Sunday, October 10, 2004

முதல் டெஸ்ட், நான்காம் நாள்

பெங்களூர் சின்னசாமி அரங்கில் காலை ஆஜர். ஆஸ்திரேலியா எப்பொழுது டிக்ளேர் செய்வார்கள், அல்லது இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகளைக் கைப்பற்றி விடுவார்களா?

இன்றைய டிக்கெட்டுகளை வாங்க பெரும் கூட்டம். சொக்கனிடமிருந்து SMS - டிக்கெட் வாங்க வந்தோம், டிக்கெட்டுகள் தீர்ந்து விட்டன. பின் கள்ள மார்க்கெட்டில் டிக்கெட் வாங்கி உள்ளே வந்தாராம். பெங்களூர் ஜனங்கள் ஆசையோடு இந்தியாவின் பேட்டிங்கைப் பார்க்க வந்திருந்தனர். பாவம், இந்தியர்கள் எப்படி விளையாடப் போகிறார்கள் என்று அவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்குமா என்ன?

ஹர்பஜன், கும்ப்ளே இருவரும் பந்து வீச்சைத் தொடங்குகின்றனர். கிளார்க் பேட்-கால்காப்பு கேட்சில் சில்லி பாயிண்டில் இருக்கும் சோப்ராவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழக்கிறார். கூட்டம் குதிக்கிறது. ஹர்பஜன் வீசும் பந்துகள் படமெடுக்கும் நாகப்பாம்பு போல ஆடுகளத்தில் பட்டதும் சுர்ரென்று சீறுகின்றன. கில்கிறிஸ்ட் உள்ளே வருகிறார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல வேகமாக ரன்களைச் சேர்க்க முடிவதில்லை. மார்ட்டின் ஹர்பஜனின் ஆஃப் பிரேக்கை மிட்விக்கெட் திசையில் அடிக்கப்போய் ஷார்ட் மிட்விக்கெட்டில் இருக்கும் காயிஃப் அருமையான தரையோடு ஒட்டிய கேட்சைப் பிடிக்கின்றார். யாருக்கு பதில் காயிஃப் வந்துள்ளார் என்று தெரியவில்லை. ஷேன் வார்ன் வந்ததும் நிறைய பெருக்கல் அடிகளை (ஸ்வீப்) அடிக்கிறார். கும்ப்ளே நன்றாகப் பந்து வீசினாலும் விக்கெட் எதையும் பெறவில்லை. ஆனால் உணவு இடைவேளைக்கு சற்று முன் கில்கிறிஸ்டை பேட்-கால்காப்பு வழியாக ஃபார்வார்ட் ஷார்ட் லெக் சோப்ரா பிடிக்க கும்ப்ளேவுக்கு இந்த இன்னிங்ஸில் இரண்டாவது விக்கெட். கில்லெஸ்பி விளையாட வருகிறார். உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலியா 204/7.

உணவு இடைவேளைக்குப் பிறகு ஆஸ்திரேலியா மீண்டும் பேட்டிங் செய்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை. ஷேன் வார்ன் அங்கும் இங்குமாக சில ஓட்டங்களைப் பெறுகிறார். பின் ஹர்பஜனை ஸ்வீப் செய்ய, யுவராஜ் சிங் ஃபார்வர்ட் ஷார்ட் லெக்கில் பிரமாதமான கேட்ச். கில்லெஸ்பியும் அதே கூட்டணிக்கு ஆட்டமிழக்க்கிறார். ஹர்பஜனுக்கு ஐந்து விக்கெட்டுகள். கடைசியாக காஸ்பரோவிச் புல் செய்யப்போய் பந்து மேலாகப் பறக்கிறது, திராவிட் ஸ்லிப்பிலிருந்து ஓடிப்போய் கேட்சைப் பிடிக்கிறார். அரங்கம் ஆர்ப்பரிக்கிறது.

இந்தியா ஜெயிக்க 457 ரன்கள் தேவை!

இம்முறை முதல் ஓவரில் விக்கெட் விழுவதில்லை. ஆனால் மூன்றாவது ஓவரில். முதல் பந்தில் சோப்ரா ஒரு ரன் எடுக்கிறார். அடுத்த பந்து வீசுமுன் மெக்ராத் (சேவாகிற்கு மெக்ராத்திடமிருந்து வரும் முதல் பந்து) நிறைய நேரம் எடுத்து பந்துத் தடுப்பாளர்களை மாற்றியமைக்கிறார். வீசுகிறார். அவுட்! எல்.பி.டபிள்யூ என்கிறார்கள். நாங்கள் ஓடிச்சென்று டிவியில் மற்றொருமுறை காண்பிப்பதைப் பார்க்கிறோம். பந்து மட்டையில் பட்டு சென்றுள்ளது தெரிகிறது. அரங்கம் பவுடனுக்கு சாபம் கொடுக்கிறது. சேவாகும் நடுவர்களிடம் நாலு வார்த்தை பேசியபின்தான் சென்றுள்ளார். அன்று மாலை ரஞ்சன் மடுகல்லே சேவாகைக் கூப்பிட்டு "திட்டுகிறார்." சேவாக் மன்னிப்பு தெரிவிக்கிறார். இன்று தெரியும் என்ன்ன தண்டனை என்று. தவறாக தீர்ப்பு கொடுத்த பவுடனுக்கு எந்த தண்டனையும் கிடையாது.

சரி, போகட்டும். மற்ற மாணிக்கங்கள் என்ன செய்தனர்? சோப்ரா கில்லெஸ்பியின் உள்ளே வரும் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகிறார். இம்முறை சரியான தீர்ப்புதான். கங்குலி கில்லெஸ்பியின் பவுன்சர்களை நன்கு சமாளிக்கிறார். முதல் பந்தை ஹூக் செய்து அருமையான நான்கைப் பெறுகிறார். அடுத்த பந்து வயிற்றில் படுகிறது. மூன்றாவது பவுன்சரை எப்படியோ தட்டி ஒரு ரன் பெறுகிறார். அதுதான் அவர் எடுக்கும் கடைசி ரன்.

அடுத்த ஓவரில் மெக்ராத் பந்தை கால் திசையில் மிக அழகாக விளையாடுகிறார். அந்த சந்தோஷத்தில் ரன் கிடைக்குமா, இல்லையா என்று கவனிக்காமல் ஓடத் தொடங்கி திராவிட் இருக்கும் இடம் வரை சென்றபின்தான் திராவிட் ரன்னுக்காக ஓடப்போவதில்லை என்று புரிகிறது. இதைவிடச் சுலபமான ரன் அவுட் கிடைக்காது.

லக்ஷ்மண் - ஷேன் வார்ன் வீசும் பந்து ஒன்றில் எல்.பி.டபிள்யூ ஆகிறார். பந்து எப்பொழுதும்போல ஸ்பின் ஆவதில்லை.

அவ்வளவுதான், இன்றே ஆட்டம் முடிந்துவிடும் என்று மக்கள் அரங்கத்தை விட்டுக் கிளம்புகிறார்கள். கலவரம் நடக்குமோ என்ற சந்தேகத்தில் அரங்க நிர்வாகிகள் சில பகுதிகளில் மீன்வலையை விரிக்கிறார்கள். (இதனால் மோசமான ஆசாமிகள் கல், பிற சமாச்சாரங்களை ஆடுகளத்தினுள் வீசுவதைத் தடுக்கலாம்.)


ஆனால் யுவராஜ், திராவிடுடன் சேர்ந்து அழகாக விளையாடுகிறார். வார்ன் வீசும் பந்துகளை திராவிடும், யுவராஜும் திறமையாகவே விளையாடுகிறார்கள். காஸ்பரோவிச், கில்லெஸ்பி இருவரும் வீசும் பந்துகளை முக்கால்வாசி விட்டுவிடுகிறார்கள்.

எப்படியோ ஐந்தாம் நாள் ஆட்டத்தைக் கொண்டுவந்துவிடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போது மெக்ராத் அழைத்து வரப்படுகிறார். யுவராஜ் இம்முறை பந்தை கில்கிறிஸ்டிடம் தட்டி கேட்ச் கொடுத்து அவுட்டாகிறார். மெக்ராத் ஸ்டம்புக்கு வெகு அருகில் வந்து பந்து வீசுவதால் யுவராஜால் தைரியமாக இவரது பந்துகளை விட முடிவதில்லை. பந்து சற்றே விலகி ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே போகும்போது வேறு வழியின்றி வலையில் சிக்குகிறார். இதிலிருந்து வரும்ம் டெஸ்ட்களில் யுவராஜ் விடுபட வேண்டும்.

படேல் வார்ன் பந்துகளை விளையாடத் தடுமாறுகிறார். முன்னே போவதா, பின்னே வருவதா என்று தடுமாறிக் கொண்டிருக்கும்போது ஒரு பந்து அவரது ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே இருக்கும் ரஃப்பில் பட்டு படேலின் பின்னங்காலில் படுகிறது. எல்.பி.டபிள்யூ.

இர்ஃபான் பதான் திராவிடுக்கு நம்பிக்கை தருகிறார். ஆனாலும் திராவிட் பல எளிதான ஒரு ரன்களை விட்டுவிடுகிறார். முடிந்தவரை தானே எல்லாப் பந்துகளையும் சந்திக்கிறார். இதனால் என்ன்ன சாதிக்கப்போகிறார் என்று தெரியவில்லை.

நான்காம் நாள் ஆட்டம் முடியும்போது இந்தியா 105/6 - திராவிட் 47*, பதான் 7*

நாளை மற்றுமொரு நாளே.

No comments:

Post a Comment