Tuesday, October 14, 2003

மணிசங்கர் அய்யர் மீது தாக்குதல்

நான் வளர்ந்த நாகையில், ஒரு பொதுக்கூட்டத்தில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் மணிசங்கர் அய்யரும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவும் வாய்ச்சண்டை போட்டு, அதன் பின் மணிசங்கரை ரௌடிகள் தாக்கியுள்ளனர்.

மணிசங்கர் ஒன்றும் உத்தமர் இல்லை. இருந்தும் ஜனநாயகம் இப்படி நசிந்து விடக் கூடாது. மணிசங்கர் ஜெயலலிதா குருவாயூர்க் கோவிலுக்கு யானையை தானம் செய்ததைப் பற்றி கேலி பேசி, தான் அதே கோவிலுக்கு ஜெயலலிதாவை தானமாகத் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதை மனதில் வைத்துக் கொண்டு (யானைகளுக்கு ஞாபக சக்தி அதிகம் என்பார்கள்) ஜெயலலிதா இந்தக் கூட்டத்தில் மணிசங்கரை வாயால் தாக்கியுள்ளார் (தைரியமிருந்தால் இந்தக் கூட்டத்தில், என் முன்னால் அதைச் சொல்லுங்களேன்...). காவிரி நீர் பிரச்சினை பற்றிப் பேசும்போது மணிசங்கர் முதலமைச்சரைக் குறை கூற, பதிலுக்கு ஜெயலலிதாவும் பிரச்சினை எல்லாம் மணிசங்கர் சோனியாவிடம் பேசி, சோனியா SM கிருஷ்ணாவிடம் பேசினால் சரியாகி விடும் என்று பதில் கொடுத்துள்ளார். கோபித்துக் கொண்டு மணிசங்கர் மேடையை விட்டு இறங்கிப் போய்விட்டாராம். அப்பொழுதே அவரைத் தாக்க ஒருசில அஇஅதிமுக பிரமுகர்கள் முயன்றதாகவும், அம்மாவின் கண்ணசைவால் அந்த முயற்சியை அப்பொழுது கைவிட்டதாகவும் செய்தி. ஆனால் சில மணி நேரத்துக்குள் காரை மறித்து, மணிசங்கரை அடித்து விட்டனர்.

கண்டிக்கப்பட வேண்டிய தாக்குதல் இது.

No comments:

Post a Comment