Wednesday, March 17, 2004

ஊழல் எதிர்ப்பு இயக்கம் - 1

14 மார்ச் 2004, ஞாயிற்றுக்கிழமை அன்று 'ஊழல் எதிர்ப்பு இயக்கம்' (Anti Corruption Movement) என்னும் அமைப்பின் ஆண்டிறுதிப் பொதுக்கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். இந்த அமைப்பு 2001ஆம் ஆண்டில் துவங்கப்பட்டு, இன்று 1000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு தமிழகமெங்கும் இயங்கி வருகிறது. இதுவரை 12 நகரங்களில் இந்த அமைப்பிற்குக் கிளைகள் உள்ளன.


CS குப்புராஜ்
இந்த இயக்கத்தின் நோக்கம் தமிழகத்தில் எங்கெல்லாம் ஊழல் நடக்கிறதோ, அதனை எதிர்ப்பது; விழிப்புடன் இருப்பது; விசாரிப்பது; வெளியிடுவது ஆகும்.

இந்த இயக்கத்தின் தலைவர் 80 வயதாகும் C.S.குப்புராஜ் என்பவர். பொதுச்செயலர் S.M.அரசு. சென்னைக் கிளை (தலைமை நிலையம்) செயலர் வீரப்பன் தொடக்கத்தில் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பின்னர் தலைவரின் உரையுன், பொதுச்செயலர் உரையும் தொடர்ந்தது.


SM அரசு
குப்புராஜ் பேச்சிலிருந்து:

* 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்ற நினைப்பு தேர்தல் சமயத்தில்தான் தோன்றுகிறது
* எல்லோரும் வாக்களிக்க வேண்டும் (படித்த, மேல்தட்டு, நடுத்தர மக்கள் முக்கியமாக)
* இப்பொழுது தேர்தலில் நிற்பவர்களைப் பார்க்கையில் 'யாருக்குமே ஓட்டு போடக்கூடாது' என்று தோன்றுகிறது. "இந்த அயோக்கியன் இல்லை என்றால், இன்னொரு அயோக்கியன்..."
* உந்துநர் அறக்கட்டளை வெங்கடசுப்ரமணியன் சொல்வதைப்போல 49ஓ பிரிவின்படி வாக்குச் சாவடிக்காவது சென்று பெயரைப் பதிவு செய்து கொண்டு, யாருக்கும் வாக்க்களிக்காமல் வரலாம்.
* தலைமைத் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி சென்னை வந்திருந்த போது அவரை இயக்கத்தின் சார்பில் சென்று சந்தித்து, 'வாக்கு யாருக்கும் இல்லை' என்னும் பொத்தானையும் வாக்கு இயந்திரத்தில் சேர்க்கச் சொல்லி மனு கொடுத்துள்ளோம்.
* இந்த நாட்டில் ஊழலை ஒழிப்பது கடினம். இதுவரை அரசுத்துறையில் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கும்போதுதான் ஊழல் நுழைகிறது என்று நினைத்தோம். இப்பொழுது திட்டம் தொடங்குமுன்னரே ஊழல் ஆரம்பித்து விடுகிறது. எடுத்துக்காட்டு: 'நதிகள் இணைப்புத் திட்டம்'. இதன் மொத்தச் செலவு ரூ. 5,60,000 கோடி என்று சொல்கிறார்கள். எனக்கு இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் படி இந்தத் திட்டத்தில் ஊழல் ஏற்கனவே நுழைந்து விட்டது என்று தெரிகிறது.

அடுத்து பேசிய அரசு, ஆண்டறிக்கையை வாசித்தார். பின்னர் பொருளாளர் அழகிய கிருஷ்ணன், நிதிநிலை அறிக்கையை வாசித்தார். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு கிளையின் பொறுப்பாளர்களும் தங்கள் கிளைகள் என்னென்ன செயல்களில் ஈடுபடுகின்றன என்பதைப் பற்றிப் பேசினர்.

அதில் ஒருசிலவற்றை மட்டும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

No comments:

Post a Comment