Monday, February 02, 2004

கோழி, ஆடு, மாடு, சாராயம்

என்னவோ காரணத்தால் இன்று கண்ணில் பல வித்தியாசமான செய்திகள் பட்டுக்கொண்டிருக்கின்றன.

முதலாவதாகக் கோழியை எடுத்துக் கொள்வோம். பறவை-சுரம் விவகாரத்தில் இன்று WHO மனிதர்களுக்கிடையிலும் இந்த வைரஸ் பரவலாம், பரவியிருக்கக்கூடும் என்று சொல்லியுள்ளது. ஆனால் தினமலரில் கடந்த இரண்டு, மூன்று தினங்களாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் பலவாறாகப் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். தினமலரும் அதைப் பெரிய செய்தியாக இரண்டாம், மூன்றாம் பக்கங்களில் போட்டுக்கொண்டிருக்கிறது. (எடுத்துக்காட்டு 1, மற்றொரு நேற்றைய பேட்டிக்கு இணையத்தில் சுட்டி கிடைக்கவில்லை.)

ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் இருவரும் தம் விமானத்தில் வழங்கும் உணவில் கோழிக்கறி சேர்க்கப்போவதில்லை என்று சொல்லியுள்ளனர்.

கோழி சுரம் பற்றிய முந்தைய பதிவு

கோழியிலிருந்து ஆட்டுக்கு

இன்று பக்ரீத். குர்பானிக்காக கறி ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது. ஆந்திராவிலிருந்து வந்து குவியும் ஆடுகளைப் பற்றி தினமலரில் படமும், கதையும் வந்துள்ளது. ஆனால் இணையத்தில் கதை கிடைக்கவில்லை. இந்த ஆடுகள் பத்தாயிரம் ரூபாய்க்கும் மேல் போகின்றனவாம்.

இதுபற்றி சிலநாட்கள் முன்னர் ஆசாத் எழுதிய ஒரு கதைக்-கட்டுரைதான் உடனடியாக ஞாபகத்துக்கு வந்தது.

அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துகள்.

ஆட்டிலிருந்து மாட்டிற்கு

மாடுகளை வெட்டுவதற்கு எதிராக ஒரு இஸ்லாமிய மத 'நிறுவனம்' ஃபாத்வா அளித்துள்ளதாம். தாருல்-உலூம் என்னும் இந்தக் குழு இன்று ஈதின் பொழுது மாடுகளைத் தவிர மற்ற எதையும் வெட்டிகொள்ளலாம் என்று மத ஆணை (ஃபாத்வா) வழங்கியுள்ளதாக 'தி ஹிந்து' செய்தி கூறுகிறது. ஜமாயத்-உலேமா-இ-ஹிந்தும் தாங்கள் ஒரு வருடத்துக்கு முன்னரேயே இப்படிப்பட்ட ஒரு முடிவை எடுத்ததாகச் சொல்கின்றனர். இந்த வெவ்வேறு இஸ்லாமிய மதக்குழுக்கள் யாவர் என்ற விவரம் எனக்குத் தெரியவில்லை.

சரியாக ஊகித்து விட்டீர்கள். பாஜக, ஆர்.எஸ்.எஸ் இதனை பலமாக வரவேற்றுள்ளனர். மத நல்லிணக்கம் ஓங்குக. அடுத்த செய்திக்குப் போவோம்.

காவல்துறையினரிடம் 'மாட்டடி' வாங்கும் சட்டத்துக்குப் புறம்பானவர்கள் ஒரு புது யுத்தியைக் கண்டுபிடித்துள்ளனராம். காவல்துறையினர் பிடியில் மாட்டுவதற்கு முன், இரண்டு 'உறை' (பாக்கெட் சாராயத்துக்கு 'தமிழ்'ச்சொல்) அடித்துவிட்டு, ஒரு கப் மாட்டுவால் சூப் போட்டுவிட்டுப் போனால் எவ்வளவுதான் அடி வாங்கினாலும் வலிக்கவே வலிக்காதாம். இறைச்சிக்காக வெட்டப்படும் எருமை மாடுகளின் (எருமைதானே? பசு இல்லையே? ஆர்.எஸ்.எஸ் கோச்சுக்காது) வால்களை சேகரித்துத் தயாரிக்கப்படும் இந்த சூப்பின் பெருமையை ஒரு காவல் அதிகாரியே இப்படிச் சொல்கிறார்: "'மாட்டு வால் சூப்' சாப்பிடும் பழக்கம் உள்ள குற்றவாளிகளை அடித்தால் அடிக்கும் போலீசார் கைதான் வலிக்கும். குற்றவாளிக்கு ஒன்றுமே ஆகாது." இது நம்பும்படியாக இல்லை. கையால் அடித்தால் சரி, கம்பால் அடித்தால்? ஆசனவாயில் மிளகாய்த்தூள் தடவிய பிரம்பை நுழைத்தால்? (உபயம்: பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக் கொன்றை). தினமலர் இணைய எடிஷனில் இந்தச் செய்தி இல்லை.

மாட்டிலிருந்து சாராயத்துக்கு

இன்றைய சாரய ஸ்பெஷல் (ஒரு பக்கம் நிரம்பக்கூடிய செய்திகளைத் தொகுத்தளித்துள்ளது தினமலர்) பகுதியில் அரசு நடத்தும் மதுக்கடைகளில் உள்ள 'அட்டாச்ட் பாரில்', அவித்த முட்டை, வெள்ளரிப் பிஞ்சு, பாக்கெட் தண்ணீருடன் அமோக விற்பனையாம். மாட்டுக் கால் சூப் + சாராயம் - நல்ல காம்பினேஷன் போலத்தான் தெரிகிறது. ஆனால் அரசு ஏன் தங்கள் சாராயக் கடைகளில் இந்தக் காம்பினேஷனைக் கொடுப்பதில்லை?

எரி சாராயம் குடித்து 18 பேர் சிலநாட்களுக்கு முன்னர் திருவள்ளூரின் இறந்து போயினர். ஏன் அரசு முன்னர் சூப்பராக ஓடிக்கொண்டிருந்த 'கடா மார்க்' சாராயத்தை மீண்டும் கொண்டுவரக் கூடாது என்று கேட்கிறது தினமலர். நல்ல யோசனை. என்னைக் கேட்டால் 'மாட்டு வால்' பிராண்ட் சாராயம் கொண்டுவரலாம் என்பேன். கடா மார்க் சாராயத்தை மாட்டுவால் சூப்போடு கலந்து அப்படியே அடிக்கும் வகையில் பாக்கெட்டில் போட்டு விற்கலாம்.

மற்ற செய்திகளில் கர்நாடக அரசின் சாராய பாக்கெட்டுகளை தமிழ்நாட்டிற்குக் கடத்தி வந்தவர்கள் கைதாம். யோவ்!, நாங்க கேக்குறது இந்தத் தண்ணிய இல்ல, அந்தத் தண்ணிய, காவேரித் தண்ணிய.

No comments:

Post a Comment