Monday, November 10, 2003

பத்திரிக்கையாளர்களைக் கைது செய்ய தற்காலிகத் தடை

எதிர்பார்த்தது போல தமிழ்நாடு பத்திரிக்கையாளர்களைக் கைது செய்வதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது உச்ச நீதிமன்றம்.

இந்தப் பிரச்சினையின் அடுத்த கட்டம்: சட்டமன்றங்களின் "உரிமை" என்ன? அவர்கள் நினைத்தால் உரிமை மீறல் என்ற பெயரில் யார் மீது வேண்டுமானாலும் தண்டனை விதிக்கலாமா? Checks & balances என்று ஏதாவது ஒன்று வேண்டாமா என்பதைப் பற்றியெல்லாம் கேள்விகள் வரும். இதற்கு உச்ச நீதிமன்றம் பதில் தர வேண்டியிருக்கும். அந்த அளவுக்கு காளிமுத்துவுக்கும், ஜெயலலிதாவுக்கும் நன்றி கூறுவோம்.

இங்கு முக்கியமாக நினைவு கூற வேண்டியது அதிமுக/திமுக வின் நிலைப்பாடுகளைப் பற்றியல்ல. ஒரு சட்டமன்றத்தின் செய்கையைப் பற்றி. அது எந்தக் கட்சியின் பெரும்பான்மையில் இருந்தாலும் சரி.

என் பயமெல்லாம் ஒரு தலைவர், அவரின் வாய்ச்சொல்லுக்கு பயந்து சட்டமன்றத்தை நடத்தும் ஒரு அவைத்தலைவர், பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டும் அந்தக் கட்சியின் அவை உறுப்பினர்கள், எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்த்தாலும் பிரயோசனமில்லாத பெரும்பான்மை வலு ஆகியவை பற்றியே.

பத்திரிக்கையாளர்கள் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதனை ஒரு கமிட்டி ஆராய்ந்து பத்திரிக்கையாளர்கள் செய்தது தவறு என்றது. உடனடியாக தண்டனை வாசிக்கப்பட்டு, ஆளுங்கட்சியினர் கையைத் தூக்கி தண்டனை உடனடியாக அமலுக்கும் வந்தது.

பதில் சொல்லப் பத்திரிக்கையாளர்களுக்கு உரிமை கொடுக்கப்படவில்லை.

இதுதான் பயங்கரம்.

மேல்முறையீடுக்கு சரியான வழி இருப்பதாகத் தெரியவில்லை. (இப்பொழுது உச்ச நீதிமன்றம் வந்துள்ளது, இனிப் போகப்போகத்தான் நிலை விளங்கும்.)

முதலில் சட்டமன்றங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த உரிமை மீறல் தொடர்பான மற்றும் அதேபோல் நீதிமன்றங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் 'நீதிமன்ற அவதூறு' (contempt of court) சம்பந்தமான உரிமைகள் நீக்கப்பட வேண்டும். இவை அரசியலமைப்புச் சட்டம் மூலம் இந்தியக் குடிமக்களுக்குக் கொடுக்கப்பட்ட சுதந்திரத்தைப் பறிப்பதுபோல் உள்ளது.

முந்தையது
தி ஹிந்துவின் முழு கவரேஜ்

No comments:

Post a Comment