Sunday, September 28, 2003

யாஹூ குழுமங்கள் மீதான தணிக்கையிலிருந்து தப்பிப்பது ...

யாஹூ குழுமங்கள் மீதான இந்திய அரசின் தணிக்கை பற்றி முதலில் அறிந்து கொண்டது நானாகத்தானிருக்கும் என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் இருக்கும். போன சனிக்கிழமைக்கு முதல் சனிக்கிழமை முதல் டிஷ்நெட் இணையச்சேவையிலிருந்து திடீரென்று யாஹூ குழுமங்களுக்குச் செல்ல முடியாமல் போனது. திங்கள் அன்று தொலைபேசியில் பேசி என்ன நடந்தது என்று கண்டுபிடித்தேன். வீட்டில் எனக்கு டிஷ்நெட் DSL இணைப்பு. அலுவலகத்தில் வீ.எஸ்.என்.எல் லின் இணைப்பு. அலுவலகத்தில் ஒரு தொல்லையும் இல்லை அந்த சமயத்தில்.

மேற்கொண்டு சிஃபியில் தொடர்பு கொண்டு பேசிய போது அங்கிருகும் மேல்நிலை அலுவலர் அம்மாதிரி ஒரு தடை வந்ததே தெரியாது என்றார். பின்னர் இதுபற்றி இணையத் தொழில்நுட்பர்கள் விவாதிக்கும் குழுவான india-gii@cpsr.org (http://cpsr.org/) க்கு அனுப்பினேன். அங்கு விவாதம் நடைபெற்றது; வேறு ஒன்றும் நடைபெறவில்லை.

விஷயம் என்ன என்பது இப்பொழுது உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். மேகாலயாவைச் சேர்ந்த இந்திய நடுவண் அரசுக்கு எதிரான கைன்ஹ்யுன் என்போர் நடத்தி வரும் ஒரு யாஹூ குழுமம்தான் காரணம். வெங்கட் எழுதியுள்ள திண்ணைக் கட்டுரையின் சுட்டி இதோ.

எதோ ஒரு தகவல்தொடர்பு அமைச்சக அதிகாரியின் மரமண்டைக்கு இந்த விஷயம் எட்டியிருக்கிறது. அந்தப் புண்ணியவான் உடனே அனைத்து இணையச்சேவை நிறுவனங்களுக்கும் தனது அதிகாரத்தை நிலைநாட்டி உடனடியாக இந்த குழுமத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டுவிட்டார். முதலில் இந்தப் பெருமையை தட்டிச் சென்றது டிஷ்நெட். கட்டளைக்கு முற்றும் அடிபணிந்த டிஷ்நெட், யாஹூ குழுமங்களையே ஒரேயடியாக வெட்டிச் சாய்த்தது. ஏனெனில் அவர்களுக்கு இந்தக் குழுமத்தை மட்டும் தனியாக மக்களைச் சென்றடையா வண்ணம் தடுப்பது எப்படி என்று தெரியவில்லை. அதனால் அவர்களது router என்னும் கருவியில் groups.yahoo.com என்னும் URL வராதவண்ணம் செய்து விட்டனர்.

கடந்த ஒருவார காலமாக நான் இந்தியாவில் இல்லை. இந்த நேரத்தில் மற்ற இணையச் சேவை நிறுவனங்களும் இந்த URL வராதவண்ணம் செய்து விட்டனர்.

இதுதான் வழியா? இல்லை. சிறு முயற்சி செய்தால் http://groups.yahoo.com/group/kynhun/ என்னும் URL மட்டும் வராதவாறு இணையச்சேவை அளிப்பவர்களால் செய்ய முடியும். அதற்கான கருவிகள் அவர்களிடம் இருந்தாலும் இதற்கான பயிற்சி அவர்களிடம் உள்ளதா என்பதே சந்தேகம். மேலும் இந்தியாவில் எத்தனை பேர் யாஹூ குழுமங்களைப் பயன்படுத்துகின்றனர்? இவர்களைத் தொல்லைக்குள்ளாக்கினால் எத்தனை பேர் சத்தம் போடப் போகின்றனர் என்ற அலட்சியமான மனப்பான்மையும் காரணம்.

இனி இந்தியாவில் வசிகும் நாம் என்ன செய்வது?

1. முதலில் யாஹூ குழுமங்களை வலையில் படிப்பவர்கள், அக்குழுக்களின் அஞ்சல்களைப் பெற குழுமங்களின் பண்புகளை மாற்ற வேண்டும். groups.yahoo.com க்குப் போகவே முடியாது என்கையில் எவ்வாறு இதனைச் செய்வது என்று சிலர் கேட்கலாம். டிஷ்நெட் ஆக இருந்தால் (மற்ற இணைய சேவையாக இருந்தாலும் இதைச் செய்ய முடியும் என்று நினைக்கிறேன், இதுவரை முற்றும் பரிசோதிக்கவில்லை) http://in.groups.yahoo.com/ என்னும் முகவரிக்குச் செல்லுங்கள். ஆம், இந்த முகவரி தடைசெய்யப்படவில்லை. இங்கு சென்று நுழைவுப்பெயரையும், கடவுச்சொல்லையும் அளித்தபின் "Edit My Groups" என்பதைத் தேர்வு செய்து உங்கள் குழுக்களில், தேவையானவற்றை மட்டும் "No Email" என்பதிலிருந்து "Individual Emails" என்று மாற்றி விடுங்கள்.

2. அனாமதேயப் பிராக்ஸி சர்வர்கள்: இந்திய அரசும், இணையச் சேவை செய்வோரும் சிறிது கூடத் தடை செய்ய முடியாத anonymous proxy servers முறை மூலம் உங்களுக்கு வேண்டிய யாஹூ குழுமத்தைப் படிக்கலாம். இதற்கு இந்தக் குழுமங்களை உறுப்பினர் அன்றி அனைவரும் படிக்குமாறு வைத்திருக்க வேண்டும். உதாரணம்: ராயர் காபி கிளப். இதில் எழுதப்படுவதைப் படிக்க ஒருவர் குழுவின் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. படித்துவிட்டு, பதில் எழுத மின்னஞ்சல் முறையைப் பயன்படுத்தலாம்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?

டயலப் முறையில் இணையத்தில் இணைபவர்கள் - இண்டெர்நெட் எக்ஸ்புளோரரில் - Tools->Internet Options ->Connections -> Settings (உங்கள் ISP dialer க்கானது) எடுத்து அங்கு "Use a proxy server for this connection" என்பதைத் தேர்வு செய்து Addres என்னுமிடத்தில் 216.56.22.43 என்றும் Port என்னுமிடத்தில் 80 ஐயும் அடித்து, சந்தோஷமாக http://groups.yahoo.com/ செல்லவும். நேரடியாக ஒரு குழுமத்தைப் படிக்க http://groups.yahoo.com/group/RaayarKaapiKlub/ என்று அடித்தால் போதும். அதன்பிறகு ஒவ்வொரு கடிதமாகப் படிக்கலாம்.

http://www.publicproxyservers.com/page1.html என்னும் தளம் சென்று அங்கு கொடுத்திருக்கும் பல சர்வர்களையும் பயன்படுத்தலாம். இதுபோல் பல தளங்களின் முகவரிகள் அங்கே உள்ளன. மொசில்லா மற்றும் அனைத்து உலாவிகளும் இந்த வசதியை அளிக்கின்றன.

இதன் மூலம் படிக்க மட்டும்தான் முடியும், post செய்ய முடியாது. ஏனெனில் இதற்குத் தேவையான cookies உங்கள் கணினியில் வந்து சேராது. மற்ற தளங்களுக்குச் செல்கையில் இந்தப் பண்பை மாற்றி விடவும். இவ்வாறு படிக்கையில் உடனடியாக யாஹூ மெயில் மூலம் அஞ்சல் (அந்த யாஹூ குழுமத்துக்கோ, மற்றவர்களுகோ அனுப்ப வேண்டுமானால், Proxy பண்புகளை மாற்றிய இடத்தில் "Advanced" என்பதனை சொடுக்கி அங்கே "Do not use proxy server for addresses beginning with" என்னும் இடத்தில் "mail.yahoo.com; in.*.mail.yahoo.com" போன்றவைகளை சேர்த்துக் கொள்ளவும். இதன் மூலம் யாஹூ மெயில் மட்டும் உங்கள் ISP மூலமாகவும் (அப்பொழுதுதான் சரியான cookies உங்கள் கணினியை வந்தடையும்), யாஹூ குழுமம் மட்டும் வேறொரு பிராக்ஸி மூலமாகவும் செல்லும்.

3. உங்கள் இணையச் சேவையை அளிப்பவரிடம் சண்டை போடுங்கள். உங்கள் ஊர் பாராளுமன்ற உறுப்பினருக்குக் கடிதம் எழுதுங்கள். DOT, TRAI, ISPAI ஆகிய நிறுவனங்களுக்குக் கடிதம் எழுதுங்கள். முட்டாள்தனமான தடை, தணிக்கையினால் இணையத்தில் எதையும் தடுத்து நிறுத்திவிட முடியாது என்று அவர்களது மண்டைக்குள் புகுமாறு சொல்ல வேண்டும்.

No comments:

Post a Comment