Monday, July 21, 2003

தக்ஷிண சித்ரா

நான், மனைவி, குழந்தையோடு சனிக்கிழமை அன்று தக்ஷிண சித்ரா சென்றிருந்தோம். குழந்தையை Funimals என்னும் சிறார்களுக்கான நிறுவனத்தில் சேர்த்திருந்தேன். நான்கே வயதான அவள், மற்ற சிறுவர்களுடன் தக்ஷிண சித்ரா செல்லவேண்டியிருந்தது, ஆனால் கடைசி நேரத்தில் குழந்தை அழுது ரகளை செய்ய, நானும், மனைவியும் அவர்களோடு சேர்ந்து த.சி சென்றோம். குழந்தையின் ரகளைக்கு நன்றி.

த.சி சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ளது. இந்த இடம் என்னவென்றே இதுநாள் வரை எனக்குத் தெரிந்ததில்லை.

தென் மாநிலங்களின் கலைகளும், வாழும் மக்களின் பழக்க வழக்கங்களும் மறைந்துவிடா வண்ணம் அவைகளைப் போற்றிப் பாதுகாப்பதற்காகவும், மேலும் வளர்ப்பதற்காகவும் உருவாக்கப்பட்டுள்ள ஓர் மையமே த.சி ஆகும்.

இங்கு கிட்டத்தட்ட 4 மணி நேரம் செலவு செய்ததில் தமிழ்நாடு சம்பந்தப்பட்டவைகளை மட்டும் பார்த்ததில்:


  • சைக்கிள் வித்தை: கிராமங்களில் சைக்கிள் (மிதிவண்டி) வைத்துக்கொண்டு பலவித வித்தைகளைச் செய்து பிழைப்பவர் உண்டு. அதை இருவர் இங்கு செய்து காட்டினர். சைக்கிளை மிதித்தவாரே கீழிருந்து தண்ணீர் நிரம்பிய குடத்தை வாயால் கவ்வி எடுத்து, ஒரு சுற்று சுற்றிவிட்டு, மீண்டும் கீழே வைப்பது; கைகளால் மிதிப்பானை சுழற்றிக்கொண்டே சுற்று வருவது; ஒரு சைக்கிள் டயரானால் ஆன வலையத்தில் சைக்கிளோடு தானும் புகுந்து வெளி வருவது; மற்றொருவரை தன் முதுகில் சுமந்து, கைகளால் கைப்பிடியைத் தொடாமல் சுற்றுவது என்று பல வித்தைகள்.
  • தெருக்கூத்து: திரௌபதியை அவளது அண்ணன் சொத்துக்கு ஆசைப்பட்டு துரியோதனனிடம் கடத்திக்கொண்டு வரப்போக, பீமனிடம் உதை வாங்குவது பற்றிய கதை. ஆட்டம், பாட்டம், வசனம், இசை என்று அமர்க்களமாய் இருந்தது, ஒரு முப்பது நிமிடங்களுக்கு.
  • பொம்மலாட்டம்: இது நிழல் பொம்மலாட்ட வகையைச் சேர்ந்தது. கிருஷ்ண லீலையில் பூதனையை வதம் செய்தது.
  • ஆட்டம்: ஒயிலாட்டம், கரகாட்டம், காவடியாட்டம் போன்றவை: தவில் தாளம் போட சிறுமியர் அதற்கு ஏற்ப ஆட்டமாடுவது.
  • குயவர் ஒருவர் பானை, குவளை செய்து காண்பிப்பது.
  • பம்பரம், ஓவியங்கள் வரைவது, துணி வேலைப்பாடு, மர வேலைப்பாடு, தோரணம் செய்வது என்று பல்வேறு நிகழ்ச்சிகள்.


நேரம்தான் போதவில்லை. இன்னும் மற்ற மாநில விஷயங்களையும் பார்க்க வேண்டும்.

நாட்டுப்புறத்தில் புழங்கும் பல்வேறுவிதமான வீடுகளைக் கட்டி வைத்து இப்படித்தான் இருக்கும் அந்தணரின் வீடு, இப்படித்தான் இருக்கும் செட்டி நாட்டு வீடு என்று காட்டுகிறார்கள். ஓர் மூலையில் ஒரு சிறிய தேரும் நிற்கிறது. பிறந்தது முதல் சென்னையின் கான்கிரீட் காடுகளுக்கிடையே வாழ்ந்து வரும் குழந்தைகளுக்கு இது ஒரு நல்ல படிப்பினைக் கொடுக்கும் இடம்.

No comments:

Post a Comment