Monday, June 28, 2004

வாழ்க்கை வரலாறுகளின் ஊடாக [நாட்டின்] வரலாறு - 1

22 ஜூன் 2004, செவ்வாய்க்கிழமை அன்று, சென்னை தாஜ் கன்னிமராவில் மெட்ராஸ் புக் கிளப்பின் ஆதரவில் நடந்த கூட்டத்தில் ராமச்சந்திர குஹா 'History and Biography' என்ற தலைப்பில் பேசினார்.

மடைதிறந்த வெள்ளம் போல சரளமாகவும், நகைச்சுவையாகவும், எடுத்துக்கொண்ட தலைப்பை விட்டு மீறாமல், அதே சமயத்தில் எங்கெல்லாம் சுவாதீனமாக வெளிச்செல்ல முடியுமோ, அங்கெல்லாம் வெளியேறி, சில துணுக்குகளை அள்ளிவிட்டு, மீண்டும் விட்ட இடத்தைப் பிடித்துத் தொடருவதில் மன்னர். கிட்டத்தட்ட 65-70 நிமிடங்கள் பேசினார். முதலில் மெட்ராஸ் மியூசிங்க்ஸ் எஸ்.முத்தையா குஹாவை அறிமுகம் செய்து வைத்தார்.

குஹாவின் பேச்சின் சுருக்கம்:

Biography is a privileged vantage point in history. தெற்காசியர்கள் நல்ல வாழ்க்கை வரலாறுகளை எழுதியதே இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று இந்து மதம். இந்து மதத்தில் மறுபிறப்பு அழுத்தமாக சுட்டப்படுவதால் ஒருவர் இறந்தபின்னர் அவர் வேறு பிறவியாகி விடுவதால் இறந்தவரைப் பற்றி அதிகம் எழுத யாரும் முற்படுவதில்லை. மற்றொன்று மார்க்ஸிசம். மார்க்ஸிஸ்டுகள் தனி மனிதர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. எல்லாம் வர்க்கப் போராட்டங்களைப் பற்றித்தான்.

நான் நான்கு பேருடைய வாழ்க்கை வரலாறுகளை முன்வைத்து இங்கு பேசப்போகின்றேன். அதில் முதலிரண்டு எழுதப்பட்டது. அடுத்த இரண்டு எழுதப்பட வேண்டியது.

முதலாவதாக ரெய்னால்ட் நீபர் (Reinhold Niebuhr). செரினிடி பிரேயர் (Serenity Prayer) என்ற புகழ்பெற்ற வேண்டுதலை உருவாக்கியவர். பல வருடங்களாக இந்த வேண்டுதல் தியோடார் வில்ஹெல்ம் என்னும் ஜெர்மானியரின் உருவாக்கம் என்ற ஒரு செய்தி பரவியிருந்தது. அதைக் கேட்ட நீபரின் மகள் எலிஸபெத் சிஃப்டன் (Elisabeth Sifton), தனது தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதத் தொடங்கினார். அந்த வாழ்க்கை வரலாறுதான் The Serenity Prayer: Faith and Politics in Times of Peace and War. [அமேசான், இந்தியாவில் ஃபேப்மால்]

ஜெர்மனியிலிருந்து அமெரிக்காவிற்குக் குடியேறிய பாதிரியார் ஒருவருக்கு 1892இல் மகனாகப் பிறந்த நீபரும், கிறித்துவ மார்க்க குருமாராக இருந்தவர். எபிஸ்கோப்பல் (என்றால் கிரேக்க மொழியில் மேய்ப்பன் என்ற பொருள்) கிறித்துவ வழியைச் சேர்ந்தவர். ஆனால் பிற கிறித்துவ வழியைச் சேர்ந்தவர்களுடனும் (ரோமன் கத்தோலிக்கர்கள்), யூதர்களுடனும் இடைவிடாது தொடர்பு வைத்திருந்தார். அவர்களுடன் மார்க்கம் சார்ந்த விவாதத்தில் ஈடுபட்டிருந்தார். 20ஆம் நூற்றாண்டு அமெரிக்க வாழ்வில் தொழில்மயத்தால் உண்டான கடுமையான ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு வருந்தினார். மதகுருவாக இருக்கும்போதே இடதுசாரிக் கொள்கைகளுடன் இருந்தவர். (அவ்வாறு இருக்கும் யாரையும் காண்பது அரிது.)

ஹிட்லரின் ஜெர்மனி உலகிற்கே கெடுதல் என்று கடுமையாக எதிர்த்தவர். ஜெர்மனியைச் சேர்ந்த டியட்ரிச் பானோஃபர் (Dietrich Bonhoeffer) என்பவர் அந்த சமயத்தில் நீபருடனும், மஹாத்மா காந்தியுடனும் ஒரே நேரத்தில் கடிதத் தொடர்பு வைத்திருந்தார். பானோஃபர் கிட்டத்தட்ட இந்தியா வருவதாக இருந்தது. காந்தியுடன் வந்து பேசி, அவரிடம் சத்தியாக்கிரகம் பற்றி அறிந்து கொண்டு அந்த முறையில் பானோஃபர் ஜெர்மனியில் ஹிட்லரை எதிர்த்திருந்திருக்கலாம். ஆனால் என்ன நடந்ததோ, பானோஃபர் இந்தியாவுக்குப் பதில் அமெரிக்கா சென்று நீபரைச் சந்தித்து அவருடன் நிறையப் பழகினார். பின்னர் ஜெர்மனி வந்து ஹிட்லருக்கு எதிரான ஒரு கொலை முயற்சியில் ஈடுபட்டு, முயற்சி பலிக்காமல் மாட்டிக்கொண்டு உயிரை விட்டார். [நீபர்தான் பானோஃபரை ஹிட்லரைக் கொல்லும் முயற்சியில் ஈடுபட வைத்தார் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் - பத்ரி]

(தொடரும்.)

Sunday, June 27, 2004

இலங்கையில் சில நாள்கள்

போனவாரம் இலங்கை சென்றிருந்தேன். கொழும்பில் இரண்டு நாள்களும், கலுத்தரவில் இரண்டு நாள்களும் இருந்தேன்.

கொழும்பு பிரதான கடற்சாலையின் மேலிருந்து எடுத்த புகைப்படம் இதோ.

கொழும்பு/Colombo


சு.வில்வரத்தினம்
சு.வில்வரத்தினம்
போயிருந்தது அலுவல் தொடர்பான வேலைகளுக்காக. ஒரு நாள் நேரம் எடுத்துக்கொண்டு சில இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களை சந்திக்க முடிந்தது. லண்டன் பத்மநாப ஐயர் இதற்கு பெருமுதவி புரிந்தார். திருகோணமலையிலிருந்து சு.வில்வரத்தினம் வெகுதூரம் கடந்து வந்திருந்தார்! அவருடன் கொழும்பில் இருக்கும் இளம் எழுத்தாளரான ரமனேஷன் வந்திருந்தார்.
ரமனேஷன்
ரமனேஷன்
இவர் அசுவகோஷ் என்ற புனைபெயரிலும் மற்ற சில புனைபெயர்களிலும் எழுதுகிறார். இருவருடனும் பல மணி நேரம் பேசிக்கொண்டிருந்தேன். இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் இன்றைய நிலை, தமிழகத்தில் வெளியாகும் புத்தகங்கள் இலங்கையில் கிடைக்க படும் கஷ்டங்கள், அதன் அதீத விலை (இலங்கை ரூபாய் மதிப்பு சரசரவென இறங்கிக் கொண்டே வருகிறது), இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் இந்தியாவில் அறியப்படாமை போன்ற பல விஷயங்கள் பற்றிப் பேசினோம்.

மு.பொன்னம்பலம்
மு.பொன்னம்பலம்
இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் மு.பொன்னம்பலம், தெளிவத்தை ஜோசப் போன்றோரும் என்னைச் சந்திக்க வந்திருந்தனர். அவர்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன்.

மீண்டும் அடுத்த மாதம் (ஜூலை) இலங்கை செல்வேன். அப்பொழுது இன்னமும் சிலரைச் சந்திக்கவும், சில தமிழர் பெரும்பான்மைப் பகுதிகளுக்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளேன்.

தெளிவத்தை ஜோசப்
தெளிவத்தை ஜோசப்
தமிழ்நாட்டின் வாசகர்களுக்கு இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய பிரஞ்ஞையே இல்லாதிருப்பது வருந்தத் தக்கது. தமிழ்நாட்டில் வெளியாகும் வெகுஜன இதழ்களிலும் சரி, சிற்றிதழ்களிலும் சரி, இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் பங்களிப்பு குறைவாகவே இருக்கிறது.

அதைப் போலவே தமிழ்நாட்டிலிருந்து தமிழில் வெளியாகும் புத்தகங்கள் இலங்கை வாசகர்களை முழுமையாக அடையாமல் இருப்பதும் வருந்தத் தக்கதே. இலங்கை அரசின் நூலகத் துறை எப்படி இயங்குகிறது என்று எனக்குத் தெரியாது. அரசுகளின் வழியே செல்லாமல் தமிழக்த்தில் உள்ள ஒவ்வொரு பதிப்பாளரும் தங்கள் பதிப்பு ஒவ்வொன்றிலுமிருந்து பத்து பிரதிகளாவது இலவசமாக இலங்கைக்கு அனுப்பி வைக்கலாம் என்று தோன்றுகிறது. என் பதிப்பகம் (கிழக்கு பதிப்பகம்) வழியாக நாங்கள் அச்சிடும் ஒவ்வொரு புத்தகத்திலிருந்தும் இருபது பிரதிகள் இலவசமாக அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளோம்.

Wednesday, June 23, 2004

'தவறு எங்கே?' - நேசமுடன் வெங்கடேஷ்

வெங்கடேஷ் வாராவாரம் அனுப்பும் 'நேசமுடன்' மின்னஞ்சல் இதழ். எப்பொழுது வரும் என்று காத்திருப்பேன். வந்தவுடன் ஒருவரி விடாமல் படித்து முடித்துவிட்டுத்தான் மறுவேலை.

இந்த வாரம் தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்காலிக வேலைக்காக எடுத்துக்கொண்ட 15,000 பேரை நேற்று 'வீட்டுக்குப் போ' என்று அனுப்பியுள்ளதை முன்வைத்து தவறு எங்கே என்ற தலைப்பில் எழுதியுள்ளார். இன்றைய செய்தி: அந்த 15,000த்தில் 11,000 பேரை முதல்வர் மீண்டும் திரும்ப வேலைக்கு எடுத்துக் கொண்டு விட்டார். எது எப்படியோ, இப்பொழுதைக்கு 4,000 பேருக்கு வேலை காலிதான்.

வெங்கடேஷின் கட்டுரைக்கு வருவோம். நாளுக்கு நாள் பட்டப் படிப்பு, உயர் படிப்பு படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஆனால் அரசு வேலைகள் குறைந்து கொண்டே வருகின்றன. இதனால் படிப்பு முடித்து வேலையில்லாமல் இருப்போர் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே வருகிறது. "தெரியவில்லை. எங்கோ தவறு நடந்துவிட்டது." என்கிறார்.

நாட்டின் ஜனத்தொகை அதிகமாகிக் கொண்டே வருகிறது. இந்த அதிகமாகும் தொகையெல்லாமே 20-60 வயதுக்குட்பட்டோர் தொகையில்தான் போய்ச்சேருகிறது. 12ஆவது தாண்டி பட்டப் படிப்புக்கு வருவோர் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டு வருகிறது. அரசு வேலைகள் இனியும் அதிகமாகாது. இருக்கும் வேலைகளும் குறைவாகும். இப்பொழுதைய அரசு ஊழியர்களுக்கே மாநில அரசுகளினால் சரியாக சம்பளமும், ஓய்வூதியமும் கொடுக்க முடிவதில்லை. இன்னும் சில வருடங்களில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பிரச்சினை பூதாகாரமாக வெடிக்கும்.

பல மாநிலங்களில், முக்கியமாக தமிழகத்தில், கிராமப்புறங்களில் வறட்சி தலைவிரித்தாடுகிறது. இனியும் தண்ணீர் சரியாகக் கிடைக்கப் போவதுமில்லை. இதனால் பாரம்பரிய விவசாயத்தை நம்பி இருப்போர் நிலை கவலைக்கிடம்தான். நிலமற்ற விவசாயக் கூலிகளாக இருப்போர்க்கு சரியான வேலையோ, ஊதியமோ கிடைக்கப் போவதில்லை.

கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு வந்து கட்டிடத்தொழிலில் கூலி வேலை செய்வோர்க்குக் கிடைக்கும் ஊதியம் நகர்ப்புற வாழ்க்கைக்குப் போதாது. இதனால் விளிம்பு நிலையில் வாழ்வதே அவர்கள் போக்கிடமாகி விடுகிறது.

இந்தப் பிரச்சினைகளுக்கு ஒட்டுமொத்தமாக உலகமயம் (globalisation), தாராளமயத்தைக் (liberalisation) குறை சொல்கிறார்கள் பலர். அது எப்படி என்று எனக்குப் புரியவில்லை. மக்கள் தொகை அதிகரிப்பது உலகமயமாதல், தாராளமயமாதலினாலா? நீர் வளத்தை பாரம்பரிய விவசாயிகள் சரியாக உபயோகிக்காமல் இருப்பது உலகமயமாதல், தாராளமயமாதலினாலா? அரசிடம் வேலை வாய்ப்பு அதிகரிக்காததற்கு உலக வங்கி, சர்வதேச நிதியமைப்பு ஆகியவற்றை நோக்கி சிலர் கை நீட்டுகின்றனர். மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறை (fiscal deficit, revenue deficit) அதிகமான காரணத்தால் மாநில அரசுகள் உலக வங்கி, சர்வதேச நிதியமைப்பு ஆகியவற்றிடம் கையேந்திக் கொண்டு போக நேர்கையில், அரசுகள் தமது நிதிநிலையில் ஒழுங்கைக் கொண்டுவர வேண்டும் என்பதால் உலக வங்கி போன்றவை அரசின் செலவுகளை குறைக்கச் சொல்கின்றன. அதிலும் அத்தியாவசியச் செலவுகளான முதலீட்டைக் குறைக்க ஒருபோதும் சொன்னதில்லை.

மாநில, மத்திய அரசுகளின் பெரும்பான்மை முதலீடு இதுநாள் வரை விவசாயப் பாசனத்திலேயே இருந்து வந்தது. அப்படிப்பட்ட பாசன நீரும் இலவசமாக வழங்கப்பட்டிருந்தது. இப்பொழுது மேற்படி முதலீட்டால் உபயோகம் குறைவு என்றாகியுள்ளது. இன்றைய தி பிசினஸ் லைன் கட்டுரைப்படி, ஒரு கன மீட்டர் தண்ணீரைக் கொண்டு அமெரிக்க விவசாயிகள் 1.3 கிலோ தானியத்தை உற்பத்தி செய்கையில், இந்திய விவசாயிகள் அதே தண்ணீரைக் கொண்டு வெறும் 0.3 கிலோ தானியம் மட்டுமே உற்பத்தி செய்கின்றனர். மேற்கொண்டு பாசன வசதிகளுக்காக முதலீடு செய்ய மாநில அரசுகளிடம் பணம் இல்லை. விவசாய வருவாய்க்கு நம் நாட்டில் வரிகள் ஏதும் இல்லாததால், அறுவடையிலிருந்து அரசுக்கென நேரடியாக பணம் ஏதும் வந்து சேர்வதில்லை. மொத்தமாக நம்மிடம் இருக்கும் தண்ணீரின் அளவு அதிகரிக்காத காரணத்தால் கர்நாடக அரசு ஆற்றுப் பாசனத்துக்கென அணைகளைக் கட்டி கால்வாய்களை வெட்டினால், தமிழகம் நேரடியாக பாதிக்கப்படுகிறது. பஞ்சாப் ஆற்றுப் பாசனத்துக்குச் செலவிட்டால், ஹரியானாவுக்குத் தொல்லை! அப்படியே ஆற்றுத் தண்ணீர் அதிக அளவில் கிடைக்கும் மாநிலத்திலும், செயல்திறன் குறைவாக இருப்பதால் ஒரு கன மீட்டருக்கு நாம் உற்பத்தி செய்வது வெறும் 0.3 கிலோ தானியமே!

கடந்த நாற்பது வருடங்களில் உழவின் மூலம் கிடைக்கும் வருவாய் மொத்த GDPஇல் 45%இலிருந்து 28% ஆகக் குறைந்து விட்டது. இனியும் குறைந்து கொண்டேதான் இருக்கும். கிராமப்புறங்களில் இதனால் வேலை வாய்ப்பு குறைந்து கொண்டேதான் இருக்கும். மற்ற துறைகளில், முக்கியமாக சேவைத்துறையில், வருமானம் பெருகிக் கொண்டிருக்கிறது. ஆனால் சேவைத்துறையில் சராசரி வருமானம் அதிகமாக இருப்பதால், மிகக் குறைவான வேலைகளே உருவாகியுள்ளன. அப்படி உருவான வேலைகளும் நகர்ப்புறங்களிலேதான் அதிகமாக உள்ளன. அதாவது கிராமப்புறங்களில் மாத வருவாய் ரூ. 2,000 இருக்கக்கூடிய 1000 வேலைகள் போய், நகர்ப்புறங்களில் மாத வருவாய் ரூ. 20,000 இருக்கக்கூடிய, 120 வேலைகள் மட்டுமே உருவாக்கப்படுகின்றன. நாட்டின் பொருளாதாரம் 20% பெருகியுள்ளது. ஆனால் 880 வேலையற்றோர் உருவாக்கப்பட்டுள்ளனர்.

வேலை வாய்ப்பை அதிகரிக்க என்னதான் வழி?

1. கிராமப்புறங்களில் விவசாயம் சாராத வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும். அதற்கு முதலாவதாக தொழில்சார்ந்த கல்வியினை உயர்நிலை (ஆறாவது வகுப்பு) முதற்கொண்டே தொடங்க வேண்டும். மாணவர்களுக்கு 50% நேரத்தில் உற்பத்தி சார்ந்த கலைகள் - லேத் பட்டறை, தச்சு வேலை, கொத்து வேலை, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, தையல் வேலை, கணினித் தட்டெழுத்து, கணினியின் மற்ற உபயோகங்கள் போன்ற பலவற்றை - கற்றுத்தர வேண்டும். பத்து வருடங்கள் உருப்படியில்லாமல் பாடப்புத்தகங்களை மட்டும் படித்துவிட்டு ஒன்றையும் சாதிக்க முடியப்போவதில்லை.

2. கிராமங்களில் உழவு சாராத மீன்/இறால் வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு (பால், இறைச்சி) போன்ற தொழில் பெருக குறைந்த வட்டியில் கடன் கொடுப்பதை வங்கிகள் பெருமளவில் செய்ய வேண்டும். மேற்படி வளர்ச்சிக்குத் தேவையான கால்நடை, மீன் உணவு/தீவன உற்பத்திக்கான தொழில்நுட்பங்களை கிராமங்களுக்குக் கொண்டுபோக வேண்டும். இதற்கான தண்ணீர் தேவையும் குறைவாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

மாற்று விவசாயம். ஏற்கனவே இது நடக்க ஆரம்பித்துள்ளது. பயோ டீசல் உருவாக்கத் தேவையான Jatropha Curcas போன்ற செடிகளை வளர்ப்பது பலவகையில் நன்மை பயக்கக்கூடும். இதுபோன்ற பல மாற்றுப் பொருட்களை உற்பத்தி செய்ய விவசாயிகளை ஊக்குவித்தல், குறைந்த வட்டியிலான கடன், வட்டியில்லாக் கடன், மான்யம் ஆகியவை தர வேண்டும்.

பயோ டீசல் மூலம் கிராமங்களே தங்களுக்குத் தேவையான எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றை உற்பத்தி செய்து கொள்ள முடியும் எனத் தோன்றுகிறது. ஆப்பிரிக்காவில் இருக்கும் பல பின்தங்கிய நாடுகள் இதை வெற்றிகரமாக செய்து வருகின்றன என்று அறிகிறேன்.

3. அவசர அவசரமாக நெடுஞ்சாலைகள் முதல் சிறு சாலைகள் வரை போட்டு கிராமப்புறங்களை பக்கத்தில் உள்ள சிறு நகரங்களுடன் இணைப்பது, கிராமப்புற வீடுகளுக்கு மின்சார வசதி அளிப்பது ஆகியவற்றின் மூலம் நகரங்கள் கிராமப்புறங்களிலிருந்து பல சேவைகளை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடியும். உதாரணம்: சலவை செய்தல், துணி தைத்துத் தருவது, செருப்பு உற்பத்தி போன்றவை.

4. கிராம, சிறு நகரப் பகுதிகளில் அதிக பட்ச அளவில் வேலை வாய்ப்பைக் கொடுக்கும் தனியார் நிறுவனங்களுக்கு இலவச நிலம், குறைந்த விலையில் நிலம், குறிப்பிட்ட காலம் வரையிலான வரி விலக்கு ஆகியவை கொடுக்கப்பட வேண்டும்.

5. பொறியியல் பாலிடெக்னிக்/கல்லூரிகளிலிருந்து படித்து வெளியே வரும் மாணவர்கள் சொந்தத் தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் அல்லது ஈக்விட்டி வழங்குவதற்கு அரசு வென்ச்சர் முதலீட்டு நிறுவனங்களை உருவாக்க வேண்டும்.

எனக்கு இப்பொழுதைக்குத் தோன்றியது இவ்வளவுதான்.

Tuesday, June 22, 2004

Rajaji Centre for Public Affairs

Rajaji Centre for Public Affairs என்னும் அமைப்பு சென்னையிலிருந்து இயங்கிக் கொண்டு வருகிறது. முகவரி: 283, டி.டி.கே சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை 600 018. தொ.பே.எண் 2499-2155. மின்னஞ்சல் முகவரி: svco@vsnl.com

1995இல் ராஜாஜியின் பெயரால் உருவான இந்த அமைப்பின் நோக்கம், பொருளாதாரம், கலை, கல்வி, தொழில்நுட்பம், ஆட்சி, நிர்வாகம், சுற்றுச்சூழல் போன்றவை பற்றி கருத்தரங்குகள், பேச்சுகள், கூட்டங்கள், எழுத்துகள் போன்றவற்றால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், பரவலான பொதுக்கருத்தை உருவாக்குவதுமாகும்.

இவர்கள் நடத்தியுள்ள பல கூட்டங்களுக்குப் போயிருக்கிறேன்.

"Disinvestment in India, so far ... " என்னும் சிறு பதிப்பை வெளியிட்டுள்ளனர். (விலை ரூ. 10).

Sunday, June 20, 2004

குடிமக்கள் முரசு

சென்னையிலிருந்து உந்துனர் அறக்கட்டளை சார்பாக 'குடிமக்கள் முரசு' என்றதொரு மாத இதழ் வெளியாகிறது. இதன் ஆசிரியராக அ.கி.வெங்கடசுப்ரமணியன் (ஓய்வு பெற்ற இ.ஆ.ப) இருக்கிறார். குடியாட்சியில் மக்கள் அதிக ஈடுபாட்டுடன் இருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்ந்து செயல்படும் அறக்கட்டளை இந்த அமைப்பு. ஊழலற்ற நல்லாட்சியின் அவசியம், நாட்டு நலனுக்காக குடிமைச் சமூக அமைப்புகளின் செயல்பாடுகள், தேர்தல்கள் பற்றிய அலசல்கள் போன்றவை பற்றிய பல கட்டுரைகள் அடங்கிய மாத இதழ் இது.

இந்த இதழுக்கான ஆண்டுச்சந்தா ரூ. 60. முகவரி: 3, சாந்தி அவென்யூ, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், திருவான்மியூர், சென்னை 600 041. தொ.பே.எண்: 2446-1597, 2446-1682, 2446-1683. மின்னஞ்சல்: catalyst-trust@eth.net

என்னிடம் 20 ஆண்டுச்சந்தாக்கள் (ஏற்கனவே பணம் கட்டப்பட்டவை) உள்ளன. இந்த இதழைப் பெற விரும்பும் நண்பர்கள் (முதல் இருபது பேர்) முகவரிகளை (இந்திய முகவரிகள் மட்டும்...) என்னிடம் அனுப்பி வைத்தால் அடுத்த மாதத்திலிருந்து இதழ்களை உங்களுக்கு அனுப்புமாறு செய்கிறேன்.

Monday, June 14, 2004

அரசு நிதிநிலை 2020 - நீண்டகால முன்னோக்கு

சென்னையைச் சேர்ந்த "பொதுச் செலவுகள் வட்ட மேசை அறக்கட்டளை" (Public Expenditure Round Table Trust) என்ற அரசியல் சார்பற்ற அமைப்பு பொதுச் செலவுகள் பற்றிய பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வது, விவாதங்களை ஊக்குவிப்பது, புத்தகங்கள் வெளியிடுவது, இவை மூலமாக மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்து அவை மேற்கொள்ளும் பொதுச் செலவுகளின் திறப்பாட்டையும் செயல்திறனையும் அதிகரிப்பது போன்ற நோக்கங்களைக் கொண்டது.

ஆங்கிலத்தில் மட்டுமில்லாமல், தமிழிலும் அச்சிட்டு இலவசமாக வெளியிடுகின்றனர். நேற்று எனக்கு இவர்கள் வெளியிட்டிருந்த "அரசு நிதிநிலை 2020 - நீண்டகால முன்னோக்கு" என்ற ஆவணம் கிடைத்தது. [ஆக்கியோர்: முனைவர் கி.வேங்கடராமன், இ.ஆ.ப (ஓய்வு), தமிழாக்கம்: முனைவர் ஏ.எம்.சுவாமிநாதன், இ.ஆ.ப (ஓய்வு)] அந்த ஆவணத்திலிருந்து:
முனைவர் கி.வேங்கடராமன் சென்னையில் அமைந்துள்ள பொதுச் செலவுகள் வட்ட மேசையின் தலைவர். இந்திய ஆட்சிப் பணியில் உயர் அலுவலராகப் பணிபுரிந்த இவர், பின்னர் வியன்னாவைத் தலைநகராகக் கொண்ட ஐக்கிய நாடுகள் தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (UNIDO) ஒரு நிர்வாக இயக்குனராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார். பொதுச் செலவுகள் குறித்த சில புத்தகங்களை எழுதியுள்ளார்.

"தி ஹிந்து" நாளிதழின் "2004 இந்தியத் தொழில்துறை" பற்றிய சிறப்பிதழுக்காக இவர் எழுதிய ஒரு கட்டுரையின் தமிழாக்கம் இக்குறுநூல்.

முனைவர் ஏ.எம்.சுவாமிநாதன் இந்த அமைப்பின் நிர்வாக அறங்காவலர். இவரும் இந்திய ஆட்சிப்பணியில் அலுவலராக, நிதிச் செயலர் உள்பட பல பதவிகளில் தமிழகத்தின் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் செலவு சீராய்வு ஆணையத்தின் தலைவராகப் பணிபுரிந்து பல அறிக்கைகள் கொடுத்துள்ளார்."
பொதுச் செலவுகள் வட்ட மேசையைத் தொடர்பு கொள்ள விரும்புவோருக்காக முகவரி: பொதுச் செலவுகள் வட்ட மேசை, 3/357, ஏ.ஜி.எஸ் காலனி, கடற்கரை லே அவுட், கொட்டிவாக்கம், சென்னை 600 041. தொ.பே: 2451-1655. இப்பொழுதைக்கு என்னிடம் மின்னஞ்சல் முகவரி கிடையாது.

Sunday, June 13, 2004

தினமலரின் ஒழுக்கக்கேடு

மே-ஜூன் 2004 கவிதாசரண் இதழில் தினமலர் ஆசிரியர் கடிதம் பகுதியில் கடந்த சில மாதங்களாக நடந்து வரும் அசிங்கத்தைப் பற்றிய ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது.

இந்த விஷயத்தை அம்பலப்படுத்தியது Forum for Media Ethics and Accountability என்னும் அமைப்பு. 'வன்முறையை உருவாக்குவதில் பத்திரிகைகளின் பங்கு' என்னும் தலைப்பில் தினமலர் மற்றும் அதே நிறுவனம் நடத்தும் பத்திரிகையான காலைக்கதிர் ஆகியவற்றில் வெளியான சில ஆசிரியர் கடிதங்களின் நகல்களை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

தினமலரில் 23-1-2004 அன்று வி.பி.கே.சரவணன், சின்னமனூரிலிருந்து எழுதுவதாக வெளியான ஒரு கடிதம் (ரசிகர்களே ஒன்று திரளுங்கள்!), அப்படியே அச்சாக காலைக்கதிர் 28-1-2004இல் என்.வடிவேலு, பெங்களூரிலிருந்து எழுதுவதாக (ரசிகர்களே பாடம் புகட்ட தயாரா?) வெளியாகியுள்ளது. கடிதத்தின் சாரம் - ரஜினி ரசிகர்கள் பாமகவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும், கமலின் ரசிகர்கள் கிருஷ்ணசாமியை எதிர்க்க வேண்டும் என்பதுமே. ஆனால் முடிக்கும்போது "இவர்களுக்குத் தக்க பாடம் புகட்ட விரைவில் பார்லிமென்ட் தேர்தல் வருகிறது. ராமதாசையும், கிருஷ்ணசாமியையும், கருணாநிதியையும் தண்டிக்க தக்க தருணம் இதுவே." என்கிறார் கடிதத்தை "எழுதியவர்".

இதைப்போலவே 30-1-2004 இல் தினமலரில் எம்.சுரேஷ், கடலூரிலிருந்து எழுதுவதாக வெளியான கடிதம் (ரஜினி ரசிகர்களே... உஷார்!) அப்படியே அச்சாக காலைக்கதிரில் 3-2-2004 அன்று ம.முத்துக்குமார், ஈரோட்டிலிருந்து எழுதுவதாக (ராமதாஸுக்கு பாடம் புகட்டுவோம்) வெளியாகியுள்ளது. கருத்து: "இவரது (ராமதாஸ்) கட்சிக்கும், இவர் சேர்ந்துள்ள அணிக்கும் பாடம் புகட்ட, இனி நம்மைப் பற்றி வாய் திறக்காமல் இருக்க வைக்க, நமக்கு சரியான சந்தர்ப்பம் ஒன்று தேர்தல் மூலம் வந்துவிட்டது; உஷாராக செயல்படுவோம்.".

தினமலர் 31-1-2004, ஆர்.ராஜவேல், விருதுநகரிலிருந்து எழுதுவதாக - பாடம் புகட்டுவோம் ராமதாசுக்கு!. காலைக்கதிர் 4-2-2004, மு.ரஜினிபித்தன், கரூரிலிருந்து எழுதுவதாக - பலத்தைக் காட்டுவோம். ஒரே அச்சு. "ராமதாஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் அனைத்து கட்சிகளுக்கும் நமது பலத்தைக் காட்ட வேண்டும்."

தினமலர் 6-2-2004இல் ராமதாஸ், பாமக சார்பிலிருந்து பதில் வருவதைப்போல ஒரு கடிதம் வருகிறது. எம்.கரிகாலன், சிதம்பரத்திலிருந்து எழுதுவதாக (ரசிகர்களால் தொல்லை தான்!). அதன் அச்சு காலைக்கதிர் 10-2-2004இல் ஆர்.ஜெயராமன், சங்ககிரியிலிருந்து எழுதுவதாக (வம்புக்கு இழுக்கும் ரஜினி ரசிகர்களுக்கு) என்று வெளியாகிறது. இரண்டும் சொல்வது: "ராமதாஸுக்காக எந்தத் தியாகமும் செய்யத் தயார் நிலையில் பா.ம.க.,வில் தொண்டர்கள் உள்ளனர். எங்களை சீண்டிப் பார்த்தால் சரியான பதிலடி கொடுப்போம்."

ஆக, தினமலர் நிர்வாகமும், ஆசிரியரும் சேர்ந்து வேண்டுமென்றே கடிதங்களைத் தயார் செய்து (அதிலும் இப்படியா மாட்டிக்கொள்வதைப் போலச் செய்ய வேண்டும்?) பாமக தொண்டர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையில் வன்முறை வெடிக்குமாறு செய்துள்ளனர்.

மேற்குறிப்பிட்ட கடிதங்கள் போல இன்னமும் பல உள்ளனவாம். கவிதாசரண் தவிர பிற செய்திப் பத்திரிகைகளுக்கும் இந்த விவரங்கள் தெரியப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் பிறர் எல்லோரும் வாய்மூடி மவுனம் காத்தது ஏன்?

தினமலரின் இந்தச் செய்கை மிகவும் வன்மையாகக் கண்டிக்கப் பட வேண்டியது. இதழியல் தர்மத்திற்கு முற்றும் விரோதமானது.

தினமலர் மீது INS விசாரணை நடத்தி தண்டிக்குமா?

[பி.கு. வழக்கம் போல கவிதாசரண் கட்டுரை தினமலரின் மோசடிகளை நேரடியாகக் கண்டிப்பதை மட்டும் செய்யாமல் "பார்ப்பனர்கள் படு சமர்த்தர்கள்" என்று தொடங்குகிறது.]

Saturday, June 12, 2004

இலைவடாம்

இலைவடாம்இந்த அற்புதமான உணவுப்பொருளை சாப்பிட்டிருக்கிறீர்களா? எந்தவகை பொறித்த அப்பளமும், இந்த பொறித்த இலைவடாத்திற்கு முன் நிற்க முடியாது.

ஹார்லிக்ஸ் குழந்தை சொல்வதைப் போல, இதை அப்படியே சாப்பிடலாம். அதுதான் அதிக ருசி. ஒரு டம்ளர் அரிசி, அத்துடன் ஒரு கை ஜவ்வரிசி, ருசிக்கேற்ப பச்சை மிளகாய் சேர்த்து நன்கு குழைய அரைத்து, சிறிது உப்பும், முழுச் சீரகமும் போட வேண்டும். பின் வாழையிலையில் கரண்டியால் ஒரு ஸ்பூன் அரைத்த மாவை வட்டமாக எழுத வேண்டும். இந்த வாழையிலையை நீராவியில் வேகுமாறு வைத்து, மேலே மூடி, இருபது விநாடி கழித்து எடுத்தால் சுடச்சுட இலைவடாம் தயார்.

அப்படியே பிய்த்து அப்படியே வாயில் போடவேண்டியதுதான். ருசியான காலை உணவு தயார். (இன்று காலை என் வீட்டில் இதுதான் உணவு.)

பிய்த்து எடுத்த வடகங்களை வெயிலில் காயவைத்து நன்கு காய்ந்ததும் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டால் எப்பொழுது வேண்டுமானாலும் எண்ணெயில் பொறித்து சாப்பிடலாம். நல்ல ஜுரம் வந்தவர்கள், பொறிக்காமல், நெருப்பில் காய்ச்சி, ரசம் சாதத்துக்குத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

இதெல்லாம் செய்யப் பொறுமை கிடையாது என்பவர்களுக்காக வீடு தேடி வந்து டெலிவரி செய்யத் தயாராக இருக்கிறார்கள் சென்னையில். தொலைபேசியில் சொன்னால், சுடச்சுட வீட்டிற்கே வந்து சப்ளை செய்வார்களாம். தொடர்பு கொள்ள வேண்டியவர்: ஜெயந்தி பார்த்தசாரதி, தொலைபேசி எண்: 2471-5430. ஒரு 'fresh' இலைவடாம் ரூ. 1.

காய்ந்த இலைவடாம் 100க்கு விலை ரூ. 120 ஆகுமாம்.

Friday, June 11, 2004

ஆளுக்கொரு பட்டியல்

இணையத்தில் வலைப்பதிவு வைத்துள்ள தமிழ் எழுத்தாளர்கள் எல்லோருக்கும் 1, 2, 3 என்று வரிசையாக பட்டியலிட ஆசை போல.

பா.ராகவன் தன் பதிவில் ஒன்பது கட்டளைகள் என்று வலைப்பதிவாளர்களுக்கு, மின்குழுமத்தில் எழுதுபவருக்கு, இணைய முகமூடிகளுக்கு, இணைய இதழ்களுக்கு எழுதுவோருக்கு என்று இதுவரை கட்டளைகளைப் பிறப்பித்துள்ளார். அதைத் தொடர்ந்து மிகவும் காரசாரமான விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதற்கிடையில் புதிதாக (இணையத்துக்கு) எழுத வந்துள்ள, நமக்கு மிகவும் பரிச்சயமான எஸ்.ராமகிருஷ்ணன் பல வலைப்பதிவுகளையும், இணைய இதழ்களையும் மேய்ந்து தான் புரிந்துகொண்டதை ஒன்றிலிருந்து பத்துவரை ஒரு பட்டியலிட்டுள்ளார்.

இந்தப் பட்டியலைப் போலவே இன்னுமொரு பட்டியல் அவரிடமிருந்து - ஒரு நூறு புத்தகங்களை தான் படித்ததில் தனக்குப் பிடித்ததாகச் சொல்கிறார். இதில் நான் படித்திருப்பது: 3, 4, 5, 7, 10, 11, 13, 14, 16, 23, 25, 29, 30, 32, 35, 36, 64 ஆகியவை. கைவசம் இருப்பது 61, 69, 98 - இன்னமும் படிக்கவில்லை. கியூவில் உள்ளது.

தமிழோவியம் கிரிக்கெட்

இந்த வாரம் தமிழோவியத்தில் கிரிக்கெட் கவரேஜ் பற்றி. தொலைக்காட்சியில் நாம் பார்க்கும் கிரிக்கெட் ஒளிபரப்பு எப்படி நம்மை வந்தடைகிறது? பின்னணியில் வேலை செய்பவர்கள் யார் என்பதைப் பற்றிய சிறு குறிப்பு. கட்டுரையில் ஒரு பரிசுக்கான கேள்வியும் உண்டு.

Thursday, June 10, 2004

தமிழகப் பொறியியல் கல்லூரிகள் பற்றி

தி ஹிந்து, தினமலர் செய்திகள்

தனியார் பொறியியல் கல்லூரிகள் வருடத்திற்கு ரூ. 32,500 தான் கட்டணமாக வசூலிக்க முடியும் என்று தமிழக அரசு நியமித்த குழு பரிந்துரை அளித்துள்ளது. ஆனால் ஏதேனும் கல்லூரி தேசிய தர அங்கீகாரக் குழு (National Board of Accreditation) மூலம் அங்கீகாரம் பெற்ற படிப்புகளுக்கு ஆண்டுக் கட்டணம் ரூ. 40,000 வசூலிக்கலாம்.

போன ஆண்டு தனியார் பொறியியல் கல்லூரிகளில் அரசு கோட்டா வழியாக வந்தவர்கள் ஆண்டுக்கு ரூ. 25,000 உம், நிர்வாக கோட்டாவில் படித்தவர்கள் ஆண்டுக்கு ரூ. 30,000 உம் கட்டிப் படித்தனர். இப்பொழுது இருவருக்கும் ஒரே கட்டணம். இந்தப் புதிய கட்டணம் (ரூ. 32,500 (அ) ரூ. 40,000) படிப்புக் கட்டணம், சேர்க்கைக் கட்டணம், கணினி, நூலகம், ஆய்வகம், பராமரிப்புக் கட்டணங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது. அதாவது தனியார் கல்லூரிகள் இதையெல்லாம் காரணம் காட்டி அதிகமாக வசூலிக்க முடியாது. அதிக பட்சமாக சேர்க்கும்போது முன்கட்டணமாக ரூ. 5,000 வசூலிக்கலாம். ஆனால் இதுவும் மாணவர்கள் வெளியே போகும்போது திருப்பித் தரப்பட வேண்டும். புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள கட்டணம் 2006-07 வரை அமலில் இருக்கும்.

===

எந்தக் கல்லூரியாவது இந்தக் கட்டணத்திற்கு மேல் வசூலித்தால், யாராவது அவ்வாறு புகார் கொடுத்தால், அந்தக் கல்லூரி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு நியமித்த குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி A.ராமன் கூறுகிறார்.

ஆனால் உண்மை நிலை என்ன? கடந்த சில தினங்களாக பனிரெண்டாவது படித்த மாணவர்களிடம் தகவல்கள் சேகரித்து வருகிறேன். சென்னையைச் சேர்ந்த சில தனியார் பொறியியல் கல்லூரிகளில் இப்பொழுது படித்து முடித்திருக்கும் சில மாணவர்களையும் சந்தித்துப் பேசினேன்.

தனியார் பொறியியல் கல்லூரிகள் ரசீது ஏதும் கொடுக்காமல் நிர்வாக கோட்டாவில் வரும் மாணவர்களிடம் எக்கச்சக்கமாக பணம் வசூலிக்கின்றனர். இது லட்சக்கணக்கில் போகிறது. கணினித்துறை, தகவல்தொடர்புத்துறை என்றால் நான்கு லட்சமாம். "கீழ்த்தரமான" மெக்கானிகல், சிவில் என்றால் ரூ. 60,000 வரை வருமாம்.

"தரமான" கல்லூரிகள் என்றால், ஏழு லட்சம், எட்டு லட்சம் வரை ஆகுமாம்.

தனியார் மருத்துவக் கல்லூரி என்று ஒன்றுதான் உள்ளது. அங்கு இப்பொழுது போகும் விலை 35 லட்சமாம்! இதெல்லாம் கேட்கும்போது திகைப்பாக இருக்கிறது. மருத்துவம் பற்றிய செய்தி நேரடியாக வரவில்லை. அதனால் உண்மை நிலை என்னவென்று தெரியவில்லை. ஆனால் பொறியியல் பைசா விஷயம் நேரடியாக, தான் இவ்வளவு கொடுத்துதான் படித்தேன் என்று சிலர் என்னிடம் சொன்னார்கள்.

பெற்றோர்கள் அனைவரும் கேட்ட (கறுப்புப்) பணத்தை எப்படியோ தயார் செய்து கொடுத்து விட்டு ரசீது எதுவும் வாங்காமல் இந்தக் கொடுமைக்கு உடன்பட்டிருக்கிறார்கள். இவர்கள் யாராவது புகார் செய்வார்களா? அதனால் தன் மகன்/மகள் கல்வி பாதிக்கப்படுமே என்ற பயம்தான் இருந்துகொண்டிருக்கும்.

இதற்குக் காரணம் demand/supply சமன்பாடு சரியாக இல்லாதிருப்பதனால்தான். இதனால்தான் தனியார் கல்லூரிகளும் சட்டத்துக்குப் புறம்பாக எக்கச்சக்கமாக பணம் கேட்கிறார்கள். பொதுமக்களும் பணம் கொடுக்கிறார்கள். மேலும் கல்வி நிலையங்களை லாபநோக்குள்ள நிறுவனங்கள் நடத்தக்கூடாது என்னும் சற்றே பைத்தியக்கராத்தனமான கண்ணோட்டம் இருப்பதால் திருட்டுத்தனம் அதிகமாகியுள்ளது. அறக்கட்டளை என்ற பெயரில் மோசடிகள்தான் நடக்கின்றன. கெட்டவர்கள், சட்டத்துக்குப் புறம்பாக பணம் சேர்க்க ஆசையுள்ளவர்கள் (அதில் ஈடுபட்டுள்ள அனைவரும் ரவுடிகளும், அரசியல்வாதிகளும்தான்) மட்டும்தான் இன்று "லாபநோக்கில்லாத" அறக்கட்டளை ஒன்றை செட்டப் செய்து அதன் மூலம் பெற்றோர்களை ஏமாற்றி capitation fee என்ற பெயரில் ரசீது கொடுக்காது கறுப்புப் பணத்தை வாங்கிக் குவிக்கிறார்கள்.

இதற்குபதில் தமிழக அரசு "யார் வேண்டுமானாலும் கல்வி நிலையங்களைக் நடத்தலாம்; அதில் லாபமும் சம்பாதிக்கலாம்; ஆனால் அரசின் கண்காணிப்பு இருக்கும்; அரசு ஒரு ரெகுலேட்டர் மூலமாக அதிகபட்சக் கட்டணம் எவ்வளவு இருக்கும் என்பதை கறாராகத் தீர்மானிக்கும்; அதிலிருந்து எந்த வேறுபாடுகள் இருந்தாலும் அதற்கான தண்டனை மிக அதிகம் (ஜெயில் தண்டனையும் சேர்த்து)" என்று சொன்னால், பல நிறுவனங்கள் தரமான கல்வியை வேண்டிய அளவிற்கு வழங்க முடியும்.

கல்வித்துறையில் அத்தனை பணம் உள்ளது. ஆனால் அத்தனையும் இன்று ரவுடிகள் கைக்கு - அதுவும் வரி ஏதும் கொடுக்காத கறுப்புப் பணமாகப் போய்ச்சேருகிறது!

Wednesday, June 09, 2004

இலட்சிய சிகரம்

நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன்,
எங்கு இருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா?

நான் தோண்டிக்கொண்டே இருக்கிறேன்,
எங்கு இருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா?

நான் பெருங்கடலில் நீந்திக்கொண்டே இருக்கிறேன்,
எங்கு இருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா?

இறைவா, நூறு கோடி மக்கள்
இலட்சிய சிகரத்தையும், அறிவுப் புதையலையும்,
இன்ப அமைதியையும், உழைத்தடைய அருள்வாயாக.

குடியரசுத் தலைவர் அ.ப.ஜெ. அப்துல் கலாம் பாராளுமன்றத்தில் 7 ஜூன் 2004 அன்று ஆற்றிய உரை தொடங்குமுன்னர், சொன்ன கவிதை இது. அன்று காலை காலாற நடந்துகொண்டிருக்கும்போது இவருக்கு திடீரென்று தோன்றியதாம். திருக்குறள் ஒருசில (சிதம்பரம் பட்ஜெட் போடும்போது சொல்வார்) தவிர பாராளுமன்றத்தில் தமிழில் சொந்த சரக்கு எடுத்து விட்டவர் நம்மாள்தான் இதுவரை.

வாஜ்பாயி பிரதமராக இருந்திருந்தால் எசப்பாட்டு படித்திருப்பார் ஹிந்தியில்.

===

நேற்றைய கேள்விகளுக்கு 'match the following' பகுதிக்கு பலர் சரியான விடை சொன்னார்கள். ஆனால் யாருக்கும் அப்துல் கலாம் பெயர் தோன்றவில்லையா? எல்லோருக்கும் GKஇல் முட்டைதான்:-) பலரது கவிதைகள் நன்றாக இருந்தன.

Tuesday, June 08, 2004

Match the following

இலட்சியம், அறிவு, அமைதி
புதையல், சிகரம், தீவு

கேள்விகள்:

1. மேலே முதல் வரியில் உள்ள சொற்கள் ஒவ்வொன்றுக்கும் இணையான சொற்களை இரண்டாம் வரியிலிருந்து எடுத்து பொருத்தி அமைக்கவும். (3 மதிப்பெண்கள்)

2. இந்தச் சொற்களைப் பார்த்ததும் மனதில் தோன்றும் மனிதர் பெயர் என்ன? (2 மதிப்பெண்கள்)

3. மேற்கண்ட சொற்களை அமைத்து ஒரு கவிதை இயற்றவும். (நல்ல கவிதையாக இருந்தால் 5 மதிப்பெண்கள்)

நல்ல தமிழ்ப்படங்கள் விலைபோகுமா?

நியூ ஜெர்ஸியில் சிந்தனை வட்டம் சார்பில் குறும்பட விழா ஒன்று நடந்திருக்கிறது. இதைப்பற்றிய பலருடைய பதிவுகளை இங்கெல்லாம் பார்க்கலாம்:அருணின் பதிவில் நடந்த விவாதத்தில் இந்தப் படங்கள் விற்பனைக்குக் கிடைக்குமா என்று கேட்டிருந்தேன். சிவகுமார் ஒரு படம் விற்பனைக்குக் கிடைக்கிறதென்றும், விழாவின் போது காண்பிக்கப்பட்ட சிறப்பு முழுநீளப் படம் 'ஒருத்தி' கூட இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் சொல்லியிருந்தார். மேலும் படங்களை DVD மூலம் விற்பதால் போட்ட படம் கிடைக்குமா என்று தெரியவில்லை என்று இம்மாதிரியான படங்களை எடுக்கும் ஒருவர் சொன்னதாகவும் எழுதியிருந்தார்.

பாஸ்டன் பாலாஜி, இந்தப் படங்களை 'pay per view' போல $3-4 க்கு ஒலி/ஒளியோடையாக விற்கலாமே என்று யோசனை சொல்லியிருந்தார்.

நல்ல தமிழ்ப் படங்கள் - குறும்படங்கள் (5-30 நிமிடங்கள்), விவரணப் படங்கள் (30-60 நிமிடங்கள்), நெடும் படங்கள் (120-150 நிமிடங்கள்?) - எதற்கும் இப்பொழுது சரியான சந்தை இல்லை. முழு நீளப் படம் ஒன்றை நல்லமுறையில், நல்ல இலக்கியத்தரமான கதையுடனும், நல்ல விதத்தில் படமாக எடுப்பதற்கும் கிட்டத்தட்ட ரூ. 20-30 லட்சம் வரை கூட செலவாகலாம். 'ஒருத்தி' - கி.ராஜநாராயணன் கதையை, அம்ஷன் குமார் எடுத்தது - எத்தனை செலவில் எடுத்தார்கள் என்று தெரியவில்லை. டாலர் விலையில் சொல்லப்போனால் குறைந்தது $30,000 ஆவது ஆயிருக்கும். இன்னமும் மேலேயே கூட போயிருக்கலாம். குறும்படங்களை எடுக்க $5,000 ஆவது தேவைப்படும். இவற்றுக்கு நல்ல சந்தையை ஏற்படுத்தித் தர முடியும்.

நல்ல படங்களுக்கு எம்மாதிரியான சந்தைகள் இருக்கக்கூடும்?
  1. broadband streaming - pay per view - வட அமெரிக்கச் சந்தை, அடுத்து ஐரோப்பா, மற்ற இடங்கள்... இந்தியாவில் இந்தச் சந்தை இப்பொழுதைக்குக் கிடையாது. வர இன்னமும் இரண்டு வருடங்களாகலாம்.
  2. DVD/VCD மூலமாக விற்பனை. திருட்டுத்தனமாக VCD அச்சிடப்படலாம். ஆனால் ரூ. 20 கோடியில் எடுக்கும் படங்களுமே அப்படித்தான் போகின்றன. DVD - வட அமெரிக்கா, ஐரோப்பா. VCD - இந்தியா.
  3. தமிழ்நாட்டில் உள்ளூர் கேபிள் டிவி உரிமை - அதாவது ஒவ்வொரு நகரத்திலும், சிற்றூரிலும் உள்ள உள்ளூர் கேபிள் சானலில் போடக்கூடிய உரிமை. இது ஒரு புதுமையான சந்தை. இதுவரையிலும் அவ்வளவாக கவனிக்கப்படாத சந்தை.
  4. செயற்கைக்கோள் தொலைக்காட்சி. படம் நல்லதாக இருந்தால், முழுநீளப் படமாக இருந்தால், சன், ராஜ், விஜய் என்று எதற்காவது உரிமத்தை விற்பனை செய்ய முடியும். சிலசமயம் தூரதர்ஷனுக்கும் கூட விற்கலாம்.
  5. படம் வெகுஜன மக்கள் பலரையும் கவர்கிறது என்று தெரிய வந்தால் தமிழகத்தில் சில சினிமா தியேட்டர்கள் படத்தை இரண்டு, மூன்று நாட்களுக்குக் காட்ட ஒத்துக் கொள்ளலாம். வட அமெரிக்காவில் ஒருவேளை சில தியேட்டர்களில் ஓடினாலும் ஓடலாம்.
ஆக சந்தையை முழுதாக மாற்றியமைக்க வேண்டும். முதலில் இணையம், அடுத்து DVD/VCD, அதற்கடுத்து தமிழக கேபிள் டிவி என்று நிச்சயமாக போட்ட பணத்தையாவது எடுக்க முடியும். இம்மூன்று சந்தைகளிலும் படத்தின் கால அளவு 15 நிமிடங்கள் இருந்தால் கூடப் போதும். 15, 30, 45 நிமிடங்கள் என்று எந்த அளவானாலும் அதனால் ஒரு குழப்பமும் இல்லை. செயற்கைக்கோள் டிவி, தியேட்டர் என்றால்தான் 120 நிமிடப் படங்கள் தேவை.

இதில் பெருத்த லாபம் இருக்குமா என்று தெரியாது, ஆனால் நிச்சயமாக தரமான ஒலி/ஒளி படங்களை அதை விரும்பும் தமிழ் ரசிகர்களுக்குக் கொண்டு செல்ல முடியும். படத்தை எடுப்பதற்காகப் போட்ட பணத்தை திரும்பி எடுக்க முடியும் என்றே நினைக்கிறேன். இதனால் தமிழில் நல்ல தரமான படங்கள் வெளிவர வாய்ப்பு உண்டு.

நல்ல படங்களாக வந்தால் sub-title மூலமாக பிற மொழி பேசுபவர்களும் பார்க்குமாறு செய்யலாம்.

நண்பர்கள் சிவகுமார், அருண் ஆகியோர் விரும்பினால் இதை ஒரு தொழில்திட்டமாக (business plan) எழுதி, செயல்படுத்துவது எப்படி என்பதையும் முயற்சி செய்து பார்க்கலாம். புதுமையாக... வலைப்பதிவுகள் வழியாகவே விவாதங்கள் மூலம் இந்த ஐடியாவை ஒரு தொழிலாக மாற்றலாமே? இந்தப் பதிவையும், விவாதங்களையும் படிக்கும் சிலர் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய மாட்டார்களா என்ன? :-)

Monday, June 07, 2004

கிருஷ்ணா கிருஷ்ணா

இந்திரா பார்த்தசாரதியின் நாவல். இதுதான் அவர் எழுதி நான் படிக்கும் முதல் படைப்பு. [என் படிப்பறிவு அவ்வளவு குறைவு!] ஜனவரியில் கையில் கிடைத்த புத்தகம் கடைசியாக சனி, ஞாயிறு படித்து முடித்தேன்.

நம் எல்லோருக்கும் தெரிந்த கதையின் நாயகன் மகாபாரத/பாகவத கிருஷ்ணன் இ.பாவின் கைவண்ணத்தில் பாகாய்க் கரைகிறான், வெண்ணெயாய் வழுக்குகிறான். ஜரா என்னும் வேடன் கிருஷ்ணனின் காலில் அம்பெய்ய, உயிரை இழக்கும் முன்னர் கிருஷ்ணன் ஜராவிடம் தன் வாழ்க்கைக் கதையை விவரிப்பதாக இ.பா கற்பனை விரிகிறது. அந்த ஜரா 'world's first ever journalist' நாரதரிடம் கிருஷ்ணன் தனக்குச் சொன்னதைச் சொல்ல, நாரதர் இ.பா வழியாக நமக்கு அந்தக் கதையைச் சொல்கிறாராம்.

முதலிரண்டு அத்தியாயங்களில் இப்படிக் கதை சொல்லும் விதம் எனக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. பக்கங்கள் தாண்டத் தாண்ட இ.பாவின் நடை சுண்டி இழுக்க ஆரம்பித்தது. அனாயாசமாக ஆங்கிலச் சொற்களைப் பேசும் நாரதர், சமகால விஷயங்களைப் பற்றி, ஹிட்லரைப் பற்றி, காந்தியைப் பற்றி, ஜாதிப்பிரச்சினை பற்றி, சமூகத்தில் பெண்களின் நிலை பற்றி வரும்போதும், ஆழ்வார்களிடமிருந்தும், ஷேக்ஸ்பியரிடமிருந்தும், பாரதியிடமிருந்தும், கம்பனிடமிருந்தும் மேற்கோள்களை எடுக்கும்போதும், அதிலுள்ள anachronism புதுமையாகவும், ஒவ்வொரு இடத்திலும் apt ஆகவும் இருக்கிறது. Foul goal போடுவதைப் (பீமன் துரியோதனனின் தொடைகளில் கதையால் அடிப்பது) பற்றிப் பேசும் இ.பா கிரிக்கெட் ரசிகர் இல்லை போலும். 'It is not cricket' என்று எங்கும் வருவதில்லை :-(

என்னை ஏன் பெண்ணாக நினைத்து, தங்களை ஆண்களாகப் பாவித்து பக்தர்கள் வேண்டிக்கொள்வதில்லை எனக் கேள்வி கேட்கிறானாம் கிருஷ்ணன் ஜராவிடம். அதுதான் தனக்கு அதிகப் பிடித்தமானது என்கிறான் கிருஷ்ணன். பின் பாரதியார் அப்படிச் செய்தவர்தான் என்பதையும் மறக்காமல் ஞாபகப்படுத்துகிறான்.

நாவலில் கிருஷ்ணன் அரசியல் சூழ்ச்சிகளில் வல்லவனாக, பெண்களின் காதலனாக, தன்னுடைய 'brand of' தர்மத்தைக் காப்பவனாக, ஒரு சாதாரண மனிதனாக வருகிறான். இதில் என்னைக் கவர்ந்தது காதலன் கண்ணன்தான். ராதையோ, ஏன் பூதனையோ, ஆசைப்பட்டு ஆனால் கல்யாணம் செய்து கொள்ள இயலாத திரவுபதியோ, ஷைல்பியாவோ, இல்லை சற்றே ஆண் தன்மையுள்ள பாமாவோ, ருக்மிணியோ - இ.பாவினால் உந்தப்பட்டு நாமே அவர்களாகி கிருஷ்ணனைக் காதலிக்கிறோம். இங்குதான் இ.பாவின் எழுத்து வன்மை வெளிவருகிறது.

பாகவதத்திலும், மகாபாரதத்திலும் கிருஷ்ணன் பற்றி சொல்லப்பட்ட அத்தனை நுணுக்கமான விஷயங்களும் கதையில் உள்ளது. அவற்றில் சொல்லப்படாத கற்பனை உரையாடல்களும் உண்டு. கதை சொல்லும் விதத்தில் நேர்க்கோட்டில் செல்லாமல் அங்கும் இங்கும் தாவிச் செல்லும் உத்தி - post-modernismஓ என்ன இழவோ - அதெல்லாம் முக்கியமில்லை, ஆனால் இங்கு மிக இயல்பாகச் செல்கிறது. அங்கும் இங்குமாகக் கிளைக் கதைகள். கதையில் கிருஷ்ணனை அடுத்து அதிகமாக வருவது ஜராசந்தன். அவன் பிறப்பிலிருந்து, பீமன் அவனைக் கையால் நீளவாட்டில் கிழித்து மாற்றிப்போடும் வரை ஜராசந்தன் எங்கும் நிறைகிறான். அதனால்தானோ என்னவோ 'ஜரா என்னும் வேடன்' என்னும் தொடரை இ.பா மீண்டும் மீண்டும் பயன்படுத்துகிறார். யாரும் ஜராவை ஜராசந்தனோடு குழப்பிக் கொள்ளக் கூடாது அல்லவா?

காதல் சொட்டும் கதையாக இருந்தும் எங்கும் விரசம் துளிக்கூட இல்லை. அது உடம்பில் பொட்டுத்துணி கூட இல்லாது குளித்து எழும் ஷைல்பியாவைப் பற்றிச் சொல்லும்போதும் சரி, பிருந்தாவனத்தில் நடக்கும் ராசலீலைகளைப் பற்றிச் சொல்லும்போதும் சரி, பூதனையின் ஒரு மார்பை கையால் நெருடி, நெருடி மறு மார்பில் பால்குடித்து, பின்னர் உயிரையே குடிக்கும்போதும் சரி [பெரியாழ்வார் பாடல் போன்றே], வார்த்தைகளைக் கையாளும் விதம் பிரமிக்க வைக்கிறது.

கிருஷ்ணன் தன்னைக் கவர்ந்தவர்களாக இருவரைச் சொல்கிறான். பீஷ்மன், ராதேயன் (கர்ணன்), அதிலும் கர்ணனே மேலானவனாகத் தெரிகிறானாம். மகாபாரதத்தை நடத்திய இருவர் பாஞ்சாலியும், கிருஷ்ணனுமாம். அதுவும் பாஞ்சாலியின் மனத்துணிவு இல்லாவிட்டால் பாரதப்போர் நடந்தேயிருக்காது என்கிறான் இ.பாவின் கிருஷ்ணன்.

கிருஷ்ணன் ஷத்ரியர்களின் எதிரியாக, ஷத்ரியர்களைப் பூண்டோடு அழிக்க வந்தவனாகக் காண்பிக்கப்படுவது சற்றே வித்தியாசமான கண்ணோட்டம். பல இடங்களில் வசுதேவன்-வாசுதேவன் குழப்பம் அச்சில் காணப்படுகிறது. சில இடங்களில் சரியான நிறுத்தக் குறியீடுகள் இல்லாமல் யார் யாரிடம் என்ன சொல்கிறார்கள் என்று குழம்புகிறது.

Penultimate chapterஇல் கீதையைப் பற்றிய விளக்கம் வந்தாலும் கடைசியாக முடிக்கும்போது இந்த நாவலில் எந்த போதனையையும் தேட வேண்டாம் என்கிறார் இ.பா. சரிதான். எந்த போதனையையும் பற்றிக் கவலைப்படாது ஒரு நல்ல சுகமான அனுபவமாகப் படிக்க வேண்டிய புத்தகம் இது. மீண்டும், மீண்டும் படிக்க வேண்டிய புத்தகம் இது.

தி ஹிந்துவில் வெளியான பிரேமா நந்தகுமாரின் விமரிசனம்
இரா.முருகனின் நூல் வெளியீட்டு விழா சிறப்புப் பேச்சு
கிருஷ்ணா கிருஷ்ணா புத்தக வெளியீட்டு விழாவைப் பற்றிய என் பதிவுகள் ஒன்று | இரண்டு

கிருஷ்ணா கிருஷ்ணா, இந்திரா பார்த்தசாரதி, படங்கள் ஆதிமூலம். மித்ர, 375/8-10, ஆர்காட் சாலை, சென்னை 600 024, முதல் பதிப்பு 2004, விலை ரூ. 95.

Sunday, June 06, 2004

கட்டாயத் தமிழ்மொழிக் கல்வி

இந்த மாத அமுதசுரபி கல்விச் சிறப்பிதழாக வந்துள்ளது. அதில் அன்பாதவன் எழுதியுள்ள தாய்த் தமிழ்ப் பள்ளி என்னும் கட்டுரையிலிருந்து மேற்கோள்
தாய்மொழிக் கல்விக்கான போராட்டத்தின் ஓர் அம்சமாக தமிழ்ச் சான்றோர் பேரவை தமிழண்ணல் தலைமையில் 102 தமிழறிஞர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது முதல்வராயிருந்த மு.கருணாநிதி, நீதிபதி மோகன் குழுவின் பரிந்துரைப்படி தாய்மொழிக் கல்வியின் அவசியத்தை உணர்ந்தவராய் ஓர் அரசாணை பிறப்பித்தார். அதன்படி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளிலும் அனைத்துப் பாடங்களும் தமிழில் கற்பிக்கப்பட வேண்டும்.

தமிழக எல்லைப் பகுதிகளில் இருக்கும் 108 பள்ளிகள் மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு அவரவர் தாய்மொழியில் பாடங்கள் சொல்லித்தரவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து மெட்ரிக் பள்ளிகளின் சங்கச் செயலாளர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர, தீர்ப்பு தாய்மொழிக் கல்விக்கும் அரசாணைக்கும் எதிராக அமைந்தது. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்து, இதுநாள் வரை கிடப்பில் கிடக்கிறது.
மேலும் இந்தக் கட்டுரையில் தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பாக தாய்த் தமிழ்ப் பள்ளி என்ற பெயரில் தமிழகம் முழுதும் 50 பள்ளிகள் நடத்தப்படுகின்றன என்ற தகவலும் தெரிய வருகிறது. தமிழக அரசின் ஆணையைப் பற்றி சிறிது பார்ப்போம். முதல் ஐந்தாண்டுகளில் தாய்மொழியில் கற்றல் செறிவான கருத்தாகவே தோன்றுகிறது. ஆனால் தற்காலச் சூழ்நிலையில் மக்கள் அனைவருக்கும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்திருக்கும். அதற்குப்பதில் அரசு கீழ்க்கண்டவாறு படிப்படியாகச் செய்யலாம்:
  1. முதலில் மாநிலக் கல்வித் திட்டத்தின் கீழ் வரும் எல்லாப் பள்ளிகளிலும் தமிழை ஒரு மொழியாகவாவது கட்டாயமாக போதிக்க வைக்க வேண்டும். இதற்கு இப்பொழுது உச்சநீதிமன்ற அதிகாரம் கிடைத்துள்ளது.
  2. அரசுப் பள்ளிகளில் ஐந்தாவது வரை கட்டாயமாக தமிழில்தான் கல்வி, ஐந்தாவது தாண்டியபின்னர் ஆங்கிலத்திலும் கல்வி கொடுக்கப்படும், ஆனால் அதற்கான கட்டணம் அதிகம்.
  3. அரசு ஆதரவில் இயங்கும் தனியார்ப் பள்ளிகளில் மேற்கண்ட முறையில் உள்ள வகுப்புகளில் பாடமெடுக்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமே அரசு மாதச்சம்பளத்தை வழங்கும். ஆங்கிலக்கல்வி வகுப்புகளில் பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு அந்த வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் கொடுக்கும் கட்டணம் மூலமாகவோ மற்ற வகையிலோதான் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
  4. தமிழில் தரமான கல்வியை வழங்கும் தனியார்ப் பள்ளிகளுக்கு மான்யம் வழங்குதல்.
  5. தமிழ்க்கல்வி மூலம் கற்று வரும் மாணவர்களுக்கு பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புக்கு நிதியுதவி.

கட்டாய மாநிலமொழிக் கல்வி

போன வாரம் மாநில மொழி தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒன்றைப் பற்றி எழுதியிருந்தேன். அதைத் தொடர்ந்து மரத்தடி யாஹூ! குழுமத்தில் ஒரு விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் ஆரம்பப் பதிவு இதோ. அந்த விவாதம் பற்றிய என் பதிலை இங்கே கொடுத்திருந்தேன். மரத்தடி குழுமத்தின் இடுகைகளை உறுப்பினரல்லாதோர் படிக்க முடியாதென்று நினைக்கிறேன். அதனால் அந்த பதிலை இங்கே கொடுக்கிறேன். ரவி ஸ்ரீநிவாஸ் தனது கருத்தை இங்கே கொடுத்துள்ளார்.

மாநிலமொழிக் கல்வி

ஜெயஸ்ரீ ஆரம்பித்து வைத்த திரியில் ஏகப்பட்ட விவாதம். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக பதில் சொல்ல முடியாத நிலையில் உள்ளேன்.

மேலும் எனக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முழுமையாகக் கிடைக்கவில்லை. வழக்கின் பின்புலம் தெரிய வேண்டும். சம்பந்தப்பட்ட மஹாராஷ்டிர அரசின் ஆணை பற்றிய விவரங்களும் இப்பொழுதைக்கு என்னிடம் இல்லை. வாதி, பிரதிவாதிகளின் வாதங்கள் பற்றிய தகவலும் இல்லை.

ஒன்றை கவனிக்க வேண்டும். எல்லா பத்திரிகைகளும் 'தாய்மொழிக் கல்வி' என்றே எழுதினர். இது தாய்மொழிக் கல்வி பற்றிய பிரச்சினை இல்லை. மாநில/பிராந்திய மொழியினை கட்டாயப்படுத்துவதைப் பற்றியது. இந்த வழக்கின் வாதி மாநில அரசின் கல்வித்துறையின் கீழ் இயங்கும் ஒரு குஜராத்தி அறக்கட்டளை நடத்தும் பள்ளி.

இங்கு விவாதித்தவர்கள் பொதுவாக கீழ்க்கண்ட விஷயங்களைப் பற்றி பேசினார்கள்:

1. ஊர் ஊராகச் சென்று வேலை பார்க்கும் எங்கள் குழந்தைகள் என்ன செய்வார்கள், பாவம்?
2. எந்தவொரு மொழியையும் யார் மீதும் திணிக்கக் கூடாது. அவரவர்கள் விரும்பியதைப் படித்து விட்டுப் போகட்டுமே?

ஊர் ஊராகச் சென்று வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. அவர்களுக்காக வேண்டி சட்ட திட்டங்களை இயற்றிக் கொண்டிருக்க முடியாது. அதற்குத்தான் CBSE இருக்கிறதே என்று சிலர் சரியாகவே பதில் சொன்னார்கள். ஜெயஸ்ரீ ஓரிடத்தில் வங்கி ஊழியர்கள் குக்கிராமங்களிலெல்லாம் கூடப் போய் இருக்க வேண்டியுள்ளது. அங்கெல்லாம் CBSE பள்ளியா இருக்கும் என்று கேட்டிருந்தார். அங்கெல்லாம் சரியான பள்ளிகள் முதலில் இருக்கின்றனவா? அங்குமட்டும் ஒரு குழந்தைக்காக பிரெஞ்சு மொழியில் பாடம் நடத்த ஓர் ஆசிரியர் இருப்பார் என்றா எதிர்பார்க்கிறார் ஜெயஸ்ரீ? ஒழுங்காக கணக்கையும், அறிவியலையும் நடத்துவதற்கே ஆசிரியர் இருப்பாரா என்பது சந்தேகம்.

ஊர் ஊராக வேலை பார்ப்பவர்கள் குழந்தைகளை வேறிடத்தில் - தாத்தா/பாட்டியிடம் தங்கிப் படிக்குமாறு செய்ய வேண்டியிருக்கும். இல்லாவிட்டால் மனைவியோ, கணவனோ - யாருக்கு மாற்றல் உத்தியோகமோ, அவர் மட்டும் ஊர் ஊராக தேசாந்திரம் செய்ய, மற்றவர் ஓரிடத்தில் தங்கி பிள்ளைகளின் படிப்பை கவனித்துக் கொள்ள வேண்டியதுதான். இதற்கெல்லாம் அரசா வந்து உதவி செய்து கொண்டிருக்க முடியும்? வேண்டுமானால் வேலையை மாற்றிக் கொள்ளலாம். அல்லது வேலை தருபவர் கழுத்தைப் பிடித்து என் பிள்ளைகளுக்கு ஒரு வழி செய் என்று கேட்கலாம். மத்திய அரசின் கீழ் வேலை பார்ப்பவர்களுக்கு மத்திய அரசு ஒரு வழி செய்து கொடுக்கட்டும். மாநில அரசின் கீழ் வேலை செய்பவர்களை அந்த மாநிலத்தின் உள்ளேயேதான் மாற்றிக் கொண்டிருப்பார்கள்.

மேற்படி சட்டம் நிசமாகவே தேவைதானா என்ற கேள்வியை ஒருவர் எழுப்பலாம். தேவையோ, இல்லையோ, அப்படி சட்டம் இயற்றப்பட்டிருந்தால் அது செல்லுபடியாகும் என்கிறது உச்ச நீதிமன்றம். தேவை என்கிறேன் நான். முதலில் ஊர் சுற்றும் சிறுபான்மை மக்களை மறந்துவிடுவோம். மற்றபடி ஓரிடத்திலேயே இருக்கும் பெரும்பான்மை மக்களைப் பற்றி மட்டும் கவலைப்பட்டால் போதும். கல்விக்கென ஒவ்வொரு மாநில அரசும் மிக அதிக அளவில் செலவு செய்கின்றன. தனியார் பள்ளிகளுக்கும் கூட சலுகை அடிப்படையில் கொடுக்கும் நிலமும், வரி விலக்குகளும், குறைந்த கட்டணத்தில் மின்சாரமும் என பல்வேறு சலுகைகள். பள்ளிக்கூடங்களைச் சுற்றி போக்குவரத்து நெரிசல்களை கவனிப்பது முக்கியமாக பெருநகரங்களின் காவல்துறைக்கு பெரும் தலைவலியானது.

ஓர் அரசு ஏன் இதையெல்லாம் செய்கிறது? கல்விதான் பிற்காலத்திய சந்ததியினருக்காக ஓர் அரசு செய்யும் மிகப்பெரும் மூலதனம். இந்தச் செலவு இன்னமும் அதிகரிக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். இப்படி செலவு செய்யும் ஓர் அரசு அதற்கு பிரதியுபகாரமாக சிலவற்றை எதிர்பார்க்கிறது. அதிலொன்று இப்படிப்பட்ட கல்விக்கூடங்களிலிருந்து படித்து வெளிவருபவர்கள் அந்த மாநிலம் நலம்பெற உதவவேண்டும் என்பதே. அம்மாநில மொழியைச் சரியாகக் கற்காமல் அம்மாநிலத்தின் மக்களுக்கு ஒருவர் எப்படி உதவ முடியும்? இல்லை, ஆங்கிலத்தில் கல்வி பயின்றால்தான் எனக்கு வேலை கிடைக்கும் என்று பெரும்பான்மையினர் கேட்டுக்கொண்டதால் கடந்த 20 ஆண்டுகளில் ஆங்கில மீடியம் பள்ளிகள் அதிகரித்தன. அதற்கு மேலும் போய் ஒருவர் இரண்டாவது மொழியாகக் கூட அம்மாநிலத்தின் மொழியைப் படிக்க மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தால்? தானாகவே அந்த மாநிலத்தில் இருக்கும் மக்கள் (அங்கேயே பிறந்து வளர்ந்தவரும், பிழைப்புக்கு வந்தவரும்) அம்மாநில மொழியைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று அரசுகள் எதிர்பார்த்திருந்தன. இந்த நிலைமை கடந்த பத்து வருடங்களில் பெருமாற்றம் அடைந்தது. இதைத்தான் நகரங்களில் இன்று பார்க்கிறோம். படிப்பது ஆங்கில மீடியத்தில். இரண்டாவது மொழியாக ஏதேனும் ஒன்று. விட்டால் பாபுவா நியூ கினியில் பேசும் மொழியைக் கூட ஒரு பாடமாக எடுத்துவிடுவார்கள்.

பொதுமக்களின் வரிப்பணத்தில் சலுகையாகக் கிடைக்கும் கல்வியினால் அந்த மாநிலத்தின் பொதுமக்களுக்குத் தேவையான நலன் கிடைக்காமல் போகும். இதனைக் கருத்தில் கொண்டே மாஹாராஷ்டிர அரசு இந்தச் சட்டத்தை இயற்றியுள்ளது.

இந்தச் சட்டத்தை பிற மாநிலங்களும் தத்தம் மாநிலங்களில் நடைமுறைப்படுத்தவேண்டும்.

இது பெற்றோர்களின் மீது எதையும் திணிப்பதாக ஆகாது. தங்கள் குழந்தைகள் பிரெஞ்சுதான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புபவர்கள் Alliance Francais எங்காவது இருக்கிறதா என்று தேடிப்போகலாம். எந்தப் பெற்றோரும் 'பாடத்திட்டத்தில் ஏன் அறிவியல் இருக்கிறது? அதற்கு பதில் நாட்டியம் சொல்லிக்கொடுக்கலாமே' என்று கேட்க முடியாது. அந்த மாநிலக் கல்வித்துறை நடத்தும் 10வது/12வது வகுப்புத் தேர்வு எழுதவேண்டுமென்றால் அவர்கள் கொடுத்துள்ள பாடத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. விருப்பம் இல்லாதவர்கள் வேறு மாதிரியான பாடத்திட்டத்தைத் தேடிப் போகலாம்.

இத்திணிப்பைப் எதிர்க்கும் சிறுபான்மைக் கல்வி நிலையங்கள் கூட மாநில அரசின் கல்வித்திட்டத்தை விலக்கி விட்டு CBSE கல்வித்திட்டத்தை எடுத்துக் கொள்ளலாம். அதற்கான முழு உரிமையும் அவர்களுக்கு உண்டு.

ஆவின் திண்டாட்டம்

சில நாட்கள் முன்னர் ஜெயலலிதாவின் பால் கொள்முதல் விலையை அதிகரித்து, ஆனால் விற்பனை விலையை மாற்றாமல் இருக்கும் அதிரடித் திட்டத்தினால் ஆவின் நஷ்டத்தில் மூழ்கும் என்று எழுதியிருந்தேன். இன்றைய தினமலரில் இதுபற்றி விளக்கமாக ஒரு செய்தி வந்துள்ளது.

அரசின் இந்த முடிவால் எல்லோரும் பால் உற்பத்தியாளர்களுக்கு நன்மை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பால் உற்பத்தி செய்வோருக்கு இதனால் கஷ்டம்தான் வரும். என்னடா புதுமை? கொள்முதல் விலையை அதிகரித்தால் பால் உற்பத்தி செய்வோருக்கு நல்லதல்லவா என்றால் அதுதான் இல்லை. ஆவின் நஷ்டத்தில் இயங்கினால் அதனால் அதிகமாக பாதிக்கப்படப்போவது பால் உற்பத்தியாளர்தான். கையில் காசில்லாத ஆவின் கொள்முதலுக்கான காசை உடனடியாக பால் உற்பத்தியாளருக்குக் கொடுக்க முடியாது. பாலை வாங்கிக்கொண்டு பணத்தைக் கொடுக்க இரண்டு மாதங்களோ, அதற்கு மேலோ இழுத்தடிக்கும். ஆவின் நஷ்டத்தில் இருந்தபோதெல்லாம் இதுதான் நடந்துள்ளது.

எனவே ஒன்று - பால் விற்பனை விலையை அதிகரிக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆவின் நஷ்டமில்லாமல் இயங்கும், அதன் கையிலும் காசின் இருப்பு அதிகமாக இருக்கும். பால் உற்பத்தியாளர்களுக்கு உடனடியாக காசு கொடுக்க முடியும். அல்லது - பழைய கொள்முதல் விலைக்கே மாற வேண்டும். இப்படி உற்பத்தியாளருக்கு சரியான நேரத்தில் காசு கிடைக்கவில்லையென்றால் அவர்கள் ஆவினுக்கு பதில் தனியாருக்கு தங்கள் உற்பத்தியை விற்றுவிடுவர். காசு அதிகமாகக் கிடைக்காவிட்டாலும் கைக்கு உடனடியாகவாவது பணம் கிடைக்கும் அல்லவா? தனியாரோ - ஆரோக்கியா, ஜீவன் என்று பல பிராண்டுகள் மூலமாக - அதிக விலைக்குத்தான் (ரூ. 13க்கும் மேலாக) பாலை சந்தையில் விற்பர். ஒரு சில பிராண்டுகளைத் தவிர்த்து மற்றதில் கலப்படம், தரக்குறைவு என்று தொல்லை வேறு. இதனால் விளையும் நஷ்டம் பால் உற்பத்தியாளர், பால் வாங்குபவர், ஆவின் என்னும் நிறுவனம் என்று அனைவருக்கும் தொல்லை. தமிழக அரசுக்கும் நஷ்டத்தை ஈடுசெய்ய வேண்டி அதிக செலவு. அந்தப் பணத்தை மற்ற நலத்திட்டங்களுக்குச் செலவிடமுடியாது.

ஆனால் அரசியல் ரீதியாக ஜெயலலிதாவால் மேற்சொன்ன இரண்டு முடிவில் எதையும் எடுக்க முடியாது. பால் விற்பனை விலையை அதிகரித்தால் மக்கள் அதிருப்தி அடைவார்கள் என்று அவருக்கு பயம். 2006 தேர்தல் பயம். பால் கொள்முதல் விலையை மீண்டும் பழைய அளவிற்குக் கொண்டு போனால் அரசியல் ரீதியில் தோல்வி. இதற்கான விலையைக் கொடுக்கப்போவதென்னவோ மாநில மக்கள்.

ஆக ஆராய்ந்து சிந்திக்காமல் முடிவெடுப்பதால் எத்தனை தொல்லை விளையும் என்பதை ஜெயலலிதாவைப் பார்த்து அனைவரும் அறிந்து கொள்ளலாம்.

இதற்கு மற்றொரு மாற்றும் உள்ளது. ஆவின், அமுல் போன்று தனித்தியங்கக் கூடிய ஒரு கூட்டுறவுத் தொழில் நிறுவனமாக மாற்றப்பட வேண்டும். குஜராத்தின் 22 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் சொத்தான அமுல் ஒரு நாளைக்கு 50 லட்சம் லிட்டர் பாலை உற்பத்தி செய்து, பாலாகவும், அதன் சார்பொருளாகவும் விற்று 2002-03இல் ரூ. 2745 கோடி வருமானமாகப் பெற்றுள்ளது. நிகர லாபம் எவ்வளவு என்று தெரியவில்லை. அமுல் லாபநோக்குள்ள ஒரு நிறுவனம் அல்ல. மாறுபட்டது. ஆனால் இன்று சந்தையில் அதனளவிற்கு பால் பொருட்களை விற்பனை செய்வதற்கு எந்தப் போட்டியும் இல்லை. இதனால் அதிகப் பயன் அடைந்துள்ளது குஜராத் பால் உற்பத்தியாளர்களே. தமிழக பால் உற்பத்தியாளர்களும் இந்நிலையை அடைய முடியும். ஆனால் தமிழக அரசியல்வாதிகள் ஆவினை விட்டு விலக வேண்டுமே?

இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி விவகாரம்

இந்துஸ்தான் பொறியியல் கல்லூரிக்கு இந்த வருடம் மாணவர்களை சேர்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தி ஹிந்துவில் வெளியான செய்தியில் முழு விவரங்கள் இல்லை. ஆனால் நேற்றைய தினமலரில் அதிக விவரங்கள் உள்ளன. இணையத்தில் தினமலர் செய்தியின் சுட்டி கிடைக்கவில்லை. அதனால் தகவல் இங்கே:
இந்தக் கல்லூரியில் நிர்வாகத்திற்கு நெருக்கமான ஒரு மாணவரை காப்பியடிக்க அனுமதித்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அக்கல்லூரி மீது அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்தது. கல்லூரியில் ஓராண்டு மாணவர் சேர்க்கைக்கு தடை விதிப்பது என்று அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட்டில் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவு தமிழக அரசின் மூலம் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் கல்லூரி நிர்வாகத்தை அழைத்து புகார் குறித்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் இறுதி முடிவை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பாலகுருசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பு:

அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் தமிழக அரசுக்கு அனுப்பிய உத்தரவு, தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிய உத்தரவு, அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் முடிவு ஆகியவற்றின் அடிப்படையில் படூரில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மறு உத்தரவு வரும்வரை இந்த ஆண்டு புதிதாக மாணவர்களை சேர்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Friday, June 04, 2004

தமிழோவியம் கிரிக்கெட்

இப்பொழுது யூனிகோடில் வெளியாகிறது தமிழோவியம். இந்த வாரம் என்னுடைய கட்டுரை: Farewell to நாசெர் ஹுசைன்!

தமிழோவியம் இந்த இதழ் முதற்கொண்டு ஏற்பட்டுள்ள மாற்றம் வரவேற்க வேண்டியது. முக்கியமாக ஒவ்வொரு கட்டுரைக்கும் மறுமொழி வசதியும், பின்தொடர்தல் வசதியும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பது.

Thursday, June 03, 2004

பேரூர் சுடுமண் ஓடு டுபாக்கூர் சமாச்சாரமா?

இந்த மாத காலச்சுவடில் (இதழ் 54, ஜூன் 2004) பல்லிளிக்கும் தொல்லியல் 'கண்டுபிடிப்புகள்', பேரூர் சுடுமண் ஓடுகள் என்ற தலைப்பில் சு.கி.ஜெயகரன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

இந்தக் கட்டுரையில் ஆசிரியர் பேரூரில் கண்டெடுக்கப்பட்ட ஓடுகள் ஏமாற்று வேலையென்று எண்ணுவதற்கு பல சான்றுகள் உள்ளன என்றும் அறிவியல் முறையில் கால நிர்ணயம் செய்யாத வரையில், "பேரூர் மற்றொரு பில்ட்டௌன் (piltdown) என்றே நினைக்கத் தோன்றுகிறது." என்றும் சொல்கிறார். கூடிய விரைவில் - இந்த வாரத்திற்குள்ளாக - முழுக் கட்டுரையும் காலச்சுவடுக்கான வலைத்தளத்தில் ஏற்றப்படும் என்று வெங்கடேஷிடமிருந்து அறிகிறேன்.

முதுசொம் கண்ணன் இந்தக் கட்டுரையை ஏற்கனவே எதிர்பார்த்தோ என்னவோ, போன மாத திசைகள் இதழில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். விரும்புபவர்கள் இரண்டையும் படித்து கருத்துச் சொல்லலாம்.

இத்துடன் சில நாட்களுக்கு முன்னர் ஆதிச்சநல்லூர் அகழ்வில் கிடைத்த எழுத்துகளையும், அது பற்றிய ஐராவதம் மகாதேவன் கருத்தையும் நினைவில் கொள்ளவேணும்.

Wednesday, June 02, 2004

காணாமல் போகும் பதிவு

என்னுடைய இந்தப் பதிவு மீண்டும் மீண்டும் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. இப்பொழுது பெயரை மாற்றி மீண்டும் இடுகிறேன். நாளைதான் பார்க்க வேண்டும், இன்னமும் இருக்கிறதா என்று.

ஒரு மாநில அரசு அம்மாநில மொழியை கட்டாயமாகப் புகுத்தலாம் - உச்ச நீதிமன்றம் - மே 31, 2004

ரீடிஃப்.காம் இணையத்தளத்திலிருந்து

மஹாராஷ்டிர மாநில அரசு அம்மாநிலத்தில் உள்ள கல்வி நிலையங்கள் அனைத்தும் கட்டாயமாக மராத்திய மொழியைக் கற்பிக்க வேண்டும் என்று சட்டம் பிறப்பித்திருந்ததாம். அதனை எதிர்த்து ஒரு குஜராத்தியப் பள்ளி வழக்குத் தொடர்ந்திருந்தது. விசாரித்த உச்ச நீதிமன்றம், மாநில அரசின் மேற்படி சட்டம் மொழிச்சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கவில்லை என்றும், இத்தகைய சட்டம் மாநிலத்தின் பெரும்பான்மை நலனைக் கருத்தில் கொண்டே இயற்றப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர்.

மேலும் தங்கள் கருத்தில் "ஒரு மாநிலத்தில் இருந்து கொண்டே, அம்மாநிலத்தின் மொழியைக் கற்க மாட்டோம் என்று எதிர்ப்பது மொழிச்சிறுபான்மையினரை பெரும்பான்மைச் சமூகத்திலிருந்து அந்நியப்படுத்தும்; மாநிலம் மொழிவாரியாக பின்னமாகும். இது தேசிய ஒருமைப்பாட்டிற்குக் கேடாகும்." என்றும் சொல்லியுள்ளனர்.

தமிழகத்தில், தமிழ் மொழியைத் தாய் மொழியாக உள்ளவர்களே தமிழை ஒரு பாடமாகப் படிப்பதில்லை. அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக ஃபிரெஞ்சு, சமஸ்கிருதம் என்று தேர்வு செய்து கொள்கிறார்கள். இதனால் தமிழ் மொழியும் தகராறு; படிக்கும் புது மொழியிலும் தொடக்க நிலையைத் தாண்டுவதில்லை.

தமிழக அரசும் தமிழகப் பள்ளிகளில் படிக்கும் அனைவரும் கட்டாயமாகத் தமிழையும் ஒரு மொழியாகப் படிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வருமா?

அபிஜித் காலேவுக்கு 7 மாதங்களுக்குத் தடை

தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்து இந்திய அணியில் விளையாட உள்ளே முயற்சித்தார் என்று காலே மீது தேர்வுக்குழு உறுப்பினர்கள் கிரன் மோரே, பிரனாப் ராய் இருவரும் புகார் செய்திருந்தனர். இதன் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, காலே தேர்வுக்குழு உறுப்பினர்களை அணுகி அவர்களை நச்சரித்தார் என்பது முடிவாகியுள்ளது. இதற்காக வருந்தி காலே ஒரு கடிதமும் எழுதியுள்ளாராம். ஆனால் தான் லஞ்சம் பெற்றுக்கொள்ளுங்கள் என்று ஒருபொழுதும் சொல்லவில்லை என்கிறார் காலே. சரியான சாட்சியம் இல்லாததால், ஆனால் அதே சமயம் காலே ஏதோ செய்ய முயன்றுள்ளார் என்பது தெரிந்ததாலும் ஜக்மோஹன் தால்மியா அவருக்கு ஏழு மாதத் தடை [டிசெம்பர் 2004 வரை] விதித்துள்ளார்.

இதனால் வருமாண்டிற்கான ரஞ்சிக்கோப்பைப் போட்டிகளின் முதல் சில ஆட்டங்களில் மஹாராஷ்டிர அணிக்காக இவரால் விளையாட முடியாது.

தினம் ஒரு அறிவிப்பு

ஜெயலலிதா தினம் ஒரு அறிவிப்பு என்ற வகையில் 'அன்பளிப்புகளை' வாரி வழங்க ஆரம்பித்துள்ளார். இதில் சில நல்லவையும் உள்ளன. ஆனால் இது போன்ற அறிவிப்புகளின் பின்னணி என்ன, இதனால் ஏற்படும் 'வருவாய் குறைவு' மற்றும் 'செலவு அதிகரிப்பு' ஆகியவற்றை எப்படி சரிக்கட்டுவார் என்று புரியவில்லை.

போன வாரம் ஜெயலலிதா பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். மாநில அதிகாரிகளை மாற்றினார்.

இரண்டு நாட்கள் முன்னர் மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டது. இதனால் ஆண்டுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு ஏற்படும் இழப்பு ரூ. 910 கோடிகள். நேற்று பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 1.00 அதிகப்படுத்தினார். ஆனால் ஆவின் விற்பனை விலை அதிகமாகாது என்றார். இதனால் எவ்வளவு ஆவினுக்கு நஷ்டம் ஆகும் என்று தெரியவில்லை. இத்தனைக்கும் ஆவின் ஒன்றும் லாபத்தில் கொழிக்கும் நிறுவனமல்ல. 2000-01இல் ஆவின் நஷ்டம் ரூ. 25 கோடி. 2001-02இல் லாபம் ரூ. 15 லட்சம். 2002-03இல் லாபம் ரூ. 16.5 கோடிகளை எட்டியது.

சரி, நஷ்டத்திலிருந்து லாபத்திற்கு எப்படிப் போனது ஆவின்? Industrial Economy என்னும் இதழுக்கு அளித்த பேட்டியில், ஆவின் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி இவ்வாறு சொல்கிறார்:
The loss was mainly due to a mismatch between the procurement price and selling price. In December 2001, the state government increased the procurement price for farmers from Rs.9 per litre to Rs. 9.50. We were selling at Rs. 10.50 per litre. With a lot of processes between procurement and selling, like pasteurisation, homogenisation, packing, transport... we could not cover these expenses with just a rupee. We had to increase the price of toned milk to Rs.12.50 to recover costs.
ஆக, கொள்முதல் விலைக்கும், விற்பனை விலைக்குமான வித்தியாசம் ரூ. 1.00 இருக்கும்போது நஷ்டம் வந்தது. அதனை ரூ. 3.00 ஆக்கியபின்னரே லாபம் வந்தது. இப்பொழுதைய நிலை என்ன? ஆவின் பால் மக்களுக்கு ரூ. 13.00 க்கு விற்கிறார்கள். நேற்று அறிவித்த கொள்முதல் விலை: பசும்பால் ரூ. 10.50, எருமைப்பால் ரூ. 12.50 ஆகும். விற்பனை விலையை அதிகரிக்காவிட்டால் நிச்சயம் நஷ்டம்தானே?

அடுத்து இன்றைய அறிவிப்பு: சைக்கிள், ஸ்கூட்டர், ஆட்டோ போன்ற இரண்டு, மூன்று சக்கர வாகனங்களை நிறுத்தி வைக்க இனி நிறுத்தல் கட்டணம் ஏதும் கிடையாது. நான்கு சக்கர வாகனங்களுக்கான கட்டணம் குறைக்கப்படுகிறது. இப்பொழுது நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த ரூ. 10 உம், இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்த ரூ. 3 உம் வசூலிக்கப்படுகிறது. மேற்படி சட்டத்தினால் வருமானத்தை இழப்பது மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து போன்றவைகளே என நினைக்கிறேன். மாநில அரசு எப்படி இந்த இழப்பை சரிக்கட்டப் போகிறது?

மற்றுமொரு அறிவிப்பு - கோயில்கள் வாசலில் செருப்பு வைப்பதற்கான கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. அரசு மருத்துவமனைகளுக்குள் செல்வதற்கான நுழைவுக் கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. இதில் மருத்துவமனை நுழைவுக் கட்டணம் ரத்து செய்வதை வரவேற்கிறேன். ஆனால் கோயில் வாசலில் செருப்பு வைப்பதற்கான கட்டணத்தை ரத்து செய்தால் யார் இனி செருப்புகளை கவனித்துக் கொள்வார்கள்? இதுநாள்வரை குத்தகைக்காரர்கள் செருப்புகளைப் பார்த்துக்கொண்டனர். இனி வருமானம் ஏதும் வராத நிலையில் அவர்கள் நடையைக் கட்டிவிடுவர். அரசா இனி ஆட்களை நியமித்து இலவசமாக செருப்புகளைப் பார்த்துக் கொள்ளப்போகிறது? முகமது பின் துக்ளக்கையும் தோற்கடிக்கும் வகையில் ஜெயலலிதா ஆணைகளை பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்.

நாளை ஜெயலலிதா என்ன ஆணைகளை பிறப்பிக்கப் போகிறார் என்று நினைத்தாலே பகீரென்கிறது.

மருத்துவக் கல்லூரிகள் பற்றி

ஒருவருடம் முன்னர் எழுதிய என் பதிவு. அப்பொழுது மருத்துவக் கல்லூரி மாணவர்களும், மருத்துவர்கள் பலரும் தனியாருக்கு மருத்துவக் கல்லூரிகள் திறக்க அனுமதி கொடுக்கக் கூடாது என்று வேலை/படிப்பு நிறுத்தம் செய்தனர்.

இன்றைய தி ஹிந்துவில் வெளியான செய்தி இது. மருத்துவம், மற்றும் அதே துறை சார்ந்த கல்லூரிகளில் கிடைக்கும் இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பாடம்மொத்தக் கல்லூரிகள்மொத்த இடங்கள்
 அரசுதனியார்அரசுதனியார்
அரசு
நியமனம்
நிர்வாக
நியமனம்
MBBS
பொது மருத்துவம்
1131,305124 
BDS
பல் மருத்துவம்
1660208 
B.Pharm
மருந்துத்துறை
230110939646
B.Sc Nursing
செவிலியர் பணி
238506881,032
BPT
Physiotherapy
237507121,068
BOT
Occupational
Therapy
-6-150100


தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு இருப்பது மிகக்குறைவான இடங்களே. இதற்கும் மேல், தனியார் நிர்வாகத்தினால் நியமிக்கப்பட வேண்டிய இடங்களுக்கான நுழைவுத் தேர்வை யார் நடத்துவது என்று அடிதடிக் குழப்பம் நடக்கிறதாம். ஜூன் 8ஆம் தேதிதான் சுப்ரமணி கமிட்டி (உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டது) யார் இந்த நுழைவுத் தேர்வை நடத்தலாம் என்று தீர்மானிப்பார்களாம். அரசு நியமிக்கும் இடங்களுக்கான நுழைவுத் தேர்வு முடிந்துவிட்டது.

மெடிகோ இன்ஃபோலைன் என்னும் தளத்தில் இந்தியா முழுமையிலும் உள்ள மருத்துவக் கல்லூரிகள் பற்றிய விவரங்களும், அங்கு என்னென்ன பட்டங்களுக்கான பாடங்கள் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன என்ற தகவலும் உள்ளன. தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் கர்நாடகத்தில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் பல உள்ளன. தமிழக அரசால் அதிகமான இடங்களை உருவாக்க முடியாது என்றால், தனியார் துறையினரையாவது ஊக்குவிக்கலாம். தனியார் துறை பொறியியல் கல்லூரிகளில் பல ஊழல்கள் உள்ளன: வெளிப்படையாக அதிகப்படியான தொகையை வாங்குகின்றனர்; சரியான வசதிகள் இல்லை. இருந்தாலும் தனியார் பொறியியல் கல்லூரிகள் மூலமாகத்தான் தமிழகம் பல பொறியியல் மாணவர்களை உருவாக்கியுள்ளது. போன வருடக் கணக்குப்படி, தமிழகத்தில் உள்ள மொத்தப் பொறியியல் இடங்கள் 73,875. அரசுக் கல்லூரிகளின் இடங்கள் 5,870 மட்டுமே.

எழுத்தாளப் பெருமக்கள் வலைப்பதிவுகள்

பா.ராகவன் மனத்துக்கண் என்றொரு வலைப்பதிவை வைத்திருப்பது உங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்திருக்கும்.

வெங்கடேஷ் நேசமுடன் என்றொரு வலைப்பதிவைப் பராமரிக்கிறார். வாரம் ஒருமுறை மின்னஞ்சல் வழியே நண்பர்களுடன் உரையாடும் வெங்கடேஷ் அந்த மின்னஞ்சலின் இடுகைகளைத்தான் பதிவில் ஏற்றுகிறார். போனவார விஷயம் இன்னமும் ஏறவில்லை. இன்று செய்துவிடுவேன் என்கிறார்.

புதுவரவு: எஸ்.ராமகிருஷ்ணனின் அட்சரம். இவரிடமிருந்தும் நிறைய எதிர்பார்க்கிறேன்.

இன்னமும் பல எழுத்தாளர்கள் வலைப்பதிவு உலகத்துக்கு வரவேண்டும்.