Sunday, December 21, 2003

சிதம்பரம்: தேவை இரு வலுவான கட்சிகள்

ப.சிதம்பரம் - அரசியல் தலைவலி!
கல்கி 21/12/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 9

* பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் இருக்கும் அனைத்து நாடுகளிலும் இரண்டு வலுவான கட்சிகள் உள்ளன. மூன்றாம், நான்காம் கட்சிகளுக்கு இடமிருக்கக் கூடாது என்பதில்லை, ஆனால் இரண்டு வலுவான கட்சிகள் இருக்க வேண்டும், மற்றவைகள் சிறியதாக இருத்தல் நலம் என்கிறார்.

* இந்தியாவில் அந்த இரண்டு வலுவான கட்சிகள் காங்கிரஸ், பாஜக ஆக நிகழ்ந்துள்லது என்பதை மகிழ்ச்சியுடன் குறிக்கிறார். அதே சமயம், இந்த இரண்டு கட்சிகளும் தாராளகுணத்தை (liberal என்பதற்கு தாராளகுணம் என்னும் சொல்லைக் கையாளுகிறார்) அதிகமாக்கிக் கொள்ள வேண்டுமென்கிறார். காங்கிரஸ் ஜனநாயக முறையில் கட்சித் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும், பாஜக மதம், மொழி என்னும் கூண்டுக்குள் அடைபட்டுவிடக் கூடாது என்கிறார். இப்படி அமைந்தால் இந்திய அரசுகளின் தன்மையும், தரமும், செயல்பாடும், வேகமும் பிரமிக்கத் தக்க மாற்றத்தை அடைந்துவிடும் என்பது சிதம்பரத்தின் கருத்து.

* இதைப் போலவே மாநிலத்திலும் இரண்டு பெரிய கட்சிகள் இருந்தால் போதும் என்கிறார். மூன்று முக்கிய கட்சிகள் இருப்பதுதான் தமிநாட்டுக்குப் பெரிய தலைவலி என்கிறார். (மூன்றாவது முக்கிய கட்சி என்று இவர் குறிப்பிடுவது காங்கிரஸையா? :-) உத்திரப் பிரதேசத்தில் நான்கு முக்கியக் கட்சிகள் இருப்பது இந்னமும் குழப்பத்தை விளைவிக்கிறது என்கிறார்.

* பலமுறை மேடைகளில் பேசியதை மீண்டும் இங்கு சொல்கிறார்: ஆளும் கட்சி கிரியா சக்தி, எதிர்க்கட்சி இச்சா சக்தி. ஒரு சில நாடுகளில் இருக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முக்கியக் கொள்கையாக வைத்திருக்கும் 'பச்சை கட்சிகள்', ஞான சக்தியாம்.

என் கருத்து:

1. இரண்டு வலுவான கட்சிகள் மத்தியிலும், மாநிலங்களிலும் இருப்பது வரவேற்கத் தக்கது. இதனால் அரசாளும் கட்சிக்கு ஒரு ஸ்திரத்தன்மை இருக்கும். ஆனால் தமிழகம் போன்றவிடங்களில் உருவான மாநிலக் கட்சிகள் மிகவும் முக்கியமானவை. இவைதான் ஐக்கிய இந்தியாவில் மாநிலங்களுக்குத் தன்னாட்சி அதிகாரத்தை (federal structure) அதிகமாக்கக் காரணமாயிருந்தன. இப்பொழுதும் தமிழகத்தில் கழகங்கள், ஆந்திராவில் தெலுகு தேசம், பஞ்சாபில் அகாலி தளம், அஸ்ஸாமில், பீஹாரில், மஹாராஷ்டிரத்தில் என்று பல மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகள் இல்லாவிட்டால் இந்தியா போன்ற பல்வேறு மொழிகளை உள்ளடக்கிய நாட்டில் தேசியக் கட்சிகள் பொறுப்பில்லாமல், ஹிந்தித்துவமாக செயல்படத் தொடங்கி விடும். நேற்றுகூட பிரதமர் வாஜ்பாயி ஹிந்திதான் தேச ஒருமைப்பாட்டின் சின்னம் என்று முழங்கியிருக்கிறார். ஏன் இன்னமும் இந்தியாவில் உள்ள அத்தனை பேரும் ஆங்கிலத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறார்கள், ஹிந்தியை அள்ளி வாரி அனைத்து நெஞ்சோடு சேர்த்துக் கொள்ளவில்லை என்று வருத்தப்படுகிறார். 1960களில் தமிழகத்தில் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் மாதிரி எதிர்ப்பு இப்பொழுதெல்லாம் இல்லை என்று மகிழ்கிறார்.

இந்த ஹிந்தியை முன்வைக்கும் எண்ணம் மாறினால்தான் இரண்டு தேசியக் கட்சிகளோடு நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.

இந்தியா போன்ற நாட்டுக்கு வலுவான மாநிலக் கட்சிகள் அவசியம் தேவை. அவை இருந்தால்தான் தேசியக் கட்சிகள் வாலாட்டாமல் ஒழுங்காக இருக்கும்.

2. தமிழகத்தில் உள்ள நிலைமை சற்றே குழப்பமானது. இங்கு இரண்டு வலுவான கழகங்கள் இருப்பது; காங்கிரஸ், பாஜக என்னும் இரண்டு தேசியக் கட்சிகளும் வலுவற்று இருப்பது - இவ்விரண்டுமே குழப்பத்தை அதிகரிக்கிறது. இந்தக் கட்சிகளில் ஏதேனும் ஒன்று வலுவிழந்து காணாமல் போவதும், காங்கிரஸ் போன்ற ஒரு தேசியக் கட்சி வலுவடைவதும் மிக நல்லது. ஆனால் இது நடப்பதற்கு இன்னமும் பத்து வருடங்களுக்கு மேல் பிடிக்கும். காங்கிரஸில் உள்ள உட்கட்சிப் பூசல் கொடுமையானது. அந்த நிலை மாறினால்தான் அந்தக் கட்சி வலுவடையத் தொடங்கும்.

உத்திரப் பிரதேச நிலைமையும் குழப்பம் நிறைந்ததுதான். இந்தக் குழப்பம் தீரவும் இன்னுமொரு பத்து ஆண்டுகள் பிடிக்கும் என்று தோன்றுகிறது. அங்கு வலுவான பாஜகவும், முலாயம் சிங்கின் கட்சியும், வலு மிகக் குறைந்த காங்கிரஸும் ஆக மூன்று கட்சிகள் வரும் என்று தோன்றுகிறது. முலாயம் சிங், மாயாவதி இருவரும் தங்கள் கட்சிகளை இணைப்பது நலம், ஆனால் செய்ய மாட்டார்கள்.


கல்கி 7/12/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 7

No comments:

Post a Comment