Saturday, November 29, 2003

சட்டமன்ற உரிமை மீறல் பற்றி சோ - 1

சோ, துக்ளக் 26/11/2003 இதழ் முதல் சட்டமன்ற உரிமை மீறல் பற்றி ஒரு தொடர் எழுதுகிறார். கிட்டத்தட்ட இதே விஷயத்தை VR கிருஷ்ண அய்யர் 'தி ஹிந்து'வில் எழுதியுள்ளார். சோவின் கட்டுரை இன்னமும் எளிதாக, அழகாகப் புரியுமாறு செல்கிறது.

* நம் நாட்டின் அரசியல் நிர்ணயச் சட்டம் (constitution) உருவாக்கப்படும்போது பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் உரிமைகளை விரிவாக வரையறுக்க நேரமில்லாத காரணத்தால் அரசியல் சட்டம் அமலுக்கு வந்த தேதியன்று (26 ஜனவரி 1950 - குடியரசு தினம்) இங்கிலாந்துப் பாராளுமன்றத்துக்கு என்ன உரிமைகள் உள்ளதோ அதே உரிமைகள் இந்தியப் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கும் உண்டு என்று நிர்ணயித்தனர்.

* நெருக்கடி நிலைமை சமயத்தில் 1976இல் பாராளுமன்றமும், சட்டமன்றங்களும் தங்களுக்குத் தேவையான உரிமைகளித் தாங்களே உருவாக்கிக் கொள்ள முடியும் என்று அரசியல் நிர்ணயச் சட்டத்தில் ஒரு சட்டதிருத்தத்தைக் கொண்டுவர முயற்சி நடந்தது. ஆனால் இந்த செருகல் நடைபெறும் முன்னர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது.

* ஆகப் பாராளுமன்றமோ, சட்டமன்றங்களோ தங்களுக்கான உரிமைகளை மூன்று இடங்களிலிருந்து பெறுகின்றன: (1) அரசியல் நிர்ணயச் சட்டத்தில் வெளிப்படையாகச் சொல்லப்பட்டிருப்பது, (2) ஏற்கனவே சட்டமாக பாராளுமன்றங்களில் அல்லது சட்டமன்றங்களில் இயற்றப்பட்டுள்ளவை, (3) 26 ஜனவர் 1950 அன்று இங்கிலாந்துப் பாராளுமன்றத்துக்கு என்ன உரிமைகள் உள்ளனவோ அவை (அதற்கு முந்தைய தேதிகள் அல்லது பிந்தைய தேதிகளில் ஏதேனும் புது உரிமைகள் வந்தால் அவை கிடையாது)

* இதுவரை இந்தியப் பாராளுமன்றமோ, சட்டமன்றங்களோ தங்களுக்கென உரிமைகள் இவையென சட்டங்கள் ஏதும் இயற்றவில்லை. ஆக இதுவரை மேற்குறிப்பிட்டுள்ளவற்றுள் (1) மற்றும் (3) மூலம்தான் அவர்களுக்கான உரிமைகள் கிடைக்கின்றன.

* உரிமை மீறல் எனப்படும்போது குழப்பங்கள் யாவுமே (3) இலிருந்து வருவதுதான். ஒரே மாதிரியான செய்கைகளை பாராளுமன்ற அமர்வுகளும், சட்டமன்றங்களும் வெவ்வேறு விதமாக அணுகுவதால் பொது மக்களுக்கு எப்பொழுது யார் சட்ட/பாராளுமன்றங்களின் உரிமைகளை மீறுகிறோம் என்று தெரியாமல் போகிறது. உதாரணமாக இப்பொழுது இராணுவ அமைச்சராக உள்ள ஜார்ஜ் பெர்னாண்டஸ் 'ப்ரதிபக்ஷா' என்னும் பத்திரிக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பற்றி 'தரகர்கள், கேடிகள், ஃபோர்ஜரி செய்பவர்கள், விபச்சார விடுதி நடத்துபவர்கள்' என்று எழுதினாராம். இதுபற்றி உரிமை மீறல் பிரச்சினை கொண்டுவரப்பட்டு இது நடவடிக்கைக்குரிய விஷயம் அல்ல என்று தீர்மானிக்கப்பட்டதாம். அப்படியானால் அந்த அளவிற்கெல்லாம் இல்லாது வெறுமனே 'stinging abuse' என்னும் வார்த்தை எப்படி உரிமை மீறல் ஆகும் என்ற கேள்வி எழுவது நியாயம்தான்!

* ஆக எது உரிமை மீறல் என்று தெளிவுபடுத்தப்படாத ஒரு விஷயத்தைக் கொண்டு ஒரு குடிமகனைத் தண்டிப்பது நியாயமில்லாதது.

No comments:

Post a Comment