Saturday, March 06, 2004

பின்தொடரும் நிழலின் குரல்

இந்தப் பதிவு ஜெயமோகனைப் பற்றியில்லை. RSS பற்றியும் இல்லை! Trackback பற்றி.

Trackback அல்லது பின்தொடர்தல் என்றால் என்ன? வெங்கட் வலைப்பதிவுகளின் சாத்தியங்கள் பற்றி (மூன்றாம் வலை பற்றிய கட்டுரைத் தொடர்) எழுதிவருகிறார். அதையும் படிக்கவும்.

டயரியில் பென்சிலால் எழுதி வந்தீர்கள். அது யார் கையில் கிடைத்ததோ அவர்களால் மட்டுமே படிக்க முடிந்தது. அதுவே வலைப்பதிவு என்று இணையத்தில் வந்தவுடன் பல வழிகளில் மக்களால் படிக்க முடிந்தது.
  1. யாருக்கெல்லாம் உங்கள் வலைப்பதிவின் முகவரி தெரிகிறதோ, அவர்கள் நேரிடையாக அந்த முகவரியை உலாவியில் தட்டுவதன் மூலம்
  2. ஒருவரது இணையத்தளம்/வலைப்பதிவில் உங்கள் வலைப்பதிவு முகவரிக்குத் தொடர்பு கொடுத்திருப்பதைத் தட்டி, அதன் மூலம்
  3. கூகிள்/யாஹூ!/எம்.எஸ்.என் தேடுதல்கள் மூலம்

அதற்குமேல் என்ன செய்ய முடியும்?
  • நீங்கள் எழுதும் கட்டுரைகளில் பல ஹைப்பர்லிங்குகளைக் கொடுக்க முடியும்.
  • படங்கள், ஒலித்துண்டுகள், ஒளித்துண்டுகளைச் சேர்க்க முடியும்.
  • அழகாக, பல வண்ணங்களில் பின்புலம், எழுத்துகள் ஆகியவற்றை வடிக்க முடியும்.
  • பட்டியல்கள் (ordered, unordered list), அட்டவணைகள் (tables) ஆகியவற்றை உருவாக்க முடியும்
  • சுருக்கமாக HTML மொழியின் அத்தனை சாத்தியங்களையும் செய்ய முடியும்

உங்கள் வலைப்பதிவு, செய்தி நிறுவனங்கள் நடத்தும் தளம் அல்ல. அதனால் அமாவாசைக்கொருதரமோ, ஆடிக்கொருதரமோ தான் புதிய பதிவுகள் இருக்கும். சில நாட்கள் ஒன்றுமே எழுதியிருக்க மாட்டீர்கள். சில நாட்கள் பல குறிப்புகள் வரைந்திருப்பீர்கள். படிக்க ஆசைப்படுபவருக்கு எப்பொழுது புதிதாக உங்கள் வலைப்பதிவில் ஒரு துண்டு வந்துள்ளது என்று தெரியும்? அதற்குத்தான் RSS செய்தியோடை என்றதொரு வசதி உள்ளது. உங்கள் வலைப்பதிவிற்கென ஒரு செய்தியோடையை உருவாக்குகிறீர்கள். உங்கள் வலைப்பதிவைப் பெற விரும்புபவர் அந்த செய்தியோடையைத் தன் RSS செய்தியோடைத் திரட்டியில் புகுத்திவிடலாம்.

நீங்களாகப் பல்வேறு வலைப்பதிவுகள், இணையத்தளங்கள் என்று சுற்றிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. உங்கள் செய்தியோடைத் திரட்டி தானாகவே அந்த வேலையைச் செய்து, புதிதாக ஏதேனும் எழுதப்பட்டுள்ளதா என்று கண்டறிந்து அதனை உங்கள் திரைக்குக் கொண்டுவந்து சேர்க்கும். பல RSS திரட்டிகள் உள்ளன. அவற்றைப் பற்றி முழுதாக அறிந்துகொள்ள கீழ்க்கண்ட பதிவுகளைப் படியுங்கள். [வெங்கட், பரிமேலழகர், என்னுடையது, செல்வராஜ்]

உங்கள் வலைப்பதிவுச் செய்தி ஒன்றைப் பார்த்து பலர் உடனடியாக மறுமொழி கொடுக்க விரும்பலாம். நீங்கள் எழுதியிருப்பது அவருக்குப் பிடித்திருக்கலாம் [உங்கள் எழுத்து சூப்பர்!], கடுப்பேற்றலாம் [பெரிய புடுங்கின்னு நெனச்சிட்டு எழுத வந்திட்டியா?], உங்களை வேறு ஒருவர் எழுதியிருப்பதைப் பார்க்கச் சொல்லலாம் [சும்மா எழுத வரதுக்கு முன்னாடி அந்தாண்டப் போயிப் பார்த்து, படிச்சிட்டு வாய்யா!]. இதற்கென 'Comments/feedback/பின்னூட்டம்/மறுமொழி' எனும் வசதியை உங்கள் வலைப்பதிவுடன் சேர்க்கலாம். இந்த வசதி சேர்ந்தால்தான் உங்கள் வலைப்பதிவு அடுத்த தளத்திற்குச் செல்கிறது.

சரி, உங்கள் பதிவிற்கென நான் அளிக்க இருக்கும் மறுமொழி ஒன்றிரெண்டு வரிகள் என்றால் பரவாயில்லை. அதுவே ஒரு கட்டுரை முழுக்க (ஜெயமோகன் எழுதுவது போல்) நிரம்பி வழியக்கூடியது என்றால் என்ன செய்ய? அதை உங்கள் பதிவின் மறுமொழியில் போடுவது கடினம். சில 'இலவச மறுமொழி' வசதிகளில் 300 எழுத்துகளுக்கு மேல் இருக்க முடியாது. இதற்கு ஒரே வழி, என்னுடைய வலைப்பதிவில் உங்கள் வலைப்பதிவைச் சுட்டி, என் விவாதத்தை மேலே தொடருவதுதான்.

அப்படிச் செய்துவிட்டால், நான் உங்கள் பதிவு ஒன்றைப் பற்றி எழுதியிருக்கிறேன் என்று உங்களுக்கு எப்படி நான் தெரிவிப்பது? அப்பொழுதுதானே நீங்கள் வந்து என் பதிவைப் படிக்க முடியும், படித்தபின், என்னுடனான சண்டையைத் தொடர முடியும்? அதற்குத் துணைபுரிவதுதான் பின்தொடர்தல் (அ) trackback.

இது எப்படி வேலை செய்கிறது?

நான் எழுத வேண்டிய பதிவை முதலில் எழுதி முடிக்கிறேன். அதில் உங்கள் பதிவிற்கான சுட்டியை (எதை வைத்து நான் என் கட்டுரையை எழுதினேனோ, அதை/அவற்றை) கட்டுரையின் உள்ளேயே கொடுக்கிறேன். இந்தச் சுட்டிகள் பலருடைய வலைப்பதிவுகளாக இருக்கலாம். அவ்வாறு செய்தவுடன், என் வலைப்பதிவைப் பிரசுரிக்கிறேன். அதன்பிறகு, எந்தெந்தக் கட்டுரைகளை என் கட்டுரையின் சுட்டியுள்ளேனோ, அவற்றின் பின்தொடர் சுட்டிகளைச் (இவை trackback URLகள் எனப்படும். வலைப்பதிவு URLகள் அல்ல இவை.) சேர்த்தெடுத்து 'ping' செய்கிறேன். உங்கள் வலைப்பதிவின் பின்தொடர்தல் பகுதியில் இதற்கான வழிமுறை இருக்கும்.

எடுத்துக்காட்டினை இப்பொழுது பார்ப்போம்:

ஐராவதம் மகாதேவனின் பேச்சை வைத்து எழுதிய என் வலைப்பதிவு "தமிழ்க் கல்வெட்டியலின் புதிர்கள் - 3" என்பதன் சுட்டி http://thoughtsintamil.blogspot.com/2004_02_29_thoughtsintamil_archive.html#107806377479850385

இதே கட்டுரையின் பின்தொடர் சுட்டி http://haloscan.com/tb/bseshadri/107806377479850385

பா.ராகவன் தன் வலைப்பதிவில் என் கட்டுரையைச் சுட்டி "ஐராவதம் மகாதேவன்" என்ற தலைப்பில் எழுதினார். அதை எழுதியபின், என் வலைப்பதிவுக் கட்டுரைக்கு தன் 'பின்தொடர்தல் சேவை' மூலம் http://haloscan.com/tb/bseshadri/107806377479850385 என்ற என் பின்தொடர் சுட்டிக்கு 'ping' செய்தார். இதனால் என் வலைப்பதிவைப் பார்க்கும் அனைவருக்கும் Trackback என்னும் பகுதியை கிளிக் செய்தால் ராகவன் இந்தக் கட்டுரையைப் பற்றித் தன் வலைப்பதிவில் எழுதியுள்ளார் என்பது தெரிகிறது. இப்படி என் கட்டுரையை 'refer' செய்து, பின்தொடர் சுட்டியை 'ping' செய்த அனைவரது கட்டுரைகளும் என் வலைப்பதிவில் இடம் பெறுகின்றன. இதன் மூலம் யாரெல்லாம் என் கட்டுரையை அடியொட்டி எழுதியுள்ளனர் என்பதை நானும், என் வலைப்பதிவுக்கு வரும் மற்றவர்களும் கண்டுபிடிக்கலாம், அந்தந்த இடங்களுக்குச் சென்று அந்தக் கட்டுரைகளையும் படிக்கலாம்.

வலைப்பதிவுகளில் வேறென்ன வித்தை இருக்கிறது? உங்கள் வலைப்பதிவுக்கு எவ்வளவு பேர்கள் வருகின்றனர்? எங்கிருந்து வருகின்றனர்? வந்தபின் எங்கு செல்கின்றனர்? இப்படி 'access statistics' அனைத்தையும் அறிந்துகொள்ள உங்களுக்கு ஆசையாயிருக்கலாம். அதைச் செய்யவும் பல வழிகள் உள்ளன.

ஆக, ஒரு வலைப்பதிவில் என்னென்ன தொழில்நுட்பங்கள் அமைந்திருக்கவேண்டும் என்று இப்பொழுது ஒரு தொகுப்பாகப் பார்ப்போம்:
  • RSS (அ) Atom செய்தியோடை உருவாக்கும் வசதி
  • உங்கள் வலைப்பதிவுக்கு வருபவர்கள் பின்னூட்டம்/மறுமொழி தரும் வசதி
  • உங்கள் கட்டுரைகளை பிறர் பின்தொடரும் வசதி (அதாவது உங்கள் பதிவு ஒவ்வொன்றுக்கும் ஒரு பின்தொடர் சுட்டியும் உருவாக்கி அதனை வெளியே தெரிவிக்க வேண்டும்)
  • நீங்கள் பிறரது கட்டுரைகளைச் சுட்டினால், அவர்கள் பின்தொடர் சுட்டிகளை உருவாக்கியிருந்தால், அந்தப் பின்தொடர் சுட்டிகளை 'ping' செய்யும் வழிமுறை
  • உங்கள் வலைப்பதிவுக்கு வருபவர்களைப் பற்றிய புள்ளிவிவரங்களை அறிதல் (இதனால் பெரிதாக ஒன்றும் சாதித்துவிடப் போவதில்லை என்றாலும்....!)
  • இதைத் தவிர உங்கள் வலைப்பதிவிற்குள்ளாக தேடுதல் வசதியையும் சேர்த்துவிட்டால், நீங்கள் பெரிய கில்லாடிதான்!

No comments:

Post a Comment