Sunday, February 22, 2004

கிடா வெட்டல் தடை நீக்கம்

தேர்தல் வருமென்றால் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று ஆளும் கட்சிகள் உறுதியோடு இருக்கின்றன.

தமிழக முதல்வர் ஜெயலலிதா முந்தாநாள் (20 பெப்ரவரி 2003) அன்று மற்றுமொரு அவசரச் சட்டத்தை இயற்றி ஏற்கனவே தடைசெய்திருந்த கிடாவெட்டலை (பொதுவாக: விலங்கு/பறவைகளை கோயில்களில் பலியிடுவது) விளக்கிக்கொள்வதாக அறிவித்தார்.

அன்றைய தினம் அங்காள பரமேஸ்வரி, முனீஸ்வரன் போன்ற தெய்வங்களுக்கு உகந்த நாள். தமிழ் மக்கள் பலர் இந்த நாளில் 'மயானக் கொள்ளை' என்றதொரு விழாவையும் கொண்டாடுகின்றனர்.

நான் நாகையில் வசித்தபோது அங்குள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்திற்குச் சென்றுள்ளேன். மயானக் கொள்ளை போன்ற விழாக்கள் அங்கு நடக்கிறதா என்று தெரியவில்லை. நடந்திருந்தாலும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இத்தனைக்கும் அந்தக் கோயிலுக்கு 500 மீட்டர்களுக்குள்ளேயேதான் என் வீடும் இருந்தது.

நேற்றைய செய்தித்தாள்களைப் படித்ததில் இந்த மயானக் கொள்ளை மற்றும் அங்காள பரமேஸ்வரி விழா பற்றிய விவரங்கள் கிடைத்தன.

* அங்காள பரமேஸ்வரி கோயில்களிலிருந்து பூசாரிகளும், மற்ற சாமி-ஏறிய மக்களும் ஆடிக்கொண்டே பக்கத்தில் இருக்கும் மயானங்களுக்குச் செல்கின்றனர்.

* அவ்வாறு போகும் பூசாரி, சாமியாடிகள் தங்கள் மீது நடந்து சென்றால் அதனால் தங்களுக்கு நோய் நொடி வாராது, பேய் பிசாசு பிடிக்காது என்பது பொதுமக்கள் நம்பிக்கை. தினமலரில் சில படங்கள் வெளியாகியுள்ளன. அதில் குழந்தைகளை முதுகில் வைத்து படுத்திருக்கும் பெற்றோர்களைத் தாண்டி பூசாரிகள் நடக்கிறார்கள்.

* செல்லும் வழியில் பக்தர்கள் பூசாரி/சாமியாடி களுக்கு பலியாக (அம்மனுக்கு பலியாக) கோழி, ஆடுகளைத் தருவது வழக்கமாம். ஆனால் பலர் அரசின் மாறுபட்ட ஆணையின் விவரம் தெரியாமல் விலங்குகளை பலியிடுவதற்குத் தடை இருப்பதாக நினைத்து வெறும் எலுமிச்சை பழத்தைக் கொடுத்துள்ளனர். அரசாணை விவரம் வெளிவரத்தொடங்க கோழி, ஆடுகளைக் கொடுத்தனராம். இந்தப் பூசாரிகள் உயிருடன் உள்ள கோழியைக் கடித்து, குருதியை உறிஞ்சி பலியை ஏற்றுக்கொள்கின்றனர். தமிழ்ச் செய்தித்தாள்களில் கோழியைக் கடிக்கும் பூசாரியின் படங்கள் வெளியாகியுள்ளன.

* சென்னைக்கருகில் பொன்னேரியில் 60 ஆடுகள், 100 கோழிகள் பலியிடப்பட்டன. அதில் ஒரு ஆட்டைப் பூசாரி பாய்ந்து கடித்து, குடலை உருவி எடுத்து தன் கழுத்தின் மீது மாலையாகப் போட்டுக்கொண்டாராம். பின்னர் ஆட்டின் ஈரலைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சிவிட்டு மயானக் கொள்ளைக்குப் புறப்பட்டாராம்.

* (சேலத்தில்) மயானக் கொள்ளையின் கடைசி நிகழ்ச்சியாக பூசாரி/சாமியாடிகள் மயானம் சென்று அங்குள்ள பிரேதங்களின் எரிந்த சாம்பலின் மீது விழுந்து புரண்டு, சாம்பலைப் பூசிக்கொண்டு பின்னர் சாமியிறங்கி ஊர் திரும்புகின்றனர். இது எல்லா ஊர்களிலும் நடக்கிறதா என்று தெரியவில்லை.

இது தொடர்பான ஒரு சில சுட்டிகள்: செய்தி 1, செய்தி 2, செய்தி 3

===

சில கருத்துகள்:

1. ஜெயலலிதா அந்தர்-பல்டி தேர்தலை எதிர்நோக்கியே என்பது அனைவருக்கும் தெரிந்துள்ளது. ஆனாலும் பல பக்தர்கள் இப்பொழுதாவது நேர்த்திக்கடனை முடிக்க முடிந்துள்ளதே என்று சந்தோஷப்படலாம். ஆனால் மீண்டும் மற்றுமொரு அரசாணை எப்பொழுதும் வரலாம் என்பதை மனதில் வைத்திருக்க வேண்டும்.

2. என்னதான் பலகாலத்தையப் பழக்கவழக்கம் என்றாலும் வெகுவாக அதிர்ச்சி தரக்கூடியதாக உள்ளது சில பழக்கங்கள். முக்கியமாக பிரேதங்களின் சாம்பலை உடம்பில் பூசுவது போன்றவையும், ஆடுகளின் கழுத்தைக் கடித்து, ரத்தத்தை உறிஞ்சி, குடலைக் கழுத்தில் மாலையாகப் போட்டுக்கொள்வது போன்றவை. விலங்குகளை பலியிடுவது என்பது வேறு, இப்படிக் கொடுமை செய்வது என்பது வேறு.

===

கிடா வெட்டல் பற்றிய என் முந்தைய பதிவுகள்: பதிவு 1, பதிவு 2

No comments:

Post a Comment