Tuesday, March 16, 2004

இணையத்தில் பங்குகளை விற்க/வாங்க

பங்குச்சந்தை பற்றி நான் எழுத ஆரம்பிக்க, ஐகாரஸ் பிரகாஷ், அதைத் தொடர்கிறார். Geogit என்னும் பங்குத்தரகர் அலுவலகத்தில் வேலை செய்தவர். அதனால் அதிகமான உருப்படியான விஷயங்கள் அவரிடமிருந்து உங்களுக்குக் கிடைக்கலாம்.

நான் பங்குச்சந்தையை மிகவும் மேலோட்டமாக அணுகுபவன். இணைய வியாபார வசதி வரும்வரை எந்தத் தரகரையும் அணுகவில்லை. என் பணத்தை நானே வீணடித்து, அதன்மூலம் பங்குச்சந்தையின் செயல்பாடுகளைக் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன். அதனால் சிறு அளவே பங்குகளை வாங்குவதில் செலவிடுவது என்ற உறுதியில் இருந்தேன், இருக்கிறேன்.

நான் ICICI வங்கியில் கணக்கு துவங்கியதும், அதே வங்கியின் பங்குத்தரகு நிறுவனமான ICICIdirect இல் demat கணக்கும் துவங்கினேன். என் வங்கிக் கணக்கையும், demat கணக்கையும் இணைத்து இணையம் வழியாகவே பங்குச்சந்தையின் வியாபாரம் செய்ய ICICIdirect உதவி புரிகிறது. ICICIdirect தவிர HDFC Bank, மற்ற பல தனியார் இணைய நிறுவனங்கள் இதே சேவையினைத் தருகின்றன. ஆனால் நான் மற்றவற்றினைப் பார்க்காத காரணத்தால், அவற்றைப் பற்றி சொல்லப் போவதில்லை.

ICICIdirectஇன் வழியாக demat பங்குகளை மட்டும்தான் வாங்க முடியும். இணையவழி பங்குவியாபாரத்தில் எங்கிருந்தாலும் demat பங்குகளை மட்டுமே வாங்க/விற்க முடியும். பழங்காலத்தில் நீங்கள் ஒரு கம்பெனியின் பங்குகளை, அந்த கம்பெனியின் நேரடி Public Offerகள் மூலம் பெற்றாலோ, அல்லது பிறரிடமிருந்து வாங்கினாலோ, அந்தப் பங்குகளை ஒரு தாளில், உங்கள் பெயர் பொறித்து சான்றிதழாக உங்களுக்கு அனுப்பினார்கள். உங்கள் பங்குகளை நீங்கள் பிறருக்கு விற்கும்போது உங்களிடமிருந்த சான்றிதழை ஏகப்பட்ட அத்தாட்சியுடன் நீங்கள் அஞ்சலில் அனுப்பி, அடுத்தவர் அதைப் பெற்றபின் பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். அதிவேகமாக மாறும் பங்குச்சந்தை உலகில், இந்த சான்றிதழ் கிடைக்காதவரை மேற்கொண்டு விற்பதில் சிரமம் இருக்கும். அஞ்சலில் சான்றிதழ் காணாமல் போனால் அதைத் திரும்பப் பெற சண்டை போட வேண்டியிருக்கும். வருடாந்திர டிவிடெண்ட், ஊக்கப் பங்குகள் இவற்றைப் பெறுவதில் நிறையக் குழப்பங்கள் இருக்கும். ஆனால் டிமாட் செய்யும்போது குழப்பங்கள் மிகவும் குறையும். செலவு குறையும். வாங்கி விற்கையில் வேகமாகச் செய்யலாம். Dematerialisation பற்றி விவரங்கள் அறிந்து கொள்ள இங்கு செல்லவும்.

இன்று நடக்கும் பல Public Offer களிலும் (ONGC சேர்த்து), டிமாட் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.

ICICIdirect மூலமாக என்னென்ன செய்யலாம்?
* மிகச் சுலபமாக பங்குகளை இணையம் மூலமாக வாங்கலாம், விற்கலாம்.
* பங்குகளை வாங்கும்போது உங்கள் வங்கிக்கணக்கிலிருந்து பணம் எடுத்துக்கொள்ளப்படும். விற்ற பங்குகளுக்கான தொகை பங்குச்சந்தையிலிருந்து உங்கள் வங்கிக்கணக்கில் போய் விழுந்துவிடும்.
* அனைத்து மியூச்சுவல் பண்ட் யூனிட்டுகளையும் ICICIdirect மூலம் வாங்கலாம், விற்கலாம்.
* IPO, PO அனைத்திலும், தெருவுக்குத் தெரு அலைந்து விண்ணப்பப் படிவங்களைத் தேடாமல், வங்கிக்குப் போய் வரைவுக் காசோலை வாங்காமல், இருந்த இடத்தில் இருந்து கொண்டே ஒரே கிளிக் மூலம் பங்கு பெறலாம்.
* IPO/PO வில் நீங்கள் அதிகமாகக் கட்டிய பணத்தை நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிற்கே திரும்ப அனுப்புமாறு செய்யலாம்.
* உங்கள் பங்குகளுக்கான dividendஐ நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிற்கே வருமாறு செய்யலாம். [அதாவது அவர்கள் தாளில் காசோலை அனுப்பி, அதை நீங்கள் வங்கிக்குக் கொண்டுபோய் போட்டு என்றெல்லாம் தேவையில்லை. Electronic clearing மூலம் நேரடியாகச் செய்ய முடியும்.]
* உங்களிடம் ஏற்கனவே சான்றிதழாக இருக்கும் பங்குகளை டிமாட் செய்து அதனையும் உங்கள் ICICIdirect டிமாட் கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்.
* Futures & options ஆகிய இன்றைய புதுமைகளிலும் பங்கேற்கலாம்.
* அரசின் பாண்டுப் பத்திரங்களை வாங்கலாம், விற்கலாம்.
ஆக உங்கள் இணையம் உள்ள கணினியில் பங்குச்சந்தையே அடங்கிவிடும்.

அதைத்தவிர இணையத்தில் வழியாக நிறுவனங்களின் முழு காலாண்டுப் பொது அறிக்கை, ஆண்டிறுதி அறிக்கை ஆகியவற்றை PDF கோப்புகளாகப் பெறலாம், அந்த நிறுவனத்தின் செய்கைகளை மிகவும் நுணுகி ஆராய்ந்து அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதா, விற்பதா என்பதைத் தீர்மானிக்கலாம். இந்தியா முழுவதிலும் உள்ள பங்கு வியாபாரம் செய்யும் சிறு முதலீட்டாளர்களோடு இணையம் வழியாகப் பேசி தகவல்களைப் பரிமாரிக்கொள்ளலாம்.

இப்படி எத்தனை எத்தனையோ நன்மைகள் இணையம் வழியாகப் பங்கு வியாபாரத்தில் ஈடுபடுவதில்.

No comments:

Post a Comment