Tuesday, October 28, 2003

குருமூர்த்தியின் 'கிராமப் பஞ்சாயத்து' பற்றிய கருத்து சரி�

குருமூர்த்தியின் கருத்துகளில் ஒருசிலதான் ஏற்புடையதாக உள்ளது.

1. எல்லாப் கிராமப் பஞ்சாயத்தும் வலயப்பட்டி போல தவறாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று எப்படி நீதிபதி முடிவு செய்ய முடியும் என்று கேட்பது சரியான கேள்வியே. ஆனால் என்னுடைய கேள்வி இந்த கிராமப் பஞ்சாயத்துகள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்பதே? இதில் ஏதேனும் இடம் பெண்களுக்கு உண்டா? எந்த சாதி அடிப்படையில் இந்த பஞ்சாயத்துக்காரர்கள் உள்ளனர்? இது வழிவழியாக தந்தைக்குப் பின் மகன் என்று வருகிறதா? இதில் ஒரு பொறுக்கு உறுப்பினராக இருக்கிறான் என்றால் அவனை மாற்ற என்ன வழி உள்ளது?

கோர்ட்டுக்குப் போய் கஷ்டப்பட்டாலும் நமக்கு சரியான தீர்ப்பு கிடைக்காவிட்டால் மேற்கொண்டு போராட வழி உள்ளதே? இந்தப் பஞ்சாயத்து கொடுக்கும் தீர்ப்பு நமக்கு பாதகமானதாக இருக்கும் பட்சத்தில் தீர்ப்பை பத்து பேர் கையில் கம்புகளுடனும், வீச்சரிவாளுடனும் அல்லவா நிறைவேற்றக் காத்திருக்கிறார்கள்?

2. Conciliatory approach பற்றி பேசும் குருமூர்த்தி தன்னுடைய அனுபவங்களைப் பற்றி சொல்கிறார். இரு தரப்பும் இவரை ஏற்ற பின்னர்தான் இவரால் சரியான தீர்ப்பை (இருவருக்கும் ஒத்து வரக்கூடிய தீர்ப்பை) வழங்க முடிந்தது. மக்களுக்கு இந்த கிராம பஞ்சாயத்தின் மேல் எந்த வகை நம்பிக்கை இருக்கிறது? என்னை இந்தப் பஞ்சாயத்தில் நிறுத்தும் போது எனக்கு இந்தப் பஞ்சாயத்தில் நம்பிக்கை இல்லை என்று நான் சொன்னால் இவர்கள் கேட்பார்களா? அடி, உதை எனக்குத்தானே விழும்?

3. கடவுள் முன் பொய் சொல்வானா ஒருவன்? கோர்ட்டில் தைரியமாக சொல்கிறானே என்கிறார். இன்னுமா கிராமங்களில் மக்கள் கடவுள் நம்பிக்கை காரணமாக மட்டுமே உண்மை சொல்லி வாழ்ந்து வருகிறார்கள்? அப்படியானால் கிராமங்கள் எல்லாம் ஒழுக்கத்தின் உச்ச கட்டமாக இருக்க வேண்டுமே? பொய், திருட்டு, அடுத்தவன் குடியைக் கெடுப்பது என்பது எங்கும் பரவு உள்ளதல்லவா? (நகரங்களில் அதிகமாகவே காணப்படுகிறது.) கடவுள் பற்றி கவலைப்படாது அடுத்தவனை வெட்டுபவன் பொய் சொல்ல மட்டுமா அம்மன் மீது பயப்படுவான்?

4. நீதிபதி கற்பகவிநாயகம் அரசுக்கு அவசரச் சட்டம் இயற்றச் சொன்னது அதிகமானது, தேவையற்றது என்று நினைக்கிறேன். நீது வழங்குவதோடு இருந்திருக்கலாம் அவர். சும்மா "உங்களை தமிழ்நாட்டை விட்டே ஒழித்து விடுவோம்", "ஒரு வருடம் ஜெயிலில் போடுவோம்" என்று தாதாக்கள் மாதிரி சொல்லியிருக்க வேண்டியதில்லை. குருமூர்த்தி சொல்வது போல கிராமப் பஞ்சாயத்துகள் "social capital". அவைகளை ஒழிக்க வேண்டியதில்லை. ஆனால் இந்தப் பஞ்சாயத்துகள் அனைத்து மக்களுக்கும் உகந்தவாறு இருக்க வேண்டுமே என்ற கவலைதான். பெண்களுக்கு இந்தப் பஞ்சாயத்தில் எப்போது இடம் கிடைக்கும்? எல்லா சாதியினருக்கும் ஒழுங்கான தீர்ப்பு கிடைக்குமா?

அப்படி ஒருவருக்கு சரியான தீர்ப்பு கிடைக்கவில்லை என்றால் ஊர்க்கட்டுப்பாடு என்று சொல்லாமல் அவர் நீதிமன்றங்களை அணுகுவதற்கு எந்த இடர்ப்பாடும் இருக்கக் கூடாது.

5. தமிழக அரசு நிச்சயமாக இந்த கிராமப் பஞ்சாயத்துகளை ஒழுங்கு படுத்த ஒரு சட்டம் இயற்ற வேண்டும். அது அவசரச் சட்டமாக இருக்கக் கூடாது (ordinance), ஆனால் ஒழுங்காக சபையைக் கூட்டி விவாதித்து இயற்றப்பட்ட சட்டமாக இருக்க வேண்டும்.

அவசரச் சட்டம் இயற்றுவதை மிக அவசரமான, முக்கியமான, தலைபோகிற காரியங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். சட்ட மன்றங்கள் எதற்காக இருக்கின்றன?

No comments:

Post a Comment