Wednesday, November 05, 2003

சட்டமன்றத்தில் வெளிநடப்பு

இது இப்பொழுதெல்லாம் வழக்கமாகிப் போன ஒன்று. சும்மா சட்டமன்றம் செல்வது, நான்கு கேள்வி கேட்க வேண்டியது, கூச்சல் போட்டுவிட்டு வெளிநடப்பு செய்வது. வெளியேறி விட்டால் என்ன சாதித்து விட்டதாக எண்ணம்? உள்ளே இருக்கும் ஆளுங்கட்சியினர் வேண்டிய மசோதாக்களை நிறைவேற்றிவிட்டு, வீட்டுக்குப் போய் டீ குடித்து, சீரியல் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்.

உள்ளே இருந்து கேள்விகளைக் கேட்டு மந்திரிகளைக் குடைவதை விட்டுவிட்டு என்ன பெரிய வேலை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு? இந்த வாரம்தான் சட்டமன்றம் ஆரம்பித்தது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் பற்றிய விவகாரத்தில் சத்தம் போட்டுவிட்டு திமுக, பாமக வெளியேறி விட்டனர்.

முக்கிய எதிர்க்கட்சியின் தலைவர் மு.கருணாநிதி வெறும் கையெழுத்தை மட்டுமே போட்டுவிட்டு ஒரு நாள் கூட சட்டமன்றம் உள்ளே போகாமல் வீட்டில் உட்கார்ந்து கொண்டு இலக்கியம் படைத்துக் கொண்டிருக்கிறார். இதற்குப் பேசாமல் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விடலாமே?

No comments:

Post a Comment