Thursday, July 29, 2004

தனியார் துறையில் இட ஒதுக்கீடு

நேசமுடன் வெங்கடேஷ் நேற்றைய மின்னிதழில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு பற்றி எழுதியுள்ளார். அதற்கான என் எதிர்வினையை அவருக்கு மடலில் அனுப்பியிருந்தேன். உங்களுக்காக இங்கே:
அன்பு வெங்கடேஷ்,

முக்கியமான கட்டுரை இது. என் எண்ணமும் இதே மாதிரிதான் செல்கிறது. தைரியமாக எழுதி இதுபற்றிய விவாதம் நடத்த வழிசெய்துள்ளீர்கள்.

ஆனால் மேற்படி விஷயத்தை எப்படி செயல்படுத்துவது என்பதில் அதிக கவனமும் செலுத்த வேண்டும்.

சில உரத்த சிந்தனைகள்:

1. தொடக்கத்தில் தலித்துகளுக்கான இட ஒதுக்கீட்டை 5% அளவிற்கு வைத்துக் கொள்ளலாம். அதுவும் குறைந்தது 25 பெயர்களாவது வேலை செய்யும் நிறுவனங்களுக்குத்தான் இந்த இட ஒதுக்கீடு என வைத்துக்கொள்ளலாம். அதற்குக்கீழ் நபர்கள் உள்ள நிறுவனங்களுக்கு இந்த இட ஒதுக்கீடு பொருந்தாது.

2. தொடக்கத்தில் தானாகவே முன்வந்து இம்மாதிரியான இட ஒதுக்கீட்டைச் செய்யும் நிறுவனங்களுக்கு 2% வரிவிலக்கு கொடுக்கலாம்.

3. கல்விக்கென 2% cess வசூலிப்பது போல, தலித் மேம்பாட்டுக்கென 1% cess வசூலிக்கலாம்.

4. படித்து முடித்த அத்தனை தலித்துகள் பெயர்களைப் பதிவு செய்துகொள்ள என தனி அரசு நிறுவனத்தை உருவாக்கி வைக்க வேண்டும். இந்த நிறுவனம் தலித் மேம்பாட்டு செஸ் வரியை உபயோகித்து இந்த தலித் மாணவ/மாணவியருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கலாம். இந்த நிறுவனத்தில் பதிவு செய்துள்ளவர்களை வேலைக்கு எடுத்தவுடனே இந்த நிறுவனத்திடம் தகவலை அளிக்க வேண்டும். இதன்மூலம் எத்தனை மாணவர்கள் பதிந்துள்ளனர். இதில் எத்தனை பேர்களுக்கு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது, எத்தனை பேர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு இல்லாமலேயே வேலை கிடைத்துள்ளது, எத்தனை பேர்களுக்கு அரசு நிறுவனங்களில் வேலை கிடைத்துள்ளது என்ற புள்ளி விவரங்கள் கிடைக்கும். இதை வைத்துதான் இந்த இட ஒதுக்கீட்டு முறையில் எத்தனை நன்மைகள் உள்ளன, எப்படி திட்டங்களை மாற்றியமைப்பது என்பது புரியும். இப்பொழுதைக்கு பல அரசின் நலத்திட்டங்களில் என்ன நடக்கின்றன என்றே வெளியுலகிற்குத் தெரிவதில்லை.

சில அபாயங்களும் உள்ளன. தலித்துகள் (SC/ST) என்பதிலிருந்து சில மாநில அரசுகள் பின்தங்கிய வகுப்பினர் என்று அடுத்த கட்டத்திற்குச் செல்லத் தயாராவார்கள். அடுத்து 5% என்பது இழுபட்டு அரசுத்துறைகளில் எந்த அளவிற்கு உள்ளதோ அந்த அளவிற்கு (50%) என்றாகும். அப்பொழுதுதான் பிரச்சனை பெரிதாகும்.

--பத்ரி

Wednesday, July 28, 2004

இரண்டு வயதுக் குழந்தையின் கோபம்

இரண்டு நாள்கள் முன்னர் என் அடுக்ககத்தில் (Apartment complex) நடந்த ஒரு சம்பவம்.

இரண்டு வயதாகும் சின்னப் பையன். அவனது தாய், பையனோடு, தன் வீட்டின் கதவைத் திறந்து வைத்து விட்டு, அடுத்த வீட்டில் பேசிக்கொண்டிருந்திருக்கிறார். பையன் குறும்பு ஜாஸ்திதான். அடுத்தவர் வீட்டில் உள்ள பொருட்களை கீழே தள்ளி நாசம் செய்ய, கோபத்துடன் தாயார் அவனைக் கடிந்து கொண்டிருக்கிறார். உடனே இந்த இரண்டு வயது வாண்டு அழுதுகொண்டே பக்கத்து வீட்டிலிருந்து வெளியே வந்து தன் வீட்டிற்குள் புகுந்து கொண்டு, கதவைச் சாத்தியதில் தானியங்கித் தாழ்ப்பாள் மூடிக்கொண்டது. அத்துடன் நில்லாமல், வெளியிலிருந்து சாவியால் கதவைத் திறக்க முடியாமல் உள்ளிருந்து மற்றுமொரு தாழ்ப்பாளையும் போட்டு விட்டான் விஷமக்காரன். ஆனால் போட்ட தாழ்ப்பாளைத் திறக்கத் தெரியவில்லை அந்தச் சிறுவனுக்கு. இரண்டு வயதே ஆனதால் முழுதாகப் பேசவும் தெரியவில்லை, வெளியிலிருந்து தாயார் சொன்னதைப் புரிந்து கொள்ளவும் தெரியவில்லை. அரை மணி நேரம் பேச்சுவார்த்தை தொடர, உள்ளிருந்து ஓவென அழ ஆரம்பித்து விட்டான் பையன். அழுது ஓய்ந்து சமர்த்தாக சோஃபாவில் சென்று படுத்துத் தூங்கியும் விட்டான். வெளியே அவனது தாயார் நிலைகுலைந்து தடுமாற, அடுக்ககமே அல்லோகலப்பட்டது.

நான் மதிய உணவுக்காகப் போயிருந்த நேரம் அது.

உட்பக்கமாகப் பூட்டிய அந்த வீட்டினுள் வேறு எந்த வழியிலும் உள்ளே நுழைய முடியாதவாறு மற்ற ஜன்னல் கதவுகளும், பால்கனிக் கதவுகளும் உட்பக்கமாகவே தாழிடப்பட்டிருந்தன.

பின்னர் சற்றே தைரியமான ஒருவரை கயிறால் கட்டி, மேல் மாடி வீட்டின் பால்கனி வழியாக கீழ் வீட்டின் பால்கனியில் இறக்கினோம். அவர் ஜன்னல் கண்ணாடியை உடைத்து அதுவழியாக பால்கனிக் கதவின் தாழ்ப்பாளைத் திறந்து உள்ளே நுழைந்து வாசல் கதவைத் திறந்தார். ஆக பூட்டிய வீட்டைத் திறந்து உள்ளிருக்கும் பையனைக் காப்பாற்ற கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலானது.

இதுபோன்ற நிகழ்ச்சிகள் உலகம் முழுதும் நடப்பனதான். ஆனால் எனக்குத் தெரிந்தவரை அமெரிக்கா போன்ற நாடுகளில் இம்மாதிரி சமயத்தில் தீயணைப்புத் துறையினரை நாடுவதுதான் வழக்கம். மரத்தின் மீதேறி மாட்டிக்கொண்டு கீழே இறங்கத் தெரியாது தடுமாறும் வளர்ப்புப்பூனையைக் காப்பது முதல், வீட்டின் உள்ளே பூட்டிக்கொண்டு மாட்டிக்கொள்ளும் குழந்தைகளைக் காப்பதிலிருந்து எல்லாம் தீயணைப்புத் துறையினர்தான்.

நம்மூர்களில் இதுபோன்ற விஷயங்களில் பக்கத்து வீட்டில் உள்ளவர்களே அதிரடியாய் காரியத்தில் இறங்கி விடுகிறார்கள். இந்தியாவில் தீயணைப்புத் துறையில் இருப்பவர்கள் இதிலெல்லாம் ஈடுபடுகிறார்களா என்று தெரியவில்லை. தீயணைப்புத் துறையில் இருப்பவர்களுக்கு இதுபோன்ற 'காப்பாற்றும்' விஷயங்களிலெல்லாம் நல்ல பயிற்சி கொடுத்தால் பொதுமக்களுக்கு சவுகரியமாக இருக்கும்.

Monday, July 26, 2004

ஜெர்மனி/கொரியா நா.கண்ணனின் நூல்கள் வெளியீடு

சக வலைப்பதிவர் நா.கண்ணன் எழுதிய நூல்கள் இரண்டு - ஒரு சிறுநாவல் தொகுதி, ஒரு குறுநாவல் தொகுதி - இன்று (திங்கள், 26 ஜூலை 2004) சென்னை, மைலாப்பூர் பாரதீய வித்யா பவனில் நடந்த விழாவில் வெளியிடப்பட்டன.

நிழல் வெளி மாந்தர் புத்தக வெளியீடு


'நிழல் வெளி மாந்தர்' எனும் சிறுகதைத் தொகுதியில் 17 சிறுகதைகள். தொகுதியை பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி வெளியிட, மாலன் பெற்றுக்கொண்டார். புத்தகத்திற்கு முன்னுரை எழுதியதும் இந்திரா பார்த்தசாரதியே.

விலை போகும் நினைவுகள் புத்தக வெளியீடு


'விலை போகும் நினைவுகள்' என்பது ஆறு குறுநாவல்கள் அடங்கிய தொகுதி. கவிஞர் வைதீஸ்வரன் வெளியிட, கடலோடி நரசய்யா பெற்றுக்கொண்டார். இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை எழுதியதும் வைதீஸ்வரனே.

வெங்கடேஷ், நா.கண்ணன்
வெங்கடேஷ், நா.கண்ணன்
புத்தக வெளியீட்டைத் தொடர்ந்து, மாலன் வாழ்த்துரை வழங்கினார். இந்திரா பார்த்தசாரதி, வெங்கடேஷ், வைதீஸ்வரன், கடலோடி நரசய்யா ஆகியோர் புத்தகங்களில் தங்களைக் கவர்ந்தவற்றைப் பற்றிப் பேசினர். இறுதியாக நா.கண்ணன் ஏற்புரை வழங்க விழா முடிவுற்றது.

நிழல் வெளி மாந்தர், நா.கண்ணன், ஜூலை 2004, மதி நிலையம், பக். 176, விலை ரூ. 55

விலை போகும் நினைவுகள், நா.கண்ணன், ஜூலை 2004, மதி நிலையம், பக். 160, விலை ரூ. 45

Sunday, July 25, 2004

அண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 3

[பாகம் 1 | பாகம் 2]

மூன்றாவதாகக் குறிப்பிட வேண்டியது 'உலக வரலாறும் மனித விடுதலையும்' என்னும் கட்டுரை. இந்த நீண்ட கட்டுரையில் பாலசிங்கம் ஹெகலின் இயங்கியலில் (dialectics) தொடங்கி, அங்கிருந்து கார்ல் மார்க்ஸின் தத்துவத்துக்குத் தாவுகிறார். மார்க்ஸைப் புரிந்து கொள்ள ஹெகலை முதலில் புரிந்துகொள்ள வேண்டும் என்று லெனினை மேற்கோள் காட்டுகிறார். ஹெகலின் கருத்து 'வரலாறு என்பது ஆன்மத்தின் விடுதலை நோக்கிய நகர்வு'. மார்க்ஸ் ஹெகலின் எழுத்துகளை 'ஆன்மீகவாதம்' என்றும் 'புதிரான புராணக்கதை' என்றும் விமர்சித்தபோதும் அவரது இயங்கியல் கோட்பாட்டை வெகுவாகப் புகழ்ந்தார். 'ஹெகலின் கருத்துலகத்திலிருந்து இயங்கியலைப் பிரித்தெடுக்கும் அறுவைச் சிகிச்சையை' மார்க்ஸியம் என்கிறார் பாலசிங்கம். "இயங்கியலின் அடிப்படையில் ஆன்மத்தின் சூட்சுமத்தை விளக்க முனைந்தார் ஹெகல். அதே இயங்கியல் விதிகளைக் கொண்டு இயற்கையின் இரகசியங்களை விளக்க முனைந்தார் எங்கல்ஸ். அதே விதிகளைக் கொண்டு சமூக வரலாற்று இயக்கத்தை விளக்க முனைந்தார் மார்க்ஸ்." என்கிறார் பாலசிங்கம்.

கட்டுரையில் தொடர்ந்து மார்க்ஸின் கொள்கைகளை விவரித்து, அதன்மீதான் அல்துசாரின் விமரிசனங்களைப் பற்றியும் விளக்குகிறார். கார்ல் மார்க்ஸின் 'மூலதனம்' முதலாளிய சமூகத்தின் உற்பத்தி வடிவத்தை வகிர்ந்து காண்பிப்பது, முதலாளிய உற்பத்தி முறையில் நிலவும் முரண்கள், இந்த முரண்களால் முதலாளியம் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி, பின்னர் சிதைந்து போகும் என்று எழுதியுள்ளது பற்றி விவரிக்கும் பாலசிங்கம் ஏன் மார்க்ஸின் தீர்க்கதரிசனம் பலிக்கவில்லை என்பதையும் விளக்குகிறார்.

மார்க்ஸின் கொள்கைகளைத் தொடர்ந்து ரஷ்யா, சீனா நாடுகளில் ஏற்பட்ட கம்யூனிச அரசுகள், நவ-மார்க்ஸியக் கருத்துகள் ஆகியவற்றை பாலசிங்கம் விவரமாக ஆய்வு செய்கிறார். இந்த ஆய்வின் மூலம் சோசலிசம் சிதைந்ததற்கான காரணங்களையும் முன்வைக்கிறார்.

தொடர்ச்சியாக, புக்குயாமாவின் "சமூகப் பொருளுற்பத்தி வடிவங்களின் படிநிலை வளர்ச்சியின் உச்சமாக முதலாளியமும், அரசியலமைப்பின் உச்சமாக லிபரல் ஜனநாயகமும் உருவாக்கம் பெற்றதால் உலக நெருக்கடி நிலைமைகள் தணிந்து மனித வரலாறு முடிவுக்கு வந்துவிட்டது" என்னும் கருத்து இன்று பொய்த்துவிட்டது என்கிறார் பாலசிங்கம். "மானிட சமூகம் இன்னமும் உன்னதம் பெறவில்லை. மனிதர்களிடையே பிணக்குகள் இன்னமும் தீர்ந்துவிடவில்லை. முரண்பாடுகள் நீங்கிவிடவில்லை. மானிடம் இன்னும் விடுதலை பெறவில்லை." என்னும் பாலசிங்கம் சாமுவேல் ஹண்டிங்டனின் நாகரிகங்களின் மோதல் (Clash of Civilizations) எனும் கோட்பாட்டை அடுத்து அறிமுகப்படுத்துகிறார்.

"நாகரிகங்கள் மத்தியிலான முரண்பாடும் மோதலுமாகவே இனப் போர்கள் வெடிக்கின்றன. நாகரிகங்களின் வளர்ச்சியும் எழுச்சியும் அவை மத்தியில் நிலவும் உறவு முறைகளுமே எதிர்கால உலக ஒழுங்கமைப்பையும் மனித வரலாற்றின் போக்கையும் நிர்ணயிக்கும் என்பது ஹண்டிங்டனின் வாதம்" என்கிறார் பாலசிங்கம். ஆனால் இந்தக் கொள்கை மூலம் இன்றைய உலகில் உள்ள பல்வேறு அரசியல் நெருக்கடிகளை விளக்கி விட முடியாது என்கிறார் பாலசிங்கம். "இன விடுதலைப் போராட்டங்களை பண்பாட்டுத் தனித்துவத்திற்கான போராட்டமாக மட்டும் வரையறுத்துப் பார்க்க முனைவது தவறு. அந்நிய அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்புக்கும் எதிராக தேச சுதந்திரம் வேண்டி நடைபெறும் விடுதலைப் போராட்டங்களின் ஆழமான பரிமாணங்களை அவர் [ஹண்டிங்டன்] கண்டு கொள்ளவில்லை." என்கிறார் பாலசிங்கம்.

ஆனால் இந்தக் கட்டுரையின் தொடர்ச்சியாக இலங்கையில் சிங்கள-தமிழ் இனங்களுக்கிடையே ஏற்பட்டுள்ள சண்டையையும், இலங்கையில் தமிழர்கள் தனிநாடு கேட்பதற்கான கருத்தியல் ரீதியான கோட்பாட்டு விளக்கத்தையும் பாலசிங்கம் வைக்கவில்லை. வேண்டுமென்றே விட்டுவைத்துள்ளாரா என்பதும் தெரியவில்லை.

முதலிரண்டு அரசியல் கட்டுரைகளையும் நீக்கிப் பார்க்கும்போது இந்தப் புத்தகம் தமிழில் எழுதப்பட்டுள்ள மிக முக்கியமான புத்தகம் என்று நான் கருதுகிறேன். மேற்கத்தியத் தத்துவ உலகம் பற்றி அறிய விரும்பும் தமிழர்கள் கட்டாயமாகப் படிக்க வேண்டிய முதல் புத்தகம் இதுவாக இருக்கலாம். இந்தச் சிந்தனைகள் பற்றி, இந்த அளவிற்கு எளிமையாகவும், அதே சமயம் செறிவாகவும் தமிழில் வேறு புத்தகங்கள் இருப்பதாகத் தோன்றவில்லை. ஆழ்ந்த படிப்பும், அதை வெளிச்சொல்லும் திறமையும் வாய்ந்த பாலசிங்கம் தமிழ்ச் சிந்தனை உலகில் மிக முக்கியமானவர் என்பதிலும் வேறு கருத்து இருக்க முடியாது. தன் மற்ற வேலைகளுக்கிடையில் பாலசிங்கம் இன்னமும் பரவலாக எழுதவேண்டும்.

அண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 2

[பாகம் 1]

இந்த இரண்டு கட்டுரைகளையும் புத்தகத்தின் பாகம் 1 என்று குறிப்பிடலாம். இதைத் தொடர்ந்து வருவது சற்றே கனமான இலக்கிய, தத்துவார்த்த சிந்தனைகள் பற்றிய விளக்கக் கட்டுரைகள். இவைதான் 'வெளிச்சம்' ஏட்டில் தொடராக வந்தவை. சிக்மண்ட் பிராய்ட், கார்ல் மார்க்ஸ், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஹெகல், அல்துசார், நீட்சே, ஹெய்டெக்கர், ஹுசெர்ல், ஜான் போல் சாத்தர், ஆல்பர்ட் கமு, ஃபுகுயாமா, சோம்ஸ்கி, சாமுவேல் ஹண்டிங்டன், மிஷெல் ஃபூக்கோ என்று பல இலக்கிய தத்துவார்த்தவாதிகளின் தத்துவங்களைப் பற்றிய எளிய அறிமுகம் நன்கு எழுதப்பட்டுள்ளது.

மிக முக்கியமான கட்டுரைகளாக மூன்றைக் குறிப்பிடுவேன். புத்தகத்தின் கடைசிக் கட்டுரையான "மனிதத்துவம், சாத்தர் பற்றிய ஒரு (sic) அறிமுகம்", சாத்தர் (Jean Paul Satre) பற்றி தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த, எளிய முறையில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை எனலாம். சாத்தரின் இருத்தலியக் கோட்பாடுகள் குறித்த விளக்கம், சாத்தரது 'குமட்டல்' (Nausea) எனும் நாவல் பற்றிய அறிமுகம், தன் நாவலையே பிற்காலத்தில் சாத்தர் கடுமையாக விமர்சித்தது, நோபல் பரிசை ஏற்க மறுத்தது, சாத்தரின் மார்க்ஸியக் கருத்துகள், மரபுவாத கம்யூனிஸ்டுகளின் கொள்கைகளை எதிர்த்து வாழ்க்கை முழுதும் எழுத்தால் போராடியது, எப்படி ஒரே நேரத்திலேயே இருத்தலியம் மற்றும் மார்க்ஸியம் என இரண்டிலும் வெகுவாகக் கருத்துக்களை முன்வைக்க முடிந்தது (இரண்டையும் ஒட்டவைக்க முயன்றது), ஃபிரான்சுக்கு எதிராக அல்ஜீரியப் புரட்சியாளர்களை ஆதரித்தது என அவரது வாழ்க்கையையும் கொள்கைகளையும் நிறைவாக விளக்குகிறார்.

சாத்தரது எழுத்துகளைப் படிப்பது சிரமமானது. அவரது 'Being and Nothingness' என்னும் 800 பக்கப் புத்தகத்தை சில நாட்களாக வைத்துக் கொண்டு தடுமாறிக்கொண்டிருக்கிறேன். பாலசிங்கத்தின் கட்டுரையைப் படித்த பின்னர் மீண்டும் இந்தப் புத்தகத்தை எடுத்துப் படிக்க முடியும் என நினைக்கிறேன். [மேற்படிக் கட்டுரையில் குமட்டல் நாவலின் சுருக்கத்தை மிகச் சிறப்பாக எழுதியுள்ளார். Fair quotation எனும் கணிப்பில் அந்த முழுச் சுருக்கத்தையும் வெளியிடுவது நியாயமானதா என்று தெரியவில்லை. வேண்டுமானால் பிறகு தனியாகத் தட்டச்சிடுகிறேன்.]

இரண்டாவதாகக் குறிப்பிடப்படவேண்டியது ஆல்பர்ட் கமுவைப் (Albert Camus) பற்றிய "அர்த்தமும் அபத்தமும்" எனும் சிறிய கட்டுரை. "அபத்தமான உலகில் அர்த்தமற்று வாழும் அபத்த நாயகனாக (Absurd Hero) அவர் (கமு) மனிதனைக் கண்டார். இந்த அபத்த மனிதனின் அவலமான, அர்த்தமற்ற வாழ்வுபற்றி ஆக்ரோஷத்துடன் எழுதினார்." என்கிறார் பாலசிங்கம். இயந்திர உலகில் வாழும் நவயுக மனிதனின் அலுப்புத் தட்டும் உழைப்பும் அவசர வாழ்வும் அபத்தமானது என்பது கமுவின் கருத்து. இந்த அசட்டுத்தனமான உழைப்பின் குறியீட்டுச் சின்னமாக கிரேக்க இதிகாசத்தின் சிசைப்பஸை முன்வைக்கிறார் கமு. "மனித வாழ்வு அபத்தமானது; துன்பம் நிறைந்தது; நிலையற்றது. இதுதான் இருப்பின் மெய்நிலை. இந்த இருப்பு நிலையிலிருந்து எவரும் தப்பித்துக் கொள்ள முடியாது. [ஆயினும்] இந்த வாழ்நிலையை மனிதன் துணிவுடன் எதிர்கொள்ள வேண்டும். அபத்தத்திலும் அர்த்தமின்மையிலும் அர்த்தத்தைக் காண்பதுதான் அர்த்தமான வாழ்வாக அமையும் என்பது அவர் கருத்து. Myth of Sisyphus என்ற அவரது [கமுவின்] தத்துவ நூல், மானிடத்திற்கு இந்தத் தரிசனத்தையே தருகிறது." என்கிறார் பாலசிங்கம்.

கமுவின் கிளர்ச்சிக்காரன் (The Rebel) என்ற தத்துவ நூல் அரசியல் உலகத்தைப் பற்றிய கடுமையான விமரிசனத்தை முன்வைக்கிறது. மத சித்தாந்தங்களை மட்டுமின்று கம்யூனிச உலகையும் கடுமையாகச் சாடியது இந்நூல். இதனால் கம்யூனிஸ்ட் தோழர்கள் பலரது நட்பையும், நீண்ட கால நண்பர் சாத்தரின் நட்பையும் கூட கமு இழக்க நேரிட்டது.

அண்டன் பாலசிங்கத்தின் விடுதலை - 1

விடுதலை, கட்டுரைத் தொகுப்பு, அன்ரன் பாலசிங்கம், பெயர்மக்ஸ் பதிப்பகம் (Fairmax Publishing Ltd.), P.O.Box 2454, Mitcham, Surrey CR4 1WB, England, நவம்பர் 2003, பக். 256, விலை UKP 9.50

('அன்ரன்', 'பெயர்மக்ஸ்' போன்றவை புத்தகத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளவை. அதுபோன்றே ஈழத்தமிழில் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.)

அண்டன் பாலசிங்கம் விடுதலைப் புலிகள் (LTTE) இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவர். அக்கூட்டத்தின் தலைமைக் கருத்தியலாளர். விடுதலைப் புலிகள் தலைவர் வே.பிரபாகரன் நேரடியாக ஈடுபட்ட சில பேச்சுவார்த்தைகளில் பாலசிங்கம் எப்பொழுதுமே பிரபாகரன் பக்கத்தில் இருந்திருக்கிறார். அதுதவிர இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நார்வேயின் உதவியுடன் நடந்த, பிரபாகரன் ஈடுபடாத, அமைதிப் பேச்சுவார்த்தையில் புலிகள் சார்பாக தலைமையேற்றது பாலசிங்கமே.

விடுதலை என்னும் பாலசிங்கத்தின் கட்டுரைத்தொகுதி வெளியானபோது இந்திய செய்தித்தாள்கள் அனைத்திலும் இந்தப் புத்தகத்தின் முதலிரண்டு கட்டுரைகள் முதற்பக்கச் செய்திகளாயின. நானும் அப்பொழுது இந்த கட்டுரைத் தொகுதி, ஒரு பிரடெரிக் போர்சைத் நாவலின் வேகமான பகுதிகளைப் போன்று புலிகளின் வீரதீரச் செயல்கள், ஜெயிலுடைப்பு, ஆரம்ப காலத்தில் மற்ற போராளி இயக்கங்களுடன் சண்டை போட்டு, பின்னர் பிற இயக்கங்கள் அனைத்தையும் ஆயுத ரீதியாக செயலிழக்கச் செய்தது, எம்ஜியார், ராஜீவ் காந்தி போன்ற இந்தியத் தலைவர்களுடனான உறவுகள் என்ற மாதிரியே இருக்கும் என்று நினைத்திருந்தேன். இந்தப் புத்தகம் மூன்று நாள்களுக்கு முன்னர்தான் எனக்கு படிக்கக் கிடைத்தது.

பாலசிங்கம் விடுதலைப் புலிகளின் கலைப் பண்பாட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்ட 'வெளிச்சம்' எனும் ஏட்டில் எழுதிய இலக்கியக் கட்டுரைகளுடன் அவசர அவசரமாக எழுதிச்சேர்த்த இரண்டு அரசியல் கட்டுரைகள் சேர்ந்த தொகுப்பு என்பது புரிந்தது. முதலிரண்டு அரசியல் கட்டுரைகளும் கையில் எடுத்தவுடன், கீழே வைக்க முடியாமல் படிக்க வைத்தன. முதலாவது "எம்.ஜி.ஆரும் புலிகளும்". விடுதலைப் புலிகளுக்கு எம்.ஜி.ஆர் தொடக்க காலத்திலிருந்து எவ்வளவு உதவிகளைச் செய்து வந்துள்ளார் என்று விவரிக்கிறது. எம்.ஜி.ஆர் தனது வீட்டின் சுரங்க அறையிலிருந்து கோடிக்கணக்கில் சூட்கேஸில் பணத்தை எடுத்து பாலசிங்கம் கையில் கொடுத்தது, புலிகள் வாங்கிய ஆயுதத் தளவாடங்களை சென்னைத் துறைமுகத்தில் உள்ளே எடுத்தவர முடியாது இந்திய இராணுவம் பாதுகாக்கும்போது எம்.ஜி.ஆர் தமிழகக் காவல்துறை மூலம் அந்தத் தளவாடங்களை வெளியே எடுத்துக்கொண்டு வந்து புலிகளிடம் கொடுத்தது, பிற ஈழப் போராளிகளிடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களையும் புலிகளுக்குக் கொடுத்தது, புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்க தமிழக அரசின் சார்பில் ரூ. 4.5 கோடிக்கு காசோலை கொடுத்து, பின்னர் ராஜீவ் காந்தியின் மத்திய அரசு அதைத் தடுத்து நிறுத்த தன் பாதாளச் சுரங்க அறையிலிருந்து நேரடியாக காசாகவே எம்.ஜி.ஆர் அந்தத் தொகையைக் கொடுத்தது என்று பல செய்திகளைத் தெரிவிக்கிறார்.

எம்.ஜி.ஆர் காலத்தில் தமிழக உளவுத்துறையின் தலைவராக இருந்த மோகன்தாஸ் ஐ.பி.எஸ் மீது புலிகள் எதிர்ப்பாளர் என்றும், அவர் எம்.ஜி.ஆருக்குத் தெரியாமல் புலிகளுக்கு எதிர்ப்பாக பல செயல்களைச் செய்தார் என்றும் (பிரபாகரனையும், பாலசிங்கத்தையும் வீட்டுக்காவலில் வைத்தது, காவல் நிலையத்துக்கு அழைத்துக்கொண்டு போய் தகாத வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தியது போன்றவை), எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் தானெழுதிய புத்தகத்தில் (M.G.R: The Man and the Myth, 1991இல் பிரசுரமானது. இப்பொழுது அச்சில் இல்லை) புலிகளைப் பற்றி இல்லாததையும், பொல்லாததையும் பொய்யாக எழுதியிருந்தார் என்றும் குற்றம் சாட்டுகிறார். எம்.ஜி.ஆருடன் கருணாநிதியை ஒப்பிட்டு சிறு சாடல், இப்பொழுது இருக்கும் மத்திய அரசின் உள்நாட்டு, வெளியுறவுக் கொள்கைகளைத் தீர்மானிக்கும் நட்வர் சிங், J.N.தீக்ஷித், M.K.நாராயண் ஆகியோர் மீதான விமரிசனம். ஆக இந்தியாவில் நண்பர்களைச் சேர்க்காவிட்டாலும் எதிரிகளைச் சம்பாதித்துக் கொள்ளாமலாவது இருக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறதோ என்ற தோற்றத்தைத் தருகிறது. தொடர்ந்த 'ரஜீவ் - பிரபா சந்திப்பு' என்னும் கட்டுரையில் ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனா ஒப்பந்தம், தொடர்ந்து பிரபாகரன் மீது கொடுத்த கடுமையான அழுத்தத்தினால் ராஜீவ் காந்திக்கும், பிரபாகரனுக்கும் இடையில் ஏற்பட்ட எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்றையும் விளக்குகிறார். இந்தக் கட்டுரையின் உள்ளடக்கமும் பல இந்திய செய்தித்தாள்களில் விளக்கமாக விவரிக்கப்பட்டு விட்டன.

ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை புலிகள் ஏற்றுக்கொண்டே தீரவேண்டும் என்று ராஜீவ் காந்தியின் ஆலோசகர்கள் பிரபாகரனை வற்புறுத்தினர். இந்த ஒப்பந்தப்படி, (அ) வட கிழக்கு மாகாணங்கள் தமிழர், சிங்களர், முஸ்லிம் பகுதிகளாக வாக்கெடுப்பின் படி பிரிக்கப்படும், (ஆ) மாகாண அரசுகளைக் கலைக்கும் உரிமை இலங்கை அதிபருக்கு உண்டு, (இ) புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்பந்தம் கையெழுத்தான 72 மணி நேரங்களில் இந்திய அமைதிப்படையினரிடம் ஒப்படைத்து விட வேண்டும், (ஈ) புலிகள் வடகிழக்குப் பிராந்தியங்களில் வரியின் மூலம் பணம் சேர்ப்பதையும் விட்டுவிட வேண்டும். இவற்றை பிரபாகரன் எதிர்த்தார். ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டிய காரணத்தால் ராஜீவும் மேற்படி ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளன என்றும், அவற்றைக் களைய தான் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுப்பேன் என்றும் வாய்வார்த்தையால் சொன்னாராம்: (அ) வட கிழக்கு மாகாணப் பிரிவுக்கான கருத்து வாக்கெடுப்பை நடக்கவிடாமல் ஒத்திப்போட வைப்பது, (ஆ) இடைக்கால அரசில் புலிகள் பெரும்பான்மையிலும், இதரப் போராளிகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஈரோஸ் போராளிகள் மட்டுமே சிறுபான்மையாக இருக்குமாறும் ஓர் இரகசிய ஒப்பந்தம், (இ) நல்லெண்ணச் சமிக்ஞையாக சில துருப்பிடித்த ஆயுதங்களை மட்டும் அமைதிப்படையிடம் ஒப்படைத்தால் போதும் ("இந்தியா [எங்களுக்குக்] கொடுத்த ஆயுதங்களெல்லாமே துருப்பிடித்தவைதான்" என்றாராம் பிரபாகரன்), (ஈ) புலிகளின் செலவுக்கென இந்திய அரசு அவர்களுக்கு மாதத்திற்கு இந்திய ரூ. 50 லட்சம் தருவது.

இப்படி ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டும், அதை தாளில் எழுதி கையெழுத்திட புலிகள் கேட்டதற்கு ராஜீவ் காந்தியின் ஆலோசகர்கள் ஒப்புக்கொள்ளவில்லையாம். Gentlemen agreement ஆக வாய் வார்த்தையோடு இருந்துவிட்டுப் போகட்டுமே என்று சொல்லிவிட்டனர். பிரபாகரன் பாலசிங்கத்திடம் "அண்ணா, இருந்து பாருங்கோ, இந்த இரகசிய ஒப்பந்தமும், வாக்குறுதிகளும் ஒன்றுமே நிறைவேறப் போவதில்லை. இதெல்லாம் ஒரு (sic) ஏமாற்று வித்தை." என்று விரக்தியோடு சொன்னாராம். அப்படியே நடந்தது என்று முடிக்கிறார் பாலசிங்கம்.

Saturday, July 24, 2004

இராக்கில் இந்தியர்கள் கடத்தல்

இராக்கில் மூன்று இந்தியர்களை தீவிரவாதிகள் கடத்தியுள்ளனர். இவர்கள் ஒரு குவைத்திய நிறுவனத்தின் வேலை செய்கிறார்கள். இந்த நிறுவனம் இராக்கை விட்டு வெளியேறாவிட்டால் பிணையாகக் கொண்டுவந்துள்ள இந்தியர்களை 'கச்சக்' செய்து விடுவோம் என்று பயமுறுத்துகின்றனர் தீவிரவாதிகள்.

இந்த விஷயத்தில் இந்திய அரசை நாம் குற்றம் சொல்லமுடியாது. மேற்படி இந்தியர்கள் அனைவரும் தாங்களாகவேதான் இராக்கில் வேலை தேடிக்கொண்டு சென்றுள்ளனர். இராக் மோசமான நிலையில் உள்ளது என்று அனைவருக்கும் தெரியும். அமெரிக்காவின் நிக்கோலாஸ் பெர்க் என்பவரும், கொரியாவின் கிம் சுன் என்பவரும் இதுவரை தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டு தலை கொய்யப்பட்டுள்ளனர்.

அந்த இடத்தை விட்டு பல காத தூரம் விலகியிருப்பதுதானே சரியானது?

Kuwait and Gulf Link Transport என்னும் நிறுவனத்தில் லாரி ஓட்டுபவர்களான மூன்று இந்தியர்கள், மூன்று கென்யா நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒரு எகிப்தியர் - ஆக ஏழு பேர்கள் - புதன் அன்று 'கறுப்புக்கொடியேந்துவோர்' எனப்பெயரிட்ட இயக்கத்தைச் சேர்ந்தோரால் கடத்தப்பட்டனர்.

இந்திய அரசு நேரடியாக இராக்கில் இயங்கவில்லை. அமெரிக்கா போல பெரும்படையையோ, கொரியாவைப் போல போரிடாப் படைகளையோ அனுப்பவில்லை. இராக்கிற்கு வேலைக்குச் செல்லவேண்டாம் என்று இந்தியர்களையும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த வீரர்களை விடுவிக்கவென்று பிணைப்பணம் எதையும் தீவிரவாதிகள் கேட்கவில்லை. ஆக இந்திய அரசால் செய்யக்கூடியது எதுவுமே கிடையாது. குவைத்தி நிறுவனத்தின் அதிபர் இராக்கை விட்டு விலக முடிவி செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அது நடக்காவிட்டால், சனி தொடங்கி (இன்று முதல்) ஒவ்வொருவராக தலை கொய்யப்படுவர் என்று கறுப்புக்கொடியேந்துவோர் மிரட்டியுள்ளனர்.

கடைசியாகக் கிடைத்த தகவலின்படி இராக்கில் எகிப்திய இராஜதந்திரி ஒருவர் இன்று கடத்தப்பட்டுள்ளார்.

இராக் பக்கம் நம் ஆட்கள் இப்பொழுது தலைவைத்துக்கூடப் படுக்கவேண்டாமே?

தமிழோவியம் கிரிக்கெட்

இந்த வாரம் தமிழோவியத்தில் டெண்டுல்கரின் ஆட்டத்தில் பார்த்து மகிழ ஒன்றும் இல்லை, டெண்டுல்கருக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் குறைந்து வருகிறது என்னும் குற்றச்சாட்டுகள் மீதான விவாதம்.

இப்பொழுது தமிழோவியம் இதழில் கொடுக்கும் மறுமொழிகள் உடனே அதே பக்கத்தில் தெரியுமாறு வசதி செய்யப்பட்டுள்ளது. அதனால் என் கட்டுரைக்கான மறுமொழிகளை அங்கேயே, அப்படியே சுடச்சுடக் கொடுக்கலாம். என் பதிலும் உடனடியாக அங்கேயே கிடைக்கும்.

Wednesday, July 21, 2004

இடியாப்பமும் சொதியும்

நேற்று லண்டனில் நண்பர்களுடன் இரவு உணவு யாழ்ப்பாணம் ஸ்டைலில். இடியாப்பம், சொதி, தேங்காய்த் துவையல், உருளைக்கிழங்கு கறி.

இடியாப்பம் என்றால் சென்னையில் சரவணபவனில் கிடைக்கும் வெளுத்த இடியாப்பங்கள் அல்ல. சற்றே சிவந்தது. சிவந்த அரிசியின் மாவுடன் சற்றே கோதுமை மாவும் கலந்ததாம். சொதி என்பது அவியல் போன்றது. ஆனால் நீர்க்க இருப்பது. தேங்காய்ப் பாலில் சில காய்கறிகளை வேக வைத்துச் செய்வது. தேங்காய்த் துவையல் - அது துவைத்த தேங்காய் அல்ல. பச்சையான (வறுக்காத) தேங்காய்த் துறுவலில் உப்பு, காரம் கலந்தது. கொழும்பில் பலமுறை இதைச் சாப்பிட்டிருக்கிறேன். சம்பல் என்று பெயரிட்டிருப்பார்கள்.

நான் இதுவரை இடியாப்பத்துடன் இனிக்கும் தேங்காய்ப்பால் அல்லது காரக்குருமா கலந்துதான் சாப்பிட்டுள்ளேன். நேற்றைய உணவு புதுமையாகவும் சுவையாகவும் இருந்தது.

சொதி கேரளாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற உணவு என்றார் ஒருவர். இடியாப்பத்தை வியாதிக்காரன் உணவென்று சொல்வார்கள் என்றார் இன்னொருவர். அரிசிச்சோறு உண்டால் பிடித்து அழுத்தும். இடியாப்பம் லேசானது என்றார் மற்றவர்.

ஓரிரு நாட்கள் சாப்பிடுவதற்குப் பரவாயில்லை. ஆனால் எனக்கு தினமும் அரிசிச்சோறுதான் வேண்டியிருக்கிறது. பழக்கத்திற்கு எவ்வளவு அடிமை நாம்?

பத்மநாப ஐயர், நித்தியானந்தம், புஷ்பராஜன், ராஜா, மாலி, பவஹரன் ஆகியோருடன் ஒரு மாலைப்பொழுது இனிமையாகக் கழிந்தது.

உணவுடன் நிறைய இலக்கிய விருந்தும் இருந்தது. அதைப்பற்றிப் பின்னர்.

நிதிநிலை அறிக்கை 2004 - 5

[முதலாவது | இரண்டாவது | மூன்றாவது | நான்காவது]

டிரான்ஸாக்ஷன் வரியில் மாற்றங்கள்

* டெலிவரியாகும் பங்குகள் மீது 0.15% வரி அப்படியே உள்ளது. முதலில் இந்த வரி வாங்குபவர் மீது விதிக்கப்படும் என்பது மாறி, வாங்குபவர், விற்பவர் இருவர் மீதும் 0.075% வரியாகிறது. கேபிடல் கெயின்ஸ் வரிவிகிதங்களின் மாற்றமில்லை.

* நாள் வியாபாரிகள் மீதான டிரான்சாக்ஷன் வரி 0.1% ஆகக் குறைக்கப்படுகிறது.

* கடன் பத்திரங்கள் மீதான டிரான்சாக்ஷன் வரி முழுமையாக விலக்கப்படுகிறது.

* டெரிவேடிவ்கள் மீதான டிரான்சாக்ஷன் வரி 0.10% ஆகக் குறைக்கப்படுகிறது.

Saturday, July 17, 2004

ஐஐடிக்கள் முழுத்தோல்விகளா?

வெங்கட் தன் பதிவில் "என்னைப் பொருத்தவரை நான் ஐஐடிகளைத் தோல்வியாகவே கருதுகிறேன்" என்று எழுதி 13 கேள்விகளை எழுப்பியுள்ளார். அதைத் தொடர்ந்து மற்றுமொரு பதிவில் எப்படி அதிக பட்ச மான்யங்கள் பெற்றிருந்தும், அரசியல் தலையீடுகள் இல்லாமலிருந்த போதிலும் ஐஐடிக்களால் உலகத்தரத்தை எட்ட முடியவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

எனக்கும் ஐஐடிக்களின் வெளியீடுகள் பற்றி வருத்தம்தான் உள்ளது. ஆனால் நான் வெங்கட் அளவிற்குப் போய் ஐஐடிக்கள் முழுத்தோல்விகள் என்று சொல்ல மாட்டேன்.

நாம் எழுப்ப வேண்டிய கேள்விகள் இவையே:

1. ஐஐடிக்கள் தொடக்கத்தில் என்ன குறிக்கோள்களுடன் உருவாக்கப்பட்டன? அந்த குறிக்கோள்கள் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளன?

2. 1950களில் தீர்மானிக்கப்பட்ட குறிக்கோள்கள் என்னவாக இருந்தாலும், இன்றைய நிலையில் என்ன குறிக்கோள்கள் இருக்க வேண்டும், அந்தக் குறிக்கோள்களுக்கு எத்தனை அருகில் ஐஐடிக்கள் உள்ளன? உலகத் தரத்தில் உள்ள பிற பொறியியல் உயர் கல்வி நிலையங்களோடு, ஐஐடிக்களை ஒப்பிடும்போது நமக்குக் கிடைக்கும் தோற்றம் என்ன?

3. ஐஐடிக்கள் இப்பொழுது இருக்கும் இடத்திலிருந்து உன்னதக் குறிக்கோள்களை அடைய முடியுமா? எப்படி அடைவது?

இத்துடன்

4. ஐஐடி இளங்கலை நுழைவுத் தேர்வுமுறை சரியானதா? மாற்ற வேண்டுமா?
5. ஐஐடி முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகளில் என்ன குறைகள்?

என்னும் கேள்விகளையும் இணைத்துப் பார்க்கலாம்.

முதலில் ஐஐடிக்கள் என்ன குறிக்கோள்களுடன் துவங்கப்பட்டன என்று பார்ப்போம். நளினி ரஞ்சன் சர்கார் என்பவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, மார்ச் 1946இல் "The Development of Higher Technical Institutions in India" என்றதொரு இடைக்கால அறிக்கையைச் சமர்ப்பித்தது. இறுதி அறிக்கையென்று ஒன்று சமர்ப்பிக்கப்படவேயில்லை. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது இதுவே:
(அ) குறைந்தபட்சமாக, நான்கு பொறியியல் உயர் கல்விநிலையங்களாவது இந்தியாவின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு பகுதிகளில் கட்டப்படவேண்டும். இவற்றில் கிடைக்கும் கல்வி மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, மான்செஸ்டர் போன்ற இடங்களில் கிடைக்கும் இளங்கலைப் பட்டங்களுக்கு ஈடாக இருக்க வேண்டும்.

(ஆ) இந்த நிலையங்கள் இளங்கலை மாணவர்களை உருவாக்குவதில் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் ஆராய்ச்சிகளில் ஈடுபடுதல், ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்குதல், பொறியியல் படிப்புகளை சொல்லிக்கொடுக்கத் தேவையான ஆசிரியர்களை உருவாக்குதல் ஆகிய பணிகளிலும் ஈடுபட வேண்டும்.
இதையொட்டியே கரக்பூர், மும்பை, சென்னை, தில்லி ஆகிய இடங்களில் ஐஐடிக்கள் நிறுவப்பட்டன. பின்னர் கவுஹாத்தியில் புதிதாக ஒன்று கட்டப்பட்டது; ரூர்கியில் ஏற்கனவே இருந்த ஒரு பொறியியல் கல்லூரி ஐஐடியாக மாற்றப்பட்டது.

குறிக்கோள் (அ) வை கவனித்தால், உலகில் இருக்கும் எந்த கல்லூரியின் இளங்கலைப் பொறியியல் படிப்புக்கும் ஐஐடிக்களின் இளங்கலைப் படிப்பு சிறிதும் குறைந்ததல்ல. ஐஐடியில் கிடைக்கும் அளவிற்கு இளங்கலைப் படிப்பின் தரம் வேறெங்கும் கிடையாது என்று என்னால் உறுதியாகவே சொல்ல முடியும். இந்தியா விடுதலையான காலக்கட்டத்தில், உள்கட்டுமானப் பணிகளுக்காக திறமை வாய்ந்த பொறியியலாளர்கள் தேவைப்பட்டனர். இந்தியாவின் எந்தவொரு பொறியியல் சார்ந்த பொதுத்துறை நிறுவனத்தை எடுத்துப் பார்த்தாலும் அதனைக் கட்டியதில் பெரும்பான்மைப் பங்கு ஐஐடி மாணவர்களுடையதுதான் என்பது புலனாகும். எல்
& டி, டெல்கோ, டிஸ்கோ, பி.எச்.இ.எல், என்.டி.பி.சி தொடங்கி பல்வேறு மின்னுற்பத்தி நிறுவனங்கள், வி.எஸ்.என்.எல், பி.எஸ்.என்.எல் முதல் இன்றைய பார்தி, ரிலையன்ஸ் என்று மெக்கானிகல், எலெக்டிரிகல், எலெக்டிரானிக்ஸ், கெமிகல், கணினித்துறை எஞ்சினியர்களில் தலைமைப் பங்கு ஐஐடியினர்தான். பிற பொறியியல் கல்லூரி மாணவர்கள் இருந்தாலும், ஐஐடியில் படித்தவர்களே தலைமை தாங்கினர், தாங்குகின்றனர். டிசிஎஸ், இன்போசிஸ், சத்யம், விப்ரோ போன்ற ஐடி துறையிலும் முக்கியமான தலைமைப் பதவிகளில் மற்ற அனைவரையும் விட கணிசமான அளவில் இருப்பது ஐஐடியில் படித்தவர்களே. ஐஐடியில் படித்தபின், ஐஐஎம்களில் பயின்றவர்கள்தான் இந்தியாவின் மார்கெடிங், சேல்ஸ் துறைகளிலும் கோலோச்சுகின்றனர். இங்கு பிரபலங்களைப் பெயர்களாகத் தேடவேண்டாம். ஹிந்துஸ்தான் லீவர், பெப்ஸி முதல் எந்த FMCGக்களை எடுத்தாலும், மெக்கின்ஸி முதல் எந்த கன்சல்டிங் நிறுவனத்தை எடுத்தாலும் அங்கு ஐஐடி+ஐஐஎம் ஆசாமிகள் எவ்வளவு என்பதைப் பார்த்தாலே போதும்.

ஐஐடியில் படித்து வந்தவர்கள் எத்தனை பேர் தலைவர்களாக, தொழில்முனைவோராக வந்துள்ளனர் என்ற கேள்வியைக் கவனித்தால் அது குறைவுதான். விரும்பிய அளவுக்கு இல்லை. இதற்கான பழியை ஐஐடிக்கள் மீது மட்டுமே போடமுடியுமா? நாட்டின் நிலை கடந்த பத்து வருடங்கள் முன்னால் வரை தொழில் முனைவோருக்குச் சாதகமாக இருந்ததே இல்லை. இன்னும் ஐந்து வருடங்கள் கழித்துப் பார்த்தால் ஐஐடி பல தொழில்முனைவோரையும் உருவாக்கும் என்பது என் கருத்து. முகேஷ் அம்பானி ஐஐடியில் படித்தாரா என்றெல்லாம் வெங்கட் கேள்வி கேட்பது நியாயமேயில்லை. முகேஷ் அம்பானி திருபாய் அம்பானியின் மகனாகப் பிறந்தார். அது ஒன்றே போதும் அவருக்குத் தகுதியாக. உச்சாணிக் கொம்பில் இருப்போரின் பெயர்களை வெளியில் எடுத்து வைத்து ஐஐடிக்கள் உசத்தி, மட்டம் என்றெல்லாம் பேச முடியாது. உண்மையான உழைப்பு பெயர் தெரியாத பலரிடமிருந்துதான் வருகிறது. (என்னைப் போல:-)

ஆனால் ஐஐடி ஆராய்ச்சித்துறையில் மிகவும் சறுக்கியுள்ளது. இதற்கும் ஐஐடி என்னும் அமைப்பின் மீது முழுப் பழியையும் போடமுடியாது. பொறியியல் இளங்கலை படித்த மாணவர்கள் பலரும் அறுபதுகளில் தொடங்கி இன்றுவரை சாரிசாரியாக அமெரிக்கா செல்லத் தொடங்கினர். வேறெந்தப் பொறியியல் கல்லூரிகளிலும் இது 1995 வரை நடந்தது கிடையாது. மற்ற கல்லூரிகளில் படித்த மாணவர்கள் பெரும்பாலும் முதுகலை (M.E, M.Tech) படித்தவுடன்தான் முனைவர் ஆராய்ச்சிக்கு அமெரிக்கா சென்றனர். ஆனால் ஐஐடி மாணவர்கள் அனைவரும் B.Tech முடித்தவுடனே நேரடியாக அமெரிக்கா சென்றனர். [இப்பொழுது பல இந்தியப் பொறியியல் கல்லூரிகளிலிருந்தும் மேற்படிப்புக்கென அமெரிக்கா செல்லும் மாணவர் தொகை அதிகரித்துள்ளது.]

இப்படி அமெரிக்கா சென்ற மாணவர்கள் அனைவருமே, சராசரியாகப் பார்க்கையில், தரம் வாய்ந்த முனைவர் ஆராய்ச்சியையே செய்துள்ளனர். அவர்கள் சென்ற அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் அதற்கான வசதிகளைச் செய்து கொடுத்தன. அதுபோன்ற வசதிகள் இந்தியாவில் இல்லை. மேலும் அமெரிக்க டாலர்கள், அமெரிக்காவின் வசதி கொடுத்த போதை, ஸ்டேடஸ் உயர்வு என்று பல காரணங்களுக்காக இந்தியாவை விட்டு வெளியேறுவதை மட்டுமே ஐஐடி மாணவர்கள் விரும்பினர். இதைத்தொடர்ந்துதான் brain drain மிக விரிவாக அலசப்பட்டது.

இதன் விளைவாக குறிக்கோள் (ஆ) வெகுவாகப் பலனிழந்து போனது. தரமான பொறியியல் ஆசிரியர்கள் இந்தியாவிற்கென உருவாகவில்லை. அவர்கள் இந்தியாவிலிருந்து பெயர்ந்து அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயின்று பெர்க்லி, எம்.ஐ.டி, கால்டெக்கில் அந்த ஊர் மாணவர்களுக்குக் கல்வி பயிற்றுவித்ததோடு மட்டுமல்லாமல், ஆராய்ச்சிகளையும் அங்கேயே செய்தனர். இந்தியாவில் தரமான ஆராய்ச்சி செய்யமுடியாது என்று வேறு சொல்ல ஆரம்பித்தனர். (அதில் ஓரளுவுக்கு உண்மையும் இருந்தது.) இந்தியாவில் வந்து போராடக்கூடிய மனப்பான்மை அவர்களிடம் இல்லாதிருந்தது. போராடக்கூடிய ஒரு மனப்பான்மையை அவர்களுக்குப் பயிற்றுவிக்க ஐஐடிக்கள் முயலவில்லை.

ஐஐடிக்கள் வெறும் எஞ்சினியர்களை மட்டுமே உருவாக்கியதால் இந்த எஞ்சினியர்களால், அமெரிக்காவின் கண்ணாடிக் கூரையைப் பிய்க்க முடியவில்லை. மேலே செல்லத் தேவையாக இருந்தது மேலாண்மைத் திறன். அது ஐஐடியில் படித்து, பின் அமெரிக்காவிலும் மேற்படிப்பு படித்த எஞ்சினியர்களிடத்தில் இல்லை. ஆனால் இண்டெல், நாசா என்று எங்கும் நீக்கமற நிறைந்து முக்கியமான பங்களிப்பை ஐஐடி மாணவர்கள் வழங்கினர். இணையம் தொடர்பான முயற்சிகளில் அமெரிக்க வென்சர் கேபிடல் பாய ஆரம்பித்ததும்தான் சில ஐஐடியினர் மேலே ஏறத் தொடங்கினர். அதனால் வெளியே தெரிந்த பெயர்கள் அத்தனையுமே கணினிசார் துறையிலிருந்துதான். இன்றுகூட மெக்கானிகல், கெமிகல் போன்ற துறைகளில் அமெரிக்காவில் உள்ள ஐஐடியினர் வெகுவாக ஒன்றும் சாதிக்கவில்லை.

ஆனால் நேரு, சர்கார் இருவரின் தொடக்ககாலக் குறிக்கோள்களின் ஆதாரமான உலகத்தரம் வாய்ந்த இளங்கலை எஞ்சினியர்களை - தொழிற்சாலையில் வேலை செய்யும் எஞ்சினியர்களை - ஐஐடிக்கள் உற்பத்தி செய்கின்றன என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. 1970-2000த்தில் இப்படி உற்பத்தி செய்யப்பட்ட பெரும்பான்மை எஞ்சினியர்கள் இந்தியாவில் வேலை செய்யாது அமெரிக்கா போனது வருந்தத்தக்கது. இதனால் பயனை அதிக அளவில் பெற்றது அமெரிக்கா. (இந்தியாவிற்குக் கிடைத்தது அன்னியச் செலாவணி மட்டுமே).

இப்பொழுது நாம் கேட்க வேண்டிய கேள்வி வேறு. ஐஐடி வரும் மாணவர்களின் விருப்பம், வெறும் இளங்கலைப் படிப்பு மட்டும் படித்து, தொழிற்சாலையில் வேலை செய்வதல்ல. இதனை நேருவுக்குப்பின் வந்த பிரதமர்களோ, மனிதவளத்துறை அமைச்சர்களோ புரிந்து கொள்ளவில்லை. இந்த மாணவர்களை அமெரிக்காவிற்கு ஈர்ப்பது என்ன என்பதைக் கண்டறிந்து அந்தப் பின்னணியை ஐஐடிக்களில் உருவாக்க யாரும் முயலவில்லை. இறுகிப் போன இந்திய பீரோக்ரேசி ஐஐடியிலும் கோலோச்சியது. [ஐஐடியில் படித்தபோது ஒருமுறை ரூ. 500 பரிசு எனக்குக் கிடைத்தது. நான் விரும்பிய புத்தகங்களை என் காசில் வாங்கி, ரசீதைக் கொடுத்து என் பரிசுப் பணத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக நான் பட்ட பாட்டைப் பற்றி தனியாக ஒரு பதிவில் எழுத வேண்டும். அந்தப் பரிசு என் எதிரிக்குக் கிடைத்திருக்கக் கூடாதா என்று என்னை ஏங்க வைத்து விட்டனர் ஐஐடி மெட்ராஸ் அலுவலர்கள்!]

இன்றைய தேதியில் ஐஐடிக்களின் பெருங்குறைகளாக நான் கீழ்க்கண்டவற்றைப் பார்க்கிறேன்.

1. ஆசிரியர்கள் தரம் வெகுவாக உயரவேண்டும். எம்.ஐ.டி போல இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பு நல்லதுதான். ஆனால் எம்.ஐ.டி போல முயன்று மிக அதிகத் தரம் வாய்ந்த ஆசிரியர்களை உள்ளே கொண்டுவர ஆவன செய்யவேண்டும். அதற்காகத் தேவையான அதிக நிதியை அரசுதான் வழங்க வேண்டும். மற்ற நாடுகளின் தலைசிறந்த ஆசிரியர்களை எப்படியாவது ஐஐடிக்களுக்குக் (சப்பாட்டிகல் செய்யக்)கொண்டுவந்து ஓரிரு வருடங்களாவது இங்கு வேலை செய்ய வைக்க வேண்டும்.

2. பிற இந்தியக் கல்லூரிகளை விட ஐஐடிக்களில் பீரோக்ரேசி குறைவுதான் என்றாலும், இன்னமும் குறைக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான அத்தனை அதிகாரங்களும் ஐஐடிக்களின் இயக்குனர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

3. தரம் வாய்ந்த இளங்கலை மாணவர்கள் அமெரிக்கா போய் மேற்படிப்பு செய்ய விரும்புவதன் காரணம் அப்படிச் செல்பவர்களால் அங்கேயே ஒரு வேலையைப் பார்த்துக்கொண்டு அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட முடியும் என்பதே. இது போன்றதொரு எண்ணத்தை மாற்றுவது கடினம். அமெரிக்காவில் கும்பகோணத்தில் நடப்பது போல குழந்தைகள் கருகிச் சாவதில்லை. சைதாப்பேட்டையில் கடிக்கும் கொசுக்களைப் போல அங்கில்லை. சென்னை தண்ணீர்ப் பஞ்சத்தில் நாங்கள் திண்டாடுவது போல அமெரிக்காவில் யாரும் வாடுவதில்லை.

ஆனால் தரமான ஆசிரியர்களால் இளங்கலை படிக்கும் மாணவர்களிடம் நேரடியாக இதைப்பற்றிப் பேச முடியும். மாணவர்களின் மனதை ஓரளுவுக்காவது மாற்ற முடியும். தேசப்பற்றை அதிரடியாக நுழைத்தே ஆக வேண்டும். எப்படி இந்தியாவின் பிரச்சனைகளைத் தீர்ப்பது மிகச்சிறந்த கடமை என்பதையும், அப்படிச்செய்யும்போதே ஒவ்வொரு துறையிலும் மிக உயர்ந்த ஆராய்ச்சிகளைச் செய்யமுடியும் என்பதையும் ஆசிரியர்களால்தான் எடுத்துக் காட்ட முடியும்.

வெங்கட் சொன்ன குறைகள் அத்தனையும் கிட்டத்தட்ட இந்த விதத்தில்தான். ஐஐடி, மாணவர்களின் மூளையை மழுங்கடிக்கிறது என்ற அவர் கருத்தை நான் சிறிதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஐஐடியில் படித்து பின் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் படித்து வாழ்க்கையில் வெற்றியடந்தவர்களை ஐஐடிக்களின் வெற்றிகளாகக் காட்டுவது "அழுகுணி ஆட்டம்" என்னும் அவரது கருத்தையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஐஐடிக்களுக்கும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கும் சமபங்கு உள்ளது இந்த வெற்றியில்.

என்னை நான் ஒரு ஐஐடி மெட்ராஸ் (50%), கார்னல் பல்கலைக்கழகம் (50%) உற்பத்தி என்றுதான் கருதுவேன்.

ஐஐடியின் அறிவியல் துறைகளின் தரம் ஐஐஎஸ்ஸி, டிஐஎ·ப்ஆர் தரத்தில் இல்லை என்பது உண்மையே. இங்கும் நாம் முதுகலை, ஆராய்ச்சித் துறைகள் பற்றி மட்டுமே பேசுகிறோம். ஐஐடிக்களில் ஆராய்ச்சித் தரம் பொதுவாகவே குறைவு என்பதை நான் முழுமையாக ஒப்புக்கொள்கிறேன்.

[ஐஐடி இளங்கலைப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு பற்றி தனியாக எழுத வேண்டும்.]

Friday, July 16, 2004

தமிழோவியம் கிரிக்கெட்

இந்த வாரம் தமிழோவியம் கட்டுரையில் முரளிதரன், ஷேன் வார்ன் இருவரைப் பற்றிய ஒரு ஒப்பீடு.

கும்பகோணம் தீ விபத்து

கும்பகோணத்தில் பள்ளி ஒன்றில் நடந்த தீவிபத்தில் 120க்கும் மேற்பட்ட பள்ளிக்குழந்தைகள் கருகி இறந்துவிட்டன என்று கேள்விப்படுகிறேன். முழுத்தகவல் கைவசம் இல்லை.

Thursday, July 15, 2004

ஐஐடிக்களும் தலித்துகளும்

ரோஸாவசந்தின் தூண்டுதலினால் http://www.ambedkar.org/ தளத்திற்குச் சென்று அங்கு தேடிப்பிடித்த IITs: Doing Manu Proud. academic terrorism, casteism go unnoticed என்னும் இந்தக் கட்டுரையைப் படித்தேன்.

உடனடியாக இந்தக் கட்டுரைக்கு எதிர்வினை செய்ய இயலாது. ஆனால் நிச்சயமாக சிந்தனையைத் தூண்டிய கட்டுரை. இத்தனை வருடங்களாகியும் தலித்துகளின் கல்வியறிவைப் பெருக்குவதில், அவர்களை மற்றவர்களுக்குச் சமமாக்குவதில் ஐஐடி எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை என்றுதான் தோன்றுகிறது.

ஐஐடி சென்னையில் நடப்பதாக மற்ற சில குற்றங்களும், மேற்சொன்ன தளத்தின் சில செய்திகளில் கிடைத்தது. இவை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை.

உயர்கல்விக்கூடங்களில் தரம் என்பதே தேவையில்லை என்பது போல மேற்சொன்ன கட்டுரை சொல்லிச்செல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் 'தரம்' என்பதை மட்டும் நினைவில் வைத்துக்கொண்டு இட ஒதுக்கீட்டுக் கொள்கையை சரியாக நிறைவேற்றாமல் இருப்பது சரியல்ல. ஐஐடிக்கள், தனக்கென ஒரு குறிக்கோளாக இத்தனை தலித்துகள், பெண்களை கழகத்திற்குள் மாணவர்களாகவும், ஆசிரியர்களாகவும் கொண்டுவர வேண்டும் என்று வைத்துக்கொண்டு அதைச் செயல்படுத்தவேண்டும். மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்தான் இதனைக் கட்டாயமாக்கி, ஒவ்வொரு ஐஐடியும் இதன்படி நடக்கிறதா என்பதை மேற்பார்வை செய்யவேண்டும்.

அரசுசாரா தலித் நல அமைப்புகள் எந்த வகையில் ஐஐடி, பிற உயர்கல்விக்கூடங்கள், ஆராய்ச்சி நிறுவனங்களில் தகுதி வாய்ந்த தலித் மாணவர்கள் சேருமாறு, இந்த மாணவர்களுக்கு தீவிரமான பயிற்சிகளைத் தருகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள ஆசை.

[ஐஐடி பற்றிய என் முந்தைய பதிவு]

நிதிநிலை அறிக்கை 2004 - 4

[முதலாவது | இரண்டாவது | மூன்றாவது]

இந்த பட்ஜெட்டில் பங்குச்சந்தை தொடர்பாக மூன்று மாறுதல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை முறையே:

1. Securities Transaction Tax: Securities என்பது பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்ட பங்குகள் (shares), கடன் பத்திரங்கள் (debenture, bond, loan notes etc.), futures, options, listed mutual fund units என்று பலவற்றையும் குறிக்கும். இதுநாள் வரை இவற்றை வாங்கி, விற்கும்போது தனியாக வரி ஏதும் இல்லாமலிருந்தது. வாங்கி விற்கும்போது கிடைக்கும் லாப, நஷ்டங்களுக்கு மட்டும்தான் கேபிடல் கெயின்ஸ் வரி இருந்தது. இந்த பட்ஜெட்டில் கொண்டுவந்துள்ள திட்டப்படி, ஒவ்வொரு வாங்கல்-விற்றலுக்கும் Transaction tax விதிக்கப்படுகிறது. இதன்படி, வாங்குபவர், வாங்கும் மதிப்பின் மேல் 0.15% வரியாகக் கட்டவேண்டும். இத்துடன் கூடவே கேபிடல் கெயின்ஸ் வரிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

2. Capital Gains tax (on securities): Securities மீதான கேபிடல் கெயின்ஸ் இரண்டு வகையானது. குறுகிய காலம் (Short term capital gains - STCG). நீண்ட காலம் (Long term capital gains). எடுத்துக்காட்டாக 100 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளை இன்று (15 ஜூலை 2004) பங்கு ஒன்று ரூ. 419க்கு வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இன்றிலிருந்து ஒரு வருடத்திற்குள்ளாக இந்தப் பங்குகளை விற்றுவிட்டால் அது குறுகிய கால மூலதன லாபம் ஆகும். ஒரு வருடத்திற்கு மேல் அந்தப் பங்குகளை வைத்திருந்தால் அது நீண்ட கால வகைக்குள் அடங்கும். 100 பங்குகளையும் ரூ. 560க்கு விற்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த பங்குப் பரிமாற்றத்தில் தரகருக்குக் கொடுத்த கமிஷன் - வாங்கும்போது ரூ. 356.15, விற்கும்போது ரூ. 476. (சாதாரணமாக கமிஷன் 0.85% இருக்கும்). இப்படிப் பார்த்தால் உங்களுக்குக் கிடைத்த மூலதன லாபம் = 100*(560-419)-356.15-476 = ரூ. 13,267.85. இந்த விற்பனை 14 ஜூலை 2005க்குள் நடந்தால், உங்களுக்குக் கிடைத்த லாபத்தை குறுகிய கால மூலதன லாபம் என்று எடுத்துக் கொள்ளவேண்டும். 15 ஜூலை 2005க்குப் பிறகு நடந்தால் நீண்ட கால மூலதன லாபமாகும்.

இந்த பட்ஜெட் (இன்னமும் ஃபைனான்ஸ் பில் பாராளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை....) வருமுன்னால் செக்யூரிடிகள் மீதான குறுகிய கால மூலதன லாபம் மேல் 30% வரி கட்ட வேண்டியிருந்தது. நீண்ட கால மூலதன லாபம் மீது 10% வரி கட்ட வேண்டியிருந்தது. இந்த பட்ஜெட்டுக்குப் பிறகு, நீண்ட கால மூலதன லாபத்திற்கு வரி ஏதும் கிடையாது. குறுகிய கால மூலதன லாபம் மீது வெறும் 10% வரி மட்டும்தான்.

ஆக மேலே சொன்ன பரிவர்த்தனை நீண்டகால மூலதன லாபமாக இருந்திருந்தால் போன வருடம், அதன் மீது வரியாக ரூ. 1,327 கட்ட வேண்டியிருந்திருக்கும். குறுகியகால மூலதன லாபமாக இருந்திருந்தால் அதன்மீது ரூ. 3,980 வரி கட்ட வேண்டியிருந்திருக்கும்.

இந்த பட்ஜெட்டுக்குப் பிறகு, பங்குகளை வாங்கும்போதே டிரான்சாக்ஷன் வரியாக 0.15% கட்ட வேண்டியிருக்கும். அது 0.15%*(100*419) = ரூ. 62.85. விற்கும்போது நீங்கள் எந்த வரியும் கட்டவேண்டியதில்லை. வாங்குபவர் கட்டிக்கொள்வார். நீண்டகால மூலதன லாபமாக இருந்தால் வரி ஏதும் கிடையாது. குறுகிய காலமாகயிருந்தால் மூலதன லாபம் = ரூ. 13,267.85-62.85 = ரூ. 13,205 இல் 10% ஆக ரூ. 1,321 கட்ட வேண்டியிருக்கும். இந்த மூலதன லாப வரியின் மேலாக கல்வி செஸ் வரியும் (2%) உண்டு.

நிச்சயமாக புதிதாகக் கொண்டுவந்துள்ள டிரான்சாக்ஷன் வரி மற்றும் பங்குகள் மீதான் மூலதன லாப வரி இரண்டையும் சேர்த்துப் பார்க்கையில் பங்குகளில் முதலீடு செய்பவர்களுக்கு நன்மையாகத்தானே தெரிகிறது. அதன்பின்னர் ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்? அதனைக் கீழே பார்க்கலாம்.

சரி, நஷ்டமாக இருந்தால்? ரூ. 419க்கு வாங்கிய பங்குகளை ரூ. 400க்கு விற்றால்? அந்த நஷ்டத்தைக் கையோடே வைத்திருந்து, மற்ற பங்குச்சந்தை தொடர்பான மூலதன லாபத்தில், அல்லது பிற மூலதன லாபத்தில் (எ.கா: வீடு, நிலம் வாங்கி விற்றதில் கிடைக்கும் மூலதன லாபத்தில்) இந்த நஷ்டத்தை சரிக்கட்டலாம். அவ்வளவே. இந்த நஷ்டத்தை மாதச் சம்பளத்தில் கழித்துவிட முடியாது.

3. Prevention of dividend and bonus stripping: பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம் தன் லாபத்திலிருந்து பங்குதாரர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ஈவுத்தொகை (dividend) கொடுக்கும். எல்லா நிறுவனங்களும் ஈவுத்தொகை கொடுக்கவேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு வருடமும் இவ்வளவு ஈவுத்தொகை கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் ஒன்றுகூடி ஒவ்வொரு வருடமும் எவ்வளவு ஈவுத்தொகை கொடுப்பது என்று முடிவு செய்வார்கள். அப்படிக் கொடுக்கும் ஈவுத்தொகையைப் பெறுபவர்கள் அந்த வருமானத்தின் மேல் எந்த வரியும் கட்ட வேண்டியதில்லை. ஏனெனில் இப்பொழுதுள்ள சட்டப்படி, அந்த ஈவுத்தொகைக்கான வரியை, அந்த நிறுவனமே வருமான வரியலுவலகத்திற்குக் கட்டிவிட வேண்டும்.

இதைத் தமக்குச் சாதகமாக சிலர் எடுத்துக்கொண்டு செய்வதுதான் dividend stripping என்பது. பங்குச்சந்தையில் பங்குகள் கைமாறிக்கொண்டே இருப்பதால், யாருக்கு ஈவுத்தொகையைத் தருவது என்பதைத் தீர்மானிக்க 'record date' என்றொரு நாளைக் குறிப்பிடுவர். உதாரணமாக, 10 மே 2004 அன்று யார் கைகளில் பங்குகள் இருக்கின்றனவோ, அவர்கள் கையிலிருக்கும் பங்குகளுக்கான ஈவுத்தொகையைத் அவர்களுக்குத் தருவது என்று அந்த நிறுவனம் தீர்மானிக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த நிறுவனத்தின் பங்குகள் 1 மே 2004க்கு முதல் நாள் பங்கு ஒன்றுக்கு ரூ. 100 ஆக உள்ளது என்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு பங்குக்கும் ரூ. 10 ஈவுத்தொகையாகத் தரப்படும் என்று இயக்குனர்கள் முடிவு செய்து, 2 மே 2004 அன்று அறிவிக்கின்றனர் என்றும் வைத்துக்கொள்வோம். வேறெந்த நிகழ்வும் பாதிக்காத போது, நியாயமாக 2 மே 2004 தொடங்கி, 9 மே 2004 வரை அந்தப் பங்கின் விலை சந்தையில் கிட்டத்தட்ட ரூ. 10 ஏறி, ரூ. 110 ஆகிவிடும் அல்லவா? அதே போல 11 மே 2004 அன்று தொடங்கி வேகமாக பங்கின் விலை மீண்டும் சரிந்து ரூ. 100க்கே சீக்கிரம் திரும்பி விடும். (ஏன் என்று சிந்தியுங்கள்...) இப்பொழுது ஒருவர் 9 மே அன்று 100 பங்குகளை, ரூ. 110க்கு வாங்குகிறார், 13 மே 2004 அன்று ரூ. 100க்கு விற்றுவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். இதற்காக இவர் கொடுத்த கமிஷன் (விற்க, வாங்க சேர்த்து) சுமார் ரூ. 178.50 ஆக இருக்கும். அவரது வங்கிகணக்கில் பங்கு ஒன்றுக்கு ரூ. 10 வீதம் ஈவுத்தொகையாக ரூ. 1,000 வந்திருக்கும். குறுகிய கால மூலதன நஷ்டமாக அவர் கணக்கில் ரூ. 1,178.5 சேர்ந்திருக்கும். ஈவுத்தொகைக்கு எந்த வரியும் கிடையாது. தனக்குக் "கிடைத்த" மூலதன நஷ்டத்தை வேறு மூலதன லாபத்தில் கழித்து அதன்மூலம் தன்மீது விதிக்கப்படும் வரியையும் குறைக்கலாம்! அப்படிக் குறைக்கப்பட்ட வரி இவர் பெற்ற நஷ்டத்தில் 30% (குறுகிய கால மூலதன லாப வரி விகிதம் 30% ஆக இருக்கையில்) = ரூ. 0.3*1178.50 = ரூ. 353.55. ஆக இவருக்குக் கிடைக்கும் நிகர லாபமானது: ரூ. - 178.50 + 353.55 = ரூ. 175.05.

இதைத்தான் பலச் செய்து வந்தனர். இதனைத் தடுக்க இயற்றப்பட்ட சட்டத்தில், மேற்படி பங்குகளை (அல்லது மியூச்சுவல் ஃபண்ட் யூனிட்டுகளை) குறைந்தது மூன்று மாதங்களுக்குக் கூட வைத்துக் கொள்ளவில்லையென்றால், அதிலிருந்து பெறும் மூலதன நஷ்டத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என்று சொல்லியிருந்தனர். இதுவும் பயனளிக்கவில்லையென்ற காரணத்தால் தற்போதைய Finance Billஇல் இந்த வரம்பை மூன்று மாதத்திலிருந்து ஒன்பது மாதங்களாக மாற்றியுள்ளார் சிதம்பரம்.

Bonus stripping என்பதும் இதைப்போல நிறுவனங்கள் கொடுக்கும் ஊக்கப் பங்குகள் பற்றியது. அதைப்பற்றி அதிகம் பேசி உங்களைக் குழப்ப விரும்பவில்லை. (ஆகா, இதையெல்லாம் அழகாக யாராவது தமிழில் புத்தகமாக எழுதக்கூடாதா என்று தோன்றுகிறதா? இன்னமும் இரண்டு மாதங்கள் பொறுத்திருங்கள்....)

===

சரி, இந்த பரிமாற்ற வரி (transaction tax) மீது ஏன் பலர் கோபப்படுகிறார்கள்? இந்த 0.15% சகட்டுமேனி வரி மீது அதிகக் கோபம் கொண்டிருப்பது பங்குச்சந்தையில் ஈடுபட்டிருக்கும் டிரேடர்கள். பங்குச்சந்தையில் 'டெலிவரி' என்றொரு விஷயம் உண்டு. நான் ஒரு பங்கை விற்கிறேன் என்றால் அந்தப் பங்கை ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் பங்குச்சந்தை நடத்துனர்களிடத்தில் கொடுத்துவிட வேண்டும். அதற்குத்தான் 'டெலிவரி' என்று பெயர். பங்குச்சந்தையினர் என் பங்கை வாங்கியவரிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு, நான் கொடுத்த பங்கை வாங்கியவர் பெயருக்கு மாற்றிவிட்டு, அதன்பின் பணத்தை என் கைக்குத் தருவார்கள்.

ஆனால் கையில் பங்கே இல்லாமல் அதை விற்க முடியும். ஒரு நாளில் பலமுறை, இல்லாத பங்கை விற்று, அந்தப் பங்கை மீண்டும் வாங்கி, கடைசியாக அந்த நாள் முடியும் போது மொத்தக் கணக்கைச் சரிக்கட்ட வேண்டும். இப்படிச் செய்பவர்களை நாள் வியாபாரிகள் (Day Traders) என்று அழைப்பது வழக்கம். ஒரு நாளினுள்ளேயே பங்கின் விலை மேலும் கீழுமாகப் போய்க்கொண்டிருக்கும் அல்லவா? அந்த மாறுபாடுகளினூடாக லாபம் செய்ய முயற்சிப்பவர்கள்தான் நாள் வியாபாரிகள். ஒரு நிறுவனப் பங்கு ரூ. 213இல் இருக்கும்போது அந்த நாளிலேயே அது ரூ. 200க்குப் போகும் என்று தோன்றினால், அந்தப் பங்குகள் கையில் இல்லாத போதே நாள் வியாபாரி 1000 பங்குகளை ரூ. 213க்கு விற்பார். பின்னர் பங்கு விலை ரூ. 200க்கு வந்துவிட்டால் 1000 பங்குகளை வாங்குவார். இப்படி இல்லாத பங்குகளை விற்று, பின் வாங்கி ரூ. 13,000 (கமிஷன் தொகையைக் கழிக்க வேண்டும்) லாபம் பார்த்திருப்பார். இப்படியே ஒரு நாளைக்குள் பத்து முறை விற்றும், வாங்கியும் கிட்டத்தட்ட மொத்தமாக பல லட்சம் பங்குகளை வாங்கியிருப்பார். ஆனால் அவர் டெலிவரி கொடுக்க வேண்டியது என்று பார்த்தால் மிகக் குறைவாகவே இருக்கும். சிலசமயம் நாள் கடைசியில் ஒரு பங்கைக் கூட அவர் டெலிவரி கொடுக்க வேண்டியிருக்காது. அவர் இதுவரை கட்டி வந்த வரி மொத்தமாக வருடக் கடைசியில் அடைந்த லாபத்தைக் கணக்கிட்டு அதன்மீது சாதாரண 10%-20%-30% வருமான வரி மட்டுமே.

இவர்தான் டிரான்சாக்ஷன் வரியைக் கடுமையாக எதிர்க்கிறார். இவரால் சகட்டுமேனிக்கு 0.15% டிரான்சாக்ஷன் வரியைத் தாங்கிக்கொள்ள முடியாது என்கிறார். அதுவும் உண்மையே. டிரான்சாக்ஷன் வரியை எதிர்த்து இந்த நாள் வியாபாரிகள் ஒருநாள் வேலைநிறுத்தம் செய்தனர். தொடர்ந்து நிதியமைச்சர் சிதம்பரத்தை சந்தித்துப் பேசினர். அதைத் தொடர்ந்து சில மாறுதல்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கின்றனர். இன்றைய The Financial Express, டிரான்சாக்ஷன் வரி மூன்று வகைகளாகப் பிரிக்கப்படும் என்று யூகிக்கிறது. இதன்படி டெலிவரி கொடுக்கும் ஷேர்கள் மீதுதான் 0.15% வரி, ஆர்பிட்ராஜ் வகையிலான பரிமாற்றங்களுக்கு 0.015% வரி, நாள் வியாபாரிகள் செய்யும் பரிமாற்றங்களுக்கு 0.0015% வரியும் விதிக்கப்படலாம் என்கிறது இந்தச் செய்தி. இதுபற்றி அதிகாரப்பூர்வமாக செய்தி வரும்போதுதான் பேச முடியும்.

Tuesday, July 13, 2004

The IITians

The IITians by Sandipan DebThe IITians, The Story of a Remarkable Indian Institution and How Its Alumni Are Reshaping the World, சந்தீபன் தேப், 2004, பெங்குவின் இந்தியா, பக்: 392, விலை ரூ. 425

ஐஐடி என்றவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகிறது? நீங்கள் ஐஐடியில் படிக்காதவராக இருந்தால், இந்தப் பெயரைக் கேள்விப்பட்டிருந்தால், "பயங்கர மூளையுள்ள பையன்கள் (ஆம், பெண்கள் குறைவுதான்) படிக்கும் இடம். படித்தவுடன் அமெரிக்கா போய்விடுவார்கள். சில வருடங்களில் வாயில் நுனிநாக்கு ஆங்கிலத்துடன் இந்தியா வந்து இந்த நாட்டில் என்ன குறையென்று எடுத்துப் பேசிவிட்டு திரும்பியும் அமெரிக்கா போய்விடுவார்கள். அப்படியில்லாமல் இந்தியாவிலேயே தங்கிவிடுபவர்கள், எங்காவது ஒரு ஐஐஎம்மில் படித்துவிட்டு ஹிந்துஸ்தான் லீவர் போய் சீப்பு, சோப்பு, பாசிமணி என்று ஏதாவது ஒன்றை FMCG என்ற பெயரில் கவர்ச்சியான பாக்கெட்டில் போட்டு விற்றுக்கொண்டிருப்பார்கள். பத்து விழுக்காட்டிற்கும் கீழே உள்ளவர்கள்தான் படித்த எஞ்சினியரிங் படிப்பு சம்பந்தமாக இந்தியாவில் ஏதாவது செய்துகொண்டிருப்பார்கள்." என்று சொல்வீர்கள், இல்லையா?

அமெரிக்கப் பல்கலைக்கழகப் பேராசிரியர்களாக இருந்தாலோ, சிலிகான் வேலி வென்ச்சர் கேபிடலிஸ்டாக இருந்தாலோ உங்கள் பதில் வேறாக இருக்கும்.

சந்தீபன் தேப் 14 மாதங்கள் செலவு செய்து, பலரைப் பேட்டி கண்டு ஐஐடியிலிருந்து உருவானவர்கள் எவ்வாறு உலகை மாற்றியிருக்கிறார்கள், மாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்று தன் புத்தகத்தில் எழுதியுள்ளார். சந்தீபன் தேப் அவுட்லுக் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர். ஐஐடி கரக்பூரில் பி.டெக், ஐஐஎம் கொல்கொத்தாவில் PGDM படித்துவிட்டு, சிலகாலம் விளம்பர நிறுவனங்களில் வேலைசெய்து, பின்னர் இதழியல் துறைக்கு வந்தவர்.

புத்தகத்தில் ஐஐடியின் வரலாறு, தொடக்க காலத்தில் ஐஐடிகளுக்குக் கிடைத்த உயர்தர ஆசிரியர்கள், அவர்களுக்கு இடையூறு செய்யாத அரசு, படிக்க வந்த பிரகாசமான மாணவர்கள், அவர்கள் பிற்காலத்தில் சாதித்துக் கொண்டிருப்பது என்று புகழ்ச்சியாக நிறைய உண்டு. ஆங்காங்கே, மாணவர்கள் எப்படி IIT JEE நுழைவுத்தேர்வுக்காக பைத்தியமாக அலைந்து வாழ்க்கையை வீணாக்கிக் கொள்கிறார்கள், எப்படி சில ஊர்களில் நுழைவுத் தேர்வில் ஜெயிக்க பள்ளிக்கூடத்தை மறந்துவிட்டு பயிற்சி மையங்களிலேயே முழு வாழ்நாளை மாணவர்கள் கழிக்கின்றனர், நுழைவுத் தேர்வில் வெல்லமுடியாத மாணவர்களின் நிலை என்று குறைகளைச் சுட்டிக் காண்பிக்கிறார். உள்ளே நுழையும் மாணவர்கள் பலரும் எப்படி படிப்பு, படிப்பு (நுழைவுத் தேர்வு, நுழைவுத் தேர்வு) என்று காலத்தைக் கழித்து ஒற்றைப் பரிமாணமுடையவர்களாய், சமூக வாழ்க்கைக்குத் தேவையான திறமையற்றவர்களாய் ஆகிவிடுகின்றனர் என்றும் குறிப்பிடுகிறார்.

மற்றபடி புத்தகம் ஆங்காங்கே சந்தீபனின் வாழ்க்கை வரலாறாகவும் செல்கிறது (அவரது வாழ்க்கைத் துணைவியைப் - அவ்வப்போது தப்பித்தவறி ஐஐடியில் படிக்க வரும் பெண்களில் ஒருவர் - பார்த்தது, ஐஐடி கலாச்சாரப் போட்டிகளில் பங்கேற்றது ஆகிய தகவல்கள்).

இப்பொழுதுள்ள ஐஐடி நிர்வாகத்தின் முதிர்ச்சியற்ற சில சட்டதிட்டங்களை (ஒரு பையன், பெண்ணை சைக்கிளின்/பைக்கின் பின்னால் உட்கார வைத்து அழைத்துச் செல்லக்கூடாது, ஹாஸ்டல்களில் இரவு பத்து மணிக்கு மேல் சத்தம் போடக்கூடாது!) சாடுகிறார். ஐஐடிகள் பொறியியல் கல்விக்கூடங்களா, அல்லது பொதுக்கல்விக் கூடங்களா என்ற கேள்வியை எழுப்புகிறார். (படித்து வெளியே வந்த பலரும் பிரகாசிப்பது பொறியியல் துறைகளில் அல்ல, பிற துறைகளில் என்பதால்.)

எனக்கு சந்தீபனின் சுவாரசியமான நடை பிடித்திருந்தது. ஐஐடியின் உள்விஷயங்களைப் பற்றித் தெரியாதவர்கள் புத்தகத்தை எப்படி அணுகுவார்கள் என்று தெரியவில்லை. நான் ஐஐடி சென்னையில் படித்ததால் என்னால் இந்தப் புத்தகத்தை ரசித்து வாசிக்க முடிந்தது. எனக்கும் ஐஐடி கல்வியைப் பற்றிப் பல கேள்விகள் உண்டு.

நான் ஐஐடியில் சேரும் முன்னர் நாகப்பட்டிணத்தில் தமிழ்நாடு மாநிலக் கல்வித்துறைப் படிப்பில் 12வது வரை படித்திருந்தேன். ஐஐடி என்றால் என்னவென்றே தெரியாது. மற்ற பொறியியல் கல்லூரிகளைப் போல இதுவும் ஒரு பொறியியல் கல்லூரி என்று நினைத்திருந்தேன். நுழைவுத்தேர்வுக்கென எந்த பயிற்சி மையத்திலும் பயிற்சி எடுக்கவில்லை. தபாலில் ஐஐடியை கிராக் செய்யக் கல்வி வழங்கும் அகர்வால், பிரில்லியண்ட் எதிலும் சேரவில்லை. எப்படியோ நுழைவுத்தேர்வில் தேர்ச்சியடைந்து மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் சேர்ந்தேன். சந்தீபன் சொல்வதைப் போல வகுப்பில் கற்றதைவிட ஹாஸ்டலில் கற்றதுதான் அதிகம். தன்னம்பிக்கை, உலக ஞானம், உழைப்பில் ஆர்வம், சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், கடும் போட்டிகளிலும் வென்று முதலாவதாக வரும் திறன், எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு கண்டுபிடிக்கும் விடாமுயற்சி என்று பலதும் ஐஐடியில் கற்றதுதான். இவற்றையெல்லாம் வகுப்பில் பாடமாகக் கற்றுக் கொண்டிருக்கமுடியாது. ஆனால் எப்படியோ, ஹாஸ்டல் வாழ்க்கையும், மற்ற மாணவர்களின் சகவாசமும் தான் இந்தத் திறமைகளையெல்லாம் வளர்த்துக்கொள்ளக் காரணம் என்று தோன்றுகிறது.

வகுப்பில் நிச்சயமாக ஒழுங்கான கல்வி கிடைத்தது. ஆனால் ஓரிருவர் தவிர எந்த ஆசிரியரும் என் நினைவில் நிற்கும் அளவிற்கு இல்லை. [மெக்கானிகல் எஞ்சினியரிங்கில் பேராசிரியர்கள் பரமேஸ்வரன், வேலுஸ்வாமி போன்றோரின் பெயர்கள் மட்டும்தான் என் ஞாபகத்தில் நிற்கின்றன.] அதற்கு மாற்றாக கார்னல் பல்கலைக்கழகத்தில் படித்தபோது அங்கிருந்த ஆசிரியர்கள் அனைவருமே மிக அதிகத் தரத்திலும், முழுவதுமாக நினைவில் நிற்பவர்களுமாக இருந்தார்கள். தேடித்தேடிப் போய் அவர்களிடம் பாடம் படிக்கவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டக்கூடிய அளவில் இருந்தனர். ஐஐடி ஆசிரியர்கள் தரம் எக்கச்சக்கமாக உயர வேண்டும்.

ஐஐடியினால் இந்தியாவிற்கு நன்மையா? நன்மையென்றுதான் தோன்றுகிறது. இந்தியாவின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் ஒருசில பிராண்டுகளில் ஐஐடியும் ஒன்று. எத்தனையோ குறைகள் இருந்தாலும் ஐஐடி நுழைவுத்தேர்வு பெரும்பான்மையாக தகுதிவாய்ந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து விடுகிறது. அதைத் தொடர்ந்து ஐஐடியின் பாடத்திட்டங்களும், தேர்வு முறைகளும் பெரும்பாலும் ஏமாற்ற முடியாத, திறமையை சரியாகப் பரிசோதிக்கக் கூடிய மாதிரிதான் உள்ளது. என் வகுப்பில் காப்பியடித்தே தேர்வில் பாஸான பையன்களை எனக்குத் தெரியும். அவர்கள் சாதாரணமாக வகுப்பின் கீழேதான் இருந்தார்கள். [அப்படியிருந்தவர்களும் பின்னர் ஐஐஎம்மிலோ, அல்லது அமெரிக்கப் பல்கலைக்கழகங்களிலோ சிறப்பாகப் படித்து முடித்து, இன்று தம் துறையில் முன்னணியிலும் உள்ளனர்.]

ஐஐடிக்களை அப்படியே பொறியியல் கல்லூரிகளாக வைத்திருக்காமல், பொதுக்கல்விக் கூடங்களாக, அமெரிக்க முறைப்படியான பல்கலைக்கழகங்களாக மாற்றலாம். அப்படிச் செய்யும்போது ஹாஸ்டல் வாழ்க்கையை முக்கியமாக அப்படியே பாதுகாக்க வேண்டும். ஒருசில மாறுதல்களுடன் மூன்று வகையான நுழைவுத்தேர்வுகளை வைக்கலாம் - ஒன்று: இயற்பியல், வேதியியல், கணிதம்; இரண்டாவது: ஆங்கிலம், பொருளாதாரம் (அல்லது) பொது அறிவு, கணிதம் (அல்லது) சமூகவியல்; மூன்றாவது உயிரியல், பொது அறிவு. முதலாவது வகைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் பொறியியல், இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற படிப்புகளுக்கும், இரண்டாவதில் தேர்வு பெறுபவர்கள் பொருளாதாரம், வரலாறு, சமூகவியல் போன்ற படிப்புகளுக்கும், மூன்றாவது உயிரியல், ஜெனிடிக்ஸ், பயோடெக்னாலஜி போன்ற பாடங்களைப் படிக்கவும் சரியாக இருக்கும். Indian Institute of Technology என்பதிலிருந்து Indian Institute of Learning என்று மாற்றிவிடலாம். [எது என்னவோ, கேம்பஸில் கொஞ்சம் பெண்கள் நடமாட்டமாவது அதிகம் இருக்கும்!]

நிதிநிலை அறிக்கை 2004 - 3

[முதலாவது | இரண்டாவது]

மாதச் சம்பளக் காரர்கள் முக்கியமாக கவனிப்பது வருமான வரிகள் பற்றித்தான். இந்த பட்ஜெட்டில் வருமான வரிகள் பற்றிய திட்டங்களைப் பார்ப்போம்.

இந்தியாவில் வருமான வரி ஏய்ப்பு என்பது சர்வசாதாரணமாக இருந்து வருவது. இதில் இரண்டு வகை: ஒன்று - வருமான வரி கட்டும் ஒருவர் முழு வருமானத்தையும் கணக்குக் காட்டாமல், கொஞ்சத்தை மட்டும் காட்டி அதற்கு மட்டும் வரி கட்டுவது. இரண்டாவது - வருமானத்தைக் கணக்குக் காட்டாமல் வரியே கட்டாமல் இருப்பது. இதைத்தவிர வருமான வரி இன்னதென்று ஒத்துக்கொண்டும், அதைக் கட்டாமல் இழுத்தடிப்பது. இப்படி இழுத்தடிப்பவர்களில் பலர் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், பெரும் புள்ளிகள். அவ்வப்போது நிதியமைச்சர் பாராளுமன்றத்தில் மிக அதிக வரி பாக்கி வைத்திருப்பவர்களில் பட்டியலாக ஒரு நூறு பெயர்களை வெளியிடுவார். அதில் வருபவர்கள் அத்தனை பேருமே மிகவும் பிரபலமானவர்கள்தான். இம்முறை பட்ஜெட்டில் இப்படி 'இழுத்தடிப்பவர்களிடமிருந்து' வசூல் பண்ணியே தீருவது என்று சூளுரைத்துள்ளார் சிதம்பரம்.

ஆனால் மாதச்சம்பளக்காரர்களால் வரியிலிருந்து தப்புவது கடினம். Tax deducted at source (TDS) முறைப்படி, அவர்கள் வேலை பார்க்கும் நிறுவனமே சம்பளத்திலிருந்து வரியைப் பிடித்து மாதாமாதம் வருமானவரி அலுவலகத்திற்கு அனுப்பிவிட வேண்டும்.

இந்தியாவில் தனி மனிதர்கள், ஹிந்து கூட்டுக்குடும்பங்கள் ஆகியவற்றுக்கான வரி மிகவும் எளிதானது. சம்பளக்காரர்கள், மொத்தச் சம்பளத்திலிருந்து, கழித்தல்கள் (deductions) போக, வரிக்கான சம்பளத்தைத் தீர்மானிக்க வேண்டும். அத்துடன் இதர வருமானத்தைச் (வங்கியிலிருந்து கிடைக்கும் வட்டி, சொந்த வீட்டிலிருந்து கிடைக்கும் வாடகை, பங்குச்சந்தை கேபிடல் கெயின்ஸ் போன்றவை) சேர்க்க வேண்டும். கழிக்க வேண்டிய 'நஷ்டங்களைக்' கழிக்க வேண்டும். இவ்வாறு நஷ்டங்களைக் கழிக்கும்போது மாதச்சம்பளத்திலிருந்து பங்குச்சந்தையில் கிடைத்த நஷ்டத்தைக் கழித்து குறைத்த பணத்தில் வரி கட்ட முடியாது. பங்குச்சந்தை நஷ்டத்தை பங்குச்சந்தை லாபத்திலிருந்து மட்டுமே கழித்துக் கொள்ள முடியும்.

அதன் பின்னர், 10%, 20%, 30% என்று மூன்றே வரி விகிதங்கள். போன வருடம் வரை வரி வருமானம் (taxable income) ரூ. 50,000 வரை இருந்தால் வரி ஏதும் கிடையாது. ரூ. 50,000-60,000 க்கு 10% வரி. ரூ. 60,000-1,50,000 க்கு 20% வரி. ரூ. 1,50,000க்கு மேலுள்ளதற்கு 30% வரி. வருட வரி வருமானம் ரூ. 8,50,000 க்கு மேலிருந்தால் கட்ட வேண்டிய வரியின் மேல் 10% சர்சார்ஜ் அதிகமாகக் கட்ட வேண்டும்.

இந்த பட்ஜெட்டில், இந்த வரம்புகள் தளர்த்தப்படவில்லை. அதாவது ரூ. 50,000 வரை வரி வருமானம் இருந்தால் வரிகள் கிடையாது என்பதில், 50,000 உயர்த்தப்படவில்லை. மாறாக வரம்புகளை மாற்றாமல், வரி வருமானம் ரூ. 1,00,000 வரைக்கும் இருப்பவர்கள் தங்கள் வரிகளைக் கணக்கிட்டபின்னர், அதனை automatic rebate ஆக எடுத்துக்கொண்டு அதைக் கட்டவேண்டியதில்லை. மற்றபடி வரி வருமானம் ரூ. 1,00,000 க்கு மேலிருப்பவர்கள் அனைவரும் போன வருடம் என்ன வரி வந்ததோ அதனையே கட்ட வேண்டும். அதற்கு மேல் இந்த வருடம் 2% கல்வி செஸ் (education cess) சேர்க்கப்படுகிறது.

மற்ற அனைவருக்கும் - கூட்டுறவு நிறுவனங்கள், கம்பெனிகள் - வரி விகிதத்தில் மாற்றமேதுமில்லை. இவர்களுக்கும் education cess உண்டு.

இப்படியாக இந்த கல்வி அதிக வரி மூலம் ரூ. 5,000 கோடிகள் சேரும் என்று சிதம்பரம் எதிர்பார்க்கிறார். இந்தப் பணம் முழுதுமாக தொடக்கக் கல்விக்குப் (மதிய உணவுடன் சேர்த்து) போய்ச்சேரும் என்கிறார். தொடக்கக் கல்வியைக் கொடுப்பது மாநில அரசுகளும், உள்ளாட்சிகளும். எனவே இந்தப் பணம் முழுமையாக மாநில, உள்ளாட்சி அரசுகளுக்குப் போய்ச்சேர வேண்டும்.

இந்த வரித்திட்டத்தில் ஒரேயொரு குளறுபடி உள்ளது. வரி வருமானம் ரூ. 1,00,000 இருந்தால் வரியே கிடையாது. ஆனால் ரூ. 1 அதிகமானாலும் (ரூ. 1,00,001), அவருக்கு ரூ. 9,180 வருமான வரி உண்டு. இதனால் அவர்கள் அந்த ஒரு ரூபாயை எப்பாடுபட்டாவது வரிவிலக்குள்ள ஏதாவது அறக்கட்டளைக்கு நன்கொடையாகக் கொடுத்து விட முற்பட வேண்டும்:-)

இதர வருமானங்களில், பங்குகள் மீதான லாங் டெர்ம் கேபிடல் கெயின்ஸ் வரி இனிமேல் கிடையாது. அதுபற்றியும், பங்குச்சந்தை டர்னோவர் வரி பற்றியும் அடுத்து பார்ப்போம்.

Monday, July 12, 2004

நிதிநிலை அறிக்கை 2004 - 2

[முதல் பாகம்]

முதலில் போன வருடம் வரவு செலவு என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.

கிடைத்த ஒவ்வொரு ரூபாயிலும்,
* நிறுவனங்கள் மீதான வரி: 16 பைசா
* வருமான வரி: 9 பைசா
* சுங்க வரி: 10 பைசா
* கலால்: 19 பைசா
* மற்ற வரிகள்: 3 பைசா
* வரியல்லா வரவுகள்: 13 பைசா (இதில் பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து பெற்ற டிவிடெண்டுகள், மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், ரயில்வே ஆகியவை மத்திய அரசிடம் வாங்கிய கடனுக்குக் கொடுக்கும் வட்டி போன்றவை அடங்கும்)
* கடனல்லாது சொத்துக்களை விற்றுக் கிடைத்த பணம் (disinvestment proceeds etc.): 6 பைசா
* வாங்கிய கடன்: 24 பைசா
அதாவது செலவுகளை சரிக்கட்ட 24% அளவிற்கு கடன் வாங்க வேண்டிய நிலைமை.

செலவாக, ஒவ்வொரு ரூபாயிலும் இப்படி ஆகியுள்ளது:
* மத்திய அரசின் திட்டச்செலவு: 16 பைசா
* இராணுவத்திற்கு: 14 பைசா
* மான்யம் (உதவித்தொகை): 8 பைசா
* திட்டமிடாத செலவுகள்: 11 பைசா
* மாநிலங்களுக்குக் கொடுத்த பங்கு: 15 பைசா (மத்திய அரசு வசூலிக்கும் ஒருசில வரிகளில் ஒரு குறிப்பிட்ட பங்கை மாநிலங்களுக்குக் கொடுத்து விடும்)
* திட்டக் கமிஷன் வழியாக அல்லாது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்குக் கொடுத்த உதவி: 3 பைசா (சாதாரணமாக வறட்சி நிவாரணம் போன்ற உதவிகள்)
* திட்டக் கமிஷன் வழியாக மாநிலங்களுக்குக் கொடுத்தது: 10 பைசா
* மத்திய அரசு வாங்கிய கடன்களுக்குக் கொடுத்த வட்டி: 23 பைசா
போனவருடம் (2003-04)இல் எங்கெல்லாம் பணம் செலவாகியுள்ளது, எங்கிருந்தெல்லாம் பணம் கிடைத்துள்ளது என்பதற்கான முழு விவரமும் உண்டு. அதை இப்பொழுது தீவிரமாக கவனிக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்.

மேலே சொன்னவற்றில் முக்கியமாக கவனிக்க வேண்டியது: இப்பொழுது மத்திய அரசு வாங்கும் கடன், ஏற்கனவே வாங்கியிருக்கும் கடனுக்குக் கொடுக்க வேண்டிய வட்டி இரண்டும். கவனமாகப் பார்த்தால், புதிதாக வாங்கும் கடன் ஏற்கனவே வாங்கியிருக்கும் கடன் சுமைக்கு வட்டி கட்டவே சரியாகப் போய்விடுகிறது என்பதைப் புரிந்து கொள்வீர்கள்!

மேலோட்டமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது இதைத்தான்: இப்பொழுது மத்திய, மாநில அரசுகள் போடும் பட்ஜெட்டுகள் எல்லாமே பற்றாக்குறை பட்ஜெட்டுகள்தான். இந்த ஊதாரித்தனம் ஆரம்பமானது 1980களில். பற்றாக்குறை இரண்டு வகைப்படும்: வருவாய்ப் பற்றாக்குறை (Revenue deficit), மொத்த நிதிப் பற்றாக்குறை (fiscal deficit). வருவாய்ப் பற்றாக்குறை என்பது இந்த வருடத்திற்கான செலவுகளை இந்த வருடத்தின் வரவுகளால் சரிக்கட்ட முடியாமல் போவது. எனவே கடன் வாங்கினால்தான் மாதச் செலவுகளையே சரிக்கட்ட முடியும் என்னும் நிலைமை. நிதிப் பற்றாக்குறை என்பது மொத்தச் செலவுகள் - சாதாரண மாதச் செலவுகள், உள்கட்டுமானத்திற்குத் தேவையான செலவுகள் (capital expenditure), திடீரென்று ஏற்படும் அத்தியாவசியச் செலவுகள் - எந்த அளவிற்கு வருமானத்தை விட அதிகமாக உள்ளது என்பது.

உதாரணமாக நம் வாழ்க்கையையே எடுத்துக் கொள்வோம். நம் அன்றாடச் செலவுகளை நம் வருவாய்க்குள் அடக்கவே நாம் முயற்சி செய்கிறோம். அன்றாடச் செலவுகள் என்பது, வீட்டு வாடகை, உணவிற்கான செலவு, பெட்ரோல் செலவு, செய்தித்தாள், தொலைக்காட்சிக்கான கட்டணம், மாத சினிமா பார்க்கும் செலவு, புத்தகங்கள் வாங்கும் செலவு, குழந்தைகளின் படிப்புச் செலவு என்பவை. இவையெல்லாம் revenue expenditure எனப்படும். நம் மாத வருவாய் இந்த அன்றாடச் செலவுகளை விட அதிகமாக இருப்பது revenue surplus. ஆனாலும், வீடு கட்ட, வாகனம் வாங்க என்று பார்த்தால் நம் வருவாய்க்குள் மிச்சம் செய்து சேமித்து வைத்திருக்கும் பணத்தால் முடிவதில்லை. எனவே வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டுகிறோம். இது fiscal deficit. இந்த fiscal deficitஐ எப்படி சரிக்கட்டுகிறோம்? நம்மிடம் இருக்கும் revenue surplus மூலமாக மாதாமாதம் கடனை அடைத்து வருகிறோம். இப்படி வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் தவிர வேறு வழியின்றி பிற அத்தியாவசியத்திற்கும் கடன் வாங்க வேண்டியுள்ளது. உதாரணம் உடல்நலக் குறைவு காரணமான மருத்துவச் செலவு, பெண்/பிள்ளை கல்யாணச் செலவு, உலகக்கோப்பை கிரிக்கெட் பார்க்க தென்னாப்பிரிக்கா செல்ல வேண்டிய செலவு (:-) என்று பல. இம்மாதிரியான சொத்து சேரா இடங்களிலும் சிலசமயங்களில் fiscal deficit அதிகமாகுமாறு கடன் வாங்க வேண்டியுள்ளது. ஆனால் இந்தக் கடன்களையெல்லாம் அடைக்கக் கூடிய அளவிற்கு revenue surplus இருந்தாக வேண்டும்.

இதையே விடுத்து அன்றாடச் செலவுகளைச் சரிக்கட்டவே - அதாவது வீட்டு வாடகையைக் கொடுப்பதற்கே கடன் வாங்க வேண்டிய நிலைமை என்றால்? திண்டாட்டம்தான். இதுதான் revenue deficit - அதாவது வருவாய்ப் பற்றாக்குறை. இதில் அதிகக் கொடுமை, போன மாதம் வரை வாங்கிய கடனுக்கான வட்டியைக் கட்டவே இந்த மாதம் இன்னமும் கடன் வாங்க வேண்டிய நிலைமை. இந்த நிலைமையில்தான் மத்திய அரசு இருக்கிறது. இதனால்தான் 2003இல் Fiscal Responsibility and Budget Management Act, 2003 என்றொரு சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி மார்ச் 2008இற்குள் (இன்னமும் மூன்று வருடங்களில்) வருவாய்ப் பற்றாக்குறையை பூஜ்யமாக்கவேண்டும். 2002-03 வருடத்தில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 109,765 கோடிகளாக இருந்தது. 2003-04இல், வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 103,710 கோடிகளாக இருந்தது. நடப்பு பட்ஜெட்டில் (2004-05) சிதம்பரம் வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 76,380 கோடிகளாக இருக்கும் என்று கணிக்கிறார். போன வருடத்தை விட இந்த வருடத்தில் கிட்டத்தட்ட ரூ. 62,000 கோடிகள் அதிகமாக வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறார். அடுத்த வருடம்தான் இந்த "அதிக" வரிகள் வசூலானதா, இல்லையா என்று தெரியவரும்.

Sunday, July 11, 2004

நிதிநிலை அறிக்கை 2004 - 1

இது முழு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை அல்ல. சென்ற அரசு தாக்கல் செய்திருந்த இடைக்கால பட்ஜெட் மார்ச் 2004 தொடங்கி, இந்த மாதம் வரை நடைமுறையில் உள்ளது. மீண்டும் பெப்ரவரி 2005இல் (ஏழு மாதங்களில்) அடுத்த முழு வருடத்திற்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும்.

இந்தமுறைதான் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முழுமையாகப் படிக்க முடிந்தது. இதற்கு முன்னர் படிக்க ஆர்வமும், போதிய அறிவும் இல்லாததே காரணம். நிதிநிலை அறிக்கையில் இரண்டு பகுதிகள்: முதல் பகுதி (அதுவும் இரண்டாகப் பிரிக்கப் பட்டது - Part A, Part B), விளக்கவுரை - இந்த நிதிநிலை அறிக்கையில் உள்ள திட்டங்கள் என்ன, சென்ற அறிக்கையிலிருந்து இவ்வறிக்கை எவ்வாறு மாறுபடுகிறது என்பதை விளக்குவது. இரண்டாவது பகுதி நிதிச் சட்டத் திருத்தம் (Finance (No. 2) Bill, 2004). முதலாவது பகுதியில் உள்ள கொள்கைகளை நடைமுறைப்படுத்த ஏற்கனவே வரைந்துள்ள சட்டங்களில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரவேண்டும் என்பதை விளக்கமாகச் சொல்வது - இதைத்தான் பாராளுமன்றம் அங்கீகரிக்க வேண்டும். அப்பொழுதுதான் பட்ஜெட் முதல் பகுதியில் விளக்கிய கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். பாராளுமன்ற விவாதத்தில் இந்த Finance Bill இல் சில மாறுபாடுகளைக் கொண்டு வர உறுப்பினர்கள் முயற்சிக்கலாம். அம்மாறுபாடுகளை ஏற்பதாக நிதியமைச்சரும் ஒப்புக்கொள்ளலாம். இந்த Bill அப்படியே, அல்லது மாறுபாடுகளுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்பு, கெஸட்டில் அறிவிக்கப்பட்டபின் செயல்பாட்டுக்கு வரும்.

சாதாரணப் பொதுமக்களுக்கு நிதிநிலை அறிக்கையைப் புரிந்து கொள்வது எளிதல்ல. வலைப்பதிவுகளில் (தமிழில்) யாராவது நிதிநிலை அறிக்கை 2004 பற்றி எழுதியுள்ளனரா என்று தேடிப்பார்த்தேன். அருணாவின் ஒரு பதிவுதான் கிடைத்தது. அதனால் நானே எனக்குப் புரிந்ததை வரிசையாக எழுதிவிடுவது என்று தீர்மானித்துள்ளேன். தவறாக எழுதியிருந்தால், அதைப் படித்து தவறென்று அறிபவர் தானாகவே திருத்தங்களை அனுப்பி வைப்பார் என்று நம்புகிறேன்.

பட்ஜெட்டில் தனி மனிதனாகப் பார்க்கையில் என்னை அதிகமாக பாதிக்கும் சில திட்டங்கள் இருக்கும். அதனாலேயே அந்தத் திட்டங்கள் தவறானது என்று குறை கூற முடியாது. பொதுவாக பட்ஜெட் வந்த நாள் முதற்கொண்டு எதிர்க்கட்சியினர் 'இந்த பட்ஜெட் மோசமானது' என்று சொல்வதைத் தவிர வேறெதுவும் செய்ததில்லை. கூட்டணிக் கட்சியினர், 'ஆகா, இதுவன்றோ பட்ஜெட்' என்று சபாஷ் போடுவார்கள். ஒவ்வொரு மாநில முதல்வரும் தம் மாநிலத்திற்கு எந்த வகையில் ஆதாயம் என்று பார்த்து, இல்லாவிட்டால் குறை சொல்வதும் வழக்கம். பொருளாதார நிபுணர்கள் கூட தங்களுக்கு விருப்பமான கொள்கைகள் இல்லையென்றால் பட்ஜெட்டையே குறை சொல்வது வழக்கம். பட்ஜெட் என்பதே ஓரிடத்தில் எடுத்து இன்னோரிடத்தில் கொடுப்பதுதான். எங்கு குறைவாக உள்ளது, எங்கு அதிகத் தேவை உள்ளது, எங்கிருந்து அதிகமாகப் பெற முடியும் என்பதை நடைமுறைப்படுத்துவதுதான்.

இந்த அறிமுகத்துடன் இனிவரும் தொடரைப் படியுங்கள்.

Tuesday, July 06, 2004

ஹேப்பி பர்த்டே ஜான் ரைட்!

ஜான் ரைட்ஜான் ரைட் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர். [பயிற்சியாளர்களைப் பற்றி நான் தமிழோவியத்தில் எழுதிய கட்டுரை இங்கே]

நேற்று ஜான் ரைட்டின் பிறந்த நாள். ஆசியக் கோப்பைக்காக இலங்கை செல்லவிருக்கும் இந்திய அணி இப்பொழுது சென்னையில் பயிற்சி முகாமிட்டுள்ளது. ஜான் ரைட்டின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று அவருக்கு ஒரு விருந்து கொடுத்தனர். [அப்பொழுது அவர் கேக் வெட்டுமாறு எடுத்த புகைப்படம் இங்கே.]

பழகுவதற்கு மிகவும் இனிமையான மனிதர். நியு ஸிலாந்தின் தொடக்க ஆட்டக்காரராக பல வருடங்கள் கிரிக்கெட் விளையாடிய ரைட் பின்னர் நியு ஸிலாந்தின் அணித்தலைவராகவும் இருந்தார். ஆட்டத்திலிருந்து ஓய்வு பெற்றதும் இங்கிலாந்தின் கெண்ட் கவுண்டி அணிக்கான பயிற்சியாளராக இருந்தார். அப்பொழுதுதான் ராஹுல் திராவிட் கெண்ட் அணிக்காக விளையாடப் போயிருந்தார்.

பின்னர் இந்திய கிரிக்கெட் வாரியம் பயிற்சியாளர் ஒருவரைத் தேட ஆரம்பித்தது. அதுவரையில் வடேகர், கபில் தேவ், மதன் லால் என்று உள்ளூர் ஆசாமிகள்தான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தனர். ஆனால் முதல்முறையாக இந்திய கிரிக்கெட் வாரியம் தன் தேடுதலை உலக அளவில் நிகழ்த்தியது. ஜான் ரைட், கிரேக் சாப்பல் போன்றோர் விண்ணப்பித்தனர். ஜான் ரைட் தேர்வு செய்யப்பட்டார். அன்றிலிருந்து இன்றுவரை இந்திய கிரிக்கெட் அணியை முழுவதுமாக மாற்றியமைத்த பெருமை அவருக்கே சேரும்.

சூப்பர் ஸ்டார்கள் பலர் நிறைந்துள்ள, ஆனால் எப்பொழுதுமே திறமைக்குத் தக்கவாறான வெற்றிகளைப் பெறாத இந்திய அணியிடம் பல குறைபாடுகள் இருந்தன. இந்திய ஆடுகளங்களில் ஓட்டங்களைக் குவிப்பார்கள், ஆனால் வெளிநாடுகளுக்குச் சென்றால் - ஸிம்பாப்வேயில் கூட - ஓட்டங்கள் எடுக்கத் தடுமாறுவார்கள் நம் மட்டையாளர்கள். இந்தியாவிற்குள் சுழற்பந்தினாலும், நொறுங்கும் களத்தின் மேற்பகுதியினாலும் விக்கெட்டுகளைச் சாய்ப்பர், ஆனால் வெளிநாட்டு ஆடுகளங்களில் இருபது விக்கெட்டுகளை எடுக்கத் தடுமாறுவார்கள் நம் பந்து வீச்சாளர்கள். வெளிநாடுகளில் வெற்றி பெற என்ன செய்யவேண்டுமென்றே தெரியாத ஓர் உணர்வு நம் அணித்தலைவர்களிடம். வெளிநாடுகளில் வென்ற டெஸ்டுகளின் எண்ணிக்கையை இரண்டு கை விரல்களால் கணக்கிட்டு விடலாம்.

ஆனால் இப்பொழுது கடந்த சில வெளிநாட்டுப் பயணங்களை எடுத்துக் கொள்வோம். உலகக் கோப்பை 2003க்கு முன் சென்ற நியு ஸிலாந்துப் பயணத்தைத் தவிர, மற்ற அத்தனை பயணங்களிலும் ஓர் ஆட்டத்தையாவது வென்றுள்ளோம். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா பயணங்கள் இரண்டிலும் தொடரைத் தோற்காமல் டிரா செய்துள்ளோம். பாகிஸ்தானுக்கே போய் அங்கு தொடரை வென்றுள்ளோம். இதற்கான முழுப் பெருமையும் ஜான் ரைட்டுக்கும், சவுரவ் கங்குலிக்கும் போய்ச் சேர வேண்டும்.

ஹேப்பி பர்த்டே ஜான் ரைட்!

Monday, July 05, 2004

மாநில ஆளுனர்கள் நீக்கம்

ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு வித்தியாசமானதாக இருக்கும் என்று எதிர்பார்த்தது தப்புதான். ஓரிருவரைத் தவிர மீதி எல்லோரும் அதே, பழைய காங்கிரஸ்காரர்கள்தானே? மேலும் மன்மோகன் சிங் சம்மதத்துடன் இவை நடக்கிறதா இல்லை சோனியா நேரடியாக இதைச் செய்கிறாரா என்பது நமக்கு கடைசிவரை தெரியப்போவதில்லை. ஒருவேளை மன்மோகன் சிங் இதுபோன்ற 'டார்ச்சர்கள்' தாங்காது தன் பதவியை விட்டு விலகப் போவதாக அறிவிக்கலாம்.

உருப்படியாகச் செய்ய வேண்டிய எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் அதை விட்டுவிட்டு இப்படி காங்கிரஸ் செய்யும் அரசியல், வருத்தம் தரவைக்கிறது. பாஜக 'எங்கே வாய்ப்பு கிடைக்கும், பாராளுமன்றத்தைத் ஸ்தம்பிக்க வைக்கலாம்' என்று பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏன் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்?

முதலில் வந்தது 'மாசுபட்ட அமைச்சர்கள்' பிரச்சனை. இதில் காங்கிரஸால் ஒன்றுமே செய்ய முடியாத நிலை. மாசுபடிந்த அமைச்சர்கள் யாருமே காங்கிரஸ்காரர்கள் இல்லை. எல்லோரும் கூட்டணிக் கட்சி ஆசாமிகள். அவர்களை ஏற்றுக்கொள்ள மறுத்தால், ஆட்சி ஆட்டங்காணும். பாஜக சிலநாள்கள் கூத்தடித்து விட்டு மறந்து விடுவார்கள். இந்தக் கூத்துமே காங்கிரஸ்+மற்ற எதிர்க்கட்சிகள் போன ஆட்சியின் போது ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் மீது நடத்திய தாக்குதலினால்தான்.

ஆனாலும் மன்மோகன் சிங் வேறு வழியின்றி 'குற்றம் நிரூபிக்கப்பட்டால்தான்' என்றெல்லாம் சால்ஜாப்பு சொல்லும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். தான் எதிர்க்கட்சியில் இருந்தால் ஒரே ஆட்டமாக ஆடியிருப்பார் சோம்நாத் சாட்டர்ஜி. இப்பொழுது அவரும் ஒருவழியாக சமரசம் செய்து கொள்ளலாம், வாருங்கள் சபையை நடத்துவோம் என்று பொறுமை பேசுகிறார். இந்த புத்தியெல்லாம் போன பாராளுமன்றத்தில் எங்கு போயிற்று?

சரி, இந்தப் பிரச்சனை சரியாகும் என்று நினைக்கையில் ஆளுனர்கள் பதவி நீக்கம். இதை இப்பொழுது செய்ய என்ன தலை போகிற அவசரமோ? பாஜகவும் இதனைச் செய்துள்ளது. அப்படிப் பார்த்தால் இந்த மாதிரி அசிங்கத்தை ஆரம்பத்தில் செயல்படுத்த ஆரம்பித்ததே காங்கிரஸ்தான். பின்னர் ஜனதா கட்சி, பின்னர் மீண்டும் காங்கிரஸ், பின் சில்லறை ஜனதா தள், பின் பாஜக, இப்பொழுது மீண்டும் காங்கிரஸ். அடுத்து பாஜக வந்தால் நிச்சயம் இந்தக் கூத்து மீண்டும் அரங்கேறும்.

நல்லவேளை, இஷ்டத்திற்கு மாநில அரசுகளைக் கலைக்கும் முயற்சிகளை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும் என்ற நிலை இப்பொழுது.

கவர்னர்கள் நீக்கத்தை நீதிமன்றங்களுக்குக் கொண்டு செல்ல வாய்ப்பில்லை போலத் தோன்றுகிறது. மன்மோகன் சிங், அப்துல் கலாம் என்ற இரண்டு நல்ல மனிதர்களின் constitutional proprietyஐ கேலி செய்யும் விதமாகவே இந்தக் கூத்து நடைபெற்றிருக்கிறது. இந்த நிலை எப்பொழுது மறையுமோ!

இன்னும் சில வாரங்களுக்கு பாஜக கூட்டணி பாராளுமன்றம் நடக்கவிடாமல் செய்யும். ஆளும் கூட்டணியால் பட்ஜெட் தாக்கல் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. இல்லாவிட்டால் எதிர்க்கட்சி ஆசாமிகளை வெளியே தூக்கி எறிந்து விட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படலாம். இதனால் பட்ஜெட்டின் மீதான நியாயமான விமரிசனம் எதுவும் பாராளுமன்றத்தில் நடக்காது. அதைப்பற்றி யார் கவலைப்படுகிறார்கள்? கட்சி அரசியல்தானே முக்கியம்? நாட்டை ஒழுங்காக ஆள்வதெல்லாம் இரண்டாம் பட்சம்தான்.

Sunday, July 04, 2004

குறும்பட/ஆவணப்பட விழா பரிசளிப்பு நிகழ்ச்சி

நியூ ஜெர்சி சிந்தனை வட்டம் நடத்திய குறும்பட/ஆவணப்பட விழாவில் திரையிடப்பட்ட படங்களுக்கான பரிசளிப்பு விழா இன்று (4-7-2004, ஞாயிறு) சென்னை நடிகர் சங்க வளாகம் மினி தியேட்டர், ஹபிபுல்லா ரோடில் நடைபெற்றது. மாலை 6.00 மணிக்குத் துவங்க வேண்டிய கூட்டம் 6.30 மணியளவில் தொடங்கி மிகச்சுருக்கமாக, ஆனால் நிறைவாக 7.15 மணியளவில் நடந்து முடிந்தது.

சிறிய அரங்கம். கிட்டத்தட்ட 150 பேர்கள் உள்ளே உட்கார முடியும் என்று நினைக்கிறேன். பாதியாவது நிரம்புமா என்று நினைத்திருந்தேன். ஆனால் உள்ளே உட்கார முடியாத அளவிற்குக் கூட்டம் இருந்தது. விழா அமைப்பாளர்கள் கிடைத்த இடத்திலெல்லாம் நாற்காலிகளைப் போட்டும், கூட்டம் கட்டுக்கடங்காமல் வாசல் கதவைத் திறந்து கொண்டு நின்றிருந்தது.

வெளி ரங்கராஜன்
வெளி ரங்கராஜன்
குறும்பட/ஆவணப்பட விழாவில் காண்பிக்கப்பட்ட படங்கள் அனைத்தையும் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுப்பதில் உதவி செய்த வெளி ரங்கராஜனும், 'நிழல்' திருநாவுக்கரசும் இந்த பரிசளிப்பு விழாவினை திறம்பட நடத்தினர். நியூ ஜெர்சி சிந்தனை வட்டம் சார்பில் முருகானந்தம் வந்திருந்தார். ரங்கராஜனது மிகச் சுருக்கமான முன்னுரைக்குப் பின்னர், முருகானந்தம் நியூ ஜெர்சி சிந்தனை வட்டம் பற்றிப் பேசினார்.
முருகானந்தம்
முருகானந்தம்
சிந்தனை வட்டம் வெறும் கேளிக்கைக் கொண்டாட்டங்களுக்கு மட்டும் இடம் தராமல் தீர்க்கமாக ஏதேனும் செய்ய விரும்பியது என்று சொன்னவர் தாங்கள் செய்தவற்றில் முக்கியமானவையாக கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிட்டார்: ஜெயகாந்தனது சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டது (எஸ்.ராமகிருஷ்ணன் அதற்கு உதவியதாகக் குறிப்பிட்டார்), அம்ஷன் குமார் இயக்கத்தில் சுப்ரமண்ய பாரதியைப் பற்றிய ஓர் ஆவணப்படம் தயாரித்தது, மேற்சொன்ன குறும்பட/ஆவணப்பட விழாவினை நடத்தியது.

ஜெயகாந்தன்
ஜெயகாந்தன்
சிறப்பு விருந்தினராக வந்திருந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் 'ஊரெங்கும் இப்படி ஒரு வட்டம் இருக்கலாமே என்று தோன்றுகிறது' என்றார். "குறும்படங்கள் பார்ப்பதற்கு ரசனையோடு கூட, திறமையும் வேண்டும். முழுநீள கேளிக்கைப் படங்கள் பார்ப்பதற்கு வெறும் ரசனை மட்டுமே போதுமானது. குறும்படங்கள் சிறியவையாயிருக்கின்றதே என்று அதில் விஷயம் அதிகமிருக்காது என்று நினைத்துவிடக் கூடாது. சிறுகதைகள் போலவே, குறும்படங்களில்தான் மிக ஆழமான விஷயங்களும் இருக்கின்றன. நான் பார்த்த பல சிறந்த இந்திய மொழிக் குறும்படங்கள் போல தமிழிலும் வரவேண்டும் என்று நினைக்கிறேன். இது குற்றம் சொல்வதல்ல, ஆர்வத்தினால் சொல்வது. இந்த விழாவில் திரையிடப்பட்ட படங்கள் அனைத்தையும் - ஒன்றிரண்டு தவிர - பார்த்திருக்கிறேன். அவை மீது எனக்கு நிறையக் கருத்துகள் உள்ளன. ஆனால் அவற்றை இங்கு விமரிசனம் செய்வது என் நோக்கமல்ல. இந்தக் குறும்படங்களை எடுத்தவர்களே தங்கள் படைப்புகளை விமரிசித்துக் கொண்டு, இப்பொழுது செய்வதை விடத் திறமையாகவும், நேர்த்தியாகவும் செய்ய வேண்டும். மற்றபடி இங்கு நான் வந்திருப்பது உங்களுடன் கூட நான் இருக்கிறேன், ஆதரவாக, சார்பாக, நீங்கள் மேலும் மேலும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று ஒரு சஹ்ருதயனாய் சொல்ல வந்திருக்கிறேன்." என்று சுருக்கமாகவும், ஆழமாகவும் பேசி முடித்தார் ஜெயகாந்தன்.

தொடர்ந்து தமிழில் புதிய படங்களுக்கான சூழல் என்ற தலைப்பில் தியோடர் பாஸ்கரன், அம்ஷன் குமார், புவனா ஆகியோர் பேசினர்.

தியோடர் பாஸ்கரன்
தியோடர் பாஸ்கரன்
தியோடர் பாஸ்கரன் பேசுகையில் 'உன்னதமான படைப்பு உருவாக வேண்டுமானால் உன்னதமான பார்வையாளர்கள் தேவை' என்று ஒரு பிரெஞ்சு அறிஞர் சொன்னதை எடுத்துக்காட்டினார். குறும்படம் எடுப்பது, அடுத்து முழுநீளப்படம் எடுப்பதற்கான முதல் படி என்று எண்ணக் கூடாது. குறும்படங்களை வெறும் புலனளவில் மட்டும் அணுகாது சிந்தனை அளவிலும் அணுக வேண்டும். சினிமாவை வெறும் கேளிக்கைதானே என்று நினைக்கும் அணுகுமுறைதான் கீழ்த்தரமான, சிந்தனையைத் தூண்டாத படங்களை முன்னுக்கு வைக்கிறது. அந்த அணுகுமுறை மாற வேண்டும் என்றார்.

அம்ஷன் குமார்
அம்ஷன் குமார்
அடுத்து பேசிய அம்ஷன் குமார் இப்பொழுது நிறைய ஆவணப்பட விழாக்கள் உலகெங்கிலும் நடக்கின்றன என்றார். இவற்றைப் பற்றி பத்திரிகைகளும் எழுத ஆரம்பித்து விட்டன. ஆனால் முக்கியமாக தொலைக்காட்சி சானல்கள் கண்டு கொள்வதேயில்லை. அவ்வப்போது அதையும் மீறி ஓரிரு ஆவணப்படங்களோ, குறும்படங்களோ தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படுகின்றன. ஆனால் அதுவும் வர்த்தக ரீதியில் வெற்றி பெறுவதில்லை என்று சொல்லிவிடுகின்றனர். ஆனால் உண்மையில் வர்த்தக ரீதியில் இவை வெற்றிபெறுவதை தொலைக்காட்சிகள் விரும்புவதில்லை. இரண்டு நாண்களுக்கு முன்னர் செய்தித்தாள்களில் ஒரு சிறிய செய்தி வந்திருந்தது. சீனாவில், பீஜிங்கில் நடக்க இருக்கும் ஒரு திரைப்பட விழாவில் தமிழிலிருந்து ஆறு படங்கள் அனுப்பப்படுகின்றனவாம். என்ன படங்கள்? திருடா திருடி, தூள், கில்லி, இன்னமும் வேறெதோ படங்கள். வர்த்தக ரீதியில் உள்ள படங்களைத்தான் அனுப்புகின்றனராம். அனுப்பிவிட்டுப் போகட்டும்.... 'யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்' என்று அனைவர் மீதும் நாம் பார்க்கும் படங்களையே திணிக்கின்றனர். ஆனால் சீனாவில் உள்ளவர்கள் இந்தப் படங்களை விரும்புவாரா? அதைப் பற்றி யாரும் யோசிப்பதில்லை. நேரு திரைப்படங்களுக்கான பரிசுகள்/விருதுகளைத் தொடங்கும்போது நல்ல படங்கள், யாராலும் கவனிக்கப்படாத படங்கள் ஆகியவற்றை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதற்காகச் செய்தார். ஆனால் இப்பொழுது வர்த்தகப் படங்களுக்குத்தான் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. அதல்ல நேருவின் நோக்கம். 1950களில் ரஷ்யாவிலிருந்து புடோகின்(?) என்றொரு ரஷ்ய திரைப்பட இயக்குனர் இந்தியா வந்திருந்தார். அவருக்கு இந்தியப் படங்களைப் பார்க்க ஆசையாயிருந்தது. பல படங்களை அவருக்குக் காண்பித்தனர். அவர் அத்தனை படங்களையும் பார்த்து விட்டு, இவையெல்லாம் இந்தியாவில் எடுத்த படங்கள், ஆனால் இந்தியப் படங்கள் அல்ல என்றார். பின்னர் நிமாய் கோஷ் (Nemai Ghosh) என்ற வங்காளி எடுத்திருந்த 'சின்னாமுல்' (Chinnamul) என்ற படத்தை அவருக்குக் காண்பித்தனர். படம் பார்க்க ஆரம்பித்த ஐந்து நிமிடங்களிலேயே அவர் எழுந்திருந்து, இதுதான் இந்தியப் படம் என்று கோஷைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டார். பின்னர், ரஷ்யா சென்றதும், சின்னாமுல்லை அங்கு திரையிட வைத்தார். இந்தியாவில் எத்தனை பிரிண்டுகள் போனதோ தெரியாது, ஆனால் ரஷ்யாவில் 140 பிரிண்டுகள் போட்டனர்.

நல்ல தரமான படங்களுக்கு இந்தியாவில் சந்தையை ஏற்படுத்த வேண்டும் என்று முடித்தார் அம்ஷன் குமார். சிந்தனை வட்டத்துடன் தனக்குள்ள தொடர்பு, சுப்ரமண்ய பாரதி பற்றி தான் இயக்கிய குறும்படம் பற்றியும் பேசினார்.

புவனா
புவனா
புவனா - ஆயிஷா என்னும் படத்தின் தயாரிப்பாளர் - அடுத்து பேசினார். தான் படம் தயாரிக்க வந்தபோது ஒழுங்காக நல்ல பணம் பண்ணுவதை விட்டுவிட்டு குறும்படம் தயாரிக்கிறேன் என்று போகாதே என்று பலர் என்னிடம் சொன்னார்கள். ஆனால் ஒன்றைச் செய்யாதே எனும்போதுதான் அதைச் செய்வேன் என்ற எண்ணம் கொண்டவள் நான். ஆயிஷாவுக்குப் பிறகு இப்பொழுது இன்னுமொரு குறும்படம் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளேன். [ஆயிஷா கணையாழியில் வந்த ஆர்.நடராஜன் என்பவர் எழுதிய சிறுகதையைப் படமாக்கியது. இயக்குநர் சிவகுமார்.] இப்பொழுது என்னுடைய முக்கிய நோக்கமே எப்படி நல்ல குறும்படங்கள் தயாரித்து, அதே நேரத்தில் போட்ட பணத்தை எடுப்பது என்பதே. குறும்படங்கள் எடுப்பவர்கள், நல்ல சினிமாவில் நாட்டம் கொண்டவர்கள் அனைவரும், ஈகோவை விடுத்து ஒன்றாக இணைந்து ஒரு சங்கம் உருவாக்கி நல்ல படங்கள் மக்களிடம் போகுமாறு - அதே நேரத்தில் போட்ட பணம் கிடைக்குமாறும் - செய்யவேண்டும். அரசிடமோ, அமைச்சகங்களிடமோ சென்று இதற்குத் தேவையான சலுகைகள் கிடைக்குமாறு போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அடுத்து நியூ ஜெர்சி படவிழாவில் காண்பிக்கப்பட்ட அனைத்துப் படங்களுக்கும் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. விழா நிறைவாக மேடையில் அமர்ந்திருந்தோருக்கு முருகானந்தம் பரிசுகளை வழங்கினார்.

கூட்டம் அதிகமான காரணத்தால் நெரிசலாலும், வீடியோ எடுப்பவர்கள் பலர் வழியில் தங்கள் கருவிகளை வைத்திருந்ததாலும், சான்றிதழ்கள் அதிவேகமாக வழங்கப்பட்டதாலும் அவற்றைப் படமாகப் பிடிக்க முடியவில்லை.

Saturday, July 03, 2004

இலங்கையில் சில நாள்கள் - தமிழ்ப் பாடப் புத்தகங்கள்

[முந்தைய பதிவு]

யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிறந்து வளர்ந்த கவிஞர் சு.வில்வரத்தினம் இப்பொழுது திருகோணமலையில் வசித்து வருகிறார். போன மாதம் நான் இலங்கை சென்றிருந்தபோது தமிழ்க் கல்வி, தமிழ்ப் பாடப் புத்தகங்கள் ஆகியவற்றைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்.

இலங்கையில் உலகத் தரம் வாய்ந்த பாடப் புத்தகங்கள் தமிழ் மொழியில் ஒரு காலத்தில் எழுதப்பட்டு வந்தன. தமிழ்நாட்டிலிருந்து சில ஆசிரியர்கள் இலங்கையில் பாடம் சொல்லிக்கொடுக்கப் போயிருந்தனர். அவர்களும், இலங்கையிலேயே இருந்த ஆசிரியர்களும் ஒவ்வொரு பாடத்திற்கும் உலகத்தரத்தில் தமிழில் புத்தகங்கள் எழுதியிருந்தனர்.

ஆனால் இடையிலே இலங்கை அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசக் கல்வியுடன், இலவசச் சீருடை, இலவசப் பாடப் புத்தகங்கள் என்று ஆரம்பித்தது தமிழுக்குக் கெடுதலாக அமைந்து விட்டது. அரசு வழங்கிய பாடப் புத்தகங்கள் அனைத்தும் சிங்களத்தில் சிங்கள ஆசிரியர்களால் எழுதப்பட்டு, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவை ஆயின. [தமிழ் மொழி போதினி தவிர] ஒன்று கூட தமிழில் எழுதப்படவில்லை. இதனால் தமிழில் பாடப்புத்தகம் எழுதிக்கொண்டிருந்த ஆசிரியர்களின் பிழைப்பிலும் மண். புதிதாகத் தமிழில் கல்வி புகட்டும் புத்தகங்கள் எதுவும் வரவில்லை.

பரிட்சைக்கான வினாத்தாள்கள் கூட சிங்களத்தில் உருவாக்கப்பட்டு தமிழில் மொழிபெயர்க்கப்பட்டவையே.

உலகவங்கி தமிழ்ப்பகுதிகளில் உள்ள மாணவர்களின் தரம் மிகவும் தாழ்ந்துபோயிருப்பதற்குக் காரணம் என்னவென்று ஆராய்ந்ததாம். அதில் பெருங்காரணமாக தமிழிலேயே உருவாக்காத பாடங்களை - அரைகுறையாக மொழிபெயர்க்கப்பட்ட பாடங்களை - படிப்பதன் மூலம்தான் என்று கண்டறிந்தனராம்.

இந்த மொழிபெயர்ப்புகளில் பலவகைக் குறைகள் உள்ளன. ஒன்று மொழிபெயர்ப்பில் இலக்கண, எழுத்துப் பிழைகள் இருப்பது. இரண்டாவது சமூகச் சிந்தனைகளை அனைத்திலும் புத்த/சிங்களப் பெரும்பான்மைக் கருத்துகளை முன்வைப்பது. மூன்றாவது, குறித்த நேரத்தில் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகங்கள் தமிழ்ப் பள்ளிகளுக்குப் போய்ச்சேராமை. நான்காவது தமிழில் சிந்தித்து நேரடியாக எழுதுவது முழுவதுமாகக் குறைந்து, முற்றிலுமாக இல்லாமல் போவது.

---

இதைத் தவிர தமிழ்வழிக் கல்வி கற்பிப்பதற்கு ஆசிரியர் எண்ணிக்கையும் குறைவாக இருக்கிறது என்று உலக வங்கி கண்டறிந்துள்ளது. பல இடங்களில் தேவையான ஆசிரியர்களில் 55% மட்டும்தான் கிடைக்கின்றனர். உள்நாட்டுப் போர், தேர்ந்த தமிழ்வழிக் கல்வி ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்குப் போய்விடுவது மட்டும் காரணமில்லை. தமிழில் சரியான உயர்கல்வி கற்பிக்கும் நிலையங்கள் இல்லாததும் காரணமாயிருக்க வேண்டும்.

Thursday, July 01, 2004

கந்துவட்டித் தடைச் சட்டம்

கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்னால் ஜெயலலிதா அரசு எக்கச்சக்கமாக கந்துவட்டிக்குக் கடன் கொடுக்கும் கூட்டத்தை வழிக்குக் கொண்டுவரும் வரையில் ஒரு அவசரச் சட்டத்தை இயற்றியிருந்தார். [Tamil Nadu Prohibition of Charging Exorbitant Interest Ordinance, 2003]. இது பின்னர் சட்டசபையில் சட்டமாக மாற்றப்பட்டது.

அப்பொழுது எல்லோரும் இதை வரவேற்றனர். தெருவெங்கும் 'கந்துவட்டியைத் தடை செய்த புண்ணியவதியே வாழ்க!' என்றெல்லாம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஆனால் எந்த செய்தித்தாளும், இதழும் இதன் விவரங்களைக் குறிப்பிடவில்லை. அவ்வளவு முட்டாள்தனமாக இயற்றப்பட்டுள்ளது இந்த சட்டம் என்று இப்பொழுதுதான் புரிகிறது.

இன்றைய தி பிசினஸ் லைன் செய்தியில் சென்னை உயர்நீதி மன்றம் மேற்படி சட்டத்திற்கு இடைக்காலத் தடை வழங்கியுள்ளது. இந்த சட்டம் என்ன சொல்கிறது? இந்தச் சட்டத்தின் படி யாரும் 9% ஆண்டு வட்டிக்கு மேல் கடனுக்கான வட்டியை வசூலிக்கக் கூடாதாம்!

கந்துவட்டிக் காரர்கள் ஆண்டிற்கு 60% இலிருந்து 120% வரை கூட வட்டி வாங்கி வந்தனர். [இன்றும் சட்டத்திற்குப் புறம்பாக அதையே செய்து வருகின்றனர்.] இதை அஞ்சு வட்டி, பத்து வட்டி என்று கூறுவது வழக்கம். அஞ்சு வட்டி என்றால் மாதத்திற்கு 1 ரூபாய்க்கு ஐந்து பைசா வட்டி என்ற விகிதத்தில் வசூலிப்பது. ஒருவர் ரூ. 1,000 ஐ, அஞ்சு வட்டிக்குக் கடன் வாங்கியிருந்தால் ஒவ்வொரு மாதமும் ரூ. 50ஐ வட்டியாகக் கட்ட வேண்டும். ஒரு வருடக் கடைசியில் அவர் கட்டிய வட்டி மட்டுமே ரூ. 600 இருக்கும். முதல் அப்படியே மொத்தமாக இருக்கும். பத்து வட்டியென்றால் கேட்கவே வேண்டாம். மாத வட்டி மட்டுமே ரூ. 100. வருடக் கடைசியில் மொத்தமாக ரூ. 1,200 ஐ வட்டியாக மட்டுமே கட்டியிருப்பார். அஞ்சுக்கும், பத்துக்கும் இடையில் எந்த விகிதம் வேண்டுமானாலும் மாத வட்டியாக இருக்கும்.

இதைத்தான் அரசு தடுத்து நிறுத்துகிறேன் பேர்வழியென்று ஆண்டு வட்டி விகிதம் 9க்கு மேல் போகக்கூடாதென்று சட்டமன்றத்தில் இயற்றியுள்ளது. இது ஏன் முட்டாள்தனம்?

இன்று தேசிய வங்கிகளே வீட்டுக் கடனுக்கு (7% இலிருந்து) 8.5% வரை வட்டி வசூலிக்கின்றன. வாகனக் கடனாக 12-13% வரை. பெர்சனல் கடன் வட்டி விகிதம் 13-24% வரை. சிடிபேங்க் போன்ற தனியார் வங்கிகள் 24% (2 பைசா வட்டி) வரை வசூல் செய்யும்போது மற்ற எல்லோரும் 9% க்கு மேல் வட்டி வாங்கக் கூடாது என்று தமிழக அரசு எப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வர முடியும்? கிரெடிட் கார்டுகளுக்கு தனியார் வங்கிகள் கிட்டத்தட்ட 30% வரை கூட வட்டி வசூலிக்கின்றன. மேலும் Tamil Nadu Pawn Brokers Act, 1943 படி நகையின் மீது கடன் வாங்குவதற்கு 16% வரை வட்டி வசூல் செய்யலாம் என்று ஒரு சட்டம் இருக்கிறதாம். (நடைமுறையில் இதற்கும் மேலே வட்டி வசூலிக்கப்படுகிறது.) ஆக செக்யூரிட்டிக்காக ஒரு தங்க நகையை வைத்து வாங்கும் கடனே 16% வரை போகலாம் என்றிருக்கையில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் கொடுக்கும் கடனுக்கு ஏன் 9% மட்டும்தான் என்று தமிழக அரசு தடை போடலாம்?

60%, 120% என்றெல்லாம் கடன் வாங்குவது அநியாயம் என்று நாம் அனைவரும் ஒத்துக்கொள்வோம். ஆனால் அதற்கு மறுகோடியாக 9%க்கு மேல் வட்டி வாங்கக்கூடாது என்ற தமிழக அரசின் சட்டமும் முட்டாள்தனமானதே! EPF ஏ 12% வட்டி தரவேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் கேட்கின்றனர்!

இந்த மாதிரியான சட்டங்களை வரைகையில் தமிழக அரசு அதிகாரிகள் சிறிது சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

தலித்திய விமர்சனக் கட்டுரைகள் - ராஜ் கௌதமன் - 1

தலித்திய விமர்சனக் கட்டுரைகள், ராஜ் கௌதமன், காலச்சுவடு பதிப்பகம், டிசம்பர் 2003, விலை ரூ. 90

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசு கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், புதுவை அரசு பட்டமேற்படிப்பு மையத்தில் தமிழ் ஆய்வுத்துறைத் தலைவராகவும் இருக்கும் ராஜ் கௌதமனின் பதினைந்து கட்டுரைகளை அடக்கிய புத்தகம் இது.

முதல் கட்டுரை "தமிழக தலித்தும் தலித் இலக்கியமும்" - 1991இல் எழுதியது. இக்கட்டுரையில் தமிழ் இலக்கியம் தலித்துகளை எவ்வாறு சித்தரிக்கிறது, தமிழகத்தில் நடந்த மூன்று பெரும் போராட்டங்கள் - (தேச) விடுதலை இயக்கம், பொதுவுடைமை இயக்கம், திராவிட இயக்கம் - ஆகிய மூன்றும், இவ்வியக்கங்களின் தாக்கத்தால் உருவான படைப்புகளும் எவ்வாறு தலித்துகளுக்கு எதிரான கருத்தியலையே முன்வைத்தன என்றும் விளக்குகிறார். "வழக்கமாக தமிழில் ஏதாவது ஒன்றின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி எழுதுபவர்கள் தொல்காப்பியச் சூத்திரங்களை மேற்கோள் காட்டுவது மாதிரி தலித் இலக்கியத்திற்குக் காட்ட முடியாது. இதற்கு இனிமேல்தான் தோற்றமும், வளர்ச்சியும் ஏற்பட வேண்டும்." என்கிறார். தலித் இலக்கியத்திற்கான வரையறை ஒன்றையும் தருகிறார்:
தலித் இலக்கியம் சுகமான வாசிப்புக்கு உரியதல்ல. படிப்பவர்கள் சூடாக வேண்டும்; முகம் சுளிக்க வேண்டும்; சாதி மதமெல்லாம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருப்பவர்களுக்குள் புதைந்திருக்கிற சாதி, மதக் கருத்தியலைத் தோலுரித்துக் காட்ட வேண்டும்; அவர்கட்குக் குமட்டலை ஏற்படுத்த வேண்டும். நாகரிகமும், நாசூக்கும் பார்ப்பது மிதிபட்டவன் காரியமல்ல. படிப்பவனின் இதயமும் கண்களும் சிவக்க வேண்டும். அதன் பிறகே தலித் இலக்கியம் வந்துவிட்டதாகக் கருத முடியும்.
பொதுவுடமைக் காரர்கள் வர்க்க அழிப்பு தங்களுக்கு வெற்றியைக் கொடுத்து விடும் என்று நினைப்பது தவறு. தமிழகச் சூழலில் வெற்றி என்பது தலித்கள் மேற்கொள்ளும் சாதி, மத, குடும்ப அழிப்புப் போராட்டம் வெற்றியடைந்தால்தான் என்கிறார். எதற்காக சாதி, மதம் ஆகியவற்றை அழிப்பதோடு குடும்பம் என்னும் அமைப்பையும் அழிக்க வேண்டும்? ஆதிக்கம் என்பது வெவ்வேறு வகைகளில் இந்த மூன்று அமைப்புகளிலும் இடம்பெறுகிறது. குடும்பம் என்பதில் ஆண் பெண்ணை ஆதிக்கம் செலுத்துவதாகவும், சாதி என்னும் கட்டமைப்பில் ஆதிக்க சாதியினர் (பார்ப்பனிய, வெள்ளாளர்கள்) தலித்துகளை நசுக்குவதாகவும், இந்த இரண்டு வித ஆதிக்க அமைப்புகளையும் மதம் என்னும் அமைப்பு நிரந்தரப்படுத்துவதாலும், முழு விடுதலை என்பது இம்மூன்று அமைப்புகளையும் நொறுக்குவதாலேயே கிடைக்கிறது என்கிறார்.

பெண்களையும், தலித்துகளையும் 'தீட்டு' என்னும் கொள்கை மூலம் ஆதிக்கசாதி ஆண் சமூகம் ஒடுக்கியது, சொத்துக்களை ஆண் வழியாக பகிர்ந்து கொண்டது, பாலியல் ரீதியான ஒடுக்குமுறை, பொருளாதார ரீதியின் தலித்துகளின் உழைப்பைச் சுரண்டிய சமூகம், குடும்பத்திற்குள் பெண்ணின் உழைப்பைச் சுரண்டுகிறது. இதனாலேயே தலித்துகள் சாதி, பொருளாதார அதிகராங்களைத் தகர்ப்பதன் கூடவே குடும்பத்தில் பாலியல் அதிகாரத்தையும் தகர்க்க வேண்டிய கடமைக்குள்ளாகிறார்கள் என்கிறார். இதனால் இந்தப் போராட்டத்தில் பெண்களும், தலித்துகளும் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை மேலோட்டமாகவும் குறிப்பிடுகிறார் ராஜ்கௌதமன்.