Sunday, March 28, 2004

சாகித்ய அகாதமி விருது: அன்றும், இன்றும்

தமிழ்நாட்டில் எல்லோராலும் நேசிக்கப்பட்ட செல்லப்பிள்ளை அவர் [கண்ணதாசன்]. கல்கியில் அவர் தொடராக எழுதிய 'சேரமான் காதலி' சரித்திர நாவலுக்குச் சாகித்ய அகாதமி பரிசு கிடைத்தது. 'இதைவிட உங்கள் கவிதை நூல் எதற்காவது பரிசு கொடுத்திருக்கலாம்.' என்றேன் நான் அவரிடம். 'இதற்குக் கூடப் பரிசு கொடுக்காமலும் இருந்திருக்கலாம்!' என்றார் அவர் என்னிடம்! பரிசுகளை ஒருபோதும் அவர் பொருட்படுத்தியதில்லை.
பக். 117, சுவடுகள், திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், 2003, பக் 184, ரூ. 200

கவிப்பேரரசு வைரமுத்துவை சாகித்திய அகாதமி விருதுபெற்ற விவகாரத்தில் வம்புக்கிழுத்தவர்கள், வைரநெஞ்சம் படைத்த என்னையும் சீண்டிப் பிடரியைச் சிலிர்க்கச் செய்திருக்கிறார்கள்.

நான் அகாதமி விருது பெற்றபோது அநியாயமாக என்னையும் விமரிசித்தார்கள்.

...

நான் ஓர் இலக்கணச் சுத்தமுள்ள இசைஞன். தம்பூரில் ஒலிக்கும் நுட்பமான அந்தரகாரத்தைப் போன்றவை என் படைப்புகள். எந்த ஆலாபனையையும் ஆலோசித்துச் செய்பவன். எனக்கே பிடித்த பைரவி (சரித்திரம்) ராகமானாலும், அதன் பாஷாங்க (கலப்புச்) சரமான சதுர்ஸ்ருதி தைவதத்தை எங்கு எப்படிப் பிரயோகித்தால் மூர்ச்சனை காட்டி மக்களைக் கவரும், மகோன்னதம் அடையும் என்கிற வித்தாரத்தை விதந்து அறிந்தவன்.

நான் எழுதிய 145 நூல்களும் 2 பத்திரிகைகளின் முதற்பரிசுகளும் 32 விருதுகளும் இதற்குச் சான்று பகரும். மிகுந்து நிற்பது ஞானபீடம்; அதையும் என் தமிழ் பெற்றுத் தரும்.
'இலக்கிய சாம்ராட்' கோவி.மணிசேகரன், அமுதசுரபி மார்ச் 2004.

No comments:

Post a Comment