Tuesday, October 21, 2003

கவிதாசரணில் வந்த பாரதிவசந்தன் கவிதை

கீழ்க்கண்ட கவிதை கவிதாசரண் செப்-அக் 2003 இதழில் வந்துள்ளது.

சாதித் தமிழ்

நமக்கு சாதி கெடையாது
நாமெல்லாம் தமிழ்ச் சாதின்னு
சொன்னவங்க மத்தியில்தான்
முப்பது வருஷமா
கவிதை எழுதிகிட்டு இருக்கிறேன்

ஒரு பயலும் மூச்சு விடல

கேட்டா
புதுக்கவிதைதான எழுதற
அதில என்ன இருக்குன்னு
புழுத்தியாட்டம் கேட்கறானுங்க

சரிதான்
வேற மாதிரி எழுதிப் பார்ப்பம்னு
இலக்கணம் தவறாம
மண்டைய உடைச்சிகிட்டு
மரபுக் கவிதை எழுதினா
அப்பவும்
ஒரு பயலும் என்ன
ஒப்புக்கிடல

கேட்டா
என்னா புதுசா
எழுதிக் கிழிச்சிட்டேன்னு
பொறுக்கியாட்டம் பேசறானுங்க

எனக்குத் தெரியும்
இதுவே நான்
பூணூல் சாதிக் கவிஞனாயிருந்தா
எழுதறதெல்லாம் இலக்கியம்னு
சொல்லியிருப்பானுங்க
சூத்திர சாதிக் கவிஞனாயிருந்தா
சும்மாவாச்சும் தூக்கியிருப்பானுங்க

என்ன செய்யறது
நான் ரெண்டு சாதியிலயும் சேராத
தாழ்ந்த சாதி தமிழ்க் கவிஞன்

தெரியாமத்தான் கேட்கறேன்
அவனவன் சாதித் தமிழ்தான்
அவனவனையும் உயர்த்துது
இதுல தாழ்ந்த சாதித் தமிழ்க் கவிஞன
எந்தத் தமிழ் உயர்த்துது?
எதனால் இந்த சுய பச்சாதாபம்? யார் மீது இந்தக் கவிஞருக்குக் கோபம் என்று புரியவில்லை.

No comments:

Post a Comment