Sunday, December 21, 2003

தலித் கிறித்துவர்கள் தனி ஒதுக்கீடு

நேற்று, மத்திய அமைச்சர் சத்யநாராயண் ஜாதீயா, தலைமைப் பதிவாளரது கூற்றுகள் சிலவற்றை முன்னிறுத்தி தலித் கிறித்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டியதில்லை என்று சொன்னதைப் பற்றி பதித்திருந்தேன். அப்பொழுது கிறித்துவ, முஸ்லிம் தலைவர்கள் இதனை எதிர்க்க வேண்டும் என்றும் (பெரும்பான்மையினரும் கூட இதனை எதிர்க்க வேண்டும்) சொல்லியிருந்தேன்.

அனைத்திந்தியக் கிறித்துவ மக்கள் மன்றச் செயலர் பிரிந்தாவன் மோசே நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தலித் கிறித்துவர்களுக்கு அட்டவணைப் பிரிவில் இந்து, சீக்கிய, புத்த தலித்துகளைப் போலவே இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். நான் நேற்று சொன்னது போலவே, கிறித்துவர்களுக்குடையில் ஏற்கனவேயே சாதிகள் ஆழமாகப் பதிந்துள்ளன, 60%க்கும் மேற்பட்ட கிறித்துவர்கள் தீண்டாமை போன்றவற்றை எதிர்த்து மதம் மாறிய தலித்துக்களே என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அமைச்சர், தலைமைப் பதிவாளரது கூற்றை முன்வைத்து பாராளுமன்றத்தையும், இந்திய மக்களையும், பன்னாட்டு மக்களையும் தவறான வழியில் திசை திருப்பப் பார்க்கிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

மீண்டும் நாம் வலியுறுத்த வேண்டியது - சாதிப்பிரிவினைகளைக் களைவது சுலபமல்ல. அது பல்லாயிரக் கணக்கான வருடங்கள் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் தீண்டாமை, மேல்-கீழ் சாதி வேறுபாடுகளைக் களையலாம். முதலாவது இந்து மதத்திற்குள் மட்டுமே இருப்பது. இரண்டாவது மதங்களைக் கடந்து இருப்பது. உயர்வு தாழ்வுகளைக் களைந்தவுடன், தானாகவே சாதிகள் கலக்கும். பெருநகர்ப் பகுதிகளில் இது ஏற்கனவே நடக்க ஆரம்பித்து விட்டது.

No comments:

Post a Comment