Saturday, October 04, 2003

மடலும் மடல் சார்ந்த இடமும்

"கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் போல
மடலும் மடல் சார்ந்த இடமும் என்னுடையது
இதன் பெயர் மடலிலக்கியம்"

என்று ஜெயஸ்ரீ எழுதியிருந்தார்.

தமிழில் மடல் என்னும் சிற்றிலக்கியம் (உலா, கலம்பகம், தாண்டகம், பிள்ளைத் தமிழ் என்பன போன்று) ஏற்கனவே உள்ளது - ஆனால் அது கடிதம் சார்ந்தது அல்ல.

திருமங்கை ஆழ்வார் எழுதிய இரண்டு பிரபந்தங்கள் பெரிய திருமடல், சிறிய திருமடல் என்பன.

ஒரு ஆண், ஒரு பெண் மீது உள்ள காதலை பலமுறை வெளிப்படுத்தியும், அந்தப் பெண் அவனை ஏறிட்டும் நோக்காததால், அந்த ஆண் காதலை வெளிப்படையாகச் சொல்லுமாறு உடலெங்கும் சாம்பலைப் பூசிக்கொண்டு, கிழிந்த ஆடையை உடுத்தி, பனைக்கருக்கு ஒன்றை குதிரை வடிவத்தில் செய்து, அதன் மீது ஏறிக்கொண்டு தன் நண்பர்கள் மூலம் அதைத் தெருவில் இழுத்து வரச் செய்து, தெருவில் செல்கையில் அந்தப் பெண்ணை, ஊரார் காதுபட சத்தமாக ஏசி, அவள் மானத்தை வாங்கி, அதைப் பொறுக்காமலாவது அப்பெண் தன்னை மணம் புரிந்து கொள்ள சம்மதிக்கலாம் என்ற கொள்கையோடு நடந்துகொள்வதுதான் மடலேறுதல் அல்லது மடலூர்தல். இதைப் பற்றிப் பேசுவதுதான் மடல் இலக்கியங்கள்.

இது சங்க காலத்தில் பெண்களுக்கு மறுக்கப்பட்டிருந்தது.
(எத்தனை மருங்கினும் மகடூஉ மடன்மேற் பொற்புடை நெறியின்மை யான - தொல்காப்பியம்
கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்க தில் - திருக்குறள்)

ஆனால் திருமங்கை ஆழ்வார் அதனை ஏற்காது

அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல்
மன்னு மடலூரார் என்பதோர் வாசகமும்
தென்னுரையில் கேட்டறிவ துண்டு - அதனையாம் தெளியோம்
மன்னு வடநெறியே வேண்டினோம்

என்று பெரிய திருமடலில் பாடுகிறார்.

மடல் பற்றி 1996இல் நானும் மற்றவர்களும் எழுதிய ஒரு சில விளக்கங்கள் (ஆங்கிலத்தில்) இந்த இடத்தில் கிடைக்கின்றன.

No comments:

Post a Comment