தது.

இதைப்பற்றி நாளை பார்ப்போம்.

No comments:

Post a Comment