Friday, March 05, 2004

ஐராவதம் மகாதேவன் பற்றி மேலும்

போனவாரம் சென்றிருந்த ஐராவதம் மகாதேவனின் பேச்சு பற்றி என் வலைப்பதிவில் எழுதியிருந்தேன். பகுதி ஒன்று | இரண்டு | மூன்று.

ஐராவதம் மகாதேவன் Frontline இதழில் எழுதிய கட்டுரையின் சுட்டி இதோ: Orality to literacy: Transition in Early Tamil Society

அன்றைய பேச்சிலிருந்து நான் குறிப்பிட மறந்த சில செய்திகள்:

* கல்வெட்டுகளில் எழுதியிருப்பதை ஆரம்பத்தில் ஆங்கிலேய, ஐரோப்பிய அறிஞர்கள் பிறரைக் கொண்டு (உள்ளூர்க் கூலிகளைக் கொண்டு என்று வைத்துக்கொள்வோமே?) தாளில் மை கொண்டு பூசி, கல்வெட்டு எழுத்துகள் தாளில் பதியுமாறு செய்து அதனைத் தங்களிடம் வரவழைத்து, (ஊட்டியிலோ, கொடைக்கானலிலோ உட்கார்ந்து கொண்டு) படித்தார்கள். இதனால் அவர்களது படிப்பில் பல குளறுபடிகள் நிகழ்ந்தன. கல்லின் மேடு பள்ளங்கள், நாளைடவில் ஏற்பட்டிருந்த சேதங்கள் ஆகியவை 'noise' ஐ உருவாக்கியதால் ஒழுங்காக இந்த எழுத்துகளை வகையறுக்க முடியவில்லை. அதனாலேயே மகாதேவன், தான் நேரடியாக இந்த இடங்களுக்குச் சென்று எழுத்துகளைப் படிக்க முயன்றதாகச் சொன்னார். தமிழக அரசுப் பணியில் கைத்தறித் துறைச் செயலராக இருந்தபோது இந்த வாய்ப்பு தானாகவே தனக்குக் கிடைத்தது என்றார்.

* இப்பொழுது தொழில்நுட்பம் வளர்ந்ததனால் டிஜிட்டல் கேமரா போன்றவைகளால் படம் பிடித்து, கணினிகளைக் கொண்டு படங்களின் தரத்தை உயர்த்தி (enhancing the digital images) பின்னர் அவற்றை வகைப்படுத்த முடிகிறது என்றார். ஐஐடி சென்னை இதற்கென இவருக்கு நிறைய உதவிகள் செய்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

* இந்த அரிய கல்வெட்டுகள் இப்பொழுது அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் ஆதங்கப்பட்டார். எப்படியெல்லாம் அழிகின்றன? இன்றைய காதலர்கள் இந்தக் கல்வெட்டுகளில் மீது தங்கள் பெயர்களைப் பொறித்து பழைய செய்திகளையெல்லாம் அழித்து விடுகின்றனர். கல் குவாரிகளுக்குக் குத்தகை விடுவதாலும் பலர் டயனமைட் வைத்து அரிய கல்வெட்டுகள் உள்ள மலைகளை உடைத்து கிரானைட் ஆக்கி விற்றுவிடுகின்றனராம்.

இந்த இரண்டினாலும் நம் வரலாற்றுப் பதிவுகளை நாம் தினமும் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த இழப்பை நிறுத்த, அரசுகளால்தான் முடியும்.

====

ஐராவதம் மகாதேவன் கல்வெட்டியல் அறிஞர் மட்டுமல்ல. தினமணி செய்தித்தாளின் ஆசிரியராக இருந்தவர். அவரைப் பற்றி பா.ராகவன் எழுதிய கட்டுரை இதோ.

No comments:

Post a Comment