Tuesday, September 09, 2003

தலைமை நிர்வாகியின் ஐந்து சபலங்கள்

நேற்று என் நண்பர் எனக்கு பேட்ரிக் லென்சியோனி (Patrick Lencioni) என்பவர் எழுதிய "The five temptations of a CEO, a leadership fable" என்னும் புத்தகத்தைக் கொடுத்தார். ஒரு தலைமை நிர்வாகி எளிதாக எந்த ஐந்து சபலங்களுக்கு ஆட்படுவார் என்பதை ஒரு கதை போன்று விளக்கும் புத்தகம் இது.

இதுபோன்ற புத்தகங்கள் சாதாரணமாக ஆளைக் காய்ச்சும் வகையில் ஒரு தலைமை நிர்வாகி செய்ய வேண்டியவை இவை என்று புள்ளி வைத்து ஒரு அட்டவணையைத் தயாரித்து அறிவுரையை அள்ளி வழங்குவார்கள். அய்யோ, இன்னும் ஒரு புத்தகமா என்று தூக்கி எறிந்துவிடத் தோன்றும். ஆனால் மிக அருமையான, எளிதான முறையில் எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகம் என்னைப் பெரிதும் கவர்ந்தது. ஒரு நாவலைப் படிக்குமாறு ஒரே நாளில் (மும்பையில் ஆட்டோக்களில் பயணித்த நேரத்தில்) 134 பக்கம் உள்ள இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்து விட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

அந்த ஐந்து சபலங்கள் என்ன என்கிறார்?
  1. நிறுவனத்தின் முன்னேற்றத்தில் கவனம் வைக்காமல், தன்னுடைய சுய முன்னேற்றத்தில் மட்டும் கவனம் வைப்பது. எ.கா: வாழ்க்கையில் நீ முக்கியமான சாதனை என்று எதை நினைக்கிறாய் என்ற கேள்விக்கு நான் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டது என்ற பதில் சுய முன்னேற்றத்தை மட்டும் கவனத்தில் கொண்டதனால் விளைவது. என் முக்கிய சாதனை என் நிறுவனத்தின் முக்கியமான சாதனையான எதாவது ஒன்று பதில் சொல்பவர் இந்த சபலம் இல்லாதவர் ஆவார். தலைமைப் பதவியை அடைவது முக்கியமல்ல. அந்தப் பதவியை அடைந்த பிறகு, அந்த நிறுவனத்தை என்ன சாதிக்க வைத்தாய் என்பதுதான் முக்கியம்.
  2. தன் கீழ் நேரடியாக வேலை பார்ப்பவர்களிடம் அதிக நட்பு பாராட்டி அவர்கள் பொறுப்பற்று வேலையை சரியாகச் செய்யா விட்டாலும், அவர்கள் தன்னை விரும்ப வேண்டும் என்பதற்காக அவர்களைக் கண்டிக்காது விடுவது.
  3. சரியான முடிவை எடுக்க வேண்டும் என்ற காரணத்தால் கையில் தேவையான தகவல் இல்லை என்று எந்தவொரு முடிவையும் எடுக்காமல், தனக்கும், கீழே வேலை செய்பவர்களுக்கும், முழு நிறுவனத்துக்கும் துல்லியமானதொரு நோக்கை வைக்காமல் இருப்பது. தவறான முடிவை எடுப்பது, எந்தவொரு முடிவையும் எடுக்காமல் இருப்பதைவிடச் சிறந்தது. வேண்டுமென்றே தவறான முடிவை எடுப்பது சிறந்தது அல்ல, ஆனால் கையில் உள்ள தகவலை வைத்துக் கொண்டு பயமின்றி ஒரு முடிவை எடுத்து அதைச் செயல்படுத்தும்போது அது தவறானதாக இருப்பின் அதை ஒத்துக்கொள்வது எவ்வளவோ சிறந்தது.
  4. நிறுவனத்தின் அனைத்து அதிகாரிகளும் வேறுபாடுகளைத் தவிர்த்து ஒருமித்த கருத்துடன் இருக்க விழைவது. அதிகாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் இருந்தால்தான் கருத்து மோதல்கள் ஏற்படும், விவாதம் வலுக்கும், சரியான முடிவுகள் எடுக்கத் துணை புரியும்.
  5. கீழ் வேலை பார்ப்பவர் தன் கருத்துக்களை எதிர்த்துப் பேச, தன் கருத்துக்களைத் தவறு என்று எடுத்துச் சொல்ல அனுமதிக்காமை. அவர்களை நம்பாததால், அவர்களும் தன்னை நம்பாததால், "ஆமாம் சாமி" போடுவதைத் தவிர வேறு எதையும் அவர்கள் செய்யப்போவதில்லை.
ஆகத் தலைமை நிர்வாகி என்ன செய்ய வேண்டும்?
  1. கீழ் வேலை செய்பவரிடம் நம்பகத்தன்மையை உருவாக்குதல். தன் கருத்துக்களை அவர்கள் எதிர்த்துப் பேசும் அளவிற்கு தைரியத்தை வழங்குதல்.
  2. கருத்து ஒருமித்தலை விடுத்து கருத்து வேறுபாட்டுடன் கூடிய விவாதத்தை வரவேற்றல்.
  3. வழவழா என்று முடிவு எடுக்காமல் இருப்பதை விடுத்துக் குறைவான தகவலே இருந்தாலும் தீர்மானமான முடிவை எடுத்தல்.
  4. கீழ் வேலை பார்ப்பவர் தன்னை விரும்பாவிட்டாலும் அதைப்பற்றிக் கவலைப்படாமல் அவர்களின் பொறுப்பினை உணர்த்துதல்.
  5. தன் நிலையைப் பற்றிக் கவலைப்படாமல் நிறுவனம் எந்த நிலையை அடைய வேண்டுமென்பதை முன்வைத்தல்.

No comments:

Post a Comment