Monday, July 07, 2003

பாதிரியார் (Priest) - 1994

பாதிரியார் (Priest) - 1994, கதை: ஜிம்மி மெக்கவர்ன், இயக்கம்: அன்டோனியா பர்ட் (பெண்)

ஒருபாற்சேர்க்கை பற்றி விவாதம் நடக்கும்போது நினைவுகூரவேண்டிய மிக முக்கியமான படம் இது. என்னை மிகவும் பாதித்த ஒரு படம்.

கதைச் சுருக்கம்: இங்கிலாந்தில் ஒரு கிராமத்து கத்தோலிக்கத் தேவாலயத்தில் மாத்தியூ (Matthew), கிரேக் (Greg) இருவரும் பாதிரியார்கள். கத்தோலிக்க விதிப்படி பாதிரியார்கள் பிரம்மச்சாரிகளாக இருக்க வேண்டும். கிரேக் வயதில் சிறியவர், முற்போக்கு எண்ணம் கொண்டவர், கூடவே ஓர்பாற்சேர்க்கையில் நாட்டம் உள்ளவர். மாத்தியூவோ வேலைக்காரியுடன் தொடர்பு வைத்துள்ளவர்.

இதற்கு நடுவில் அந்த ஊரில் உள்ள ஒரு குடும்பத்தில், ஒரு சிறுமியை அவளது தகப்பனே விடாது பலாத்காரம் செய்து வருகிறான். (child abuse). அந்தச் சிறுமி பாதிரி கிரேக்கிடம் confession செய்யும்போது இதைப் பற்றிப் பேசுகிறாள். ஆனால் கிரேக்கினால் ஒன்றும் செய்ய முடிவதில்லை. கத்தோலிக்க முறைப்படி, confession-இல் சொல்லப்பட்டதை வெளியே மற்ற யாரிடமும் சொல்லக்க்கூடாது. அந்தச் சிறுமியின் தகப்பனும், தன்னுடைய confession போது அதை பற்றி வக்கிரமாகப் பேச, தவிக்கும் உள்ளத்தோடு கிரேக் அந்தக் கொடியவனை எவ்வளவோ தடுக்கப் பார்க்கிறான், இயலவில்லை. அந்தச் சிறுமியின் தாயிடம் பலவித க்ளூக்கள் கொடுத்தாலும் அவளுக்குப் புரிவதில்லை. ஒரு நாள் தாய் வீட்டுக்கு முன்னமாகச் செல்ல, அங்கே பார்க்கும் காட்சி அவளை உறைய வைக்கிறது. தகப்பனை அடித்து வீட்டை விட்டு துரத்துகிறாள். பாதிரி கிரேக் அந்தச் சிறுமிக்கு நடந்த கொடுமையை தடுத்து நிறுத்தவில்லை என்று குற்றம் சொல்கிறாள்.

இதனிடையே கிரேக்கின் ஒருபாற்சேர்க்கை நடத்தை கிராம மக்களுக்குத் தெரிந்து போகிறது. (கிரேக்கும் அவனது காதலனும் காரில் உறவு கொள்ளும்போது போலீஸ் கண்டுபிடித்து சிறையில் போடுகின்றனர்). மக்கள் அவனை வெறுக்கிறார்கள். கிரேக் ஊரை விட்டுப் போய்விட, மாத்தியூ அவனை மீண்டும் தேவாலயத்துக்கு அழைத்து வருகிறான்.

ஈஸ்டர்(?) போது அப்பம் பிட்டுக் கொடுக்க இரண்டு பாதிரிகளும் நிற்க, ஊர் மக்கள் அனைவரும் திரண்டு மாத்தியூவைத் தேர்ந்தெடுக்கிறார்கள். கண்ணில் நீர்மல்க நிற்கும் கிரேக்கைத் தேர்ந்தெடுக்கிறாள் அந்தச் சிறுமி மட்டும் - கிரேக்கிற்கு பாவ மன்னிப்பு கடவுளிடமிருந்தோ அல்லது, அந்த ஊர் மக்களிடமிருந்து கிடைக்குமோ இல்லையோ, அடிபட்டுத் துன்புறுத்தப்பட்ட அந்த குழந்தையிடமிருந்து கிடைக்கிறது. தன்னைக் காக்கத் தவித்து ஆனால் இயலாமையால் ஒன்றும் செய்ய முடியாத கிரேக்தான் அந்தக் குழந்தையின் முன் கடவுளின் வழியாகத் தோன்றுகிறான். நெஞ்சை நெகிழவைக்கும் காட்சி இது.

இந்தப் படம் கார்பெட்டுக்குக் கீழே கடாசப்பட்டுள்ள பல கேள்விகளை முகத்திற்கு முன் கொண்டுவருகிறது.

[written first in http://groups.yahoo.com/group/RayarKaapiKlub/message/9137]

No comments:

Post a Comment