Friday, February 06, 2004

வலைப்பதிவுகளும், தற்போதைய செய்தி ஊடகங்களும்

இந்த வாரம் வலைப்பூவின் ஆசிரியராக நான் இருக்கிறேன். அதில் இன்று எழுதிய பதிவு இங்கே. அதனைக் கீழே கொடுத்துள்ளேன்.

இதுநாள் வரை நாம் எவ்வாறு செய்திகளைப் பெற்று வந்திருக்கிறோம்? இங்கு 'செய்தி' எனும்போது news, views, analysis, opinion என்று அனைத்தையும் குறிக்கிறேன். Reuters, AP, AFP, UNI, PTI போன்ற பல செய்தி சேமிக்கும் நிறுவனங்கள் உலகம் முழுதும் தங்கள் நிருபர்களை (reporters, stringers) வைத்துள்ளனர். அத்துடன் பல இடங்களில் புகைப்படக் காரர்களையும் வைத்துள்ளனர். மேற்சொன்னவற்றுள் Reuters, AFP, AP போன்றன உலகம் முழுவதும் செய்தி சேகரிக்கும் நிறுவனங்கள். UNI, PTI ஆகியவை இந்தியாவில் செய்தி சேகரிக்கும் நிறுவனங்கள். இதுபோல் ஒவ்வொரு நாட்டிலும் அந்த நாட்டிற்கான பிரத்யேகமான செய்தி நிறுவனங்கள் உள்ளன. மேற்சொன்ன செய்தி ஏஜென்சிகள், இணையத்தளங்கள் வருமுன்னர், தாங்களாகவே நேரடியாக செய்திகளை மக்களுக்கு வழங்கவில்லை. இந்த செய்தி ஏஜென்சிகளின் செய்தியோடையை பெறும் ஊடக நிறுவனங்கள் - செய்தித்தாள்கள், அச்சு இதழ்கள், தொலைக்காட்சிகள், வானொலிகள் ஆகியவை - வரும் செய்திகளை தங்களுக்கேற்ற வகையில் மாற்றி எழுதி, தங்கள் ஊடகங்களில் பயன்படுத்துவர்.

அதைத்தவிர இந்த செய்தித்தாள்களும், தொலைக்காட்சிகளும், வானொலிகளும் தங்களுடைய நேரடி நிருபர்களை சம்பவம் நடக்கும் இடத்திற்கு அனுப்பித்து செய்திகளை சேகரிப்பர்.

ஒரு செய்தி வெளியாகி வெடித்தவுடன், அதைப்பற்றிய வல்லுநர் கருத்துகள், பின்னணி விவரம், அரசியல்வாதிகள், மந்திரிகள், அரசு அதிகாரிகள், துறை வல்லுனர்கள், பொதுமக்கள் ஆகியோருடைய கூற்றுகள் ஆகியவை சேர்க்கப்பெற்று செய்தித்தாள்களில் பத்திகளை சாப்பிடத் துவங்கும். தொலைக்காட்சிகளில் பல நிமிடங்கள் இதற்கென ஒதுக்கப்படும்.

செய்தி ஊடகங்கள் ஏதாவது விஷயத்தைப் பெரிது செய்ய விரும்பினால், அதை ஊதிப் பெரிதாக்க முடியும். எதையாவது அமுத்த விரும்பினால் வெளியே தெரியாத வகையில் செய்யமுடியும்.

இணையத்தில் செய்தி ஊடகங்கள் கால்பதிக்க ஆரம்பித்தவுடன் செய்தி ஏஜென்சிகளும் தங்களுக்கென பிரத்யேக இணையத்தளங்களை ஆரம்பித்தன. இணையத்தில் மட்டுமே இருக்ககூடிய சில செய்தித்தளங்களும் வர ஆரம்பித்தன. இந்தியாவில் ரீடிஃப், சிஃபி போன்ற செய்தித்தளங்கள் தோன்றின.

மேற்சொன்ன அனைத்தும் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் மூலதனத்தில் உருவான நிறுவனங்கள். பல்லாயிரக்கணக்கான நிருபர்கள், புகைப்படக்காரர்கள், கேமராக்கள், வீடியோ தொழில்நுட்பக்காரர்கள், ஒலிப்பொறியாளர்கள், செய்தி வாசிப்பவர்கள், எழுத்தர்கள், செய்தி ஆசிரியர்கள், இணையத்தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரை வேலைக்கு வைத்திருப்பவர்கள்.

அப்படியிருப்பினும், தனிமனிதர்கள் ஒருங்கிணையாமல் ஆங்காங்கே உருவாக்கும் வலைப்பதிவுகள் பல ஒன்று சேர்ந்து மேற்சொன்ன 'organized' செய்தி சேகரிக்கும் நிறுவனங்களைப் பல இடங்களிலும் மிஞ்ச முடியும். அப்படி நடந்திருக்கிறது, நடந்து கொண்டிருக்கிறது.

இது எப்படி சாத்தியமாகிறது?

1. பல நேரங்களில் கையில் மடிக்கணினியும், இணைய இணைப்பும், டிஜிட்டல் கேமராவும், வலைப்பதிவும் வைத்திருப்பவர்கள் தாங்களாகவே நிருபர்கள் ஆகிவிடுகிறார்கள். இவர்களால் ஒரு நிகழ்ச்சி நடந்தவுடன் அதனை அனைவருக்கும் முன்னதாக வெளியுலகிற்குக் கொண்டு செல்ல முடிகிறது. உதாரணத்திற்கு ஸ்ரீரங்கத்தில் ஒரு திருமண மண்டபத்தில் தீவிபத்து ஒன்று நடைபெற்றது. அங்கு எதிர்வீட்டில் இருக்கும் ஒருவரிடம் மேற்சொன்ன உபகரணங்கள் இருந்தால் அவரால் உடனே இந்தத் தகவலை வலைப்பதிவு மூலம் தெரிவிக்க இயலும். எந்த organized செய்தி ஊடகத்தாலும் இதைவிட வேகமாக இந்தச் செய்தியை வெளியே சொல்ல முடிந்திருக்காது. முதலில் இந்தச் செய்தியை இரண்டு வரிகளில் தெரிவித்து விட்டு, நம் நண்பர் உடனடியாக தன் டிஜிட்டல் கேமராவில் ஓரிரண்டு படங்கள் பிடித்து அதனை அடுத்ததாகத் தன் வலைப்பதிவில் ஏற்றலாம். அதனை RSS செய்தியோடை மூலம் பார்க்கும் மற்ற செய்தி நிறுவனங்கள் இந்த வலைப்பதிவின் நம்பகத்தன்மையைப் பொறுத்து செய்தியைத் தாங்களும் பெற்றுக்கொண்டு தங்கள் ஊடகங்களின் வழியே பரப்புவர்.

2. செய்திகளை உடனுக்குடன் ஏற்றுவது மட்டுமல்ல. மேற்கொண்டு செய்திகளை அலசுவது. செய்தி நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் வெவ்வேறு துறையில் அதிக விஷய ஞானம் இல்லாத 'அரைகுறைகள்'தான்! இவர்கள் பொருளாதாரம், அறிவியல், குற்றவியல், கணினியியல், கணிதம், அரசியல்(!) ஆகியவற்றில் வரும் விஷயங்களை அலசி, ஆராய்ந்து அது பற்றி எழுதக்கூடிய முழு அறிவு பெற்றவர்கள் அல்ல. அதனால்தான் இவர்கள் எழுதும் பல செய்திகள் தப்பும் தவறுமாக உள்ளது. ஒரு செய்தி வெளியானவுடன், அதனை அலசக்கூடிய திறமையுள்ளவர்கள் அவ்வாறு ஆராய்ந்து தம் வலைப்பதிவில் எழுதினால், அது செய்தி ஊடகங்களில் வரும் செய்தி அலசல்களை விட அதிக உபயோகமாக இருக்கும்.

3. 'fact-check-your-ass' என்று அழகான(!) அமெரிக்க ஆங்கிலத்தில் குறிப்பிடுவதைப்போல் ஒரு செய்தி ஊடகத்தின் செய்தியை அலசி, அது உண்மையா, புருடாவா என்பதைக் கண்டு, அதை வெளியிட்டு, ஒரு தவறான செய்தியை வெளியிட்டவர்களின் மானத்தை வாங்கலாம். தி ஹிந்து ஈழத்தமிழர்கள் பற்றித் தவறான செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது என்ற ஒரு கருத்து பெரும்பாலும் நிலவிவருகிறது. அப்படியானால், உடனடியாக எங்கெல்லாம் தவறு செய்துள்ளார்கள் என்பதனை ஆதாரத்துடன் வெளியிட்டு அவர்களது தோலை உரிக்கலாம்.

4. எந்தச் செய்தி ஊடகமும் கண்டுகொள்ளாத சிற்றூர்களில் உள்ள பிரச்சினைகளை, செய்திகளை வெளிக்கொணரலாம். இந்தியாவில் உள்ள ஒவ்வொரு 'பின்கோடு'க்கும் ஒரு வலைப்பதிவாவது இருந்தால் அங்குள்ள செய்திகளை ஒன்று சேர்க்கலாம். இந்த இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றிய தகவல்களை வெளியிடலாம். இதற்கு இந்த சுற்றுப்புறங்களில் உள்ள பள்ளிக்கூடங்களையே செய்தி சேகரிக்கும், வலைப்பதியும் இடங்களாக மாற்றலாம்.

இதனாலெல்லாம் வலைப்பதிவுகள் ஒன்றுசேர்ந்து செய்தி ஊடகங்களைத் துரத்திவிடும்/ஒழித்துவிடும் என்றில்லை. ஆனால் இரண்டும் (unorganized வலைப்பதிவுகள், organized செய்தி நிறுவனங்கள்) இணைந்து ஒரு புதிய "Media Ecosystem" ஒன்றினை உருவாக்கும். ஒன்றை மற்றொன்று சார்ந்திருக்கும்.

References:
1. A New News Architecture - Rajesh Jain's blog
2. A New Architecture for News - Dan Gillmor's blog
3. The click heard 'round the world - Jeff Jarvis's blog
4. Blogosphere: the emerging Media Ecosystem - John Hiler

No comments:

Post a Comment