Monday, March 29, 2004

விரேந்தர் சேவக் முச்சதம்

விரேந்தர் சேவக்
© Wisden CricInfo
கிரிக்கெட் டெஸ்டு போட்டிகளில் விரேந்தர் சேவக் இந்தியாவிற்காக முதல் முச்சதத்தை இன்று அடித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக முல்தானில் நடந்த முதல் டெஸ்டு போட்டியில் இது நடந்தது.

எக்கச்சக்க அதிர்ஷ்டம் அவருக்கு. நான்கைந்து கேட்சுகள் கோட்டை விடப்பட்டன. ஒரு ரன்-அவுட் தடவப்பட்டது. இருந்தும், மிக வேகமாக, ஒரு மர்மக்கதையைப் படிக்கும் உணர்வைத் தூண்டிய 309 ரன்கள் சேவக்குடையது.

நூறாவது ரன் ஷோயப் அக்தரின் பந்தை தர்ட்மேன் திசையில் ஆறாக அடித்து எடுத்தார். முன்னூறாவது ரன் சக்லைன் முஷ்டாக்கின் பந்தை மிட் விக்கெட் திசைக்கு மேல் ஆறாக அடித்து எடுத்தார். இருநூறாவது ரன் நான்காகப் போய் விட்டது.

மற்றொரு பக்கத்தின் சச்சின் டெண்டுல்கர் இருநூறுக்கு ஆறு ரன்கள் குறைவாக இருக்கையில் திராவிட் ஆட்டத்தை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார். பைத்தியக்காரத்தனமாக இருந்தது இந்த முடிவு! தனியொரு விளையாட்டு வீரரின் புள்ளிவிவரக் கணக்குகள் ஒரு அணிக்கு முக்கியமல்லதான். ஆனால் என்னவோ அந்த கடைசி ஆறு ரன்கள் எடுக்க டெண்டுல்கர் பல மணிநேரங்கள் செலவழித்துவிடுவது போலவும், அந்த நேரத்தில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் ஆயிரக்கணக்கில் விக்கெட்டுகளைக் குவித்து விடுவது போலவும் திராவிடுக்கு ஒரு எண்ணம்.

அல்லது, ஒருவேளை கங்குலி சும்மா இல்லாமல் திராவிடை தூண்டிவிட்டுக்கொண்டே இருந்திருக்க வேண்டும். எதுவானாலும் இன்னமும் ஐந்து ஓவர்கள் கூட இந்தியா விளையாடியிருக்க வேண்டும் என்பது என் எண்ணம்.

ஸ்கோர்போர்டு

கொசுறுச் செய்தி: ரஞ்சிக் கோப்பை இறுதியாட்டத்தில் மும்பையிடம் தமிழ்நாடு உதை வாங்கிக்கொண்டிருக்கிறது. நாளை ஒரு இன்னிங்க்ஸ் வித்தியாசத்தில் ஜெயித்து மும்பை கோப்பையை வென்றுவிடும்.

No comments:

Post a Comment