Tuesday, July 15, 2003

மூன்று விரல்கள்

நேற்றுத்தான் வந்தது இரா.முருகன் எழுதிய மூன்று விரல்கள் புத்தகம் மானசரோவரிலிருந்து. (ரூ 145 புத்தகத்துக்கு ரூ 40 போஸ்டல் சார்ஜ் வாங்குவது அநியாயம். அதுவும் சென்னைக்குள்ளேயே).

களம் மிகவும் சுவாரஸியமானது. புறத்திலிருந்தே ஆனால் வெகு அருகாமையில் பார்த்து வந்தது. என் தங்கை கணவன், என் மனைவியின் அண்ணன், அவனது மனைவி, என் மனைவியின் தங்கை, அவளது கணவன் என்று எல்லோரும் சாஃப்ட்வேர். நானும் லாப்டாப் தூக்கிக்கொண்டு அலைவதால் என்னைக்கூட எல்லோரும் IT/சாஃப்ட்வேர் என்றுதான் நினைக்கிறார்கள்.

நேற்று இரவு படிக்க ஆரம்பித்து இதுவரை 25 அத்தியாயங்கள் படித்திருக்கிறேன். நகைச்சுவை வழிந்தோடுகிறது எல்லாப் பக்கங்களிலும். சுதர்சனின் ஒவ்வொரு எண்ண ஓட்டங்களையும் அற்புதமாய்ப் படம் பிடிக்கிறார். மிகச் சரளமான நடை. பெயர்க்காரணம் அருமை. எல்லோரும், முக்கியமாக சாஃப்ட்வேர் என்ஜினியர்கள் அந்த மூன்று விரல் கொண்டு, அந்த மூன்று பட்டன்களை சொடுக்கி வாழ்க்கையை மீண்டும், மீண்டும் திரும்ப மாற்றிக்கொள்ளலாமா என்று ஏங்குவது உண்மையே.

ஐயங்கார் பாஷையில் ஒரு சில சறுக்கல்கள் அங்கங்கே. சாற்றமுதுக்கு திருமப்பாறுதல்தான் சந்தியா கேட்பதாக சுதர்சனுக்குத் தோணவேண்டுமே ஒழிய ரசத்துக்கு தாளித்துக் கொட்டுவது அல்ல. (அது அய்யர் பாஷை அண்ணா!) புஷ்பா கத்திரிக்காய் கரமேது (கறி அமுதின் திரிபு) பற்றிப் பேச வேண்டும், கறியைப் பற்றி அல்ல.

108ஆவது திருப்பதி ஸ்ரீவைகுண்டமே ஆனாலும் வழக்கில் பரமபதம் என்றுதான் நான் கேட்ட அவ்வளவுபேரும் சொல்வர். ஏனெனில் திருவைகுண்டம் என்று இந்நாட்டிலேயே ஒரு திருப்பதி உள்ளது, அத்தோடு இதைக் குழப்பிக் கொள்ளக்கூடாது பாரும்.

பட்டாபி என்னும் பட்டர் அய்யரா, அய்யங்காரா? கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. ருத்ரம், சமகம் எல்லாம் சொன்னால், முன்னவர். பேர் என்னவோ பின்னவர் போல் உள்ளதே?

படித்துமுடித்து விட்டு மற்றவை...

No comments:

Post a Comment