Saturday, November 22, 2003

குருமூர்த்தி - தாவூத் இப்ராஹிம் பற்றி

குருமூர்த்தியின் 'அகப்படுவாரா நம் நாட்டு பின்லேடன்' பற்றிய கருத்துகள்
துக்ளக் 19 நவம்பர் 2003 தேதியிட்ட இதழ், "தண்ணீர் விட்டோ வளர்த்தோம்" கட்டுரைத் தொடரின் 59ஆவது பகுதியிலிருந்து

தாவூத் இப்ராஹிம், பின் லேடன் போன்ற ஒரு தீவிரவாதி என்கிறார். இந்தக் கட்டுரையில் அதிகம் விஷயம் ஒன்றுமில்லை. தாவூத் இந்தியாவின் எதிரி மட்டுமல்ல, அமெரிக்காவின் எதிரி என்று சொல்லி 'உலகக் காவலர்' அமெரிக்காவின் துணை கொண்டு தாவூதை எப்படியாவது பிடித்துவிட முடியும் என்று நினைக்கிறார் குருமூர்த்தி. அமெரிக்காவே இப்பொழுது தாவூதைத் தீவிரவாதிகளின் ஆதரவாளர் என்று அறிவித்து விட்டது. "அமெரிக்காவை எதிர்த்து தாவூத் தப்பிக்க முடியுமா என்பது சந்தேகம்" என்கிறார் குருமூர்த்தி.

ஆனால் உலகக் காவலர் அமெரிக்காவினால் இன்னமும் பின் லேடனையும் பிடிக்க முடியவில்லை, சதாம் ஹுசேனையும் பிடிக்க முடியவில்லை. அமெரிக்காவிற்கு தாவூத் சிறு மீன்தான் இப்பொழுது.

ஆனால் குருமூர்த்தியின் இந்த வரிகள் எனக்குக் கவலையை அளிக்கிறது. "அமெரிக்காவோ, இந்தியாவோ, இஸ்ரேலோ, சோட்டா ராஜனோ தாவூதை தீர்த்துக் கட்ட வாய்ப்பு இருக்கிறது. ஆக, நம் நாட்டு பின் லேடன் அகப்படுவாரா? அல்லது தீர்த்துக் கட்டப்படுவாரா? என்பது கூடிய விரைவிலேயே தெரிந்துவிடும்." என்னும் வரிகளே இவை. ஜனநாயக நாடுகள் இந்த "தீர்த்துக் கட்டுதலை" ஒரு யுக்தியாக வைத்துக் கொண்டு செயல்படுவது அசிங்கமானது. அதிலும் சொந்தக் காரணங்களுக்காக நடக்கும் சோட்டா ராஜன் - தாவூத் இப்ராஹிம் போன்றவர்களின் பகையையும், தாவூத் இப்ராஹிம் மீது இந்திய அரசின் நிலைமையையும் ஒன்றாக்கிக் கூறுவது இந்திய அரசினை அவமதிப்பது போன்றது. அதிலும் தாவூதைக் கைப்பற்ற முடியாத நம் கையாலாகாத்தனத்தை இப்படி இஸ்ரேல், அமெரிக்கா துணை கொண்டு சரிக்கட்டுவது இன்னமும் கேவலம். நாளை வீரப்பனைப் பிடிக்க இஸ்ரேல், அமெரிக்கா துணையையா நாம் நாடப்போகிறோம்?

முந்தையது: பெட்ரோல் - அது ஒரு பெரிய ஆயுதம் 1 | 2

No comments:

Post a Comment