Friday, November 14, 2003

தி ஹிந்து கருத்துப் பக்கம்

இன்னும் மூன்று வாரங்களுக்கு பத்திரிக்கைக்காரர்களின் கைது பற்றி பிறரது கருத்துகள் தவிர அதிகாரபூர்வமாக ஒன்றும் நடக்காது. மூன்று வாரங்களுக்குப் பிறகுதான் உச்ச நீதிமன்றம் வழக்கை விசாரிக்கப் போகிறது. ஆனால் அதுவரையில் அரசியல்வாதிகள் கூச்சலிட, மற்ற அறிஞர்கள் (intellectuals) சட்டமன்றத்தின் அதிகாரங்கள் வரம்புக்குள் இருக்குமாறு தீர்மானிக்கப்பட வேண்டும் என்று பேசத் தொடங்கி விட்டனர். இதில் வியப்பு என்னவென்றால், 'இல்லை, சட்டமன்றத்துக்கு வானளாவிய அதிகாரம் இருக்க வேண்டும்' என்று எதிர்க்குரலிட யாருமே இல்லை. அப்படியும் இதுநாள் வரையில் எப்படி சட்டமன்றங்களின் - முக்கியமாக தமிழக சட்டமன்றத்தின் - நடவடிக்கைகளைப் பொறுத்துக் கொண்டிருந்தார்களோ... நாளை இப்பொழுது எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக ஒரு சட்டத்தை இயற்றி எந்த வகையில் 'சட்டமன்ற உரிமை மீறல்' பற்றிய நடவடிக்கைகள் இருக்கும் என்று செய்வார்களா?

இன்று தி ஹிந்துவில் வந்திருக்கும் இரு கட்டுரைகள் மிகவும் ஆழமானவை, அழகானவை. படிக்க வேண்டியவை.
1. Privilege unlimited, ராஜீவ் தவான்
2. Need for reformulating the law, T.R. அந்த்யார்ஜுனா

ராஜீவ் தவான் கட்டுரையிலிருந்து அழகானதொரு மேற்கோள்: "தங்களை ஆட்சி செய்யும் சட்டமன்றங்களை, இந்தியர்கள் மற்றும் இந்திய செய்திப்பத்திரிக்கைகள் விமரிசனம் செய்யாது, வேறு யார்தான் செய்ய முடியும்?" ஆக இந்தியர்களுக்கு இந்த உரிமை 'சட்டமன்ற உரிமை மீறல்' என்றவகையில் மறுக்கப்படும்போது எப்படி அதனை நாம் பொறுத்துக் கொள்வது?

வரம்பு மீறியே ஒருவர் சட்டமன்றத்தை, அதன் அவைத்தலைவரை, உறுப்பினர்களை, அமைச்சர்களை (முதலமைச்சர் சேர்த்து) விமரிசித்தாலும், தகாத வார்த்தைகளால் திட்டினாலும், உள்நோக்கோடு அவையின் கௌரவத்தைக் குறைக்குமாறு தாக்கினாலும், அதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் மூலம் தண்டனை தருவது சிறிது கூட ஒத்துக் கொள்ள முடியாதது. இப்படிச் செய்பவர் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் கூட, அவை நடவடிக்கையைத் தடுக்காது, வாயால், எழுத்தால் அவர் இதனைச் செய்தால், அவரைத் தண்டிக்கும் அதிகாரம் கூட சட்டமன்றத்துக்கு இருக்கக் கூடாது. வேண்டுமானால் அவரை சட்டமன்றத்திற்குள் வரவிடாது தண்டனை அளிக்கலாம், ஆனால் அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க சட்டமன்றத்துக்கு அதிகாரம் இருக்கவே கூடாது.

நீதிமன்றங்களுக்கு மட்டுமே அதற்கான உரிமைகள் இருக்க வேண்டும். இந்தியக் குடியுரிமைச் சட்டம் இதற்கான வழிமுறைகளைக் கொடுக்கவில்லையாயின், அவைகளைக் குடியுரிமைச் சட்டத் திருத்தம் (constitutional amendment) மூலம் கொண்டுவர வேண்டும்.

முந்தையது
தி ஹிந்துவின் முழு கவரேஜ்

No comments:

Post a Comment