Tuesday, December 23, 2003

மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம்

போனவாரம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது குறித்து ஒரு சட்டத்தை முன்வைக்க பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் முடிவெடுத்துள்ளார் என்ற செய்தி வந்திருந்தது. இதனை நான் கடுமையாக எதிர்த்து இதைப்பற்றி அப்பொழுதே என் வலைப்பதிவில் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் நேற்று வெறுமனே இந்த சட்டத்தின் வரைவை மட்டும் முன்வைத்து விவாதத்தை அமைச்சர் துவக்க நினைக்க, பாஜக எம்பிக்கள் இந்த சட்டத்தை உடனடியாக விவாதித்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று சொல்லி, எதிர்ப்பு ஏதும் இல்லாமல் இந்த சட்டத்தை நிறைவேற்றியுள்ளனர்.

இதைவிடக் கொடுமை ஏதும் இருக்க முடியாது.

நிறைவேறாமல், விவாதம் கூட நடக்காமல் எத்தனையோ சட்ட வரைவுகள் தேங்கிக் கிடக்கின்றன. தங்களுக்கு ஆதாயம் என்பதால் சிறிதும் யோசிக்காமல் ஒரு சட்டத்தை முன்மொழிந்து அதனை அப்படியே ஏற்றுக் கொள்ளும் கேவலமான நிலையில் இருக்கிறார்கள் நம் பிரதிநிதிகள். பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்டு) சோம்நாத் சாட்டர்ஜீ மட்டும்தான் இந்த சட்டம் பற்றி கவலை தெரிவித்தவர்!

வெறும் பத்து நிமிடங்கள்தான் இந்த சட்டத்தை ஏற்றுக் கொள்ள எடுத்துள்ளது.

என் கருத்து:

1. பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் தருவதை நான் கடுமையாக எதிர்க்கிறேன். அவர்கள் இந்த மன்றங்களின் உறுப்பினர்களாக இருக்கும்போது கொடுக்கும் ஊதியத்தை அதிகமாக்குவதில் எனக்கு சிறிதும் வருத்தமில்லை, எதிர்ப்புமில்லை. இப்பொழுது இருக்கும் ஊதியத்தை இரட்டிப்பு வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும். ஆனால் ஓய்வூதியம் தவறான கொள்கை. ஓய்வூதியம் என்பது பல வருடங்கள் விடாது உழைத்த ஒரு ஊழியருக்கு அவர் வேலை செய்த நிறுவனம் வழங்குவது. அப்படிப்பட்ட ஒரு நிறுவனம் எத்தனை ஊழியர்கள் வேலையிலிருந்து ஓய்வு எடுத்த பின்னர், உயிருடன் இருப்பார்கள், எத்தனை காலம் உயிருடன் இருப்பார்கள் என்றெல்லாம் தீர்மானிக்க முடியும், அதற்கு ஏற்ப திட்டமிட முடியும். ஆனால் பாராளுமன்றத்தில் ஒருமுறை உறுப்பினராக இருப்பவருக்குக் கூட ஓய்வூதியம் என்று ஆரம்பித்தால், அடுத்து சட்டமன்றங்களும் இந்தச் செயலைத் தொடரும். இதனால் எத்தனை பணம் செலவாகும் என்று யாராலும் திட்டமிட முடியாது.

2. மேலும் எந்தவொரு தனியார் நிறுவனத்திலும் 20-30 வருடத்துக்கு மேல் உழைத்தவர்களுக்கும் இந்தியாவில் ஓய்வூதியம் தருவதில்லை. பல மாநில அரசுகளுக்கு உள்ள பெரிய பிரச்சினையே ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில்தான். ஒரு காலகட்டத்தில் இப்படிப்பட்ட ஓய்வூதியத்தின் அளவு மிக அதிகமாக நேரிடும். மக்களின் 'life expectancy' அதிகமாகிக் கொண்டே வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் நடந்த தமிழக அரசு ஊழியர் போராட்டமே இந்த ஓய்வூதியத்தில் தமிழக அரசு கைவைத்ததால்தான். ஏன் தமிழக அரசு அந்த நிலைக்கு வந்தது? சில வருடங்களில் பல மாநில அரசுகள் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை ஒட்டுமொத்தமாக ரத்து செய்யலாம். அப்படி இருக்கையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் தங்களுக்கென ஓய்வூதியம் வழங்கிக் கொள்வது ஒழுக்கக் கேடல்லவா?

3. வேண்டுமென்றே ஒரு கட்சி யாரையாவது பாராளுமன்றத்துக்கு அனுப்பி, அவரும் ஒரு மாதம் உறுப்பினராக இருந்து விட்டு, பின்னர் தன் பதவியை ராஜினாமா செய்து, மீண்டும் தேர்தல், மீண்டும் ஒருவர் அந்த உறுப்பினர் பதவிக்கு, என்று ஐந்து வருட காலத்தில் ஒரு தொகுதியிலிருந்து 40-50 பேர்களை உறுப்பினர்களாக்கி, அத்தனை பேருக்கும், வாழ்நாள் முழுவதும் மாதத்திற்கு ரூ. 3000 கிடைக்குமாறு செய்யலாம். இன்று ரூ. 3000 இருக்கும் ஓய்வூதியம், நாளை ரூ. 10,000 ஆகலாம். யாரும் தடுக்க மாட்டார்கள். இப்படியே போய்க்கொண்டிருந்தால் என்னாவது?

4. இவர்களுக்குக் கொடுக்கும் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்கு இவர்கள் என்ன வேலை செய்து கிழித்தார்கள் என்பதை யாரும் கண்காணிப்பதில்லை. ஒருநாள் கூட சட்டமன்றம் போகாத கருணாநிதிக்கும், எப்பொழுது பார்த்தாலும் வெளிநடப்பு செய்யும் எம்.எல்.ஏ/எம்.பிக்களுக்கும் ஊதியத்தைக் குறைக்க வேண்டும். ஒரு கேள்வியும் கேட்காமல் பாராளுமன்றத்துக்கும், சட்டமன்றங்களுக்கும் போய் தூங்கிக் கொண்டு, கொறடா சொல்லும்போது வாக்குப் பதிவு செய்து (அதிலும் பலர் தவறாக வாக்களிக்கிறார்களாம்) வாழ்க்கை நடத்துபவர்களுக்கும், உருப்படியாக வேலை செய்பவர்களுக்கும் ஒரே சம்பளம், ஓய்வூதியம். இப்படி எந்த நிறுவனத்தில் செல்லுபடியாகிறது? ஏன் இவர்களுக்கு மட்டும் இத்தனை சலுகைகள்?

No comments:

Post a Comment