Thursday, September 04, 2003

சினிமா தியேட்டர், தேசிய கீதம், விளம்பரம்

இதற்கெல்லாம் என்ன சம்பந்தம்?

மும்பையில் சினிமா தியேட்டர்களில் படம் காட்ட ஆரம்பிக்கும் முன் தேசிய கீதம் ஒலிபரப்புவார்களாம். அப்பொழுது பாதி மக்கள் கூட்டம் கூட எழுந்து நின்று மரியாதை செலுத்த மாட்டார்களாம். ஆமய்யா, அவனவனுக்கு "நம்ம சீட்டுல உக்காந்து சாவகாசமா பாப் கார்ன் சாப்பிட்டுகிட்டு இருக்கற குண்டு மாமாவ எடத்தக் காலி பண்ணச் சொல்லி சண்டை", "கோக்கா கோலா இரண்டு கப் வாங்கிட்டு வா - காதலியோட தொணதொணப்பு", "யாரோட காலையாவது நறுக்குன்னு ஷூவால மிதிச்சிட்டு திட்டு வாங்கற கடுப்பு", இப்படி இருக்கும் கவலைகளில் தேசிய கீதமா காதில் விழும்? விழுந்தாலும், எழுந்து நிற்கும்போது "புஷ் பேக்" சீட் பின்னால் மடங்கி, நிற்க கொஞ்சமாக இடம்.

மும்பையைச் சேர்ந்த விளம்பரத் துறைக் கலைஞர்கள் ரகு, மனீஷ் பட் என்ற இருவரும் இந்த நிலைமையைக் கண்டு வெறுத்துப்போய் ஒரு விளம்பரம் படம் ஒன்று எடுத்துள்ளனர். வாருங்களேன், நாமும் அந்த விளம்பரத்தைப் பார்ப்போம்.

நசநசவென மக்கள் கூட்டமாய், மும்முரமாய்த் தன் வேலையைப் பார்க்கும் மும்பைத் தெரு. ஒரு பேல்பூரி, பானி பூரி, பிரெட் சாண்ட்விச், வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு வியாபாரி, ஒரு நொண்டி செருப்புத் தைக்கும் கிழவன், ஒரு கடிகார ரிப்பேர் ஆசாமி, ஷூ துடைக்கும் மூன்று சிறுவர்கள். பம்பரமாய் உழைக்கும் வர்க்கம், உழைத்தால்தான் உணவு.

இரண்டு புர்க்கா அணிந்த பெண்கள் தெரு ஓரத்தில் பானிபூரி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். செருப்புத் தைப்பவனின் வானொலியிலிருந்து கிரிக்கெட் உலகக்கோப்பைப் போட்டிக்கான நேர்முக வர்ணனை கசிந்து கொண்டிருக்கிறது. ஒரு தாய் தன் மகளைக் கையில் பிடித்தபடி அந்த பானி பூரிக் கடைக்கு வந்து கொண்டிருக்கிறாள்.

முதலில் சிறு தூரல், கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைகிறது. செருப்பு தைப்பவனுக்கு வானொலி ஒரு பொக்கிஷம். அணைத்து எடுத்து மழையிலிருந்து காக்க வேண்டும். பழைய வானொலிப் பெட்டியிலிருந்து வெறும் கர்-புர் சத்தம் மட்டும் இப்பொழுது. ஷூ துடைக்கும் சிறுவர்களின் கேலியைப் பொருட்படுத்தாது, வானொலியை அள்ளி எடுத்து டியூனரைத் திருப்புகிறான், ஆனால் வானொலி வேறு ஸ்டேஷனுக்குச் செல்கிறது.

அங்கிருந்து சுபா முத்கலின் கம்பீரமான குரலில் தேசிய கீதம் வழிந்தோடுகிறது. கொட்டும் மழையில் தன் டேப் போட்டு ஒட்டிய மூக்குக் கண்ணாடியை சரிபடுத்தியபடி, ஊன்றுகோல் துணையுடன் நொண்டிக் கிழவன் எழுந்து நிற்கிறான்.

அந்த மூன்று சிறுவர்களும் அமைதியாக ஒன்றன் பின் ஒன்றாக கொட்டும் மழையில் எழுந்து நிற்கிறார்கள்.

படு ஸ்டைலாக ஆடை உடுத்திய இரண்டு இளைஞர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டு எதையும் சட்டை பண்ணாமல் அந்தப் பக்கமாக நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது கணீரென அமிதாப் பச்சனின் குரல் ஒலிக்கிறது: "தேசிய கீதத்துக்கு மதிப்புக் கொடுக்காமல் தேசத்தை எப்படி மதிக்க முடியும்? தேசிய கீதத்தை மதியுங்கள்."



இப்பொழுது இந்த விளம்பரப் படம் மும்பை தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறதாம்.

பிசினஸ் லைனில் வந்த இந்தச் செய்தியின் சுட்டி இதோ.

No comments:

Post a Comment