Friday, July 11, 2003

கல்யாண கலாட்டா

நேற்று ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன். காலை முதல் இரவு வரை என் ஒரே வேலை சாப்பாடு நேரத்திற்கு சாப்பாடும், அட்சதை போட வேண்டிய நேரத்திற்கு அட்சதையும்.

ஆனால் சுற்றிலும் பலர் ஓடியாடி வேலை செய்தவண்ணம் இருந்தனர். முக்கியமாகப் பட்டது சமையல்காரர்களும், பந்தியில் உணவு பரிமாறுபவர்களும்தான். அதன்பிறகு மந்திரம் ஓதும் பார்ப்பனர்.

தமிழ்நாட்டுப் பார்ப்பனர் திருமணங்கள் நிறையவே மாறிவிட்டது. சென்னை போன்ற இடங்களில் ஒரு நாள் கல்யாணம்தான் இப்பொழுதெல்லாம். முதல் நாள்தான் சில சமயம் நிச்சயதார்த்தமே. இன்னும் சிலர் முதல்நாள்தான் மாப்பிள்ளைக்குப் பூணூலும் அணிவிக்கின்றனர். பெண்கள் மட்டும் விடாது நகை, புடவை அணிந்து, மாப்பிள்ளையை வைத்து நலுங்கும், ஊஞ்சலும் விளையாடுகின்றனர். இன்னும் காசி யாத்திரைக்கு குடையும், செருப்பும் வாங்கப்படுகிறது. தேங்காய் உருட்டி, 'வாரணமாயிரம்' பாடி, அப்பளம் நொறுக்கி வண்ண, வண்ண சாத உருண்டைகளைத் தூக்கியெறிந்து, அசிங்கமான குரலில் பாட்டுப்பாடி, தாங்கமுடியாத ரகளை.

விடாது நாயனமும், தவிலும் வந்து ஏதோ பாட்டுப்பாடி, நடுவில் கை ஆட்டப்படும் போதெல்லாம் கொட்டுமேளம் கொட்டி, மாப்பிள்ளைக்கு ஒரு முடிச்சும், நாத்தனார்களுக்கு இரண்டு முடிச்சுமாக ஒரு வழியாக முடிகிறது. ஓரத்தில் கலெக்ஷன் எவ்வளவு என்று எழுத ஒரு மாமா, கையில் புத்தகமும் பேனாவுமாக. இவர் முடிந்தவரை ஏதாவது வங்கியில் வேலை பார்த்திருப்பார் (அ) பார்த்துக்கொண்டிருப்பார். வரும் வரவு ஐந்தோ, பத்தோ என்றாலும், "சோபனோ சோபமானஸ்ய" என்று ஆரம்பித்து பத்தாயிரம் கட்டி வராகன் கொடுக்கப்பட்டதாக வாத்தியார் சொன்னாலும் இந்த மாமா உண்மைகளை அந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதி விடுவார்.

அன்று இரவு ரிசப்ஷன். இங்குதான் அலுவலகத்தவர்கள் வருவார்கள். ஒரு மேடையில் கோட், சூட் சகிதம் மாப்பிள்ளையும், பக்கத்தில் வட இந்திய டிசைனில் பெண்ணும் நிற்க, எல்லோரும் கியூவில் நின்று, மணமக்கள் பக்கத்தில் வந்து வீடியோ கேமராவாலும், வெறும் கேமராவாலும் கிளிக் செய்யப்பட்டு, புஃபே சாப்பிட்டு, வீட்டுக்குச் செல்வர். அழகாக பேக் செய்யப்பட்ட அன்பளிப்புகள் பின்னால் சென்று குவியும்.

மொத்தத்தில் இந்தக் கல்யாணங்கள் எல்லாம் போரடிக்கிறது. பஞ்சாபி, மார்வாடிக் கல்யாணங்கள் மாதிரி ஒரு குதிரை ஊர்வலம், தெருவில் ஹிந்தி/தமிழ் பாட்டுக் கச்சேரி, ஆட்டம், பாட்டம் என்று இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

(நடந்தது மனைவியின் தமையன் கல்யாணம். மனைவி நான் எழுதுவதையெல்லாம் படிக்க மாட்டாள் என்ற நம்பிக்கைதான்.)

No comments:

Post a Comment