Thursday, March 11, 2004

வலைப்பதிவுகள் பற்றிய மாலனின் கருத்துகள்

மாலன் நேற்று வலைப்பதிவுகள் பற்றி வெளியிட்டுள்ள கருத்துகளுக்குப் பல எதிர்வினைகள். சிலர் தங்கள் வலைப்பதிவுகளில் எதிர்வினைகளையும் வெளியிட்டுள்ளனர்.

இணையத் தொழில்நுட்பங்கள் அதிகம் தெரியாத ராகவன் எதிர்வினையை வெளியிட்டு, பின்தொடரும் சுட்டியாகவும் கொடுத்துள்ளார்! சபாஷ். இதுவரை மேலோட்டமாக மேய்ந்ததில், பரிமேலழகர், அருண் வைத்யநாதன் ஆகியோரும் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். (ஆனால் பின்தொடர் சுட்டிகளைக் கொடுக்கவில்லை, கொடுத்திருந்தால் மற்றவர்கள் பின்தொடர வசதியாக இருக்கும்.)

நிச்சயம் மற்ற பலரிடம் கருத்துகளை எதிர்பார்க்கலாம்.

என் எண்ணங்கள் இங்கே:

1. வலைப்பதிவுகள், வலைப்பக்கங்கள் ஆகியவற்றுக்கான மாலனின் 'definition'கள் முழுதாக ஏற்றுக்கொள்ள முடியாதவை. வலைப்பதிவுகளில் என்னதான் இருக்கலாம் என்று சொல்ல யாருக்கும் அதிகாரமில்லை. இதற்கும், "உணவை மூக்கால் சாப்பிடுவதற்கும்" எந்த ஒப்புமையையும் காண்பிக்க முடியாது.

வலைப்பதிவுகளோ, வலைப்பக்கங்களோ, இணைய இதழ்களோ, யாஹூ! அல்லது மற்ற குழுமங்களோ, சுய வெளிப்பாட்டிற்கான சாதனங்கள் மட்டுமே. எதை வெளிப்பாடு செய்வது என்பது ஒரு தனி மனிதனின் முழு சுதந்திரம்.

மேற்சொன்ன பலவித சாதனங்களில் ஒருசில தொழில்நுட்பக் காரணங்களால் சிலவற்றை எளிதாகச் செய்ய முடிகிறது, சிலவற்றை செய்வது கடினமாகிறது.

நாளடைவில் தொழில்நுட்பம் பற்றிய ஒரு பிரஞ்ஞையே இல்லாது ஒருவர் சர்வசாதாரணமாக ஒவ்வொரு சாதனத்தையும் அதற்கான சரியான வகையில் பயன்படுத்துவார். இன்றைய தேதியில் நாம் அனைவரும் வலைப்பதிவுகளின் சாத்தியங்கள் என்னவென்று அறிந்துகொள்ள மட்டுமே முயற்சித்து வருகிறோம்.

ஆங்கில வலைப்பதிவுகள் பலவும் சாத்தியங்களை நன்கு அறிந்ததோடு மட்டுமல்லாமல், அவற்றின் எல்லைகளை விரிவாக்கிக் கொண்டும் வருகிறார்கள்.

2. இப்பொழுது இருக்கும் தமிழ் இணையம் திருப்தி தரக்கூடியதாக இருக்கிறதா, என்றால் பதில் "இல்லை" என்றுதான் சொல்வேன். ஆனால் எப்படி திருப்தி தரக்கூடிய, தரத்தை அதிகமாக்கக் கூடிய வகையில் மாற்ற முடியும் என்பதைப் பற்றிய யோசனைகளோடுதான் இந்த விமரிசனத்தை முன்வைப்பேன்.

ராகவன் சொன்னது போல், இணைய இதழ்களும்தான் மிகக் குறைவான தரத்தில் உள்ளன. இணைய இதழ்களின் தரத்தை உயர்த்துவது எப்படி? இணைய எழுத்தாளர்கள் அதிகமாக வரவேண்டும். சரியான ஆசிரியர் பணியைச் செய்யக்கூடிய ஆட்கள் தேவை. யார் எதை எழுதி அனுப்பினாலும் அதைப் பிரசுரிக்கக் கூடாது. சப்-எடிடிங் செய்ய ஆட்கள் தேவை. எப்படி அச்சில் வரும் இதழுக்கு தாளின் தரம், பக்கங்களின் நேர்த்தி, அச்சின் தரம், விஷயத்தின் தரம், கோர்வை, நோக்கம் ஆகியவை முக்கியமோ, அப்படியே இணைய இதழுக்கும் webserver தரம், பக்க வடிவமைப்பு, பொருள் தரம், உலாவுதல் நேர்த்தி என்று பல தேவைகள் உள்ளன. எந்தவொரு தமிழ் மின்னிதழும் இந்த வகையில் பார்க்கையில், ஆங்கில மின்னிதழ்கள் பலவற்றின் தரத்திற்கு அருகில் கூட வரமாட்டேன் என்கிறது.

3. "தமிழ் வலைப்பதிவில் கோழி, வாத்து படங்கள் உள்ளன, அந்தரங்க தொனியைக் காணோம்." கோழி, வாத்து படம் காண்பிப்பதும் அந்தரங்க தொனிதான்! எனக்குப் பலமுறை தேவையற்ற படங்களைப் பார்க்கும்போது எரிச்சல்தான் வருகிறது. ஆனால் அதுபோல நான் எழுதும் பல கட்டுரைகள் படிக்கும் பலருக்கு எரிச்சலும், அலுப்பும் தரலாம் என்று நினைக்கையில் என் எரிச்சலை மூட்டை கட்டி வைத்துவிடுகிறேன்.

4. "விவாதக் குழுக்களில் வெட்டி அரட்டைகளே அதிகம்."

விவாதக் களங்கள் தொழில்நுட்பக் குறைவு காரணமாகவும், மிகக் குறைவானவர்களே பங்குபெறுவதாலும், அயர்வின்றி எழுதக்கூடிய ஆட்கள் இல்லாத காரணத்தாலும் தரம் குறைந்து காணப்பெறுகிறது. கணினிகளின் வீச்சு அதிகரிக்கும்போது நிச்சயமாக தரம் இங்கு அதிகரிக்கும்.

இப்பொழுதைக்கு, தொழில்நுட்பத்தின் மூலம் வெட்டி அரட்டைகளை வேகமாக விலக்கிவிட்டு உருப்படியானவைகளைப் பற்றி மட்டுமே படிக்க வசதிகள் இருக்கின்றன.

5. 'வலைப்பூ' இதழை மேம்படுத்த வேண்டும் என்னும் மாலனின் கருத்துக்கு எனக்கு எதிர்க்கருத்தே இல்லை. நானும் அதைத்தான் சொல்கிறேன்.

===

பல நாட்கள் வலைப்பதிவுகளை மேயும்போது "அய்யோ, உருப்படியாக ஒன்றுமே இல்லையே" என்று தோன்றும். அந்த நிலைமை இன்று மாறிவருகிறது. போக வேண்டிய தூரம் அதிகம். இன்றைய நிலையில் தேவை அதிக வலைப்பதிவாளர்களே. அவர்கள் என்ன வேண்டுமானாலும் எழுதிவிட்டுப் போகட்டும். தானாகவே நல்லவை மேலே வரும்.

தமிழ் இலக்கியத்தையும், மற்ற கலைகளையும் நாளை கட்டிக் காப்பாற்றப் போவதில் வலைப்பதிவுகளே முக்கிய அங்கம் வகிக்கப்போகின்றன.

No comments:

Post a Comment