Saturday, October 04, 2003

பிரிட்டன் விவகாரங்கள்

அது வேற நாடுங்க. நம்ம கவலைகள் வேற, அவங்க கவலைகள் வேற. அப்பப்ப இரண்டு மாசத்துக்கு ஒரு தடவனாச்சும் நான் லண்டன் போக வேண்டி வரும். அப்பல்லாம் பீபீசீ தொலைக்காட்சி பாக்கறது, அந்தூரு பேப்பர் படிக்கறது. நெறய வெசயமெல்லாம் வித்தியாசமா இருக்கும். நம்மூர்ல சாப்பாட்டுக் கஷ்டம், பெட்ரோல் வெலயேத்தம், எப்பவும் நடக்குற ஊழல், அங்க இங்க குண்டு வெடிச்சுது, ஒரு ரயில் தொபக்குன்னு தண்டவாளத்த வுட்டு வெளில, ஜெயலலிதாவுக்கு இன்னொரு டாக்டர் பட்டம், புதுப் படம் ரிலீசானதுல எதுனாச்சும் ரகளை, அம்மா புச்சா எல்லோரும் கால்ல பச்சைக் கலர் செருப்புதான் போடணும்னு சட்டம் கொண்டாந்துருக்காங்க, காதல் தோல்வி, தற்கொலைகள் அப்புடின்னு நம்ம ஒலகம்.

ஆனா அங்க வேறங்க. பாத்ததுல, வித்தியாசமாப் பட்ட ரெண்டு சமாச்சாரத்த ஒங்ககிட்ட சொல்லிப் போடலாமினு தோணுச்சி.

1. நம்மூர்ல பசு மாட்டுக்கெல்லாம் செனையேத்தறது பத்தி தெரியுமில்லீங்களா? இதுல காள மாட்டோ ட விந்த எடுத்து குளிர்பதனத்துல வச்சிருப்பாங்க. வேணுங்கறப்ப பசு மாட்டக் கூட்டிவந்து அதுக்குள்ளாற வுட்டுருவாங்க.

பிரிட்டன்ல இது மாறித்தான் மனுசனுங்க (எல்லாருக்கும் இல்ல, வேணுங்குறவங்களுக்கு) செஞ்சுக்குறாங்கலாம். ஆம்பளங்கல்லாம் வயசான காலத்துல நமக்கு விந்து அதிகமாக இல்லாம போயிடலாம்னு தன்னோடத எடுத்து பத்திரமா வச்சுக்கலாமாம். ஆனா பொம்பளைங்களால அந்த மாதிரி அவங்களோட முட்டைய சேகரிச்சு பிற்காலத்துக்குன்னு வச்சிட முடியாது. (வெங்கட் அண்ணாச்சி சொன்னாமாறி கலை வெளிப்பாடு வேணா செய்யலாம், ஆனா செத்துப்போயிரும், ஒண்ணுத்துக்கும் பிரயோசனமாயிருக்காது). ஆனா அந்த முட்டைய கருத்தரிக்க வச்சி, அத கொஞ்ச மாசத்துக்கோ, வருசத்துக்கோ பத்திரமா வச்சிக்கலாம். அப்புறமா அந்த பொம்பளக்கி எப்ப தோணுதோ அப்ப எடுத்து கருப்பைக்குள்ள போட்டுக்கலாம். இதெல்லாமே ரிஸ்குதானுங்கோ. முக்காவாசி தபா கரு செதஞ்சி போயிடும். ஒளுங்கா சாமி வுட்ட வளில செய்யக்கூடாதா?

சரி... இப்ப என்னாத்துக்கு இதப்பத்தி பேச்சு அப்புடிங்கிறீங்களா? இதல்லாம் வகைப்படுத்தறாமாறி அந்தூர்ல சட்டம்லாம் கூட இருக்குதாம். ஒரு ஆம்பளயும் பொம்பளயும் விந்தையும், முட்டையையும் சேத்து கருத்தரிக்க வச்சி, அத பத்திரப்படுத்தி வச்சிருக்காங்க. அப்புறம் அந்த பொம்பள அத எடுத்து வவுத்துக்குள்ளாற வுடுறதுக்குள்ள அவுங்க ரெண்டு பேரும் பிரிஞ்சுடறாங்க. அப்படி பிரிஞ்சுட்டா, அந்த ஆம்பளயோட அனுமதி இல்லாம அந்தப் பொம்பள அந்த கருத்தரிச்ச முட்டைய வவுத்துக்குள்ள போட்டுக்கக் கூடாதாம். இதான் சட்டமாம். ரெண்டு பொம்பளங்க இத எதுத்து கோர்ட்டுக்கு போயிருக்காங்க. ஏன்னா, அவங்களுக்கு இதுதான் ஆயிருக்கு. அவங்க முன்னாடி எந்த ஆளுங்ககிட்ட விந்த எடுத்துக்கிட்டு கருத்தரிச்சாங்களோ, அந்த ஆளுங்க பிரிஞ்சுபோயிட்டு, ரொம்ப வன்மத்தோட என்னோட விந்து ஒனக்கு ஒபயோகமா இருக்கக்கூடாது (அட சும்மா வீணாப்போற இதுக்கா இந்தக் கொடும?) அப்புடின்னு சொல்லிப்புட்டாங்களாம். கோர்ட்டு இப்ப இருக்கற சட்டப்படி ஆம்பளங்க உரிமயில்லாம பொம்பளங்க ஒன்னும் செய்ய முடியாது, சட்டத்த மாத்தற உரிம கோர்ட்டுக்குக் கெடயாது, அத பாராளுமன்றந்தான் செய்யணும் அப்புடின்னுப்புட்டாங்க.

2. பள்ளிக்கூடம் போகாம எம்புட்டுதபா நாமல்லாம் வூட்டுல கலியாணம், கருமாதி, திருவிழா அப்புடின்னு ஊரு சுத்தியிருக்கோம்? இப்ப பிரிட்டன்ல அரசாங்கம் இந்தாமாறி அப்பா, அம்மாவோட பசங்க ஸ்கூல் நடக்கற சமயம் கடை கண்ணிக்கு போயிட்டு சுத்திக்கிட்டிருந்தாங்கன்னா, இல்ல வீட்டோ ட இருந்தாங்கன்னா ஒடனே போலீஸ் மூலமா அந்த பெற்றோருங்களுக்கு 100 பவுண்டு ஃபைன் போடச் சொல்லியிருக்காங்கலாம்! அதாவது பள்ளிக்கூடத்துல சொல்லி பெர்மிஷன் வாங்காதவுங்களுக்குதான் இந்த ஃபைன். இருந்தாலும் பைத்தாரத்தனமாதான் இருக்கு.

வாழ்க பிரிட்டன் அரசு. நம்மூர்ல அரசாங்கத்துல இருக்கற கேனப்பசங்கள வுட அந்தூர்லயும் இன்னும் அதிகமா இருக்கானுவன்னு இதுலேர்ந்து தெரிஞ்சுக்கலாம்.

No comments:

Post a Comment