Friday, July 04, 2003

விமானத்தில் உணவு

லண்டனில் மூன்று நாட்களுக்குப் பின்னர் சென்னைக்கு மறுபடி பயணம். மீண்டும் துபாய் வழியாக, மும்பை வந்து, பின்னர் அங்கிருந்து சென்னைக்கு.

துபாய் விமான நிலையத்துக்கு வந்தவுடன் நேராக எமிரேட்ஸ் ஆதரவில் "இலவச உணவு" கிடைக்குமா, என்று விசாரித்துப் பார்த்தால், "கிடையாது, நான்கு மணிநேரமாவது விமானநிலையத்தில் இருக்குமாறு இருந்தால்தான் அது" என்று பதில்.

பின்னர் அங்கிருந்து காசுக்கு விற்கும் கடையைத் தேடி ஒரு நடை, அதிலும் மெக்டானல்ட்ஸ் போன்றவற்றை விலக்கி, ஒரு இந்திய உணவுக்கடை கிடைத்தது. இந்திய உணவு என்றால் பெரும்பாலும் கிடைப்பது வடக்கில் இருக்கும் ரொட்டி, கறி வகைகளே. யாருக்காவது இட்லியும், உப்புமாவும் விற்கத் தோணாதோ? இரண்டு 'நான் ரொட்டி', கூட உருளைக் கறியும், கதம்பமாக ஒரு காய்கறிக்கூட்டும். வயிறு நிரம்பியது. இப்பொழுதெல்லாம் விமானத்தில் கிடைக்கும் உணவை சாப்பிடத் துளிக்கூடப் பிடிக்கவில்லை. இந்தியக் காய்கறி உணவு என்று சொல்லி அவர்கள் தருவது வாய்க்குள் வைக்க முடிவதில்லை. இதுவரை கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட பயணங்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருப்பேன். விரும்பி சாப்பிடுவதுமாதிரி இதுவரை ஒருமுறை கூட இருந்ததில்லை.

உள்நாட்டுப் பயணங்களும் இது மாதிரியே. ஜெட் ஏர்வேய்ஸ் விமானத்தில் கொடுப்பதும் காய்ந்து வறண்டு போன எதோ ஒன்று. இந்தியன் ஏர்லைன்ஸ் உணவு தேவலாம். இத்தனைக்கும் இந்த விமானங்களுக்கு உணவு தருவது 5 நட்சத்திர அந்தஸ்து பெற்ற நிறுவனங்களாகும்! இதற்கு பதில், பேசாமல் சரவணபவனில் வாங்கித் தரலாமே?

லண்டனில் தங்கியதில், நான்கு நாட்களில் இரண்டில் ஓர் இந்திய உணவு விடுதியில் ஒட்டியாகி விட்டது. அதுவும் வடக்கிந்திய பஞ்சாபி உணவுதான். பேட்டர்ஸி என்னும் இடத்தில் ஒரு தென்னிந்திய உணவு விடுதிக்கு வழக்கமாகப் போவேன் (நேரம் இருந்தால்). இம்முறை முடியவில்லை. தமிழகத்து அம்மாமி ஒருவர் நடத்தும் உணவு விடுதி இது. நல்ல சாற்றமுது, கடைசியில் தயிர்சாதமும், சில சமயம் நெல்லிக்காய் ஊருகாயும் கூடக் கிடைக்கும். கொரமாண்டல் என்று பெயர். (சோழமண்டலத்தின் திரிபு). பறப்பன, ஊர்வன, நடப்பன போன்றவையும் கிடைக்கும். நமக்கு அதெல்லாம் ஒத்து வராது.

1996ஆலிருந்து இங்கிலாந்து சென்று வருகிறேன். ஆனால் போனமுறை (மார்ச் 2003) லண்டன் சென்றிருந்தபோது முதல்முறையாக இங்கிலாந்து நண்பர் ஒருவர் என்னை சௌளத்தால் அழைத்துச் சென்றார். பின்னர் தனியாக ஒரு சனிக்கிழமை அங்கு மீண்டும் சென்றேன். கடைத்தெருவெங்கும் நிதானமாக நடந்து சுற்றிவிட்டு, ஒன்றும் வாங்காமல், எதோ ஒரு கடைக்குச் சென்று சுமாரான இந்திய உணவை வயிற்றுக்கு இட்டு, பின்னர் ஒரு புது அனுபவம் வேண்டி, ஹிந்தி சினிமா ஒன்று பார்க்கப் போனேன். குஷி என்று ஒரு படம். தமிழில் வந்ததை ஹிந்தியில் செய்துள்ளார்கள் என்று பின்னர் அறிந்து கொண்டேன். படு மட்டமான படம். ஒரே பேத்தல். இரண்டு குழந்தைகள் வீல்-வீல் என்று கத்திக்கொண்டு ஒருவரை ஒருவர் பிறந்த உடனே 'சைட்' அடித்து விட்டு எங்கோ பிரிந்து, பின்னர் எப்படி ஒன்று சேர்கின்றனர் (வேறு என்ன?) என்பது கதையாம்.

போயும் போயும் லண்டன் வரை வந்து இந்தப் படத்தையா பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment